Monday, February 21, 2005

சிங்கப்பூர் கடற்கரைச் சாலையில் கவிமாலை

பிச்சினிக்காடு இளங்கோவுடனான என் முதல் சந்திப்பு எந்த காரணத்திற்காக நிகழ்ந்தது என்று ஞாபகம் இல்லை.சிங்கப்பூர் புகிஸ் எம் ஆர் டிக்கு அருகில் ஒரு கேஎ·ப்சி உணவகத்தில் நிகழ்ந்தது என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. BSc(Agri) படித்துவிட்டு கவிதைப்பயிர் செய்வதை தவமாக்கிக் கொண்டிருந்த அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன். மொழி என்ற தலைப்பில் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். ' வங்கி நீ .. வாங்கியவன் நான்.. ' என்ற வரிகள் இன்னும் ஞாபத்தில் இருக்கிறது. அதற்கப்புறம் நிறைய சந்திப்புகள்....

பிச்சினிக்காடு இளங்கோவின் ' வியர்வைத்தாவரங்கள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகியிருந்த காலம் அது. அப்போது இளங்கோ சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தில் ஏதோ பொறுப்பிலிருந்தார். ஒரு நல்ல படைப்பாளியை மலேசிய மக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். எனது நண்பரும், கிள்ளான் வாசகர் வட்டத்தலைவருமான பாலகோபாலன் நம்பியாரிடம் ' இளங்கோவின் புத்தக வெளியீட்டை கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?' என்று கேட்டேன். பிச்சினிக்காடு இளங்கோ யாரென்று அவருக்குத் தெரியாது என்றாலும், நட்புக்காகவும், தமிழுக்காகவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். கோலாலம்பூர், செந்தூல், செட்டியார்கள் மண்டபத்தில் 'வியர்வைத்தாவரங்கள்' வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் கழகத்தலைவர் அமலதாசன், செயலாளர் ஆண்டியப்பன், சுப. அருணாச்சலம் உட்பட பலரும் போயிருந்தோம்.

சிங்கப்பூரிலிருந்து நாங்கள் போனது பஸ்ஸில். மலேசியாவின் அகன்ற நெடுஞ்சாலையின் ஓரத்தில் விரைந்தோடும் சோடியம் விளக்குகளையும், இருட்டிலிருந்த செம்பனை மரங்களையும் பார்த்தபடி, நானும், பிச்சினிக்காடு இளங்கோவும் விடியவிடிய பேசிக்கொண்டே சென்றோம்.தனது கடந்தகால வாழ்க்கையின் பல வேதனைமிக்க சம்பாவங்களைச் சொல்லும்போது, அவரையும் மீறி அவர் கண்களில் கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். ரணப்படுத்திய அந்த சோகங்களின் ஆழத்தையும், அந்த கவிஞனின் மெல்லிய மனதையும் அந்த இரவில் வெளிச்சம் போட்டுக் காட்டிய கண்ணீர் அது.

பின்னாளில் ஏதேதோ காரணங்களுக்காக இளங்கோ, சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்திலிருந்து விலகி நின்றார். கம்போங் கிளாங் என்ற சமூக மன்றத்தின் உதவியுடன் ' கடற்கரைச் சாலையில் கவிமாலை' என்ற மாதாந்திர கவிதை நிகழ்ச்சியையும் துவங்கினார். 2000 ஆண்டு கண்ணதாசன் பிறந்த நாளன்று முதல் நிகழ்ச்சி நடந்தது.

துவக்க கால நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டேன். கவியரங்கம், ஏதேனும் ஒரு பொதுத்தலைப்பில் கவிதை, அதை சிறப்பாக எழுதும் மூன்று பேருக்குப் பரிசு, வாசித்த நேசித்த கவிதைகளை பகிர்ந்து கொள்வது என்று மிக பயனுள்ளதாக அமைந்த நிகழ்ச்சி அது.

வேலைப்பளுவின் காரணமாக என்னால் அதில் தொடர்ந்து கலந்து கொள்ளமுடியாமல் போனது துரதிர்ஷ்டம்.மறுபடியும் சமீப மாதங்களாகத்தான் கலந்து கொள்கிறேன்.இந்த இடைப்பட்டக் காலத்தில் 'கடற்கரைச்சாலையில் கவிமாலை' நிகழ்ச்சி பிரமிக்கிற அளவு வளர்ந்திருந்ததது. கவிஞர்கள், பார்வையாளர்கள், புதிய அங்கங்கள் என தானும் வளர்ந்து, மற்றவர்களையும் வளர்த்திருந்தார் இளங்கோ. அங்கிருந்தவர்கள் பலருக்கு நான்தான் புதியவனாகிப் போனேன்....

நான் பங்கேற்க்காத சிலவருடங்களில் நடந்தவை என நான் அறிந்தவை இவை.....

1) கவிக்கோ அப்துல்ரஹ்மான், ஈரோடு தமிழன்பன், நாஞ்சில் சம்பத், இளசை சுந்தரம், நாகூர் ரூமி, கனடா சேரன், தஞ்சைவாணன், சிங்கை உதுமான்கனி, சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியின் தலைவர் முகம்மது அலி என பலரும் பலந்து கொண்டு தமது கவிதை அனுபவங்களை பகிர்ந்து கொண்டது.

2) சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு நீண்ட நாட்களாக பங்களித்து வரும் மூத்த இலக்கியவாதிகளுக்கு கணையாழி விருதும், மோதிரமும் அளித்து வருவது . ( திரு. பி. கிருஷ்ணனும், கவிஞர் இக்குவனமும் கடந்த வருடங்களில் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள் )

3) சிங்கப்பூர் கடற்கரையில் நட்சத்திரங்களை துணைக்கு வைத்துக் கொண்டு, விடிய விடிய நடந்திய - கவிராத்திரி.

4) சிங்கப்பூரை ஒட்டியுள்ள பூலா உபின், St.John's தீவு போன்ற தீவுகளில் நடந்திய கவிமாலை நிகழ்ச்சிகள்.

கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இதையெல்லாம் விட அதிக மகிழ்ச்சியளித்த இன்னொரு விஷயம் - புதுக்கவிஞர்கள் பலர் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் அளித்த பயிற்சியால், முறையான இலக்கணத்தோடு மரபுக்கவிதை எழுதத் துவங்கியிருந்ததுதான். எங்கள் நோக்கு கவிதைதான்... அது புதுசாகவும் இருக்கலாம், பழசாகவும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிற செயல் - இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும் ?

சிங்கப்பூரிலிருந்து இணையத்தில் எழுதுகிற யாரவது கவிமாலையில் கலந்து கொள்கிறார்களா என்று பார்த்தேன். ம்ஹீம்... யாருமில்லை. அப்படியென்றால் பனசை நடராஜன், வீரமணி இளங்கோ, நெப்போலியன் போன்றவர்கள் ? அவர்களெல்லாம் கவிமாலை இணையத்திற்கு வழங்கிய கொடையாகவே தெரிகிறது.போன மாதம் எம்கே குமார் வந்திருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியவிதம், அழகு நிறைந்த, எளிமையான, ஒப்பனையற்ற கிராமத்துப் பெண்ணை ஞாபகப்படுத்தியது. கவிமாலை கவிஞர் கருணாகரசு 'மழை' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்....

உழுதவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது வானம்.

இவரைப்போன்ற நல்ல கவிஞர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள்.

வரும் 26 பிப்ரவரி சிங்கப்பூர் Beach Road-ல் உள்ள Kampong Klang Community Centre-ல் மாலை 7.00 மணிக்கு அடுத்த கவிமாலை நடக்கிறது. மலேசியாவிலிருந்து பிரபல எழுத்தாளர் சை.பீர்முகம்மது, தென்றல் வார இதழ் ஆசிரியர் வித்யாசாகரை சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிடலாமே என்றேன் இளங்கோவிடம். ' தாராளமாக' என்றார் அவர். கூப்பிட்டிருக்கிறோம். அவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் 99.99 உண்டு. இருவரும் ரொம்ம்ம்ப நல்ல பேச்சாளர்கள்... நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்டுப் பாருங்கள்... நான் சொன்னது 99.99 சதவீதம் உண்மை என்பது புரியும் !

No comments: