Tuesday, December 09, 2008

வை.திருநாவுக்கரசு, ஒரு சில நினைவுகள் (நாலு வார்த்தை-008)

வை.திருநாவுக்கரசு என்ற பெயர் சிங்கப்பூர் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான பெயராக இருந்தது. 'இருந்தது' என்று சொல், இப்போது அப்படி இல்லை என்பதையோ அல்லது இப்போது அவர் இல்லை என்பதையோ உணர்ந்த்தியிருக்கும். சில வாரங்களுக்கு முன் தனது 80களில் மறைந்து விட்டார் வி.டி.அரசு. தமிழ்முரசு நாழிதளின் முன்னாள் ஆசிரியர்.

1995-ம் ஆண்டு நான் முதல்முதலாக சிங்கப்பூர் வந்தபோது, தமிழ்முரசு தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டது. அப்போது அவர்தான் அதற்கு ஆசிரியர். ஒரு முறை சற்றே சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவம் ஒன்றைக் கதையாக்கி அனுப்பியிருந்தேன். அதில் நான் பயன்படுத்தி இருந்த சொற்றொடர் ஒன்றை அப்படியே எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர் ஒரு ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். நல்லவேளை...ஒரு பெரிய blunder-ல் இருந்து தப்பித்தேன். பின்நவீனத்துவம், உடலிலக்கியம் என்ற பேச்செல்லாம் இல்லாத அந்தக் காலத்தில், அந்தக் கதையை type set செய்த பெண் 'உங்க ·பிரெண்ட் என்ன இவ்வளவு அசிங்கமா எழுதுறாரு' என்று என் நண்பனிடம் கேட்டாராம். அதுவே அன்று எனக்குக் கிடைத்த அதிகபட்ச பாராட்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சவால்மிக்க விஷயங்களை வெளியிடும் துணிச்சல் அவருக்கு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

1999-ல் அவரை நேரில் சந்திக்கவும், அவரோடு நெருங்கிப் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வருடம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதைப் பற்றி தமிழ்முரசில் எழுதலாம் என்ற யோசனை. நேரில் வரச் சொன்னார். சென்றேன். சாந்தமான புன்னகை என்று சொல்வார்களே, அந்தப் புன்னகையோடு வரவேற்றார். அவரிடமிருந்த அதீத சுத்தமும் கவனத்தை ஈர்த்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பே அணிகளைப் பற்றிய அலசல், நட்சத்திர விளையாட்டு வீரர்களைப் பற்றிய write up என்று எழுதச் சொன்னார். ராத்திரியெல்லாம் கிரிக்கெட் பார்த்து, காலையில் எழுதி ·பேக்ஸ் செய்து, ஏறக்குறைய 60 நாட்கள் சிரமகதியில் போனது வாழ்க்கை. ஆனால், முடித்து விட்டேன். ·போன் செய்து, வாய்ப்புக்கு நன்றி சொன்னேன். "நான்தான் நன்றி சொல்லனும், ஏன்னா, எந்த ஒரு வேலையும் துவங்குவது சுலபம். இறுதிவரை செய்து முடிப்பதுதான் கடினம்" என்றார் அவர். 1500 சிங்கப்பூர் வெள்ளிக்கான காசோலையையும் அனுப்பி வைத்தார். அதுதான் வை.திருநாவுக்கரசு.

பிறகு சிலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம், சகவயதுத் தோழனிடம் பேசுவதுபோல் சகஜமாகப் பேசுவார். திராவிட இயக்கங்களின் மேல் அவருக்கு இருக்கும் பாசம் அந்தப் பேச்சில் வெளிப்படும். தமிழவேள் கோ.சாரங்கபாணியோடு பழகியது, சிங்கப்பூர் தேசத் தந்தை திரு.லீ.குவான் யூவுடனாக அவரது நட்பு பற்றியெல்லாம் பேசுவார். ஒரு முறை லீ குவான் யூ அவரை அழைத்து, 'இப்போதெல்லாம் இந்தியாவில் காசு கொடுத்து டாக்டர் சீட்டு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாராம். இவரும் தயங்கியபடி, "ஆமாம்" என்றாராம். அதற்கு, "அப்படி டாக்டருக்குப் படித்த ஒருவர், நாளை உங்களுக்கோ, எனக்கோ சிகிச்சையளிக்க நேர்ந்தால் நம் கதி என்னாவது?" என்ற மறுகேள்வி பட்டென்று வந்ததாம் திரு.லீ குவான் யூ அவர்களிடமிருந்து.எவ்வளவு நியாமான கேள்வி. அப்படிப்பட்ட தலைவர்களின் பாரட்டைப் பெற்றவர் வை.திருநாவுக்கரசு. அவரது இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரால் முடியும் என்ற கேள்வி எழுமானால், அதற்கு பதில், இன்றைய நிலையில் வெறும் மெளனமாக மட்டுமே இருக்கும்.

No comments: