Wednesday, December 10, 2008

கவிஞர் நா.முத்துக்குமாரும், சிங்கப்பூர் தேசிய நூலகமும் (நாலு வார்த்தை-009)




"விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற பாடல் வரி தேய்ந்த ரிகார்டு மாதிரி உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது ஓரிரு மாதங்கள். அந்த பாடல் வந்த படம் 7G ரெயின்போ காலனி என்ற விவரம் அறிந்து கொண்டேன். பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் என்றும் தெரிந்து கொண்டேன். "விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற வரி பல கதைகளின் சில சம்பவங்களைக் கண்முன் கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தது. "காட்டிலே காயும் நிலவைக் கண்டு கொள்ள யாருமில்லை" என்ற சோகம் கூட ஒரு இரவில், நீண்ட சாலையின் ஆட்களற்ற தனிமையில் வானம் பார்க்க நிறுத்தியது என்னை. நா.முத்துக்குமாரைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

செல் நம்பர் வாங்கி, சிங்கப்பூரிலிருந்து நா.முத்துக்குமாரை அழைத்துப் பேசினேன். மிக எளிமையான மனிதராக இருந்தார். அந்த எளிமை இன்னும் பிடித்தது. எப்படியாவது அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வர வேண்டுமென்று தோன்றியது. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம், பாலு மீடியா என்ற முக்கோண சங்கமத்தில் முத்துக்குமார் சிங்கப்பூர் வருவதென்றும், தேசிய நூலகத்தில் "திரைப்படப் பாடல்களும், இன்றைய தமிழ் இலக்கியமும்" என்ற தலைப்பில் அவர் பேசுவதென்றும் முடிவானது. எல்லா ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்தன. விசா ஒரு பிரச்சனையில்லை என்று நம்பினேன். ஆனால் அதுதான் தலைபோகிற பிரச்சனையானது. Chennai Travel agent, on line visa application-ல் முத்துக்குமார் பெயரை எழுத்துப்பிழையோடு கீ இன் செய்து வைக்க, நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்பாக, விசா rejected. எல்லா விளம்பரங்களும் செய்யப்பட்ட நிலையில், என் மனநிலையை யூகிப்பது மிக சுலபம். அங்கே இங்கே ·போன் பேசியும், தேசிய நூலக அதிகாரி சென்னை சிங்கப்பூர் ஹைக்கமிஷனருக்கு ·பேக்ஸ் அனுப்பியும்- ஒரு வழியாக நிகழ்ச்சிக்கு முதல் நாள் காலையில் விசா வாங்கி, மதியம் ·பிளைட் பிடித்து இரவு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நா.முத்துக்குமார்.

அன்றைய தின இரவு, சிங்கப்பூர் வானொலி 96.8-ல் முத்துக்குமார் கொடுத்த பேட்டி சுவையானதாக இருந்தது. தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டவில்லை அவர். தமிழை சரியாக உச்சரிக்காத பாடகர்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்றார். எனக்கும், பேட்டியெடுத்துக் கொண்டிருந்த தீபனுக்கும் தூக்கிவாரிப் போட்டது. அது Live Programme. ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், மறுநாள் தேசிய நூலக நிகழ்ச்சியில் சரியான கூட்டம். அதற்கு அந்த பேச்சுதான் காரணமா என்று தெரியவில்லை. 100 பேருக்கும் மேல் நின்றபடி நிகழ்ச்சியை ரசித்தார்கள். தனது 'தூர்' கவிதை, மனுஷ்யபுத்திரனின் 'கால்கள்' கவிதை போன்றவற்றை மேற்க்கோள்காட்டி எளிமையாக அவர் உரையாற்றிய விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. என்ன, மற்ற நிகழ்ச்சிகள் நேரத்தை சாப்பிட்டுவிட, அவருக்கான நேரம்தான் போதவில்லை.

சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 வருட இறுதியில், ஆண்டின் ஆகச் சிறந்த தமிழ்ப் பாடலைத் தேர்ந்தெடுக்கும். கடந்த 3 வருடங்களாக கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்கள்தான் சிறந்த பாடல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கவிஞர் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதோ.. இந்த வருடமும் 100 பாடல்களை அடையாளம் காட்டி, அதிலிருந்து சிறந்த பாடலை தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கிறது ஒலி 96.8. இந்த முறையும் கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல் முதலிடத்தைப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். அப்படி அவரது பாடல் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும் நா.முத்துக்குமார் கவலைப் பட காரணமில்லை. ஒரு போட்டியில் எப்போதுமே முதலிடம் என்பது சாத்தியமில்லாத விஷயம். ஆனால், ஓடிக் கொண்டிருப்பது முக்கியம்.கண்ணதாசன் - வைரமுத்து வரிசையில் அடுத்து இடம் பிடிக்க இருக்கும் இளைய தலைமுறைக் கவிஞர் இவர்தான் என்று எப்போதுமே எனக்குள் இருக்கிறது நம்பிக்கை. அதே நம்பிக்கை ஆயிரம், பல்லாயிரம் தமிழ் நேயர்களிடமும் இருப்பதால்தான் அவரது பாடல்கள் சிங்கப்பூர் மண்ணில் ஹாட்ரிக் அடித்திருக்கின்றன.

No comments: