Tuesday, December 23, 2008

தூள் கிளப்பிய "தூள்' - Mega Entertainment Show From Singapore (நாலு வார்த்தை-023)

போன வருடம் விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'தூள்'என்ற சிங்கப்பூர் நடன நிகழ்ச்சியைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். தரமும், துள்ளலும், கவர்ச்சியும் சமவிகிதத்தில் கலந்து படைக்கப்பட்ட அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தமிழகத்தில் உள்ள மற்ற Entertainment showகளுக்கு இணையாக, அல்லது அதற்கும் மேலாகச் கூடச் சொல்லலாம் என்பது என் தாழ்மையானக் கருத்து. 6 கோடித் தமிழகத் தமிழர்களில் இருந்து சிறந்த நடனக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சுலபம். ஆனால், சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய நாட்டில், குறைவான சதவீத இந்தியர்களே உள்ள இடத்திலிருந்து மிகத் தரமான ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தத் தேவைப்படுவது - அளவுக்கு மீறிய உழைப்பு. அந்த உழைப்பைப் போட்டு அப்படிப்பட்ட நிகழ்ச்சியைத் தயாரித்தவர் 'Megastar Productions' என்ற மீடியா நிறுவனத்தை நடத்தி வரும் கலைச்செல்வன். சிங்கப்பூர் மீடியா வட்டாரத்தில் 'கலை' என்ற பெயரில் நன்கு அறிமுகம்.

1995ம் வருடம் முதல் கலை இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதற்கு முன் சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். அங்கு அவர் பெற்ற அனுபவங்கள்தான் சம்மட்டி அடியாக விழுந்து, விழுந்து இவரைச் செதுக்கி இருக்கின்றன. 'சம்மட்டி' என்ற வார்த்தைப் பிரயோகம் ஏனென்றால், அந்த அனுபவங்களை அப்படித்தான் பார்ப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சும்மா politics புகுந்து விளையாடிடும் இல்லெ...அப்படிப்பட்ட அனுபவங்களே இவரைப் புடம் போட்டிருக்கின்றன. இன்று தொலைக்காட்சியில் பெரிதாகப் பெயர் பதித்திருந்தாலும், மனதளவில் தன்னை ஒரு ரேடியோக்காரனாகத்தான் பார்ப்பதாக 1998ல் குறிப்பிட்டிருந்தார். "வானொலியில் பத்து காசு செலவில்லாமல் ஒரு தனிமனிதனால் பிரமாதமான நிகழ்ச்சியைத் தயாரித்து விட முடியும், ஆனால், தொலைக்காட்சியில் அது சாத்தியமில்லை." என்ற காரணத்தை முன் வைக்கிறார். "என்னுடைய மூலதனம் - மிருகத்தனமான உழைப்பு." என்கிறார். 'கலைகிட்டப் போனா அப்படியே பிழிஞ்சு எடுத்துடுவார்.' என்று சிங்கப்பூர் கலைஞர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். He is a perfectionist என்றும் சிலர் சொல்கிறார்கள்.

Think Big எனபது வெற்றியாளர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'என்று அதையே திருவள்ளுவர் தமிழில் சொல்லியிருக்கிறார். கலைச்செல்வன் தயாரிக்கும் தமிழ் நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் ஆங்கில, சீன, மலாய் நிகழ்ச்சிகளுக்குக் கூட முன்னுதாரணமாக அமைந்து விடுகின்றன. "நான் இருநூறு சதவீதம் முயற்சி செய்கிறேன். அப்படியே தோற்றுப் போனால் கூட அறுபது சதவீத மதிப்பெண் கட்டாயம் கிடைக்கும்"என்ற இவரது அணுகுமுறையே அந்த வெற்றிகளுக்குக் காரணம். தற்போது இவரது மெகாஸ்டார் நிறுவனம் ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு, கார்பரேட் வீடியோஸ், மொழிபெயர்ப்பு, மேடை நிகழ்ச்சிகள் எனப் பலவற்றிலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 2008ம் வருட தூள் நடன நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக இருந்தது. இறுதி நிகழ்ச்சிக்கு நடிகை சங்கீதா அழகாக சேலை கட்டி நடுவராக வந்திருந்தார். நிகழ்ச்சியின் பிரமாண்டம் அவரை பிரமிக்க வைத்ததை உணர்ந்தேன். 'ஜோடி நம்பர் 1'ல் கலகலப்பவர், சிங்கப்பூரில் கலகலத்துப்போய் காணப்பட்டார். வாய்ப்புக்கு அழுத்தமாக நன்றி கூறினார். அவரது பிரமிப்பு - கலைச்செல்வனுக்குக் கிடைத்த வெற்றி என்று தோன்றியது.

தற்போது வசந்தம் தொலைக்காட்சியில்'ஒலி,ஒளி' 'இது நம்ம கதை' 'உடலும் உள்ளமும்' 'அரங்கத்தில் இன்று' 'சுட்டீஸ் கிளப்' 'ஹலோ வசந்தம்' என்று 6 நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் கலைச்செல்வன். 'சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்ற டயலாக் கேட்க நன்றாக இருக்கலாம்; ஆறும், நூறு சதவீத முனைப்போடுதான் தயாரிக்கப் படுகிறது என்பதைப் பார்வையாளர்களை உணர வைக்கத் தேவைப்படுவது - மிருகத்தனமான உழைப்பு. அது - கலைச்செல்வனுக்குக் கைவந்த கலை.

2 comments:

பாண்டித்துரை said...

December 24th (நாலு வார்த்தை-024)
?

வடுவூர் குமார் said...

இவரின் சின்டா நிகழ்ச்சிகள் மிகவும் அருமை- தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய நிகழ்ச்சி.(ஆனா சட்டை கலர் தான் கஷ்டமாக இருக்கும்)
அப்போது சின்டா வுக்கு மினஞ்சல் அனுப்பி அதை இணையத்தில் போடச்சொன்னேன்,செய்தார்களா என்று தெரியவில்லை.