Thursday, February 17, 2005

மெய்லிங்கின் பூனைகள்



அந்த சீனப்பெண் தினமும் இரவு நேரங்களில், வெகு குட்டையான ஷார்ட்ஸ் மற்றும்டி-ஷர்ட் அணிந்து என் புளோக்கின் தாழ்வாரத்தில் பூனைகளுக்கு உணவு தருவதைவெகு நாட்களாக பார்த்து வந்தேன்.எப்போதும் அவளைச் சுற்றி பூனைகள் !

சிங்கப்பூரின் மேற்குப்பகுதியில் நிறைய புளோக்குகள். அந்த புளோக்குகளில் ஆயிரமாயிரம்வீடுகள். அதில் ஒன்று நான் தங்கியிருந்த மூவறை வீடு. வாடகை என்றால்முழு வீடும் அல்ல - ஒரே ஒரு அறை மட்டும். ஒற்றை பிரம்மச்சாரிக்கு எதற்கு முழுவீடு? அந்த வீட்டின் இன்னொரு அறையில், வெகு குண்டான, சற்று திக்கி பேசக்கூடிய, பெரிய கண்ணாடி அணிந்த, முப்பத்தி ஐந்து வயதான, வீட்டு உரிமையாளனான ஜானி என்ற சீனன் தங்கியிருந்தான்.

ஜானி என்றுதான் பெயர் சொன்னான். வாடகை ஒப்பந்தம் போடும்போது அதில் தே லாய்சூன் என்று பெயர் எழுதினான். ஏதோ ஒன்று.பெயரா முக்கியம்? அவன் ஒரு தனிக்கட்டை.நான் ஒரு தனிக்கட்டை. அவன் அறையில் அவன். என் அறையில் நான். இந்தசுதந்திரம்தான் பெரிதாகப்பட்டது.

ஜானியே ஒரு ஹவுசிங் ஏஜெண்ட். இருந்தும், இன்னொரு ஏஜெண்டான அடிலின் மூலம்தான் அவன் வீட்டை அடையாளம் கண்டேன்.புளோக்கின் உச்சத்திலிருந்த வீட்டைப்போய் பார்ப்பதற்கே பெரும்பாடு பட வேண்டியிருந்தது.வீட்டிற்குள் நுழைய முடியாதபடிவழியெங்கும் பூந்தொட்டிகளை வைத்திருந்தான். வாசலில் என்னைப் பார்த்ததும் பெரிதாக புன்னகை செய்தான் - அதில் துளித்துளியாக சினேகம்.

அந்த வீட்டின் ஹால் முழுக்க 'அண்டிக்' ஜாமான்கள். சமையலறைக்குப் போக ஒற்றையடிப்பாதை மாதிரி ஒரு வழி.மற்ற இடம் முழுக்க பொருட்கள் நிரப்பி வைத்திருந்தான் ஜானி.அப்படியே திரும்பிப்போய் விடலாம் என்று தோன்றியது.

அடிலின்தான் 'இந்த ஹாலைப்பார்த்து பயந்துவிடாதீர்கள். உங்கள் அறையை வந்து பாருங்கள்' என்று அழைத்தாள். பார்த்தேன். சிங்கிள் பெட், டிரெஸிங் டேபிள், ஓரமாய்ஒரு கப்போர்ட், ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர். அப்பாடா...இந்த அறையையாவது சுத்தமாக வைத்திருக்கிறானே !

'ஜானி மாஸ்டர் ரூமை பயன்படுத்துவான். நீங்கள் இந்த அறையையும்,சமையலறையை ஒட்டிய டாய்லெட்டையும் பயன்படுத்திக் கொள்ளளாம்' என்றாள் அடிலின்.அந்த சமையலறையில் இருந்து ஒரு துர்வாசம் வந்து வயிற்றை பிரட்டியது.டாய்லெட் சுத்தமாக இருந்தது. மிக யோசித்து அந்த அறையை வாடகைக்கு எடுக்க ஒப்புக்கொண்டேன்.

அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று - நான் அப்போது குடியிருந்த வீட்டை உடனே காலிசெய்ய வேண்டிய நிலை. இரண்டு - ஜானி முன்னூறு வெள்ளியை மட்டுமே வாடகையாகக் கேட்டான். அது, வெகு சகாய விலை.

ஒரு நல்ல நாளில் அந்த அறைக்கு குடிபெயர்ந்து வாழ ஆரம்பித்தேன். அப்படி வாழ்ந்து வந்த கால கட்டத்தில்தான் அந்த சீனப்பெண் பூனைகளுக்கு உணவு கொடுப்பதை புளோக்கின் தாழ்வாரத்தில் அடிக்கடி பார்க்க முடிந்தது.

அவளுக்கு என்ன வயதிருக்கும் என்று சரியாக யூகிக்க முடியவில்லை. இருபத்தி ஐந்துமுதல் நாற்பதுவரை எது வேண்டுமானாலும் இருக்கலாம். கழுத்துவரை வெட்டி விடப்பட்டதலைமுடியை மேல்வாரிச் சீவி ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள். அவளது கால்கள் வனப்பு மிக்கதாகவும், நடை ஒரு திமிர் பிடித்த குதிரையினுடையதைப் போல் மதர்ப்பாகவும் இருந்தது. அவள் அழகானவள் என்பதை அவளும் உணர்ந்தே இருந்தாள் என்று யூகம்.

எட்டு மணி என்பது இரவு சாப்பாட்டு நேரம். பன்னிரண்டாவது தளத்திலிருந்து கீழிறங்கி, ஏதாவது ஒரு ஹாக்காட் சென்டரில் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்குள் தூங்குவது என்தினசரி வழக்கம். அந்த நேரத்தில்தான் அவளும் பூனைகளுக்கு உணவு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அவளைப் பற்றி சில கேள்விகள் மனதில் வந்தது. முதல் கேள்வி - பூனைகளுக்கு உணவுதரும் வேலையை ஒரு யாகம் போல் எப்படி தினசரி அவளால் செய்ய முடிகிறது? அவள் ஒருதாய்ப் பூனையோ? இதை அவளிடம் கேட்கவில்லை. அறிமுகமில்லாத அவளிடம் பேச மிகுந்த தயக்கம். இத்தனைக்கும் எதிரில் பார்த்த ஓரிருமுறை அவள் நட்பாக புன்னகை செய்ததுண்டு.

சீக்கிரமே அவளிடம் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் இயற்கையில் அமைந்தது.

அந்த நாளில் கை நிறைய தட்டுகளும், கிண்ணங்களுமாக அவள். மீதமாகி பாலிதீன் பைகளில்இருந்த பொருள்களை எப்படி பக்கத்து புளோக்குக்கு தூக்கிக் கொண்டு போவது என்று அவள்திகைத்து நிற்பதை தூரத்திலிருந்தே பார்த்து விட்டேன்.உதவு என்றது மனம். இன்னொரு மனம்தயங்கியது.கடந்து நடந்தேன்.கூப்பிட்டே விட்டாள்.

"ஸோரி, எனக்குக் கொஞ்சம் உதவ முடியுமா? இதை நான் பக்கத்து புளோக்குக்கு கொண்டுபோக வேண்டும்.முடியுமா?"
என்று கெஞ்சலாக கேட்டாள்."அதனாலென்ன..." என்று சொல்லிபொருள் தூக்கி நடந்தேன்."நன்றி" என்றாள்.

"பூனையென்றால் அவ்வளவு பிரியமா?" என்று கேட்டேன்."அப்பாவி ஜீவன்கள்.ராத்திரி எட்டுமணியாகிவிட்டால் போதும், எல்லா பூனைகளும் என்னைத்தேடி இந்த புளோக்கிற்குக் கீழேவந்து விடும்" என்றவள், "நீங்கள் இந்த புளோக்கிற்கு புதிதாக வந்து இருக்கிறீர்களா?" என்றுகேட்டாள்.அவளும் என்னை கவனித்திருக்கிறாள் போல.

