Friday, December 19, 2008

உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்! (நாலு வார்த்தை-019)



1981ம் வருடம். அப்போது திரு.குணாளனுக்கு வயது 39. அந்த வயதில் 400 மீட்டர் தொலைவை ஓடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 48.8 விநாடிகள் மட்டும்தான். நம்ப முடிகிறதா? குணாளன், 1968-ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிப்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 விநாடிகளில் ஓடி முடித்தவர். 33 ஆண்டுகள் அது சிங்கப்பூரின் தேசியச் சாதனையாக நிலைத்து நின்றது. சிங்கப்பூரின் தடகள சரித்திரத்தில் அவருக்கு ஒரு legendary place இருக்கிறது. தடகளத்தில் மட்டுமல்ல ; தனி வாழ்விலும் ஒரு சாதனையாளராக இருக்கிறார். இன்னும் சாதியே ஒழிந்திராத தமிழ்ச்சமூகத்தில் பிறந்த அவர், தனது மனைவியாகத் தேர்ந்தெடுத்தது ஒரு சீனப் பெண்ணை. இன்று - அவரது பெண் குழந்தைகளும், ஆஸ்திரேலியர் போன்ற வெளி நாட்டினரை மணந்து கொண்டிருக்கிறார்கள். 'நான் ஒரு சர்வதேசப் பிரஜை' என்று சிரித்தபடி சொல்கிறார் குணாளன். எத்தனையோ சாதனைகளுக்குப் பின்னும் அவரிடம் கர்வம் துளிகூட ஒட்டவில்லை. பணிவும் சிரிப்பும் அவருடன் பிறந்தவையோ என்று எண்ண வைக்கும் எளிமையோடு இருக்கிறார்.

பல பெரிய சாதனையாளர்களைப் போல், குணாளனது திறமையும் தற்செயலாகத்தான் அடையாளம் காணப்பட்டது. 17 வயதுவரை எதிர்காலம் என்னவென்று தெரியாத சராசரி மாணவர் அவர். படிப்பு அவருக்குப் பிடிக்கவில்லை.பறக்கும் பட்டாம்பூச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடுவதும், மரங்களில் ஏறி பழங்கள் பறிப்பதும், எந்த இலக்கும் இன்றி சுற்றித் திரிவதும், தனிமையில் இருப்பதுமே அவருக்குப் பிடித்தது. அப்படி, இப்படி என்று ஒரு வழியாகப் படிப்பை முடித்து, 1961 முதல் ஆசிரியராகப் பணியாற்றத்துவங்கினார். பள்ளி முடிந்தததும், அங்கு மற்ற ஆசிரியர்களோடு அவர் கால்பந்து விளையாடுவது வழக்கம். அப்படி கால்பந்து விளையாடும்போது, ஒருநாள் தற்செயலாக குணாளனைப் பார்த்தார் சிங்கப்பூர் தடகளக் கோச்சான, டான் யெங் யோங். ' இந்த இளைஞன் ஓடும் விதம் அசாதாரணமாக இருக்கிறதே' என்று அவருக்குத் தோன்றியது. குணாளனிடம் பேசினார்; தன்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொன்னார். 'இந்த வயதிலா..' என்ற குணாளனின் சிறு தயக்கத்திற்குப் பின், பயிற்சி துவங்கியது. இப்படியாக. தனது 21வது வயதில் ஓட்டப்பந்தய வீரராக வளர்சிதை மாற்றம் கண்டார் அவர். துவக்கத்தில், முறையான spikes கூட அவரிடம் கிடையாதாம். நண்பர்கள்தான் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு ஒரு spike shoeவை வாங்கித் தந்தார்கள். 5 மாதப் பயிற்சியிலேயே 100, 200, 400 மீட்டர்களை சாதனை நேரங்களில் ஓடத் துவங்கினார் குணாளன்.

