Saturday, April 29, 2006

நாலு நாலாய் .. 16

பாதித்த நாலு விஷயங்கள் :

1. 1983 ல் படித்த எம்.எஸ்.உதயமூர்த்தியின் "எண்ணங்கள்"
2. கிரிக்கெட் - அதனால் கெட்டு குட்டிச்சுவரானவர்களில் - நானும் ஒரு சுவர்.
3. எனது கம்பேனியிலிருந்த 149 பேரும் சிங்கப்பூர் கனவில் சுற்றி கொண்டிருக்க, அதைப்பற்றி துளியும் நினைக்காமல் இருந்த 150வது என்னை கூப்பிட்டு சிங்கப்பூர் அனுப்பிய - spic - jel நிறுவன ரவீந்திரன்.
4 . 2000 வருடத்திய சிங்கப்பூர் காலையில் என்னை எழுப்பிய எனது தந்தையின் மரணச்செய்தி.


சமீபத்தில் படித்த நாலு புத்தகங்கள் :

1. கவிஞர் அறிவுமதியின் "நட்புக்காலம்"
2. Infosys நாராயணமூர்த்தி ரூ.10000 ரூ.100000000000 ஆன கதை என்.சொக்கன்
3. கவிஞர் நா.முத்துக்குமாரின் "பாலகாண்டம்"
4. மலேசிய எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வனின் "தெருப்புழுதி"


நாழிதழில் படிக்கும் முதல் நாலு விஷயங்கள் :

1. எந்த பத்திரிக்கையானாலும் முதல் மரியாதை க்குத்தான்.
2. அடுத்து பிசினஸ் சமாச்சாரங்கள் ... இப்போதெல்லாம் பிஸினஸ் மேட்டரே சிறுகதை ரேஞ்சில் எழுதுகிறார்கள்.
3. அடுத்து சினிமா, சினிமா! சிம்ரன் அம்மாவான செய்தியை மட்டும் கொஞ்சம் சோகத்தோடு படித்தேன். ஆயிரம் பெண்கள் அம்மாவாகலாம்...ஆனால் " ஆள் தோட்ட பூபதி " ஒரு சிம்ரனால் மட்டும்தானே முடியும்?
4. கடைசியா போனாப்போகுது என்று நம்மூர் அரசியலைப் படிப்பேன். ஏறக்குறைய வாந்தி வந்து விடும் . ஆனால் அவ்வப்போது ஒரே டமாஷாகவும் இருக்கும்.


சிங்கப்பூரில் எனக்குப் பிடித்த நாலு விஷயங்கள் :

1. அழவே அழாத சீனக் குழந்தைகள் ( எங்காவது அழுகை சத்தம் கேட்டால் அநேகமாக அது இந்தியக் குழந்தையாகத்தான் இருக்கும் )
2. நான் Access cardஐ உள்ளே திணித்து கைரேகையை காட்டியதும் கதவு திறந்து "போய் வா மகனே" என்று வழியனுப்பும் immigiration.
3. இணையத்தின் வழி சமர்பிக்க முடிகிற வருமானவரி கணக்கு, விவகாரங்கள் ,etc
4. சிங்கப்பூர் பணத்தில், அரசாங்க தகவல் பறிமாற்றங்களில் அதிகாரப்பூர்வ இடம் பெற்றிருக்கிற "நமது" தமிழ்!!!

சிங்கப்பூர், மலேசிய இலக்கியச்சூழல் இப்படித்தான்!

சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் புத்தகங்களின் வெளியீடு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை என்ற சூழல் மாறி வருகிறது. சமீபத்தில் கூட ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் ஒன்றாக வெளியீடு கண்டன. அதற்கும் முன் கவிஞர் க.து.மு.இக்பால், எழுத்தாளர் அன்பழகன் உட்பட மூவர் இணைந்து ஒன்றாக நூல் வெளியீடு செய்தார்கள்.

சிங்கப்பூர் நகைச்சுவை எழுத்தாளர் இமாஜானின் 30 நூல்களை மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு செய்தது.

எனது கவிதைத் தொகுப்பு "அலையில் பார்த்த முகம்" கடந்த ஜனவரியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் வெளியீடு கண்டது. அந்தப் புகைப்படங்களை நட்சத்திர வாரத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் வேறு எப்போது பகிர்ந்து கொள்வது? அதை இங்கு உங்களோடு பகிர்கிறேன்.

கவிஞர் மனுஷ்யபுத்திரனின் "உயிர்மைப் பதிப்பகமும்" சிங்கப்பூரில் இருக்கும் எனது நிறுவனமான "பாலு மீடியா"வும் சேர்ந்து " தங்கமீன் பதிப்பகம்" என்ற இணை பதிப்பகம் துவங்கி சிங்கப்பூர், மலேசிய எழுத்துக்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தரம், கட்டுபடியாகும் விலை, திட்டமிட்டு புத்தகங்களை அதன் மூலம் மலேசிய சிங்கப்பூர் எழுத்துகளை பரவலாக சந்தைப் படுத்துதல் என்பது அடிப்படை நோக்கு. சிங்கப்பூர், மலேசியா என பரவலான எனது வாழ்க்கைப் பயணமும், நட்பும் இதற்குத் துணை சேர்க்கும்.

முதல்படி எடுத்து வைக்கிறோம். எல்லைக்கோட்டை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கையில்தான் எல்லா அடிகளுமே எடுத்து வைக்கப்படுகின்றன. எங்கள் நம்பிக்கையும் அப்படிப்பட்டதுதான்!



இடம் : சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கல்யாண மண்டபம். குறுந்தாடியுடன் இருப்பது எனது சகோதரர் கென்னடி. வெள்ளை சட்டையில் - எழுத்தாளர் மா. அன்பழகன்



பாடகர் : குணசேகரன் நடனமணி :பிரமிளா பாடல் : வெள்ளிச் சலங்கைகள் ...

நூல் பெறுபவர் : திரு.நா.ஆண்டியப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
நூல் தருபவர் : இயக்குனர் இமயம்
வேடிக்கை பார்ப்பவர் : இந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர்

அந்த மாலைக்கு அவர் தகுதியானவர்தான்... "எங்கள் ஊருக்குத்தானே இதுவரை சினிமா வந்திருக்கிறது. அட... இதென்ன எங்கள் ஊர் சினிமாவில் வருகிறதே" என்று 16 வயதினிலே பார்த்து வியந்ததாகக் கூறிய கவியரசு வைரமுத்துவின் வரிகளை இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.. தமிழரின் வாழ்க்கையை செல்லுலாய்டில் பதிவு செய்தவருக்கு அது ஒரு சின்ன மரியாதை! அருகில், தமிழ்ப்புரவலர் : போப் ராஜூ

உலகம் முழுக்க அறிமுகமான அந்த கரகரத்த குரலில் எனது கவிதைக்கான விமர்சனத்தைக் கேட்டதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்!

Friday, April 28, 2006

2007 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா?

இன்னும் நாள் இருக்கிறது...ஆனால் அது கண்மூடித்திறப்பதற்குள் ஓடிவிடும். எனவே இப்போதே ஜோசியம் சொல்லுகிறேன் ... எங்கம்மா மகமாயி ஜக்கம்மா என் கனவில் சொல்லி விட்டாள்... 2007 கிரிக்கெட் உலகக் கோப்பையை ஜெயிக்கப் போவது இந்தியாதான், இந்தியாதான், இந்தியாதான்!

அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய் என்றால், அதற்கான காரணங்கள் பின்வருமாறு ( இதையெல்லாம் ஜக்கம்மா கனவில் சொல்லவில்லை. நாமா கணிச்ச விஷயம்) :


A. வலுவான பேட்டிங்

பேட்டிங்கில் இந்திய அணிதான் தற்போது உலகின் சிறந்த அணி என்று தைரியமாகச் சொல்லலாம். Its a nice mixture of youth and experience . Experienceக்கு திராவிட், சச்சின், சேவாக், கயி·ப் Youthற்கு தோணி, யுவராஜ், சுரேஷ் ரய்னா மற்றும் உத்தப்பா. மற்ற உலக அணிகளைப் பார்த்தால் இந்த nice blend கிடையாது. அப்படியே இருந்தாலும் அதில் ஒன்றிரண்டு, 'பூட்ட கேஸாக' இருக்கிறது. இந்த இந்திய வரிசைக்கு சரியான போட்டி கொடுக்கக்கூடியது ஆஸ்திரேலியாதான். ஆனால் ஆஸ்திரேலியாவைக் பொறுத்தவரை when it plays well, it plays really well. But when it plays bad, it plays really bad. அப்படி அவர்கள் மோசமாக விளையாடும் 2 நாள் தொடர்ந்து அமைந்து விட்டால் போதும், ஆஸ்திரேலியக் கனவுகள் முடிந்துவிடும். If my prediction is not wrong, Australians may not reach even the final.

சச்சினுக்கு இது கடைசி உலகக்கோப்பை.So, he will like to sign off in style. அவருக்காகவாவது இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்று மற்றவர்களும் நினைக்கக் கூடுமென்பது ஒரு கூடுதல் அனுகூலம். எனக்கென்னவோ சமீபத்தில் சரியாக விளையாடாதற்குகெல்லாம் சேர்த்து சேவாக் வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பையில் வெளுத்துக் கட்டுவார் என்று தோன்றுகிறது. சச்சின்-சேவாக் ஓபனிங் இறங்கும்போது, ஒருவர் விட்டாலும் மற்றவர் அதிரடிப்பார் என்ற கிலி மற்ற அணிகளுக்கு இருந்து கொண்டே இருக்கும். அதில் சற்று சறுக்கினாலும் The Wall மேலும் ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வார்.

யுவ்ராஜ்சிங் முழுமையான கிரிக்கெட்டராகத் தன்னை உருமாற்றிக்கொண்டு வருடம் ஒன்றாகிறது. சேப்பல் இந்திய அணி கோச்சானது யுவராஜின் வாழ்க்கையில் நிகழ்ந்த வசந்தம். பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் 10 பந்துகளில் அவர் 20 ரன்களுக்குமேல் குவித்த விதம் He is the man for the occation என்று உணர்த்தியது. 2007ம் ஆண்டு உலகக்கோப்பை அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சமாக இருப்பினும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ரய்னா சற்று சிரமப்படக்கூடும் - ஆனால், முக்கிய கட்டங்களில், முக்கியமான ரன்களை எடுக்கிற ஆசாமியாக அவர் இருப்பார். கயி·பைப் பற்றி கணித்துச் சொல்ல முடியாத காலகட்டமிது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் அவர் சீக்கிரமே Formக்கு வருவது அவருக்கும், இந்திய அணிக்கும் நல்லது. தோணிதான் தற்போதைய சூப்பர் ஸ்டார். ஆனால் கடைசி சில போட்டிகளில் அவர் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. உலக அணிகள் அவருக்கான வியூகத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி அவர் ஜெயிப்பார்... The reason why is , he is a superstar with freshness, rawness & ruggedness.

இந்தியக் கிரிக்கெட்டில் கங்கூலியின் கடைசி அத்தியாயம் எழுத்தப்பட்டு விட்டது என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு போராளிக்கு இன்னும் கூடுதல் மரியாதையோடு விடைதரப்பட்டிருக்க வேண்டுமென்று மனசு சொல்கிறது. Irfan Pathan may surprise everyone with his MORE THAN EXCELLENT batting. Expect for this unexpected thing to happen.


B. தரமான பெளலிங்

இர்பான் பதான் முதல் 5 ஓவர்களில் விக்கெட் எடுப்பது எப்படி என்ற வித்தையை கற்று வைத்திருக்கிறார். ஆனால் வேகம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்த வேகம் வெஸ்ட் இண்டீஸில் எடுபடுமா என்பது வரும் தொடரில் தெரிந்து விடும். But he is a clever cricketer and in the words of coach chappel "most improved cricketer" in the Indian team. ஸ்ரீஷாந்த் - இந்தியா கண்டெடுத்திருக்கும் புதிய தங்கவாத்து என்கிறார் இன்சமாம். இது- விக்கெட் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கிறது. மட்டையை தொடாமல் சென்று விடும் outswingerஐ வீசியதும் " என்னா மாமு, இதைகூட அடிக்க முடியல...நீயெல்லாம்..." என்பது மாதிரி அவர் பேட்ஸ்மேனைப் பார்க்கும் பார்வை சமீபத்திய சுவாரஸ்யம். இவர் வெஸ்ட்இண்டீஸில் ஜொலிப்பார்.

முனா·ப் படேலிடம் வேகம், விவேகம் இரண்டும் இருக்கிறது. ஆனாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குத் தேவையான ஏதோ ஒன்று அவரிடம் மிஸ்ஸிங். என்ன அது? ம்... யோசிக்கணும். அதற்கு ஆர்.பி.சிங் பரவாயில்லை. பந்து பவுண்டரிக்குப் போனாலும் சரி... சிக்ஸருக்குப் போனாலும் சரி, ஒரே மாதிரி பார்வை, ஒரே மாதிரி bodu language , ஒரே மாதிரியான பந்து வீச்சு. I feel that as a third seamer in the team, he is going to be a key player. அகர்கார் எல்லா வருடங்களையும் போல் 2007லிலும் இந்திய அணியில் இடம் பெற்று டிரிங்ஸ் கொண்டு வருவார் என்று நினைக்கிறேன்.

ஸ்பின் பெளலிங்கில் சபாஷ் சரியான போட்டி. ஹர்பஜனா, ரமேஷ் பவாரா? இரண்டு பேருமே போராளிகள். பேட்டிங், பெளலிங் மற்றும் ·பீல்டிங்கில் (அபுதாபியில், தொப்பை தேய ரமேஷ் பவார் டைவ் அடித்த காட்சி இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது) ஏறக்குறைய equal. ஆனால் ஹர்பஜன் ஒரு புள்ளி கூடுதல் பெற்று அணியில் இடம் பெறக்கூடும். சில போட்டிகளில் இருவருமே விளையாடக்கூடும். யுவராஜ், சேவாக், டெண்டுல்கர் தேவைக்கடும் நேரங்களில் கைகளைச்சுற்றுவார்கள்.


C. மேம்பட்ட ·பீல்டிங்

விக்கெட்டின் ஒருபுறம் யுவராஜ்சிங், கயி·ப் மறுபுறம் ரய்னா, வேணுகோபால்ராவ் என்பது தரமான ·பீல்டிங்தான். இவர்களில் யாருமே சட்டையில் அழுக்குப்படும் என்று நினைப்பதில்லை. விழுந்து விழுந்து பந்தைத் தடுக்கிறார்கள். திராவிட், சச்சின், ஹர்பஜன், பதான் போன்றவர்கள் safe fielders இனத்தில் சேர்த்தி. சேவாக் சமயங்களில் மாஹாராஜா தானம் கொடுப்பதுபோல் பந்தைத் தடுக்கிறார்...ஆனால் அவர் ஒரு பிச்சைக்காரன் தேங்காய் பொறுக்குவதுபோல் பந்தைத் தடுத்துப் பழகுவது தவிர்க்க முடியாத தேவை. மொத்தத்தில் பார்த்தால், இந்திய அணி no nonsense team when it comes to fieldeing!

ஆகவே, கூட்டிக் கழித்துப் பார்த்ததில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கான எல்லா சத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன. ஜக்கம்மா வேறு கனவில் சொல்லி விட்டார். நாட்டுப்பற்று வேறு "அப்படித்தான் நடக்குமுன்னு சொல்லு" என்கிறது... எனவே என் இனிய இந்திய மக்களே 2007 உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான், இந்தியாதான்! அதைப்பார்த்து ஜொள்ளப்போவது இந்திய மக்கள்தான், மக்கள்தான் என்று கூறி முடிப்பதற்கு முன் கடைசியாக ஒன்று... என்னவென்றால்...

நான் கூறியது நடந்து விட்டால்...

நடந்து விட்டால்...

தமிழ்மணம் மக்களெல்லாம் சேர்ந்து குறைந்தது 10 பவுனில் எனக்கொரு தங்கச்சங்கிலி செய்து போட்டு விடுங்கள். ஒருவேளை நான் கூறியபடி நடக்காவிட்டால்...

நடக்காவிட்டால்.....

நடக்காவிட்டால்....





5 பவுனில் தங்கச்சங்கிலி செய்து போட்டால் போதும்!

Thursday, April 27, 2006

ஒரு மலேசிய பஸ் வானில் பறந்தபோது...

கிள்ளான் உறங்கத் துவங்கியிருந்த ஒரு ராத்திரி.

மனோகரன் நண்பனைச் சந்தித்துவிட்டு காப்பார் போக பஸ்ஸிற்காக காத்திருந்தான். ஐந்தடி இரண்டங்குல உயரம், சிவந்த நிறம், கொஞ்சம் வழுக்கை கொஞ்சம் தொப்பை இரண்டும் கலந்த கலவைதான் மனோ. இந்த மனோவின் இப்போதையத் தேவை காப்பார் போக ஒரு பஸ்.

ஓரமாய் ஒரு ஒற்றை சாப்பாட்டுக்கடை இருந்த அந்த நிறுத்ததில் அவனைத் தவிர யாருமே பஸ்ஸிற்கு காத்திருக்கவில்லை.இப்போதெல்லாம் மக்கள் சீக்கிரமே தூங்கி விடுகிறார்கள் என்று மனோ நினைத்துக் கொண்டான். அவனை மேலும் எதையும் நினைக்க விடாமல் ஒரு பஸ் அவனை உரசியபடி வந்து நின்றது.

"கோலாசிலாங்கூர்?" என்றார் கண்டக்டர். " இல்லை... காப்பார்" என்று சொல்லி அவன் உள்ளே ஏற டிரைவர் பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு ஒற்றை சாப்பாட்டுக் கடையில் தே தாரெக் (ஆற்றப்பட்ட தேனீர்) சாப்பிட இறங்கிப் போனார். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை வந்து டங்கு டங்குன்னு ஆடுச்சாம் என்றிருந்தது மனோவிற்கு.

பஸ்ஸின் உள்ளே ஒளிவிட்டுக் கொண்டிருந்த ஒற்றை டியூப் லைட் இருட்டை விரட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. ஏ.சிக் குளிர் திறந்த கதவுகளின் வழி வெளியே ஓடிக் கொண்டிருந்தது. யோசிப்பதற்கு வசதியாக பஸ்ஸின் பின்புறம் ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டான் மனோ. அவனைத் தவிர அந்த பஸ்ஸில் டிரைவர் சீட்டிற்கு சற்று பின்தள்ளி ஒரு சீனப்பெண் மட்டும் முதுகு காட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான் மனோ. முடிவில் சிரித்துக் கொண்டான். பத்து நிமிடங்களில் டிரைவரும், கண்டக்டரும் ஏறிக் கொள்ள பஸ் இரண்டே பயணிகளோடு புறப்பட்டது.

ஐந்து நிமிடம் கண்டக்டர் பங்களாதேசிகள் பற்றி டிரைவரிடம் பேசிவிட்டு மனோவிடம் வந்தார். " எங்க போறீங்க?"

"தோக்முடா"

இரண்டு ரிங்கிட் வாங்கி, டிக்கெட் தந்துவிட்டு மறுபடியும் பங்களாதேசிகள் பற்றிப்பேசப் போய்விட்டார். மனோவை ஏதோ ஒரு குழப்பமான உணர்வு தாக்கியது. யாரோ முதுகை தொடாமல் துளைப்பது மாதியான உணர்வு. திடீரென ஏன் இந்த உணர்வு? சட்டென்று திரும்பிப்பார்ததான் மனோ.