"ஆமாம்.பன்னிரெண்டாவது தளம்."
"ஜானியுடனா?"
"ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரியும் ?"
"எனக்கு ஜானியைவெகு நாட்களாக தெரியும்.அவன் தன் வீட்டு அறையை ஒரு இந்திய வாலிபருக்கு வாடகைக்கு விட்டிருப்பதாகச் சொன்னான்.அது நீங்கள்தானா?"

"ஆமாம்"என்றேன்."ஜானி" என்ற பெயரை இன்னொரு முறை சொல்லி புன்னகைத்துக் கொண்டாள்.அந்தப் புன்னகையில் ஜானியைப் பற்றி ஏதோ ஒரு சேதியிருந்தது.அவள் பெயர் மெய்லிங் என்பதை நானும், என் பெயர் ரவி என்பதை அவளும் அறிந்து-பிரிந்தோம்.

இன்னொரு நாள் இரவு பூனைகள் சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டிருந்த மெய்லிங் என்னைப் பார்த்ததும் புன்னகையித்தாள். " தினமும் வெளியில்தான் சாப்பாடா? " என்றுகேட்டாள்."ஆமாம்" என்று தலையசைத்தேன்."சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளவேண்டியதுதானே...நல்ல சாப்பாடு கிடைக்கும்" என்றாள்."நல்ல யோசனை" என்று சொல்லிசிரித்தேன்."ஒரு நாள் என் வீட்டுக்கு சாப்பிட வாருங்களேன். சைனீஸ் உணவு ஒ.கேதானே?"என்று அழைத்தாள் மெய்லிங்."உங்கள் கணவர் ஒப்புக் கொள்வாரா? நான் யார் என்பது கூடஅவருக்குத் தெரியாதே" என்று திருப்பிக் கேட்டேன். அவளின் முக பாவனை மாறியது."அப்படி ஒருவர் இருந்தால்தானே கேள்வி கேட்க ...நான் விவாகரத்து வாங்கி எட்டு வருடம்ஆகிறது." என்று பதில் சொன்னாள் மெய்லிங்."ஸோரி"

"அதனாலென்ன..அது முடிந்து போன கதை" என்ற மெய்லிங், தனது பூனை அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டாள்.அந்த வட்டாரத்திலிருந்த பல பூனைகளுக்கு அவள்தான் 'ஸ்டிரிலைஸ்' செய்து கூட்டி வந்தாளாம்.அப்படி செய்யாத பூனைகளை பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள் என்று கவலைப் பட்டாள்.'ஸ்டிரிலைஸ்' செய்யப்பட்டபூனைகளின் காது மடல்கள் வெட்டப் பட்டிருந்தன.

ஒவ்வொரு மாதமும் பூனைகளுக்கென்றே கணிசமான தொகை செலவாவதாகச் சொன்னவள்திடீரென்று "ஜானி எப்படி இருக்கிறான்?" என்று கேட்டாள்.அதை கேட்கும்போது மறுபடியும்அவளது முகத்தில் அந்த புன்னகையைப் பார்த்தேன்."ஜானியைப் பற்றிப் பேசும் போதெல்லாம்ஏன் இந்த புன்னகை?" என்று கேட்டும் விட்டேன்."வேறொன்றுமில்லை, ஜானி என்னை காதலிக்கிறான்" என்றாள் மெய்லிங். ஜானியா?

என்னால் நம்ப முடியவில்லை.ஜானி காதலிக்கிறானா? அதுவும், மதர்த்த, திமிர் பிடித்த குதிரைபோன்ற இவளையா? "பார்க்க அவனே ஒரு பூனை மாதிரிதான் இருக்கிறான்" என்றேன்."ஆள்பார்க்கத்தான் அப்படி.இதுவரை என்னிடம் பலமுறை தன் காதலைச் சொல்லி விட்டான்"என்றாள் மெய்லிங்.ஜானியைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொன்னவள், தன் கை தொலைபேசி எண்ணை கொடுத்து, ஒரு மாலை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.

சிலநாட்களுக்குப் பின் ஓய்ந்திருந்த ஒரு மாலையில்,மெய்லிங்கின் வீட்டிற்குப் போனேன்.வாசற்கதவு துவங்கி, அந்த வீட்டின் ஒவ்வொரு துளியிலும், ரசனையும் அழகும் பிரதிபலித்தது.உபசரித்து சோபாவில் உட்கார வைத்தாள்.எதிரில் அமர்ந்து கொண்டாள்.

"உங்கள் ரசனை மிக உயர்வானது என்பதை இந்த வீட்டின் அழகு சொல்கிறது."
"கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது ரவி. வீடு சுத்தமாக,அழகாக இருப்பதில் கவனமாகஇருப்பேன். இந்த வீட்டுக் கதவில் தொங்கும் மணி கூட 'யுனிக்'கானது.இந்தியாவிலிருந்துநண்பரொருர் வாங்கி வந்தார். என்னிடம் இருக்கிற ஒவ்வொரு பொருளுமே யுனிக்கானதாகஇருக்க வேண்டுமென்று பிரயாசைப் படுவேன்."

அவள் இதைச் சொன்னபோது, என்மனம் ஏனோ ஜானி வீடு வைத்திருக்கும் விதம் பற்றி யோசித்தது. இவ்வளவு ரசனை இடைவெளி கொண்ட இருவர் காதலித்தல் சாத்தியமா? மெய்லிங் வேலை செய்து சம்பாரிப்பவளாகத் தெரியவில்லை.விவாகரத்தானவள் வேறு. வீட்டை வளமாக வைத்துக் கொள்ளவும், சாப்பிடவும், பூனைகளுக்கு உணவிடவும் பணம் எங்கிருந்து வருகிறது? இப்படியும் யோசனை வந்தது. அவள் என் மனதை வாசித்திருக்க வேண்டும்....

"கடந்த நான்கு வருடமாக நான் வேலை செய்யவில்லை ரவி. என் பாய்பிரண்ட் நான் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்" நான் அவள் முகம் பார்த்தேன்.

"ஓ...எனக்கு பாய்பிரண்ட் இருப்பதை நான் உங்களுக்குச் சொல்லவில்லையே...அவர் ஒரு பிஸினஸ்மேன்.நன்றாக சம்பாதிக்கிறார். நான் கேட்பதற்கு மேலேயே பணம் கொடுக்கிறார்."
"இதெல்லாம் தெரிந்த பிறகுமா ஜானி உங்களை காதலிப்பதாகச் சொல்கிறான்?"
"தெரியும். அதோடு அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பதும் அவனுக்குத் தெரியும்.அதனால்தான் அவன் காதலை தைரியமாகச் சொல்ல முடிகிறது."

அது எனக்கு மிக ஆச்சரியமளித்த செய்தி. அழகும் வனப்பும்மிக்க இவள் ஏன் ஒரு திருமணமான ஆணின் ஆசை நாயகியாக இருக்க வேண்டும்?

"இது எனக்கு புது செய்தி மெய்லிங். மிகுந்த அழகோடு மெல்லிய மனம் படைத்தவராக இருக்கிறஉங்களின் வாழ்க்கைப் போராட்டங்களை கேட்ட வருத்தமாக இருக்கிறது." என்று சொன்னேன்.அவ்வளவுதான். அவளது கண்களில் சட்டென நீர் கோர்த்துக் கொண்டது. மெல்லிய குரலில் தன் கதையை சொல்லத் துவங்கினாள்...

சின்ன வயது மெய்லிங் பேரழகி. அவளது அழகு, வேலையிடத்தில், சாப்பாட்டுக் கூடங்களில், மார்க்கெட்டுகளில் ஆர்வமிக்க பார்வைகளையும், காதல் விண்ணப்பங்களையும் வாங்கித் தந்தது. என்றாலும், தன்னுடைய பொருள்கள் 'யுனிக்'காக இருக்க வேண்டுமென்று நினைக்கிற மெய்லிங், அவர்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு,அவளுடன் வேலை செய்த, அவளை நிமிர்ந்தும் பார்க்காத டியோவை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடமே அழகான ஆண் குழந்தை. வசந்தமெனப் போனது வாழ்க்கை. வருடங்கள் கடந்தது.

