Wednesday, December 24, 2008

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற மாமனிதர் (நாலு வார்த்தை-024)

பல தன்முனைப்புப் புத்தகங்கள். அவை மாற்றியமைத்த பல்லாயிரம் வாழ்க்கைகள். டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை உலகத் தமிழர்கள் இப்படித்தான் அடையாளம் காண்கிறார்கள். அந்தப் புத்தகங்களைப் படிப்பவர்களின் மனதையும், அதன் நீட்சியாக அவர்களது வாழ்வையும் தொடுபவையாக இருந்து வருகின்றன டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எழுத்துக் கரங்கள். ஒரு முறை, "ஊழலை யாரால் ஒழிக்க முடியும்?" என்ற கேள்விக்கு, "அது பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும்" என்று பதிலளித்தார் டாக்டர் அப்துல்கலாம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன் மூலம், அவர்களோடு பெரும்பான்மையான நேரம் தொடர்பிலிருக்கும் இளைய தலைமுறையை மாற்றி அமைக்க முடியும் என்ற பொருள் பதிந்த பதில் அது. எல்லா சமூக மாற்றங்களும் தனிமனிதர்களிடமிருந்தே துவங்குகின்றன என்பதை வலியுறுத்தும் பதிலாகவும் அது அமைந்தது. தனிமனித வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சமூகத்தையும் மாற்றி அமைக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எழுத்துக்கள்.

என் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார் அவர். அந்த மாற்றம் நிகழ்ந்த ஆண்டு 1983. அப்போது நான் தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி ஹாஸ்டலில் தங்கி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். பரிட்சைக்கு பத்து நாட்களுக்கு முன்பு படிக்கத்துவங்கி 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து, வகுப்பின் 10 ரேங்கிற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளும் சராசரி மாணவன். யாரும் புகழவோ, இகழவோ முடியாத பாதுகாப்பான வாழ்க்கையது. அந்த வாழ்க்கையை மாற்றியது...பள்ளி நூலகத்தில் தற்செயலாகப் பார்த்த 'எண்ணங்கள்' என்ற நூல்! அந்த நூல் விவரித்த உலகம் அதுவரை பார்த்திராதது. அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் புதிய உலகிற்கு இட்டுச் சென்றன. அதுவரை படித்திருந்த சரித்திர, சமூக நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது 'எண்ணங்கள்'.

சிறுவயதில் ஒருமுறை பேராசிரியர் அன்பழகனைப் பார்க்க அழைத்துச் சென்றார் என் தந்தை. அப்பாவின் டைரியில் அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்கினேன். அதில் அவர், 'அறிவே அனைத்திற்கும் அடிப்படை' என்று எழுதிக் கையெழுத்திட்டார் . அதுதான் உண்மையென்று நீண்ட நாட்கள் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், 'மனமே அனைத்திற்கும் அடிப்படை' என்று சொன்னது 'எண்ணங்கள்'. மனம் எதை நம்புகிறதோ, எதை ஆசைப்படுகிறதோ அதை அடைந்து விடுகிறது என்ற கருத்து, புதிய எண்ணக் கதவுகளைத் திறந்தது. சின்னச்சின்ன நம்பக்கூடிய சம்பவங்களின் வழி மனதின் மகத்தான சக்தியைப் பற்றி விளக்கி இருந்தார் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி. அவற்றுள், 'உங்கள் லட்சியங்களை எட்டக்கூடியதாக வைத்துக் கொள்ளுங்கள்' என்ற வரியே அதிசய மாற்றங்களை நிகழ்த்தியது. அந்த அறிவுரையை வாழ்க்கையில் செயல்படுத்திப் பார்த்தாலென்ன என்றொரு கேள்வி உள்ளுக்குள் எழுந்தது.

கால் வருடத் தேர்வில் 325 மதிபெண்கள், அரைவருடத் தேர்வில் 350 மதிபெண்கள் என்பது முதல் இலக்கானது. இலக்கை இலக்காக வைத்துப் படித்ததில் அதை விடக் கொஞ்சம் அதிகமாகவே மதிப்பெண் வாங்க முடிந்தது. 3 revision test-களிலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் என்பது அடுத்த இலக்கு. ஒவ்வொன்றிலும் 425க்கு மேலே எட்ட முடிந்தது. இறுதித் தேர்வில் 400 மதிபெண்களுக்கு மேல் என்பதே உச்ச இலக்கு. மற்றவர்கள் என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள், என்ன ரேங்க் வாங்குகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத லாடம் கட்டிய பயணம். இறுதித் தேர்வில் 418 மதிப்பெண்கள் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். பிடித்தது நானல்ல - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள்! நான் அங்கு ஒரு சோதனைக் கருவியாக மட்டுமே இருந்தேன். அந்த வருடமும், அந்த நூலும் என் வாழ்க்கையை முற்றிலும் புதிதாக மாற்றி அமைத்தன.இதே போல், 'தலைவன் ஒரு சிந்தனை', 'பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?', 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்' போன்ற டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களும், அவரது மக்கள் சக்தி இயக்கமும் பல தனி மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சமூகத்தையும் மாற்றி அமைத்தன ; அமைத்துக் கொண்டிருக்கின்றன ; இனி வரும் நூற்றாண்டுகளிலும் மாற்றி அமைக்கும். அதுதான் தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வரமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற மாமனிதரின் மகத்தான சக்தி!

6 comments:

Anonymous said...

True Dr Udayamourthi done great work for tamils
He should given nobel or bharth nathna

VS Balajee

இரா.பிரவீன் குமார் said...

Vanakam anna,what u say is 100% correct.Ennagal wil do what u think.thats why we as a team followed the Dr.M.S.Udayamoorthy's MAKKAL SAKTHI EYAKKAM (www.makkalsakthi.org).when u free pls cal our Eyakkam and encorage our Team..soon i cal u and update about Eyakkam activites....

வடுவூர் குமார் said...

இதுவரை இவர் புத்தகங்களை படித்ததில்லை இனிமேல் தான் தேடவேண்டும்.

பாலு மணிமாறன் said...

அவசியம் படியுங்கள் குமார். அப்புறம் கருத்துக்களைச் சொல்லுங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

பாலு மணிமாறன் said...

தம்பி பிரவீண், நீங்கள் தொடர்ந்து மக்கள் சக்தி இயக்கத்தில் இயங்குவதில் மகிழ்ச்சி. நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

பாலு மணிமாறன் said...

தம்பி பிரவீண், நீங்கள் தொடர்ந்து மக்கள் சக்தி இயக்கத்தில் இயங்குவதில் மகிழ்ச்சி. நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.