Sunday, December 21, 2008

சிங்கப்பூர் கவிமாலையும், கவிச்சோலையும் (நாலு வார்த்தை-021)

நடிகர் சிவக்குமார் சிங்கப்பூர் வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கண்ணதாசன் விழாவும் ஒன்று. சின்ன நாடான சிங்கப்பூரில் பல தமிழ் அமைப்புகள் இருக்கின்றன. 30க்கும் மேல் என்று சொல்கிறார்கள். அவற்றில் சில மட்டும்தான் இடைவிடாது இயங்குகின்றன. மற்றவை சில தனிமனிதர்களுக்கு விசிட்டுங் கார்டாக மட்டுமே பயன்படுகின்றன. இடைவிடாது தொடர்ந்து இயங்கும் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளில் முக்கியமானது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம். கவிஞரேறு அமலதாசனால் வலுவூட்டப்பட்டு, தற்போது நா.ஆண்டியப்பன் தலைமையில் சீராக இயங்கி வருகிறது. அவர்கள் வருடம்தோறும் கண்ணதாசன் விழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொரு வருடமும் யாராவது ஒரு தமிழக வி.ஐ.பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். போன வருடம் எஸ்.பி.முத்துராமன் வந்திருந்தார். இந்த வருடம் நடிகர் சிவக்குமார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் கவிச்சோலை என்ற நிகழ்ச்சியை பெக் கியோ சமூக மன்றத்தோடு இணைந்து நடத்தி வருகிறது. கவிச்சோலையில் கவிதையைப் பற்றி பேசுவார்கள். கலந்து கொள்ளும் கவிஞர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தலைப்பில் கவிதை எழுதி வந்திருப்பார்கள். அதில் சிறந்த 3 கவிதைகளுக்கு தலா 30 வெள்ளி பரிசு வழங்கப்படும். இதோடு, இலக்கண வகுப்பும் நடக்கிறது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தோடு எனக்கு கடந்த 12 வருடங்களாக பரிட்சயமுண்டு. அந்த 12 ஆண்டுகளின் துவக்கத்தில் கவிஞரேறு அமலதாசன் தலைவராக இருந்தார்.(கவிஞரேறு அமலதாசனின் பல படங்களில் சில மேலே) மிக எளிமையான மனிதர். தமிழ் மேலும், தமிழினம் மேலும் மனமார்ந்த ஈடுபாடு உள்ளவர். தமிழைப் பற்றியும், தமிழினம் பற்றியும் பேசும்போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். அந்த நேரங்களில் அவர் கண்கலங்கி நிற்பதை பலமுறை பார்த்ததுண்டு. சிங்கப்பூர் தமிழினத் தந்தை என்று குறிப்பிடத்தக்க தமிழவேள் கோ.சாரங்கபாணி மேல் உள்ள அபிமானத்தில், அவரைப் பற்றி ஒரு கவிதை நூலை எழுதியுள்ளார். செயலாளராக இருந்த நா.ஆண்டியப்பன் தலையெடுத்ததும், தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, தற்போது ஆலோசகராக இருக்கிறார். எனது 'அலையில் பார்த்த முகம்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கையால் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு வழங்க வைத்தேன். தன்னலமற்ற ஒரு தமிழ்ச் சேவையாளருக்கு அது மட்டுமே என்னால் முடிந்தது. இன்று- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனக்கென்று சில வரையறைகளை வைத்துக் கொண்டு, அந்த வரையறைக்குள் சிறப்பாக இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட அதற்கு அரசாங்கத்தால் 25,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தால் இன்னும் நிறையவே செய்ய முடியும் என்பது பல வெளிப் பார்வையாளர்களின் கருத்து.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ ஒரு காலத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். திண்டுக்கல் லியோனி குழுவினரை மிகப் பிரபலமடையச் செய்த சிங்கப்பூர் பட்டிமன்றத்தை தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்தபோது, நிகழ்ச்சி அறிவிப்பாளராக செயல்பட்டவர் அவர். அவரோடு நட்பு ஏற்பட்ட நிலையில், பிச்சினிக்காடு இளங்கோவின் 'வியர்வைத் தாவரங்கள்' கவிதைத் தொகுப்பை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் வெளியிட ஏற்பாடு செய்தேன் (1999 என்று ஞாபகம்). எனது நண்பர் பாலகோபாலன் நம்பியார் கோலாலம்பூரில் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அந்த வெளியீட்டிற்கு அமலதாசன், நா.ஆண்டியப்பன், சுப.அருணாச்சலம், இளங்கோ, நான் என ஒரு பெரிய குழுவாகப் போயிருந்தோம். அற்புதமான சில நாட்கள் அவை. வெளியீடும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால், பிச்சினிக்காடு இளங்கோ மெல்ல மெல்ல எழுத்தாளர் கழக நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டார். அதற்கான காரணங்கள் இன்றுவரை சரியாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயம் பற்றியும் தனக்குத் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர் பிச்சினிகாடு இளங்கோ. அதுவா காரணம் என்றும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பிரிவு தமிழுக்கு லாபமாக அமைந்தது.

அந்தப் பிரிவிற்குப் பிறகுதான், பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்தோடு சேர்ந்து 'கவிமாலை' நிகழ்ச்சியை நடத்தத் துவங்கினார். அவரது நட்பார்ந்த அணுகுமுறை பலரையும் அந்த நிகழ்விற்கு இழுத்தது. 'காதலில் விழுந்தேன்' படத்தில் 'உன் தலைமுடி உதிர்வதைக் கூட' என்ற பாடலை எழுதிய நெப்போலியன் உட்பட பல கவிஞர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது கவிமாலை. வாசித்த, நேசித்த கவிதைகளைப் பற்றிய பகிர்வு, போட்டிக் கவிதை, சிறப்புச் சொற்பொழிவு என்று தமிழ் மணக்கும் மாலையாக அமைந்தது கவிமாலை. வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் நானும் அதில் கலந்து கொள்வது வழக்கம். கவிமாலையின் வெற்றி, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கவிச்சோலைக்கு வழிவகுத்தது. கவிஞர்களுக்கு கவிமாலை, கவிச்சோலை என்ற இரண்டு குதிரைகளில் பயணம் செய்யும் வாய்ப்பு. ஓவ்வொரு மாத முதல்வார ஞாயிற்றுக்கிழமையில் கவிச்சோலையும், கடைசிவார சனிக்கிழமையிம் கவிமாலையும் நடந்து வருகின்றன. தற்போது பிச்சினிக்காடு இளங்கோ பணிநிமித்தம் சென்னைக்கு சென்று விட்ட நிலையில், கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தி போன்றவர்கள் அதை உயிர்ப்புடன் இயக்கி வருகிறார்கள். கவிமாலை தற்போது ஜலான் பஸார் சமூக மன்றத்தின் ஆதரவுடன் நடப்பதையும் குறிப்பிட வேண்டும். சமீபத்தில் தனது 100வது நிகழ்வை நடத்திய கவிமாலை அமைப்பு 'கூடி வாழ்த்தும் குயில்கள்' என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டது. மொத்தத்தில், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலை துடிப்புடன் வைத்திருப்பதில் கவிமாலையும், கவிச்சோலையும் பெரும் பங்காற்றுகின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

3 comments:

பாண்டித்துரை said...

//கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தி போன்றவர்கள் அதை உயிர்ப்புடன் இயக்கி வருகிறார்கள்///

கவிஞர் ந.வீ.விசயபாரதியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் பாலுணா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையானப் பகிர்வு திரு.பாலுமணிமாறன்,
சிங்கப்பூரில் நம் தாய்த் தமிழ் தழைக்கட்டும்.
கவிச்சோலையில் பூவெடுத்து
கவிமாலை தொடுக்கலாம்.
சோலையிலும் மாலையிலும்
தமிழ் மணம் கமழட்டும்.
கவிமாலையை சிறப்பாக நடத்தும்
நம் பாசமிகு கவிஞர் ந.வீ.விசயபாரதிக்கு நன்றி!

பாலு மணிமாறன் said...

Thanks a lot for your comments Pandi & Jothi Bharathi.