Wednesday, January 07, 2009

நம்பிக்கையளிக்கும் தமிழ் இசையுலகம் 2009 (நாலு வார்த்தை-036)

சென்ற வருடத்தில் சிறந்ததாகக் 'கண்களிரண்டால்' பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் ஒலி 96.8ன் நேயர்கள். இன்னும் பல விருதுகளைப் பெறப்போகும் 'சுப்ரமணியபுரம்' படத்தின் ஒரு அங்கமான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், புதியவரான ஜேம்ஸ் வசந்தன். தொலைக்காட்சிப் படைப்பாளராகத் தன்னை நிருபித்துவிட்ட ஜேம்ஸ், இந்தப் படத்தின் மூலம் மக்கள் ரசனையறிந்த இசையமைப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல இசையமைப்பாளர்கள் புதிதாக வருகிறார்கள்; போகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஜேம்ஸ் வசந்தனும் இடம் பிடிப்பார் என்று முனைந்து சொல்வதற்கு, மீடியா உலகில் அவர் பெற்றிருக்கும் பல வருட அனுபவமும் காரணமாகிறது. இப்போது வரும் இசையமைப்பாளர்களும் மெதுவாக அடியெடுத்து வைப்பதில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு ஒரு சில படங்கள் என்பதே அவர்கள் பின்பற்றும் தாரக மந்திரம். ஏ.ஆர்.ரஷ்மான் தொடங்கி வைத்த பாணி அது. Quality movies, rather than quantity என்பது திரையுலகின் ஏறக்குறைய நடைமுறையாக உள்ளது. ஒரு காலத்தில் வருடத்திற்கு 10, 15 படங்கள் நடித்துக் கொண்டிருந்த கமல் ரஜினி உட்பட பலரும் இப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கத் துவங்கியுள்ளார்கள்.'நான் கடவுள்' ஆர்யாவைக் கொஞ்ச நாளாக ஆளையேக் காணவில்லை.நிற்க.

என்னதான் மெலோடிப் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பிடித்தாலும், குத்துப் பாடல்களே 'நாக்க முக்க, நாக்க முக்க' என்று மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கின்றன. ஒரு காலத்தில் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்று கும்மி பாடிய குழந்தைகள், இக்காலப் பள்ளி விழாக்களில், அவிழும் ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அரக்கப் பரக்க விழித்துக் கொண்டு ' நாக்க முக்க, நாக்க முக்க' என்று முக்குகிறார்கள். இது கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாத காலமாற்றம். 'தோழியா, என் காதலியா' என்று மெலடி போட்டாலும், விஜய் ஆண்டணி என்றதும், 'நாக்க முக்க'தான் ஞாபகம் வருகிறது. சில வருடங்களாகத் தரமான பாடல்களை வழங்கி வந்த விஜய் ஆண்டணி 2008ல்தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். பல வருடங்கள் நிலைத்து நிற்பதற்கான அடிப்படை இருக்கிறது அவரிடம். இவரது வரிசையில் தேவிஸ்ரீ பிரசாத்தையும் இணைத்துக் கொள்ளலாம். மிஷ்கினுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் சுந்தர் பாபு, 2008ல் மறுபடியும் has hit the bulls eye with 'கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்ன'. சித்திரம் பேசுதடி வெற்றியைத் தொடர்ந்து பெரிதாக ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது ஓட்டம், மெதுவோட்டமாக இருப்பதன் காரணம் தெரியவில்லை.

வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்றில் 2008 சுமாரான வருடம் என்றே குறிப்பிடப்படும். நல்ல இசைக்கலைஞன். நல்ல தமிழ்ப் பாடல்களைக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள கலைஞன். வித்யாசாகர், பரத்வாஜ் போன்ரவர்கள் நிலைத்திருப்பதும், வெற்றிகரமானவர்களாக இருப்பதும் முக்கியம் - நல்ல இசைக்கும், நல்ல தமிழுக்கும் இவர்களிடம் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. தமிழ்த் திரையுலகம் என்ற எல்லையை விட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறி வெகு நாட்களாகி விட்டன. அவ்வப்போது வருகிறார்; போகிறார். சக்கரக்கட்டி போன்ற படங்கள் அவரது இசையில் வந்து போயின. ஆனால், மக்களின் நாடி நரம்புகளைத் துடிதுடிக்க வைக்கும் மெல்லிசையோ அல்லது வன்னிசையோ அவரது இசைக் கூடத்தின் இடுக்குகளின் வழி வழிந்துவிடவில்லை. சிவாஜியின் வெற்றி மட்டுமே கொஞ்சம்போல இனிப்பு தடவி விட்டுப் போனது நாக்கில். ஏதோ ஒரு இலக்கை நோக்கித் தளராமல் முன்னேறி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, சீக்கிரமே அவர் ஒரு இசைச்சிற்பமாக நம் முன் நிற்கக் கூடும். சமீபத்தியச் சிலம்பாட்டம் வரை அவரது ஆட்டம் சிறப்பானதாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "அடுத்து என்ன மாதிரியான இசை பிரபலமாகப் போகிறது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்" என்று குறிப்பிட்டார் யுவன். அந்த கவனம், அந்த வேகம், சில வருடங்களின் ஓட்டத்தில் அவரை legend என்ற நிலைக்கு உயர்த்திவிடும் வாய்ப்பிருக்கிறது. கடந்த சில வருடங்களாக யுவனின் இசைப் பயணம் ஆர்பாட்டமற்ற நதி மாதிரி ஓடிக் கொண்டிருப்பதை உற்றுப் பார்ப்பவர்களால் உணர முடியும்.

2008ன் நம்பர் 1 யாரென்றால், பல விரல்களும் ஹாரிஸ் ஜெயராஜை நோக்கி நீள்கின்றன. சமீபத்திய 'கா·பி வித் அனு' நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜைப் பாராட்டித் தள்ளினார் 'சொல்லாமலே' சசி. FM ரேடியோக்களில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள் என்று சொன்னார். அதுவே பலரது கருத்தாகவும் இருக்கிறது. தரத்தில் எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத பாடல்களாக இருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் 25% தரமானவை என்றால், ஹாரிஸின் பாடல்கள் 80% தரமானவையாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னால் வந்த அவரது பாடல்களை இன்று கேட்டாலும், அவை ஒரு பூவின் புத்துணர்ச்சியோடு நம்மை நோக்கிப் புன்னக்கைக்கின்றன. எந்தப் பாடலிலும், பாடல் வரிகளை மீறி ஒலிப்பதில்லை இசை. வரிகள் பயணிக்கும் வாகனமாகும் இசை, எப்போதுமே மூழ்கடிக்கும் வெள்ளமாவதில்லை. இரைச்சலோடு ஒலிப்பதில்லை இசைக் கருவிகள் ; இனிமையோடும், அர்த்தங்களோடும் அழுத்தமாக மட்டுமே ஒலிக்கின்றன. அந்த அழுத்தம் நம் மனதில் அழிக்க முடியாத வரிகளாகப் பதிந்தும் விடுகின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த கொடை. இனி வரும் வருடங்களும் அதை உண்மையென்று நிருபிக்கும். தமிழ்த் திரையுலகின் இசைக்காலம் 2009ல் எப்படி இருக்கும் என்ற யோசனையே பரவசமளிக்கிறது... கூடவே, நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது!

4 comments:

பாண்டித்துரை said...

//ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த கொடை.///


thanks to A.R.Rahman

பாண்டித்துரை said...

///சென்ற வருடத்தில் சிறந்ததாகக் 'கண்களிரண்டால்' பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் ஒலி 96.8ன் நேயர்கள்///


hi na who is the lyric writter?
Nepolian song which place?

selventhiran said...

பூவின் புத்துணர்ச்சியோடு நம்மை நோக்கிப் புன்னக்கைக்கின்றன // அட... அப்படித்தான் இருக்கிறது. அருமை.

சி தயாளன் said...

ஹாரிஸின் பாடல்கள் FM களில் ஹிட்டாகுவது அதிகம்..ஆனால் அவர் பாடல்களில் அவரது பழைய பாடல்களின் சாயல் தொடர்வது..நெருடல்..