Friday, December 12, 2008

நான் கிளீன் போல்டு செய்த இரண்டு டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் (நாலு வார்த்தை-011)

பலத்த பாதுகாப்புகளுக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டி துவங்கி விட்டது. எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு உலக டெஸ்ட் வரலாற்றில் மிக ஸ்பெஷ்லான இடம் உண்டு. இந்தியா - ஆஸ்திரேலியா Tied Test உட்பட பல சரித்திர சம்பவங்கள் நிகழ்ந்த தளம் அது. பலரும் சேப்பாக்கம் மைதானம் பற்றிய பல நினைவுகளை தங்களுக்குள் தக்க வைத்திருப்பார்கள். எனக்கும் சில நினைவுகள் உண்டு. 1. வாலாஜாபாத் முனையில் தொப்பியைக் கழற்றி விட்டு ரசிகர்களை நோக்கி தலைவணங்கிய மதன்லால் 2. ஒரு உள்ளூர் போட்டியில், விவேக் ரஸ்டான் பந்து வீச, பின்காலில் சென்று எல். சிவராமக்கிருஷ்ணன் அடித்த cover drive 3. இன்னொரு உள்ளூர் போட்டியில், எம்.செந்தில்நாதன் தொடர்ந்து இரண்டு பந்துகளை ஸ்டேடியத்தின் உச்சத்திற்கு அனுப்பி விட்டு, மூன்றாவது பந்தில் ஸ்டம்பிங் ஆனது. இப்படி பல நினைவுகள்.இவை மட்டும்தானா? இன்னும் இருக்கின்றன. இரண்டு பிரசித்தி பெற்ற டெஸ்ட் பிளேயர்களை நான் கிளீன் பொல்ட் செய்த கதையை எப்படி மறக்க முடியும்....சும்மா கதை விடவில்லை. உண்மையில் நடந்த கதை.

1978-ல் வெஸ்ட் இண்டீஸோடு நடந்த டெஸ்ட் போட்டிதான் நான் முதல் முதலாக நேரில் பார்த்தது. அப்போது எனது தந்தை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இப்போதும் மீதமிருக்கும் கிரிக்கெட் ஆர்வம் அவர் ஊட்டியதுதான். பாரிமுனையில் பேரம் பேசி, ஆப்பிள், ஆரஞ்செல்லாம் வாங்கிக் கொண்டு வாலாஜாபாத் சிமெண்ட் படிகளில் போய் உட்கார்ந்து கொண்டோம். அன்று வெஸ்ட் இண்டீஸ்தான் பேட்டிங். மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக ஞாபகம் இல்லை; ஆனால், இடது கை ஆட்டக்காரர் காளிச்சரண் மட்டும் ஞாபகம் இருக்கிறார். அவர் பவுண்டரிகளாக விளாசித் தள்ளியதும் ஞாபகம் இருக்கிறது. காளிச்சரண் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்தபோது வெங்கட்ராகவன் பந்து வீச வந்தார். தலைமுடி எம்பி, எம்பிக் குதித்தபடி வெங்கட் பந்து வீச வர, எல்லோரும் காளிச்சரணின் செஞ்சுரிக்கு கைதட்ட எழுந்து விட்டார்கள். நானும் எழுந்தேன். ஆனால், அது என்னவோ தெரியவில்லை...அந்தப் பந்தில் காளிச்சரண் கிளீன் போல்டு ஆகப் போவதாக எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பை மெய்யாக்கி,கிளீன் போல்டு ஆகி, ஆத்திரத்தோடு வெளியேறினார் காளிச்சரண்.

அடுத்து 1979-ல் பாகிஸ்தானோடு நடந்த டெஸ்ட் போட்டியையும் சேப்பாக் மைதானத்தில் பார்த்தேன். அது - கபில்தேவ் என்ற இளம்சிங்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டெஸ்ட் மேட்ச். கபில்தேவின் பந்து வீச்சு சீற்றமாக வெளிப்பட்ட விதம் பிரமிக்க வைத்தது. அதற்கப்புறம், 1982-ம் ஆண்டு இங்கிலாந்தோடு நடந்த டெஸ்ட் போட்டியைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார் என் தந்தை. முதல்நாள்தான் பாப் வில்லிஸின் பந்தை தொடர்ந்து மூன்று முறை பவுண்டரிக்கு அடித்து, எகிறிப் பாய்ந்த இன்னொரு பந்தில் முகத்தில் அடிபட்டு மருந்துவமனைக்குச் சென்றிருந்தார் வெங்சர்க்கார். நாங்கள் போன தினத்தன்று விஸ்வநாத்தும், யஷ்பால் ஷர்மாவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விஸ்வநாத் இரட்டை சதமடித்தார். போத்தம், யஷ்பாலுக்கிடையே கொஞ்சம் gamemanship நிலவியது. யஷ்பால் இரண்டு சிக்ஸர் விளாசிய பிறகுதான் அடங்கினார் போத்தம்.

வழக்கம்போல், பாப் வில்லிஸின் பந்து வீச்சுதான் கொஞ்சம் குழப்பமிக்கதாக இருந்தது. அவர் ஓடி வரும் விதமும், பந்து வீசும் முறையும் அப்படி. ஆனால், பந்து ஆடுகளத்தில் பட்டதும் எகிறும், nip, எப்போதும் அவரது பந்து வீச்சில் இருக்கும். வில்லிஸ், பெவிலியன் முனையிலிருந்து பந்து வீச ஓடி வருகிறார். விஸ்வநாத் 222-ல் பேட்டிங் செய்கிறார். Again, ஏனோ தெரியவில்லை. அந்தப் பந்தில் விஸ்வநாத் கிளீன் போல்டு ஆகப் போகிறார் என்று தோன்றுகிறது. நினைத்த மாதிரியே, விஸ்வநாத் கிளீன் போல்டு. ஒருவேளை நான் ஒன்றுமே நினைக்காமல் கடலைப்பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் கூட, அவர் போல்டாகியிருக்கக் கூடும். ஆனால், அன்று நான் நினைத்த போது நடந்து விட்டது. அவ்வளவுதான். என்றாலும், ஏதாவது ஒரு டெஸ்டில், இந்திய அணி பெளலர்கள் நாள் முழுக்க விக்கெட் எடுக்க முடியாமல் திணறும்போது, நான் 'நினைப்பால்' கிளீன் போல்டு செய்த இரண்டு Legendary பேட்ஸ்மேன்கள் ஞாபத்துக்கு வருவார்கள். தயவு தாட்சண்யமின்றி எதிரணி பேட்ஸ்மேன்கள், நமது பெளலர்களை வெளுத்துக் கட்டும் ஒரு சோக தினத்தில், டி.வி முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னைப் போன்ற சாமானிய இந்தியனால் இதைத் தவிர வேறேன்னங்க செய்ய முடியும் சொல்லுங்கள்?

No comments: