Wednesday, March 02, 2005

போன்சாய் செடியாகிப்போன தமிழ் ஆலமரம்

இப்படிச் சொல்லி வேதனைப்பட்டவர் பிரபல மலேசியத்தமிழ் எழுத்தாளர் சை.பீர்முகம்மது. சிங்கப்பூரில் நடந்த " கடற்கரைச்சாலையில் கவிமாலை " நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய விரிவான உரையை நண்பர் பனசை நடராஜன் பதிவு செய்தார். அதை அப்படியே உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்......


கவிமாலை (26/02/2005)

மாதந்தோறும் இறுதி சனிக்கிழமையன்று நடைபெறும் ‘கடற்கரைச்சாலை கவிமாலை’ நிகழ்ச்சி இம்மாதமும் ‘கம்போங் கிளாம்’ சமூக நிலையத்தில் பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது.

தொடக்கவுரை ஆற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக்கு பார்வையாளர்களாக வந்த பலர் இன்று நல்ல கவிஞர்களாக வளர்ந்திருப்பதுடன், ஆசியான் கவிஞர் திரு.க.து.மு.இக்பால் அவர்களின் பயிற்சியின் காரணமாக ‘மரபுக் கவிதை’ எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த மூத்த படைப்பாளிகளுக்கு கவிமாலை சார்பாக ‘கணையாழி விருது’ வழங்கப் படுவதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அடுத்து, கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளயும், படித்து ரசித்த கவிதைகளயும் பகிர்ந்து கொண்டனர்.

தமிழக எழுத்தாளர் டாக்டர்.ஹிமானா சையத் அவர்களை அறிமுகப் படுத்திப் பேசிய ஆசிரியர் ப.திருநாவுக்கரசு, ‘தமிழில் நாற்பத்தைந்து நூல்கள் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலங்கையிலும், கேரளாவிலும் பாடத்திட்டத்தில் உள்ளன’ என்றார்.

சமூக சேவைக்காகவே எழுதுகிறேன் என்று தொடங்கிய திரு,ஹிமானா சையத், ‘தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சுக்கோ உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ..’ எனத் தொடங்கும் பாடலைப் பாடி பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

‘ஒண்ணுமில்லா மாப்பிள்ளைக்கு
ஒரு லட்சம் கைக்கூலி..!
உன்னுடைய அப்பன் ஆத்தா
சொத்து பத்து எல்லாம் காலி..

உலகம் உன்னை பத்தி
உசத்தியா பேச வேணும்!
அதுக்கு ஒரே வழி கல்விதான்
அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்!”


என்ற சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு சொந்தக் காரரான இவர் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்திருந்தார் மலேசிய எழுத்தாளர் திரு. சை.பீர்முகமது. மலேசிய எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், துணைத்தலைவராகவும் இருந்தவர். ‘கைதிகள் கண்ட கண்டம்’ என்ற பயண நூலையும், ‘வெண்மணல்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘பெண்குதிரை’ என்ற நாவலையும், ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற வரலாற்றுத்தொடரையும் எழுதியுள்ளார். தனது முகில் பதிப்பகம் மூலமாக மலேசிய எழுத்தளர்களின் ஐம்பது ஆண்டுகால சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மூன்றுத் தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

‘உண்மைகளை ஒப்பனையின்றி உரக்கச் சொல்லும் தன்மையினால் அதிகமாக நேசிக்கப் படுகிற, வாசிக்கப்படுகிற, விமர்சிக்கப் படுகிற, ஆனால் ஒதுக்க முடியாத எழுத்துக்கள் இவருடையது’ என்று திரு பீர்முகமதுவை அறிமுகப் படுத்திப் பேசினார் சிங்கை எழுத்தாளர் திரு.பாலு மணிமாறன்.

‘முன்பெல்லாம் பெண்கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாக இருந்தார்கள். ஆனால் இன்று நிறைய பெண்கள் சிறப்பாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனத் தன் உரையைத் தொடங்கினார் திரு பீர்முகமது.

"ஒவ்வொரு என்ணூறு ஆண்டுகளிலும் தமிழ் இலக்கிய உலகம் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தொடங்கும் என்ணூறு ஆண்டுகள் தமிழுக்கு சிறப்பானதாக இருக்கும். இணையத்தின் மூலமாக அசுர வளர்ச்சி கண்டு வரும் தமிழ், தற்போது கைப்பேசியிலும் குறுஞ் செய்தியாக வலம் வரத்தொடங்கி விட்டது. இருபத்ததையாயிரம் பேர் மட்டுமே படிக்கும் இடிசு என்ற ஹீப்ரு மொழிப் படைப்பு நோபல் பரிசு பெறுகிறதென்றால் எண்பது நாடுகளில் பரவிக் கிடக்கும்எம்மொழியாம் செம்மொழித் தமிழ் எப்படி அழியும்?" என்ற கேள்வியினால் நல்லதொரு நம்பிக்கையை விதைத்தார். அதே சமயம் தமிழர்களிடம் இருக்கும் தாழ்ந்த குணங்களையும் பட்டியலிட்டார்.

‘அன்று முதல் இன்று வரை தமிழ் இலக்கியங்களைப் பற்றிய சரியான மதிப்பீடுகள் இல்லை. ஓலைச்சுவடிகளை ஆற்றில் வீசி எறிந்து, எதிர்த்து வருபவையே நல்லவை என்று நம்பிய நம் முன்னொர்களின் அறியாமையால் எத்தனை நிகரற்ற நூல்கள் அழிந்தனவோ?
இன்றும் தமிழிலிருந்து தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளமொழிப் படைப்புகளெல்லாம் பல ஞானபீட விருதுகள் பெற்றிருக்க நம் தமிழ் மொழியில் திரு.அகிலனுக்கு மட்டுமே கிடைத்ததற்கு என்ன
காரணம்? அவருக்கு விருது வழங்கப் பட்டதை எதிர்த்து சுமார் இரண்டாயிரத்து என்ணூறு எதிர்ப்புக் கடிதங்கள் தமிழர்களிடமிருந்து போனதுதான். அதனால்தான் ஆலமரமாக தழைக்க வேண்டிய தமிழ் இலக்கிய உலகம் ‘போன்சாய்’ என்ற தொட்டிச் செடியாகச் குறுகி விட்டதோ?’ என்றார் வேதனையுடன்.

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டுக் கறுப்பின எழுத்தாளன், சிறைச்சாலையில் கழிவறைக்காகிதத்தில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற நாவலை எழுதினான். பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றுமில்லை எனத் திருப்பித் தரப்பட்ட வெள்ளையரின் நிறவெறிக்கெதிரான அந்த நாவல் பெரியதொரு மறுமலர்ச்சியை மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.அதுபோன்று சுயமாக, நீங்களாக சிந்தித்து எழுதும் படைப்புகளே உங்களை அடையாளப் படுத்தும். அதற்கு ‘உழைத்து உண்மையாக எழுதுங்கள்..

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில்....

‘இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த
நான் என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாகக் கவிதை புனைந்ததால்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவனிக்கப் பட்டார். மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையில்

‘நம்மைக் கொண்டு
எத்தனை சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள்
ஒரு இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!’

போன்ற வித்தியாசமான சிந்தனைதான் இன்று எழுத்தாளர்களுக்குத் தேவை.

மலேசியாவை விட சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள். தமிழ்முரசு லதா எழுதிய ‘தீவெளி’ கவிதை நூலின் சிறப்புகளைப் பற்றி மலேசியாவில் ‘தென்றல்’ பத்திரிக்கையில் ‘சிந்தையே என் சித்தமே’என்ற பகுதியில் எழுதியுள்ளேன். மேலும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமான இலக்கிய உறவுகளை வலுப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் பிறந்த இளைஞர்களையும் படைப்பாளிகளாக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தையும் ஆலோசனைகளையும் தெரிவித்தார்.

‘முதலில் நான் மனிதன், அடுத்து நான் தமிழன், இறுதியாகத்தான் என் மதத்தைச் சார்ந்தவனாக அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்’ என்றார் முத்தாய்ப்பாக.

‘சுமை’ என்ற தலைப்பில் கவிஞர்கள் எழுதி வந்த கவிதைகளில் திரு.கருணாகரசு, திரு.திருமுருகன், திருமதி.மீரா மன்சூர் ஆகியோரின் கவிதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டன. கவிஞர்கள் அருண்கணேஷ், சேவகன் இருவரும் இம்மாதப் பரிசுகளை வழங்கியிருந்தனர்.

அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார் திரு பிச்சினிக்காடு இளங்கோ. நல்லதொரு தமிழ் நிகழ்ச்சிக்கு திரளாக வந்திருந்தோரைக் காணுகையில் மெல்லத் தமிழ் இனிச் சாகாது.. உலகம் உள்ள வரை தழைத்து வாழும்! என்றேத் தோன்றியது.

- பனசை நடராஜன், சிங்கப்பூர்-

2 comments:

இப்னு ஹம்துன் said...

பதிவுக்கு நன்றி பாலு,
சித்தார்கோட்டை Dr. ஹிமானா சையத் அருமையான நல்ல எழுத்தாளர். அவரால் ஊக்கப்படுத்தப்பட்டு தான் எனக்கும் எழுதுகோல் ஆறாவது விரலானது. மகிழ்ச்சி.

பாலு மணிமாறன் said...

Well said Mr.Ifnu....he sounds like a great writer...it looks we will have more chance to know him more in coming months...

I too is looking for the day to join hands with u to attned Kavimaali ...Mr. Moorthy