Sunday, January 22, 2006

"சுனாமி வருவதற்கு முன்னால் கடல் உள்வாங்கும்"



திருச்சி தேசியக்கல்லூரியில் புவி அறிவியல் துறையில் பேராசியராக பணியாற்றி வரும் டாக்டர் அன்பரசு சிங்கப்பூரில் 20 ஜனவரி அன்று நடந்த சந்திப்பில் இந்தத் தகவலைக் கூறினார்.

புருணே நாட்டில் நடக்கும் அனைத்துலக புவி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளச்செல்லும் வழியில் சிங்கப்பூர் வந்திருக்கும் அவரோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி தோசாக்கானர் உணவகத்தில் தமிழ்நெஞ்சர் போப்ராஜூ என்ற நாகை தங்கராசு ஏற்பாட்டில் நடைபெற்றது. ஏராளமான தமிழ் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

"பூமி எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதோடு, பொறுமையற்றதாகவும் இருக்கிறது. ஒரு காலத்தில் பூமியில் இருந்த நிலப்பரப்பெல்லாம் இணைந்து ஒன்றாக இருந்தது. இப்போது மாதிரி தனித்தனி கண்டங்கள் எல்லாம் இல்லை. கண்டங்கள் பின்னால் உருவானவை." என்று எளிய விளக்கத்தோடு தனது உரையைத் துவங்கிய டாக்டர் அன்பரசு, நீர், நிலம் பற்றிய பல அறிவியல் தகவல்களை விரிவாக எடுத்துக் கூறினார்.

ஒரு மரக்கட்டை தண்ணீரில் மிதப்பது மாதிரி, பூமிக்குள் இருக்கின்ற மிதகடின திரவத்தின் மீது நிலப்பரப்புகள் மிதந்து கொண்டிருக்கின்றன. வெப்பம் மிகுந்த அந்த திரவத்தின் வெப்பச் சுழற்சி நகரும் போது தன்னோடு நிலப்பரப்புகளையும் நகர்த்திச்செல்கிறது. அப்படி நகர்ந்து செல்லும் இரு நிலப்பரப்புகள் மோதிக்கொள்ளும்போது, பெரிய மலைகள் ஏற்படுகின்றன. இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும் ஏற்பட்ட மோதலால் பிறந்ததுதான் இமயமலை" என்று குறிப்பிட்டார் டாக்டர் அன்பரசு.

அல்·பிரட் வாக்னர் என்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் 18 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் 1930ல், பூமி ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்று கண்டுபிடித்துச் சொன்னபோது, பெளதீக அறிஞர்கள் பெரிதாக எதிர்த்தார்கள். அப்படியானால், எந்த விசை கண்டங்களை, பூமியை நகர்த்தியது என்று எதிர்கேள்வி கேட்டார்கள். அல்·பிரட் வாக்னர் அந்த காலகட்டத்தில் தீர்க்கமான பதில் சொல்ல முடியாவிட்டாலும், தனது வாதத்திற்கு ஆதரவாக சில விஷயங்களை சொன்னார்.

கண்டங்களின் ஓரங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைந்திருப்பதும், இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் காணப்படும் ·பாஸில்கள் ஒத்த தன்மையுடையதாக இருப்பதும், கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும், வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காணப்படும் பாறைகள் ஒன்றாக இருப்பதும் தனது கண்டுபிடிப்பை உறுதி செய்வதாகச் சொன்னார் வாக்னர்.

1960களில் யுனெஸ்கோ அமைப்பு ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு குளோபல் சேலஞ்சர் என்ற கப்பலில் பெரிய குழுவை அனுப்பியது. அவர்கள் கடலுக்குள் இமயமலையை விட உயரமான மலைகள் இருப்பதையும், கடலுக்கடியில் நிலப்பரப்பானது நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள். மத்தியக்கடல் பகுதியில் 500 டிகிரி செண்டிகிரேடில் கூட சில வகை பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு பனியால் மூடப்பட்டிருந்தது. பனிப்பாறைகள் உருகுவது அல்லது நீர் உறைவதை வைத்தே கடல் நீர் மட்டத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுகின்றன. தற்போது பாலைவனமாக இருக்கிற அரேபியப்பகுதிகள் கூட ஒருகாலத்தில் கடலாக இருந்த பகுதிகள்தான். பூமி நகர்வதும், கடல் நகர்வதும் பூமிக்குள் வெப்பம் இருக்கும்வரை நிகழ்ந்து கொண்டே இருக்கும்."என்று தனது உரையில் குறிப்பிட்டார் டாக்டர் அன்பரசு. பின்பு பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதிலிருந்து சில விஷயங்கள் : -
  • பூகோள ரீதியாக சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளும், நாடுகளும் ஒரு அரண்போல் அமைந்திருப்பதால், சிங்கப்பூரை சுனாமி தாக்கும் வாய்ப்பு மிகக்குறைவு.

  • சுனாமி சட்டென்று வந்து விடாது. சுனாமி வருவதற்கு முன் கடல் உள்வாங்கும். பிறகுதான் பேரலையாக வந்து தாக்கும்.

  • பூகம்பம் என்பது பூமி தன்னில் இருக்கிற அழுத்தத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் செயல்தான். தற்போதைய விஞ்ஞான அறிவை வைத்து எந்த இடங்களை பூகம்பம் தாக்கக்கூடும் என்று மட்டுமே சொல்ல முடியும். எப்போது தாக்கும் என்று சொல்வது சிரமம்.

  • லெமூரியாக் கண்டத்தைப் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை. ஆனால், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பூம்புகார் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

  • மகாபலிபுரத்தில் 7 கோபுரங்கள் இருந்தது வரலாறு. தற்போது ஒன்றுதான் இருக்கிறது. ஆனால் சுனாமி வந்த நேரம் மகாபலிபுரத்தை ஒட்டிய கடல் உள்வாங்கிய போது, மேலும் 2 கோபுரங்களை பார்க்க முடிந்தது.



1 comment:

Anonymous said...

Test