Monday, October 24, 2005

நனையத்துணியும் பூனைகள்

இரவின் தூறல் மழை.
நடக்கும் மனிதர்கள்
பிடிக்கும்
குடை.
மரக்குடையற்ற
மதில்மேல்
நனைகிறதொரு பூனை.

பாய பார்க்கிறதா பக்கம்?
அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது.

மழை பயந்த மனிதர்களை..

கடக்கும் வாகனங்களை
கடைக்கண்ணால் பார்த்தபடி
நடந்தே செல்லும் சீனக்கிழவனை..

கிளைக்கை நீட்டி
கட்டிடங்கள் தொடும் இயல்பில்
முடமான மரங்களை...

இன்னொரு அடைமழையில்
மிதக்கத்தகு சருகுகளை..

அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது.

தாவக்கூடும் பூனைகள்
அல்லது..
சோம்பல் முறித்தபடி
வேடிக்கை பார்ப்பது கூட
அதன் சுபாவமாய் இருக்கலாம்!