Tuesday, March 01, 2005

பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?

பொதுமேடைகளில் உற்சாகமிகுதியால் கங்கைஅமரன் அள்ளிக் கொட்டும் அபத்தங்கள் உலக பிரசித்தம். ஆனால் அவரிடமிருந்து மண்டைக்குள் மணியடிக்கும் அற்புதமான வரியொன்று வெளிப்பட்டதை பத்திரிக்கைகளில் படித்தேன்.

இசையமைப்பாளர் தேவா வீட்டுக் கல்யாணம். மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது...பாடகர் " பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? " என்று உருகிக் கொண்டிருக்கிறார்...அதைக்கேட்டுவிட்டு மேடையேறும் கங்கைஅமரன் மைக்கைப் பிடித்து, அந்த வரியை கொஞ்சம் மாற்றிப் பாடுகிறார்..." பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா? "...வேடிக்கையாகத்தான் பாடுகிறார்...ஆனால் அந்த வரி, நாகரிக வேகத்தில், மாற்றுக்கலாச்சாரங்களின் தாக்கத்தில், சுயமிழந்து கொண்டிருக்கும் நமது இனத்தின் முகவரி காட்டும் வரியாக உரத்து ஒலிக்கிறது.....

யோசிக்கிறேன்...."ஆட்டோகிராப்" கதாநாயகன் அரைடிரவுசரில் காதலித்த, தாவணி அணிந்து, மாரணைத்த புத்தகங்களோடு நடந்து திரிந்த எம்மினப் பெண்கள் எங்கே?

என்பதுகளின் இறுதிவரை பெரும்பாலான தமிழ்நாட்டுப்பள்ளிகளில் பெண்களுக்கான சீருடை பாவாடை தாவணியாகத்தான் இருந்ததது. இன்று- மிகப்பல பள்ளிகளில் சுரிதார் அணிந்தே பள்ளிக்கு வருகின்றன தமிழ் சிற்பங்கள்! எப்படி வருகிறது என்பதை உணரமுடியாமலே வந்துவிடும் இரவு மாதிரி, தாவணிகளை உருவிக்கொண்டு நிற்கிறது சுரிதார்,ஜீன்ஸ் மற்றும் பிற சங்கதிகள்.

தாவணிக்கு மட்டுமா இந்த நிலை ... வேட்டி மட்டும் என்ன வாழ்கிறதாம் ? அரசியல் கட்சிகளின் தயவால், வேட்டிகள் - கரைகளோடும், கழுவ முடியாத கறைகளோடும் பிழைப்பு நடத்துகின்றன. மற்றபடி எஞ்சிய தமிழ் மக்கள்ஸ் " நாங்க பேண்ட் சட்டைக்கு மாறி ரொம்ப நாளாச்சு. நீங்க ? " என்று கேட்டபடி கார்பரேட் உலகிற்குத் தக்கபடி தங்களை உருமாற்றி விட்டார்கள்.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்... ஏன் நிகழ்ந்தது ?

யோசித்துப்பார்த்தால் - பரிணாம வளர்ச்சியால் இல்லாமல்போன மனிதவால் மாதிரி இந்த ஆடைகள் இடமற்றுப் போய்க்கொண்டிருக்கும் உண்மை புரியும். பெண்கள் அடுப்பூதும் நிலை உடைத்தெரிந்து, படிப்பதற்கும், வேலைக்கும் வந்த பிறகு, பாவாடை தாவணி, சேலை போன்ற ஆடைகளை அணிவதில் இருக்கும் நடைமுறை சங்கடங்கள் இந்த மாற்றத்திற்கு முதல் காரணம். இயல்பாகவே நம் மரபணுக்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வேற்றுக் கலாச்சார மோகமும், பல ஆண்டுகள் போராடியும் பெரியாரால்கூட மாற்றிவிட முடியாத நம்மைப் பற்றிய நமது தாழ்வான மதிப்பீடுகளும் - இன்னொரு காரணம்.

கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில், முடிந்த மட்டும், பிடிவாதாமாக பழைய மரபுகளை கட்டிக்காப்பதற்கும், கட்டி அழுவதற்கும், நாமென்ன மலையாளிகளா? வெள்ளைக்கார பில்கேட்ஸிக்கு பக்கத்திலிருக்கும் தமிழர்கள் இல்லையா .... அதான் - மாறிட்டோம் !

