Monday, December 08, 2008

சானியாவிலிருந்து சாய்னாவிற்கு...(நாலு வார்த்தை-007)


சில மாதங்களுக்கு முன்பு வரை, சாய்னா என்ற பெயரைச் சொல்லும்போதெல்லாம் மக்கள் அதை சானியா என்று மொழிமாற்றம் செய்து புரிந்து கொண்டார்கள். இது பழைய நிலை. இன்று சாய்னா நெஹ்வால் என்ற பெயர் மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது. சமீபத்தில் World Junior Badminton Championships-ஐ வென்றுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த 18 வயது பேட்மிட்டன் வீராங்கனையைக் கொண்டாடத் தயாராகி வருகிறது இந்தியா.

இந்தியா கிரிக்கெட் பைத்தியம் பிடித்த தேசம். அந்த தேசத்திலிருந்து கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டுகளில் சர்வதேசச் சாதனையாளர்கள் உருவாவது அதிசயம், அபூர்வம். அப்படி உருவானாலும், அவர்கள் துருப்பிடித்த விளையாட்டு அமைப்புகளின் உதவி துளியும் இன்றி பெற்றோரின் பல ஆண்டுகால தியாகத்தில் உருவானவர்களாகத்தான் இருக்கிறார்கள். சாய்னாவும் அப்படித்தான். அவரது தந்தை ஹர்விர் சிங் ஒரு விஞ்ஞானி. அவரது சம்பளத்தில்தான் சாய்னாவின் சர்வதேசப் பயணம் துவங்கியது. புகழ்பெற்ற கோச்சான முகமது அரி·பால் சிறுவயதில் பயிற்சியளிக்கப்பட்ட சாய்னாவின் சமீபத்திய வெற்றிகளுக்குக் காரணமாக இருப்பவர் All England Open Badminton Championships பட்டம் வென்ற கோபிசந்த்.

2008 சாய்னாவின் பேட்மிட்டன் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஆண்டு. சர்வதேசப் போட்டிகளில் முக்கியமான வெற்றிகளும், ஊடகங்களின் கவனமும் கிடைத்த ஆண்டு. Chinese Taipai Open போட்டியில் முதல் வெற்றி கிடைத்தது. தொடர்ந்து 2008 Commenwealth Youth Games மற்றும் World Junior Batmitton Championships-ல் வெற்றிகளைப் பெற்றார். ஆனால், பெய்ஜிங் ஒலிப்பிக் போட்டியில் அவர் கால் இறுதிப் போட்டிவரை முன்னேறியதுதான் இந்திய மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. வெண்கலப் பதக்கம் நூலிழையில் தவறியது. அது மட்டும் கிடைத்திருந்தால், சாய்னா இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றிருப்பார். ஆனால், அவரது தொடர் முன்னேற்றம் உலகின் பெரும் பணக்காரரான மிட்டல் நடத்தும், Mittal Champions Trust-ஆல் கவனிக்கப்பட, அவர்களது பொருளாதார ஆதரவு சாய்னாவிற்குக் கிடைத்திருக்கிறது.

இன்றைய தேதியில், சாய்னா உலகத்தர வரிசையில் 10வது இடத்தைப் பிடித்து விட்டார். இந்த ஆண்டின் துவக்கத்தில் உலகத்தர வரிசையின் Top 25-ல் இடம் பிடிப்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி அவர், 10வது இடத்தைப் பிடித்திருப்பது அந்தப் பெண்ணின் அயராத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. சீனர்கள், தென்கொரியர்கள், இந்தோனேசியர்கள், மலேசியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பேட்மிட்டனில், ஒரு இந்தியப் பெண் சாதிக்கத் துவங்கியிருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். மற்ற 18 வயதுப் பெண்களைப் போல், ஒரு சினிமாவிற்கோ, தோழிகளோடு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கோ நேரமில்லாமல் பேட்மிட்டன், பேட்மிட்டன் என்று ஓடிக் கொண்டிருக்கும் சான்யாவின் அடுத்த இலக்கு Top 5! அதையும் எட்டுவார் ; அதற்கு மேலும் செல்வார் என்று விளையாட்டு வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

No comments: