Friday, April 01, 2005

சில நகர்வுகள்

முதல் நகர்வு
ஒரு முள் தைக்கும் மறுபடி மறுபடி ...
ஒரு தற்செயல் நிகழும் அடிக்கடி..
நிழல் தரும் சொற்பந்தல்.

அடுத்த நகர்வு
பதின்ம வயதுகளின் கூட்டில் நுரையும்
மலட்டு வார்த்தைகள்.
நுனிவிரல் ஓடும் இடைச்சாலை.
தொலைநோக்கும் விழி
விரல் நோக்கும் மனம்.

இன்னொரு நகர்வு
அழுத்தக்காற்றில் அலையும் குளிர்.
தூரச்சதுரம் துப்பிய இருள் வெளிச்சம்
படரும் வெகுவெளி.
சொல்லாத சொல்லில்
தீயாகும் காது மடல்.

இறுதி நகர்வு
அறைக்குள் தனித்திருந்தது இருள்.
குளிரில் குளிக்கும் வெப்பம்.
விடுதலை, தேடல், வினாக்கள், விடைகள்
ஓசை, அதிர்வு, உறங்கும் மதி.
அழுகையா அது?

போவதற்கு முன்..
நீண்டநாள் துக்கமாய்
நானிருந்து என்ன பயன்?
பிறக்கின்ற எல்லாம் ஓர்நாள் இறக்குமெனில்
பிறக்காமல் இறப்பதில் பிழையில்லை.
கோபமில்லை உன்னிடம்: கவலையுண்டு.
பொல்லாதது அம்மா உலகம்
பார்த்துக்கொள் உன்னை பத்திரமாய்.



Thursday, March 31, 2005

இக்கவிதையைப் படிக்கலாம்: கண்ணீர் வேண்டாம்!

துளிர்த்துக் கொண்டே இருக்க
நீ விடிந்து கொண்டே இரு.

வளர்ந்து கொண்டே இருக்க
என்னைப் பிடுங்கி நடு.

வாழ்ந்து கொண்டே இருக்க
உன் கைக்குட்டையை பரிசளி.

தேய்ந்து கொண்டே இருக்க
என்னை நிலவாக்கி
நிமிர்ந்து பார்.

நெகிழ்ந்து கொண்டே இருக்க
விழிக்குளத்தில் தேக்கு
ஒரு துளி நீர்.

நடந்து கொண்டே இருக்க
உன் வாயால் ஒரு
கவிதை சொல்.

கிழிந்து கொண்டே இருக்க
என்னை குப்பையாக்கு.

வடிந்து கொண்டே இருக்க
உன்னை தாளாக்கி
என்னை எழுது.

தெரிந்து கொண்டே இருக்க
வினாவாக என்னை
மாற்றிக் கொள்.

மறந்து கொண்டே இருக்க
நீ நானாகி விடு.

இறந்து கொண்டே இருக்க
இன்னொரு முறை சிரி.

இதில் எதையும் செய்ய இயலாதா?
அப்ப சரி....
மரியாதையாய் என்னை
காதலித்து விடு !

Wednesday, March 30, 2005

நாய்களும் நடை பழகும் காலை

கொடிநீள் கழிவுநீர் ஆடியில்
நொடிக்காற்றில் நீட்சியாகும்
வேர்ஹவுஸ் விளக்குச்சித்திரம்.....

பதிவற்ற சுற்றுச்சுவர் முத்த நினைவில்
எட்டிக்கிடக்கும் ஒளிப்படுகையை
இருள் அணைத்துப் பார்த்தபடி
மரமுதிர்ந்து கிடக்கும் ஒரு மயிர்ச்சிறகு.

வியர்வை நடும் நகர்வில்
எட்டி எட்டி நடந்தபடி
நீண்ட உயிர் நோக்கும்
சீனக்கிழவியின் தளர்கால்கள்.

இரவு அடங்க
இருக்கிறது இன்னும் நேரம்!
ஜன்னல் திரைச்சீலைகளின்
பின்அதிர இயங்கும் அது.

கசியும் வெளிச்சத்தை இழுத்துமூடும்
காண்டோ வீட்டு சீன முதலாளி
பிலிப்பினோ பணிப்பெண்ணிடம் சொல்கிறான்...

'மறந்து விடாதே...
காலை ஐந்திற்கு அலாரம் வை.
நாயும், நீயும் நடை பழக வேண்டும்'

Monday, March 28, 2005

ஒரு பணிப்பெண்ணின் சமையலறை மெட்டுகள்


Image hosted by Photobucket.com



ஒரு சல்லடை பிரயோகத்தின் பின்னும்
விரல் தாண்டி உதிரியாக
இசைக்குதிரையின் அங்கத்திலிருந்து
சிதறிய கீதச்செதில்கள்.
அவகாசம் கடந்த மெட்டின் படம்
சமையலறைச் சுவரில் தொங்குகிறது.

அடுப்புச்செயலெரித்த மெளனஎந்திரம்
பழைய இசைத்தொட்டியில்
விரல் அலைக்கிறது.

வரிகள் மழுங்கிய பாடல்களோடு
அவனும் அவளும் காற்றாகி
மலை முகடுகளில், கரட்டுப்புழுதியில்
தேனுண்ணும்
வண்ணத்துப்பூச்சிகளின் பூவில்
நாக்கு நீட்டி தேனும் உண்கிறார்கள்.

பயனீட்டாளனின் கதவழைப்புக்கு
திறந்து சிந்த
சேமிப்பில் இன்னொரு செயற்கைப்பூ!