Wednesday, March 30, 2005

நாய்களும் நடை பழகும் காலை

கொடிநீள் கழிவுநீர் ஆடியில்
நொடிக்காற்றில் நீட்சியாகும்
வேர்ஹவுஸ் விளக்குச்சித்திரம்.....

பதிவற்ற சுற்றுச்சுவர் முத்த நினைவில்
எட்டிக்கிடக்கும் ஒளிப்படுகையை
இருள் அணைத்துப் பார்த்தபடி
மரமுதிர்ந்து கிடக்கும் ஒரு மயிர்ச்சிறகு.

வியர்வை நடும் நகர்வில்
எட்டி எட்டி நடந்தபடி
நீண்ட உயிர் நோக்கும்
சீனக்கிழவியின் தளர்கால்கள்.

இரவு அடங்க
இருக்கிறது இன்னும் நேரம்!
ஜன்னல் திரைச்சீலைகளின்
பின்அதிர இயங்கும் அது.

கசியும் வெளிச்சத்தை இழுத்துமூடும்
காண்டோ வீட்டு சீன முதலாளி
பிலிப்பினோ பணிப்பெண்ணிடம் சொல்கிறான்...

'மறந்து விடாதே...
காலை ஐந்திற்கு அலாரம் வை.
நாயும், நீயும் நடை பழக வேண்டும்'

No comments: