Tuesday, March 08, 2005

விதைகளும் சிதைகளும்!

முளைப்பதற்கே பிறக்கிறது விதை.
தழைப்பதும், கிளைப்பதும் பின்விளைவுகள்!

மக்கி மண்ணோடு போவதெல்லாம் சிதை.
மூடிய மண் விலக்கி
சிலிர்த்து சிரிப்பதுதான் விதை.

ஆக்க விதைகள் சில.
அழிவு விதைகள் சில.

புல்லாங்குழலின் இருண்ட நாசி வழி
புகுந்து வரும் காற்று...
போகும் வழியெங்கும் இசை விதைக்கும்.

இரவில் நிலா முளைக்க
பகல் முழுக்க
வெளிச்சம் விதைக்கும் சூரியன்.

பூமி சூழ்கொண்ட நெருப்பு விதை
வெடித்துச்சிதறி கடல்கை நீட்டி
அரித்துச் செறித்த உயிர்கள் எத்தனை?

சிங்கள நெஞ்சங்களின் வெறுப்பு விதைகளில்
வடிந்ததெல்லாம் தமிழ் ரத்தம்.

ஆக்க விதைகள் சில.
அழிவு விதைகள் சில.

முளைத்த விதைகள் நாம்.
நாம் விதைக்க, அவை முளைக்க
காத்திருக்கிறது காலம்.
நம் கையில் என்ன விதை?

Monday, March 07, 2005

சில்க்குடன் ஒரு பேட்டி ( கற்பனையில்தான்! )

எங்கள் வாலிப வானத்தில் விளக்கெரித்த நிலா நீங்கள். இருந்த நீங்கள் இல்லாமல் போனதால் - நிலவின்றி நாங்கள் இருளாகிப் போனது தெரியுமா உங்களுக்கு ?
தெரியும். இருந்தாலும் என்ன...தீபங்களும், தீக்குச்சிகளும், ஏன்...மின்மினிப் பூச்சிகளும் கூட, இரவுக்கு வெளிச்சமூட்ட முடியும்.


புரியவில்லையே....

சில்க் என்ற சங்கதி தமிழ்ச் சினிமாவில் தற்காலிகம். கவர்ச்சி என்பதோ நிரந்தரம். நானில்லாவிட்டாலும் இன்னொருவர் விளக்கெரிப்பார்.



இறப்பதற்கு முன் என்ன நினைத்தீர்கள் ?
இன்னும் கொஞ்சநாள் இருந்துதான் பார்ப்போமே என்று நினைத்தேன்...


பிறகு ஏன் மனதை மாற்றிக் கொண்டீர்கள்?
மனம் ஏற்கனவே மரணமடைந்திருக்க, உடலுக்கு எதற்கு உயிர்?·


இப்போது என்ன செய்கிறீர்கள் ?
ரம்பா, ஊர்வசி, மேனகையோடு இந்திரன் சபையில் என்னையும் இணைத்து விட்டார்கள். பூலோகத்தில் பாமரர்களை நடனத்தால் பரவசப்படுத்திய எனக்கு, மேலோகத்தில் தேவர்களைத் திருப்திபடுத்தும் உத்தியோக உயர்வு.


பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது?
பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு.


இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி....
பச்சையாக சொல்வதென்றால்.... பரிதாபத்திற்குரியவர்கள்!·


கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன ?
ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று.


இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா?
உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்.

ஏன்?
அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது.


எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?
இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது !·