Friday, April 22, 2005

வார்த்தைச்சித்தரின் வார்த்தை விளையாட்டு

சுகிசிவம் தனது சமீபத்திய சன் டி.வி பேச்சில் - மருதூர் அரங்கராசன் அவர்கள் "ஒற்றுப்பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி" என விரிவாக எழுதியிருக்கும் இலக்கண நூலைப்பற்றி குறிப்பிட்டார்.

அந்தச்செய்தி - 1980களின் இறுதியில் சென்னை, புரசைவாக்கம், சர்.முத்தையாச் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மருதூர் அரங்கராசன் அவர்களிடம் நான் தமிழ் மாணவனாக இருந்தபோது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.

எங்கள் பள்ளிக்கு ஒருமுறை வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் பேச வந்திருந்தார். அவர் "தாய்" வார இதழின் ஆசிரியராக இருந்த சமயம் அது. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர். எந்த ஊரில் அல்லது பள்ளியில் கண்டிப்பான தலைமையாசிரியரை மாணவர்கள் விரும்பியிருக்கிறார்கள்?

வலம்புரிஜானை அறிமுகப்படுத்திப் பேசிய தலைமை ஆசிரியர், அவரை " தாய்க்குத் தாய் " என்று பாராட்டாகச் சொல்லிவைக்க, அடுத்து பேசவந்த வலம்புரிஜான் " உங்கள் தலைமையாசிரியர் மிகவும் நாகரிகமானவர். எங்கே என்னை ஒரு பாட்டி அளவிற்கு வயதானவன் என்று சொன்னால் நான் மனம் வருந்தப்பட்டு விடுவேனோ என்று எண்ணி, "தாய்க்குத் தாய்" என்று நாசுக்காக அழைக்கிறார். அப்படியென்றால் அவர் நாகரிகமானவர்தானே?" என்று பேசி ஒரே வாராக வார...

மாணவர்கள் அடைந்தது - ஆனந்தம். தலைமையாசிரியர் முகத்தில் வழிந்தது - ......... ( அதை நீங்களே யூகிச்சுக்கங்க ! )

Thursday, April 21, 2005

எழுத ஏதுமில்லை

இரவுக்கு வெளிச்சம் தருவது நிலவு மட்டுமா....உறவுகளும் ஒளியூட்டலாம் நடந்து!

Image hosted by Photobucket.com

நேற்றிரவு பூங்கா....
நட்சத்திரங்கள், நான்
நிறையாத இருள்
விழி வருட நிலா
மனம் வருட அவள்..!

முடிந்து போயின வருடங்கள்....
கடந்தகால அவளை
கவிதையாக்கும் உத்தேசம்!

இறந்த காதலுக்கு
எதற்கு இனிக் கவிதை...
வருடம் ஒருமுறை வரும்
திவசமா அது?
யோசிக்கிறேன்.

இல்லாமல் போவது இறப்பு.
என்னிலிருந்து அவள்
இல்லாமல் போனதுண்டா?

நிலவில் நிலைக்குத்தும் விழிகள்
நடந்து நடந்து யோசிக்கும் மனம்.

எதுவும் எழுதாமல்
எழுந்து நடக்கின்றேன்...
நிழலோடு நடந்தது வெளிச்சம்!


இடைவெளிகள்

பயணம் போகின்ற பாதையில் படுகின்ற விஷயங்கள் எப்போதும்
இன்ன பிற சிந்தனைக்கு இட்டுச்சென்றே விடுகின்றன

Image hosted by Photobucket.com


கூர்ந்து கவனியுங்கள்...
கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !

நட்புக்கும் இடைவெளிகள்
நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...

தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம்நீள
காரணமாகிறது...

தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டு
அமருவதுதான்
காதலில்கெளரவம்...

பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?

இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!


Wednesday, April 20, 2005

மரணம் பற்றி ஆதிகுமணன் சொன்ன நகைச்சுவை

மலேசிய தோட்டப்புறங்களில் யாராவது மரணமடைந்து விட்டால், கோலாலம்பூரில் இருக்கும் தமிழ் தினசரிகளின் தலைமை அலுவலகங்களை தொலைபேசியில் அழைத்து தகவல் தந்து விடுவார்கள். மறுநாள் இறந்தவரின் ஊர், பெயர், எந்த தோட்டத்தைச் சார்ந்தவர் என்பது உட்பட விரிவான செய்தி பத்திரிக்கையில் வந்து விடும்.

ஒருநாள் காலை ஆதிகுமணன் அவரது மலேசிய நண்பன் நாளிதழ் அலுவலகத்திற்கு போனபோது, ஒரு பெரியவர் அவரைப் பார்க்க நீண்ட நேரமாக காத்திருப்பதாகச் சொன்னார்களாம்.ஆதி அவரை சந்தித்து " நீஙக யாரு?" என்று கேட்டாராம். அதற்கு அந்தப் பெரியவர் " இன்னைக்கு பேப்பர்ல செத்துட்டதா செய்தி போட்டிருக்கீங்களே - ராமசாமி - அந்த ராமசாமி நாந்தேன் " என்றாராம். அதிர்ந்து போன பத்திரிக்கை ஆசிரியர் ஆதிகுமணன் நடந்த தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அந்த மன்னிப்பு கேட்கும் சங்கதியை மறுநாளே மலேசிய நண்பனில் வெளியிட்டு விடுவதாகச் சொன்னாராம்.

ஆனால் அந்தச் செய்தியோ இப்படி வெளியாகி விட்டதாம் " மிகவும் வருந்துகிறோம். ராமசாமி இறக்கவில்லை. இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்." !!

Monday, April 18, 2005

இந்த மானிட சாதிகளில்....

உங்கள் ஊரில் எத்தனை சாதி இருக்கிறது?

சிங்கப்பூரில் இருக்கிற இந்த சாதியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.... அந்த ஜாதி - ஊரில் நில,புலன்களை விற்றோ...கடன் வாங்கியோ, மனைவியின் தாலி உட்பட எல்லா நகைகளையும் அடகு வைத்தோ - சிங்கப்பூர் ஏஜெண்டிற்கு பணம் கட்டி, சிங்கப்பூர் வந்து இரவு,பகல், ஞாயிறு, திங்கள் பாராமல், உழைத்து உயிர் தேயும் நம்பிக்கையாளர்கள் சாதி!

அவர்களது நம்பிக்கை - ஒவ்வொறு நாளும் மேற்கில் அஸ்தமனத்தை மட்டுமே கண்டு வரும் எனக்கு, ஒரு நாள் எனக்கும் கிழக்கில் விடியும் என்பதே!

ஓரளவு பணம் சேர்த்து, நிலபுலம் வாங்கி, வீடு கீடு கட்டி, தொழில் கிழில் செஞ்சு, வாழ்க்கையில் நானும் நாலு பேர் மதிக்க வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன், கட்டிய மனைவியின் காதல் நினைவுகளுடன், சிரிக்கும் பிள்ளையின் சிந்தனையுடன் வாழும் இவர்களது வாழ்க்கை பயணத்தை துயரங்கள் மட்டும்தான் தொட்டுச் செல்லும் என்று யார் சொன்னது... அவ்வப்போது இப்படி சிரிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு இருக்கவே செய்கிறது......


Image hosted by Photobucket.com

போன தீபாவளியை இவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்று கேட்டேன்.அவர்கள் இப்படித்தான் கொண்டாடினார்களாம்...........

வீட்டுக்கு வெளித் தெரியும்
எதிர் புளோக் ஜன்னலில் எரியும்
எலக்ட்ரானிக் பல்புகளைத் தவிர
தீபாவளி சேதி சொல்ல ஏதுமில்லை
இவ்விடம்.


விடுமுறையில்லா உழைப்பு ஞாயிறுகள்
டாலராகி,ரூபாயாகி, பட்டாசாகி
வெடித்துச் சிதறுகையில்
பயந்து சிரிக்கும் பத்து வயது மகளின்
போன வருட முக ஞாபங்களோடு
சன் டி.வி முன்னால்
சத்தமில்லாமல்
எங்கள் தீபாவளி தினம் !

ஒரு மேசையில் மீந்திருந்த பெண்ணின் இதயம்!

என்னோடு பணிபுரிந்து பிரிந்த, ஒரு மலாய் இனப்பெண்ணின் மேசையை தற்செயலாக பார்த்தபோது கிடைத்த ஒரு மனப்பதிவு....

Image hosted by Photobucket.com

அவள்
பதிலற்ற சிந்தனைகளுக்குள்
தனித்திருப்பவளாகவும்
மெளனித்திருப்பவளாகவும் தோன்றுகிறாள்...


அவள்
ஆசைகளாலும் அச்சத்தாலும்
மெல்ல அடித்துச் செல்லப்படுபவளாய்
இருக்கிறாள்....


மெல்லிய சிறகுகளை விரித்து
கனவுகளின் நிழல்களைச் சுமந்தபடி
பறக்கும் அவள்...
முறிபடும்போது -
ஒரு துளிநீரை கடலுக்குத்தருபவளாய்
தெரிகிறாள்.


ஓவென்று கொட்டும் மழையாய்
சோகக்கண்ணீர்
அவளின் எண்ணங்களை
கழுவிச் செல்கிறது.
கொத்தான ஒளிக்கற்றை
அலைகளோடு இசைந்து வடிகிறது.


அதோ...
அங்கொருவன்
தனித்துமிருக்கிறான்...
மெளனித்துமிருக்கிறான்!