"பாவாடை தாவணி / சேலையைப்போல் பெண்களை அழகாக, அதே சமயம் கவர்ச்சியாகக் காட்டக் கூடிய ஆடையை இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அமெரிக்கர்கள் / ஐரோப்பியர்களால் வடிவமைக்கவே முடியாது " என்று நம்மின ஆண்கள் நினைப்பது, நம்மினப் பெண்களுக்குத் தெரியும் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் இந்திய சமூகம், சிங்கப்பூரின் புதிய பிரதமர் லீ சியான் லூங்கிற்கு விருந்தளித்தபோது, ஏறக்குறைய 80 சதவீதப் பெண்கள் சேலையணிந்து வந்து அந்த நினைப்பு சரியென்று நிரூபித்தார்கள்.

இப்படியாக - கோயில்களும், திருவிழாக்களும் கொஞ்சம் போலாவது காப்பாற்றிவரும் வேட்டி, பாவாடை, தாவணி, சேலை போன்ற நமது பாரம்பரிய பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை மேலும் காப்பாற்ற டாக்டர் ராமதாசு, தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏதாவது செய்தால், ஆதரவுக்கரம் நீட்ட நாமெல்லாம் தயார்தான். ( அதற்காக, சேலைகட்டி நடிக்காத ஜூலியா ராபர்ட்ஸின் படங்களைத் திரையிடும் திரையரங்குகளின் முன் எங்கள் கட்சி ஆட்களும், தமிழ் வலைப்பதிவர்களும் தீக்குளிப்பார்கள் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள் ஐயா! )

என்னாலான இன்னொரு யோசனை - வரும் மே மாதம், வெயில் மண்டையைப் பிளக்கும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம், " சேலை அழகுராணி / தாவணி அழகு ராணி 2005 " போன்ற போட்டிகளை நிறைய நடத்தலாம். அதன் மூலம் நமது பாரம்பரிய ஆடைகள் மீது நிறைய விழிப்புணர்ச்சியும், பார்ப்பவர்களது கண்களுக்கு குளிர்வுணர்ச்சியும் ஏற்படுவது நிச்சயம், நிச்சயம் நிச்சயம் !!!!

9 comments:

Kasi Arumugam said...

கடைசியில் சொன்ன ஐடியாவுக்கு ஒரு ஜே!

Anonymous said...

Looks like you are impressed a lot by the Singapore Saree Alagu Rani contests... hahahahahaha.............

Raj, Singapore

ilavanji said...

// கிடந்தவையும், கிடைத்தவையும் //

ரெண்டும் ஒன்னுதானுங்களே? :) இல்லை அது கடந்தவையும், கிடைத்தவையுமா?

பாலு மணிமாறன் said...

நடக்கிற பாதையில் நல்லதும் கிடக்கும், கெட்டதும் கிடக்கும்.... கெட்டதை கடந்து நடப்பதும், நல்லதை குனிந்து எடுப்பதும்தானே சராசரி மனிதனின் சாதாரண வழக்கம் இளவஞ்சி ?

சங்கரய்யா said...

இது தேவையற்ற கவலை. உடைகளில் எப்போதும் நிரந்தரமானதென்று எதுவும் இருக்க முடியாது. மரவுறிகள் தரித்தவன், நூலாடைக்கு மாறுவது அவனுடைய கலாச்சாரத்தை மீறுவதாகுமா? மாற்றங்கள் காலம் காலமாகவே நடைபெறுவதுதான்.

சுட்டுவிரல் said...

பாலு சார்,ரொம்ம்ப அவசியமான கவலை தான் போங்க!

Anonymous said...

Change is eternal man.... You got to accpet such things.... Would you wear a bell bottom pants now ???

Anonymous said...

i honestly think 'wichita" probably doesn't even know what is pavadai dhavani is about, change may be eternal but not at the cost of loosing ur identity, can that anonymous commenter explain why people still wearing turbun,tudung...why people still wearing sorong in inthis part of the world..u mean to say that the they are not modern..
the issue really is not changing the way of dressing or switching to western style of dressing to suit to ur place of living.or working ..but the people are feeling inferior in exhibiting/showing their culture to other people...they are not confident of their own orgin of culture...that is shame with tamilians..that is the real
issue...

bukitbatokaran

பாலு மணிமாறன் said...

testing