ஒருநாள் டியோவின் வெளச்ளைச் சட்டையில் உதட்டு வடிவ லிப்ஸ்டிக் தடத்தை மெய்லிங் பார்த்துவிட, அந்த வாழ்க்கை திசைமாறிப் போனது. மெய்லிங்கின் தன்னம்பிக்கை, அழகைப் பற்றிய கர்வமெல்லாம் அழிந்து போனது. டியோ யுனிக்கானவன் இல்லை என்ற விஷயமே விவாகரத்துக்குக்போதுமான காரணமென்று மெய்லிங் நினைத்தாள். இது நடந்து எட்டு வருடமாகிறதாம்.

"ஒரு பெண் தனித்திருப்பதும், தனியே பிள்ளையை வளர்ப்பதும் சிரமம் ரவி. என் பாய்·பிரண்ட் என்னை நிஜமாகவே நேசிப்பதை புரிந்ததும், அவரது காதலை தவிர்க்க முடியவில்லை. என் கணவர் எனக்கு செய்த அதே துரோகத்தை நான் இன்னொரு பெண்ணுக்கு செய்கிறேன் என்பதுஎனக்குத் தெரியும். பத்தாண்டு கால இடைவெளியும், வாழ்ந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயமும்எது சரி, எது தவறு என்பது பற்றிய எனது பார்வையை மாற்றிவிட்டது."
"உங்களது மகன் இப்போது ?"
"அது இன்னொரு சோகம். ஒரு பெண் என்னதான் கண்டிப்பாக பிள்ளையை வளர்த்தாலும், சில விஷயங்கள் அவள் பார்வையில் படாமல் பதுங்கிக் கிடந்து திடீரென்று வெடித்து விடுகிறது.நானும் என் பிள்ளை மீது நல்ல நம்பிக்கைகளோடுதான் இருந்தேன். சில மாதங்களுக்கு முன் போலிஸ் என்னை கூப்பிட்ட போதுதான் அந்த நம்பிக்கை உடைந்தது. அவன் ஒரு ரவுடி கும்பலோடு சேர்ந்து அடிதடியில் இறங்கி கைதாகி இருந்தான். நீதிமன்றம் அவனுக்கு ஆறுமாத சிறைதண்டனை வழங்கியிருக்கிறது. இப்போது அவன் ஜெயிலில் இருக்கிறான்"

மெய்லிங்கைப் பார்க்க பாவமாக இருந்தது. இத்தனை சோகங்களை தன்னுள் வைத்துக் கொண்டுஎப்படி இவளால் பூனைகளைத் தேடிப்போய் உணவு தர முடிகிறது?

யோசித்துப் பார்த்தேன்... ஜானி குண்டானவன்தான். அழகற்றவன்தான். ஆனால், நல்லவன். நிறையசம்பாதிக்கிறான். மெய்லிங்கை காதலிக்கிறான். அது போதாதா? அவன் வீடு குப்பையாக இருந்தாலென்ன? அவன் குப்பையாக இல்லாத பட்சம், அவனில் போதுமான மாற்றங்களைமெய்லிங் நிகழ்த்திவிட மாட்டாளா? மெல்ல அவளிடம் கேட்டேன்.

"ஜானியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"என்ன நினைக்க...நல்லவன்."
"நான் இதை சொல்லலாமா, இல்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். நீங்கள்ஏன் ஜானியின் காதலை ஏற்று அவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது?"
"உங்கள் அக்கறைக்கு நன்றி ரவி. ஆனால், உங்களுக்கு என் ரசனை தெரியும். ஜானிக்கும், எனக்கும்பொருந்துமா? அவன் நல்லவன்தான். ஆனால் காதல் என்ற ரசாயன மாற்றம் நிகழ, அழகு, கவர்ச்சிபோன்ற மற்ற விஷயங்களும் தேவைப்படுகிறது என்பதுதானே உண்மை?"

அந்த பதிலுக்குப்பின் ஜானியைப்பற்றி மேலும் அவளிடம் பேசத் தோன்றவில்லை.அவளை தற்போதுஆழ ஆட்கொண்டிருக்கும் அந்த அதிசய மனிதன் யாரென்ற கேள்விதான் மனதில் வந்தது.

"உங்கள் பாய்·பிரண்டின் புகைப்படம் இருக்கிறதா மெய்லிங்?"
"ஸோரி...இல்லை ரவி. ஆனால் அவர் அழகானவர்.கம்பீரமானவர். ம்...எப்படிச் சொல்லுவது? சுருக்கமாகசொல்வதென்றால், ஒரு நடிகரைப் போல் அழகானவர்."
"அவர் இங்கு - உங்கள் வீட்டுக்கு வருவாரா?"
"வருவார். ஆனால் அது ஊர் உறங்கிய நள்ளிரவு நேரமாக இருக்கும். இந்த புளோக்கில் யாருமே அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை."
"அப்படியென்றால் இந்த அழகிய பெண்ணின் அழகான காதலரை யாருமே பார்க்க எனக்கும் வாய்ப்பில்லை." என்று சொல்லி சிரித்தேன். அவளும் அந்த சிரிப்பில் அவளும் சேர்ந்து கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரம் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவளது உபசரிப்புக்கு நன்றி கூறி வெளியேறினேன்.

அதற்கப்புறம் வாய்ப்பு கிடைக்கும்போது புளோக்கின் தாழ்வாரத்தில் நின்று ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டோம்.அவளது மகன் சேர்த்து வைத்திருக்கிற ஆங்கில வி.சி.டிக்கள் சிலவற்றை என்னிடம்தந்து பார்க்கச் சொல்லி அன்பு பாராட்டினாள் மெய்லிங். அவளது பூனைகளைப் போலவே அவளும் மென்மையானவள் என்று தோன்றியது.

ஒருநாள் சாங்கி சிறைச்சாலை வரை வேலை விஷயமாக போக வேண்டியிருந்தது. நன்பரோடுகிளம்பினேன். சுள்ளென்று வெயிலடித்த காலை பத்து மணி. புது சிறைச் சாலையின் கட்டுமானப் -பணிகள் பழைய சிறைச் சாலையை ஒட்டியே நடந்து கொண்டிருந்தது.

ஐ.டி கார்டை வாங்கி பாஸ் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள். போன வேலை முடிந்து வெளியேவந்த போது மணி பன்னிரெண்டாகி இருந்தது. பாஸை கொடுத்து ஐ.டி கார்டை வாங்க நிழல்பாதை வழி நடந்து நடந்தோம். சிறைக் கைதிகளை பார்க்க வருவோரும் போவோருமாக அந்தஇடம் பரபரப்பாக இருந்தது.

அங்குதான் மெய்லிங்கைப் பார்த்தேன். அது அவளாக இருக்க முடியாதென்றும் தோன்றியது. இந்த மெய்லிங் முழங்கால் வரை ஸ்கர்ட் அணிந்திருந்தாள். தலைமுடியை விரித்து விட்டிருந்தாள். உற்றுப்பார்த்தபோது அது மெய்லிங்தான் என்பது உறுதியானது. அவள் என்னை நோக்கிதான் நடந்து வந்து கொண்டிருந்தாள். ஆனால் என்னை கவனிக்கவில்லை.

அவளது கைகள் பக்கத்தில் நடந்து வந்த அந்த மனிதரின் கைகளோடு கோர்த்துக் கிடந்தன.அந்த மனிதருக்கு வயது அறுபது இருக்கலாம். தலை வழுக்கை. முகத்தில் சுருக்கங்களும், வழுக்கையும் இருந்தது. உடல் வயோதிகத்தால் ஒடுங்கியும், அதை அலட்சியப்படுத்தி முன் நின்றதொப்பையுடனும் இருந்தது.மெய்லிங்கின் மகன் சிறையிலிருப்பது ஞாபகத்தில் வந்தது. அவனைபார்க்கத்தான் அவள் வந்திருக்க வேண்டும். இதுதான் அவள் சொன்ன நடிகரைப் போன்ற அழகானகாதலனா?

ஒரு பத்தடி தூரத்தில் வரும் போது மெய்லிங் என்னை பார்த்து விட்டாள். அவள் முகத்தில் அதிர்ச்சி அலை ஓடி ஓய்ந்தது. அந்த மனிதரிடமிருந்து அவசரமா தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். தரை பார்த்தாள். ஏதோ பேசுவது போன்ற பாவனையோடு அந்த மனிதரிடம் பேசியபடி என்னைக் கடந்து நடந்தாள்.

அந்த வினாடியில் மெய்லிங்கைப் பற்றி பல சிந்தனைகள், தர்க்கங்கள், தீர்மானங்கள் மனதுக்குள் வந்து போனது. எப்படி சொல்வது அதை?

ராத்திரியில் மெய்லிங் தரும் உணவிற்காக பசியோடு காத்திருக்கும் பூனைகள் ஞாபகத்திற்கு வந்தது. அழகான பூனைகள்...மென்மையான பூனைகள்...ஆதரவில்லாத பூனைகள்...யாரவது நல்லஉணவு தருவார்களா என்று ஏங்கி நிற்கும் பூனைகள்... மெய்லிங்கும் ஒரு பூனை மாதிரிதானோ ?.






5 comments:

எம்.கே.குமார் said...

வணக்கம் பாலு மணிமாறன்!

வாழ்த்துகள்.

வலைப்பதிவு நன்றாயிருக்கிறது. கதைகளைப் பிறகு படித்துவிட்டு என் எண்ணங்களைச் சொல்கிறேன்.

எம்.கே.குமார்

Muthu said...

கதை மிக அருமை பாலு மணிமாறன். படித்து முடித்தவுடன் திரையுலகில் சிம்மாசனத்தில் இருந்து கடைசியில் நிஜவாழ்வில் இரண்டாம் தாரமாக ஜோடியாகிப்போன பல கதாநாயகிகள் சட்டென நினைவுக்கு வந்துபோனார்கள், ஏனென்று தெரியவில்லை.

Balaji-Paari said...

நல்ல பதிவு...
கதை நன்றாக் உள்ளது. சொல்லப்பட்ட விதம் நேர்த்தி. கரு கொஞ்சம் conservativaaga உள்ளது.
நன்றிகள்

பாலு மணிமாறன் said...

அன்பு நண்பர்கள் மூர்த்தி, எம்கே குமாரின் வரவேற்பிற்கு நன்றிகள்.

சரியாகச் சொன்னீர்கள் முத்து...எங்கு ஓடினாலும் வாழ்க்கை கடைசியில் சிலரை சமதளத்தில் நிற்க வைத்து வேடிக்கை பார்த்து விடுகிறது.

பாலாஜி-பாரி சார்...Conservative சம்பவங்கள் நிறைந்து கிடக்கிற நிஜ வாழ்க்கை கதையாகும்போது, கருக்களும் Conservativeஆக அமைந்து விடுகின்றன. உங்கள் பாராட்டு மேலும் எழுத உற்சாகமளிக்கிறது. " இப்படிக்கு இணையம் " என்ற கதை Conservative கரு அல்ல என்று தோன்றுகிறது. அது பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆசை.

Vijayakumar said...

நேரம் கிடைத்து இப்போது தான் உங்களின் இந்த கதையைப் படித்தேன். அதிக நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன். அருமை நண்பரே, உங்களையெல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமை,நிறைய பெருமையாகவும் உள்ளது. எவ்வளவு நாள் தான் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்பது,என் எழுத்தை மேம்படுத்தவும் ஆவலாக உள்ளது.