Saturday, July 23, 2005

அலையில் பார்த்த முகம்

ஒரு மழைநாளின் மனிதச்சகதியில்
நடக்கிறது மண்.

அதிகாலை பூஜையின் பாடலுக்கு
அவரால் வாசிக்கப்படுகிறது
ஒரு ஆர்மோனியப்பெட்டியும்
வீணையும்.
மரியாதானே உன்பெயர்?

கிணற்றின் இருள் மறைவில்
கருத்தப்பாண்டியின் மேகம்
அவனினின்று
காற்றாகிறது.

துவைத்து உலர்கிறது துணி.
கொங்கை குலுங்கிய ராணி
வாய் சிவந்து அழுக்காகிறாள்.

ஆற்றிலும் வருகிறது அலை
ஒவ்வொரு முறையும்
இழுத்துச் செல்கிறது ஏதேனும்.

Friday, July 22, 2005

அவனது கவிதைகள்

நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.

அவனைக் கேட்காமலே
தம்மைத் தாமே
எழுதியும் கொள்கின்றன.

அவன் உடுத்தி விடும்
ஆடைகளையெல்லாம்
கழற்றி எறிந்துவிட்டு
ஒரு குழந்தை மாதிரி அவை
நிர்வாணமாய் சிரிக்கின்றன.

சில நடக்கும்,
சில நடனமிடும்
சின்ன சில்மிஷங்களோடு
ஓய்ந்து போகும் சில.

ஒரு வரியோடு
படுத்தே கிடப்பதுண்டு
சில சோம்பேறிக் கவிதைகள்.

வந்த சுவடின்றி வந்துவிட்டு
வனப்புக் காட்டி, உயிர்ப்பித்து
சதையோடும், வளைவோடும் சரசமாடி
கலந்துவிட்டுப் போகும் சில
காமுகிக் கவிதைகள்.

அறைவதும் உண்டு சில.
தெளிய சில நாள் பிடிக்கும்.
தெளிந்ததாய் நினைக்கையில்
மறுபடியும்
உச்சிமயிர் பிடித்து உலுக்கும்.

இப்படித்தான் என்றில்லை...
நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.


Thanks to : " Thinnai "

Tuesday, July 19, 2005

இடைவெளிகள்

கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !

நட்புக்கும்
இடைவெளிகள் நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...

தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம் நீள
காரணமாகிறது...

தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டுஅமர்கிறது
கெளரவக் காதல்.

பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?

இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!