Monday, March 07, 2005

சில்க்குடன் ஒரு பேட்டி ( கற்பனையில்தான்! )

எங்கள் வாலிப வானத்தில் விளக்கெரித்த நிலா நீங்கள். இருந்த நீங்கள் இல்லாமல் போனதால் - நிலவின்றி நாங்கள் இருளாகிப் போனது தெரியுமா உங்களுக்கு ?
தெரியும். இருந்தாலும் என்ன...தீபங்களும், தீக்குச்சிகளும், ஏன்...மின்மினிப் பூச்சிகளும் கூட, இரவுக்கு வெளிச்சமூட்ட முடியும்.


புரியவில்லையே....

சில்க் என்ற சங்கதி தமிழ்ச் சினிமாவில் தற்காலிகம். கவர்ச்சி என்பதோ நிரந்தரம். நானில்லாவிட்டாலும் இன்னொருவர் விளக்கெரிப்பார்.



இறப்பதற்கு முன் என்ன நினைத்தீர்கள் ?
இன்னும் கொஞ்சநாள் இருந்துதான் பார்ப்போமே என்று நினைத்தேன்...


பிறகு ஏன் மனதை மாற்றிக் கொண்டீர்கள்?
மனம் ஏற்கனவே மரணமடைந்திருக்க, உடலுக்கு எதற்கு உயிர்?·


இப்போது என்ன செய்கிறீர்கள் ?
ரம்பா, ஊர்வசி, மேனகையோடு இந்திரன் சபையில் என்னையும் இணைத்து விட்டார்கள். பூலோகத்தில் பாமரர்களை நடனத்தால் பரவசப்படுத்திய எனக்கு, மேலோகத்தில் தேவர்களைத் திருப்திபடுத்தும் உத்தியோக உயர்வு.


பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது?
பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு.


இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி....
பச்சையாக சொல்வதென்றால்.... பரிதாபத்திற்குரியவர்கள்!·


கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன ?
ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று.


இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா?
உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்.

ஏன்?
அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது.


எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?
இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது !·

3 comments:

நாலாவது கண் said...

திரு பாலு மணிமாறன்,

வலைபதிவுக்கு நான் அண்மைய வரவுதான். அதனால் அதிக பிரசங்கமான கேள்விகள் நியாயம் இல்லை என்று புரிகிறது. 'சில்க்'கை பேட்டி கண்ட உங்கள் தலைப்பு இழுக்க... உங்கள் பதிவுக்கு வந்தேன். உங்களுக்கென்ன வயது சுமார் 40ஐ ஒட்டியிருக்குமா? அந்த வயதுகாரர்கள்தான் இன்னும் சில்க்கை மறக்காமல் இருக்கிறார்கள். அதைவிட மூத்தவர்களுக்கு ஜெயமாலினி! ஆனால் ஏனோ 'சில்க்' ரசிகர்களிடம்தான் நான் loyaltyஐ காண்கிறேன். அத்ன்பிறகு எத்தனை சிம்ரன்களே வந்தாலும் கட்சி மாறுவதில்லை.

அப்புறம் மாலன் அவர்களின் புத்தக வௌதயீட்டு விழா பற்றிய பதிவில் 'மாலன், மாலன் போலவே எழுதுகிறார்' என்றது நச்! சிங்கப்பூர் தமிழ் இலக்கிய எதிர்காலம் பற்றிய உங்களது கருத்து, கணிப்பு, டாக்ஸி பிடித்து ஓடோ டி வரும் நிகழ்ச்சி எல்லாம் மனதைத் தொட்டது. காலை அவசரத்தில் மேலும் படிக்க முடியவில்லை.

விரைவில் மறுபடியும் வருகிறேன்.

- சந்திரன்

HS said...

நல்ல கற்பனை!

பாலு மணிமாறன் said...

Thank You for your comments - Moothy, naalavathu kan & Hari