சர்வதேச அரங்கிலும் அவர் மேல் வெளிச்சம் விழத்துவங்கியது. வருடங்களின் ஓட்டத்தில், பல சிங்கப்பூர் மற்றும் ஆசியான் (ASEAN) ஓட்டச் சாதனைகள் அவரால் மாற்றி எழுதப்பட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் உச்ச வருடங்கள் சில உண்டு. குணாளனைப் பொறுத்தவரை, 1960களின் மத்தியில், தனது ஓட்டத்திறனின் உச்சத்திலிருந்தார். அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றில், 2 நிகழ்வுகள் முக்கியமானவை. முதல் நிகழ்வு - 1966ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்று. தங்கப் பதக்கத்தை வெல்லப் போவது யார்? சிங்கப்பூரின் குணாளனா, அல்லது மலேசியாவின் மணி ஜெகதீசனா? ஒட்டு மொத்த ஆசியாவே ஆர்வத்தோடு உற்றுப் பார்த்தது. Photo Finish-ல் மணி ஜெகதீசனுக்குத் தங்கம் போனது. அந்த Photo Finishஐத் தனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறார் குணாளன். அதைக் காட்டிப் பேசும்போது அவரது குரலில் ஒரு மெல்லிய சோகம் ஒலிப்பதை உணர முடிந்தது. இரண்டாம் நிகழ்வு - 1968ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிம்பிக்ஸ். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரை இறுதிச் சுற்று. அமெரிக்க, ஐரோப்பிய வீரர்கள் மத்தியில் சீறிப்பாயக் காத்திருக்கும் சின்ன சிறுத்தையாய் குணாளன். அங்குதான் அவர் 10.38 விநாடிகளில் ஓடி சாதனை நிகழ்த்தினார். 33 ஆண்டுகள் நிலைத்திருந்த அந்தச் சாதனையை, 2001ம் ஆண்டு ஷியாம் 0.01 விநாடிகளில் முறியடித்தார்."அதில் எனக்கு வருத்தமில்லை. அந்த ஒரு சாதனையின் மூலம் எனக்கு 33 ஆண்டுகள் விளம்பரம் கிடைத்திருக்கிறது. அது அதிகம்." என்கிறார் குணாளன் சிரித்துக் கொண்டே.

1969 & 1970ம் வருடங்களின் Singapore sports person of the year awardஐப் பெற்ற குணாளன், தனது 33வது வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சீன இனத்தவரான தனது மனைவியின் ஆதரவே தன்னை இந்த அளவு உயர்த்தி இருப்பதாகக் கூறுகிறார். தாத்தா பாட்டி ஆகி விட்ட அவர்களுக்கிடையில் வற்றாத காதல் நதி ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் காணாமல் போய் விடுவார்கள். குணாளன், தனது 30களில் கல்லூரியில் சேர்ந்து படித்து, பட்டம் பெற்று, இன்று உதவிப் பேராசியராகப் பணியாற்றுக்கிறார். Functional Anatomy & Exercise physiology பாடம் எடுக்கிறார். அவர் பெற்றிருக்கும் பட்டங்களின் பட்டியல் அவரது பெயருக்குப் பின்னால் நீள்கிறது. இன்றும்கூட அவர்தான் உலகின் அதிவேகத் தமிழராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை, அதிவேக இந்தியராகக் கூட இருக்கக் கூடும். (இணையத்தில் தேடிப் பார்த்ததில் சரியானத் தகவலைப் பெற முடியவில்லை) குணாளனிடம் பேசும்போது, இன்னும் பல குணாளன்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து முளைத்து வர வேண்டுமென்ற ஆர்வம் அவரது குரலில் ஒலிக்கிறது. இதோ... இப்போது எனது வரிகளிலும் அது எதிரொலிக்கிறது.

4 comments:

Unknown said...

Good Information!!

Hats off to Gunalan.

பாலு மணிமாறன் said...

He is a humbleman and well respected in Singapore.People call him as Mr.K or professor.

கிரி said...

சுவாராசியமான தகவல்

பாலு உங்கள் பதிவுகளின் தலைப்புகளில் "நாலு வார்த்தை -0**-" இதை சேர்ப்பதால் தமிழ்மணத்தில் உங்கள் பதிவின் தலைப்பின் பாதி மறைந்து விடுகிறது. எனவே உங்கள் பதிவு பலரின் பார்வைக்கு வராமலே போய்விட வாய்ப்புண்டு. முடிந்தால் இதை தவிர்க்கவும்.

அன்புடன்
கிரி

பாலு மணிமாறன் said...

Thanks fr your care and concern Giri... I was thinking about that and you have rightly mentioned it.

Now i have made the changes as you have adviced.

Thanks again