Thursday, December 04, 2008

ஜொலிப்பார்களா தமிழக கிரிக்கெட் வீரர்கள்? (நாலு வார்த்தை-003)

தமிழக கிரிக்கெட் வீரர்களை துரதிர்ஷ்டம் பல வடிவங்களில் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருப்பது காலகாலமாக நடந்து வருகிறது. சமீபத்திய உதாரணம் சுப்ரமணியன் பத்ரிநாத். வெங்கட்ராகவனும், ஸ்ரீகாந்தும் அதற்கு விதிவிலக்கு. ஓரிரு ஒருநாள் விளையாட்டுப் போட்டிகளோடு பத்ரிநாத் ஓரம் கட்டப் பட்டிருப்பதை துரதிர்ஷ்டம் என்று சொல்லாமல், வேறெப்படிச் சொல்ல? எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் விளையாடக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஸ்ரீனிவாசன், எல்.சிவராமக்கிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், வெங்கட்ரமணா, படானி என, ஓரிரு போட்டிகளோடு சரித்திரமாகிவிட்ட தமிழக வீரர்களின் பட்டியல் வெகு நீளமானது.

சமீபத்திய வரவுகளான தினேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் இன்னும் பல வருடங்களுக்கு விளையாடக் கூடும். தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. பார்க்கலாம் - இனிமேல் கிடைக்கும் வாய்ப்புகளை என்ன செய்கிறார் என்று. முதுகு சார்ந்த பிரச்ச்னைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் பாலாஜியின் சமீபகால பந்து வீச்சு பரவசமளிக்கிறது. இப்படியே பந்து வீசினார் என்றால், சீக்கிரமே அவரை இந்திய அணியில் பார்க்க முடியும்.

தற்போது தமிழக ரஞ்சி அணியில் விளையாடுபவர்களில் 18 வயது துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்திற்கும், வலது கை சுழல்பந்து வீச்சாளர் அஷ்வினிற்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் ஜோசியம் சொல்கிறார்கள். டபிள்யூ.வி.ராமன் தற்போது தமிழக அணியின் கோச்சாக இருக்கிறார். அவர் புத்திசாலி. இடது கை பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கி, துவக்க ஆட்டக்காரராகத் தன்னை உருமாற்றிக் கொண்டவர். ரஞ்சிக் கோப்பையை வெல்லக் கூடிய அணியாக தமிழக அணியை அவர் உருமாற்றுவாரா? Keep Watching!

No comments: