Thursday, June 21, 2007


கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் தவறவிட்டு
நழுவிக் கொண்டிருக்கிற வாழ்வின் கவலை
திராட்சை ரசமென வடிகிறது

முடிவுறாத பாதையின்
துயர் விளிம்பில் நின்று
இன்னும் கொஞ்சம் சோகம் சிந்தியவேளை
இளமையை கொத்திக் கொத்தித் தின்றன
முக வரிகள்

ஆறுதல்களால் திரும்பப்பெற முடியாததாகவே
இருக்கிற இளமை : முடியுமென்றால்
இருள் சூழ் விந்தென இருக்கக்கூடும்

ஒரு பாத்திரத்தின் உணவெடுத்து
இன்னொன்றுக்கு பிச்சையிடுபவர்களின்
தர்மம் மீதான வருத்தங்களிலிருந்தும்
முடிந்த நிகழ்வுகளினின்று
மீண்டுவிட்ட தெளிவுகளோடும்
நீளும் ஓர் பாதை

எல்லா திசைகளும் கிழக்காவோ மேற்காகவோ
இருத்தல் சாத்தியமற்ற திசைகளின் கரைகளில்
முளைத்து தலையசைக்கும்
நம்பிக்கை நாணல்காடு !

Sunday, June 17, 2007

அப்படி ஒன்றும் மோசமில்லை


இன்னும்
பறவைகளின் கூடுகளுக்கு
மறுப்பு சொல்லுவதில்லை மரங்கள்

எவரும் தம்மை எண்ணிமுடிக்காத
கோபத்தில் உச்சியில் விழுந்த
நட்சத்திரங்கள் உண்டா?

பக்கத்தில் இருப்பவனின்
உறக்கம் கெடுக்காமல் தொலைபேசும்
கருணைக்குரல்கள் காண்பீர் தினம்

எதிர்வரும்போது
அறிமுகமற்றவரிடமும் புன்னகைக்கும்
கிழவிகளற்ற வீதிகள் ஏதும் இல்லை

இருபது வருட பழையவிசிறியின்
விழாத நம்பிக்கை மீது
உறக்கமும் வண்ணக்கனவுகளும்
சாத்தியமாகிறது

தெருப்பூனைகள் யாரோ இடும் உணவில்
வெட்டுண்ட காதின் உயிர்ப்போடு
உலா வருகின்றன

ஒரு கவிதை படிக்கும்
உங்களால் உலகம்
ஒழுங்காகவே இருக்கிறது