அங்கே...

கடைசி வரிசையில் மையமாக "அவன்" !

மனோவின் மனதில் அதிர்ச்சி அலைகள் ஓடி ஓய்ந்தது. யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? மனோ பஸ்ஸில் ஏறியபோது பின் இருக்கைகளில் அவனைத்தவிர யாரும் இருக்கவில்லை. அவன் அமர்ந்த பிறகு பின்பக்க அல்லது முன்பக்கக் கதவுகள் வழி எந்தப் புதுப் பயணியும் ஏறவில்லை. பிறகு எப்படி இவன்?

"அவன்" கடைசி இருக்கையில் அமர்ந்து மனோவை பார்வையால் துளைத்தான். மனோ சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். எப்படி வந்த்திருப்பான்? மனோவிற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. அவன் கதவு வழியாக உள்ளே வரவில்லை.

மனோ மனதை திடப்படுத்திக் கொண்டு மறுபடியு திரும்பிப்பார்க்க முற்பட்ட தருணத்தில் அவன் கைக்கு எட்டும் தூரத்தில் நின்றிருந்தான். அவன் உடலில் இருந்து ஏதோ ஒரு மணம் வீசியது - சந்தன வாசம் மாதிரி!

" நான் உங்கள் பக்கத்தில் உட்காரலாமா?" என்று அவன் கேட்டபோது அந்தக்குரலில் மிகுந்த பெண்மைத்தனமும், வசிய வாசமும் இருந்தது.
இவ்வளவு இடம் வெற்றாக இருக்க ஏன் என்னை ஒட்டி உட்கார வேண்டும்? ஆனால் மனோவின் உதடுகள் கட்டுபாடு தளர்ந்து 'உட்காரலாம்' என்றது.

'உங்கள் பெயர்'

'மனோ'

'மனோகரன்தானே?' மனோ திடுக்கிட்டான்.

'ஆ...ஆமாம்'

'எங்கே போகிறீர்கள்'

'தோக் முடா'

'தோக்முடா என்றால்...?'

'அது ஒரு இட்த்தில் பெயர்'

'நான் ஒன்று உங்களிடம் கேட்கலாமா'

'கேளுங்கள்'

'நீங்கள்...நீங்கள் எப்படிப் பிறந்தீர்கள்?'

மனோ சட்டென்று முகம் மாறினான்.ஆத்திரமாய் ஏதோ சொல்ல முற்பட..."அவன்" முகம் பார்த்ததும் கோபம் அடக்கி, 'என் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் செய்து கொண்டதால்'

'அம்மா அப்பா என்றால் என்ன.. கல்யானம் என்றால் என்ன?'

என்னய்யா கேள்வி இது.. மறை கழன்ற கேஸோ?

'அம்மா என்றால் என்னைப் பெற்றெடுத்தவர். அப்பா என்றால் என்னை வலர்து விட்டவர். கல்யாணம் என்றால் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்தச் செய்யப்படும் ஒப்பந்தம்'

'அப்படியென்றால் நீங்கள் மாத்திரைச் சேர்க்கையில் பிறக்கவில்லையா?'

'எ..ன்...ன..து?'

'மன்னிக்கவும். உளறி விட்டேன். வாழ்க்கை என்று சொன்னீர்களே அது எப்படி இருக்கும்?'

மீ கோரெங் போல இருக்கும் என்று சொல்ல வேண்டும்போல் ஆத்திரம் வர, மனோ அதை அடக்கிக் கொண்டான்.

'அதைச் சொல்ல முடியாது. அனுபவித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்'

'அப்படியா.. பரவாயில்லை. அந்த வாழ்க்கையில் என்னவெல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியுமா?'

'அதில் எல்லாம் இருக்கும். அன்பு, பாசம், உயர்வு, தாழ்வு, கோபம், சோகம், காதல், மோதல், பிரிவு...இப்படி எல்லாமே இருக்கும்'

'அன்பு என்றால் என்ன?' என்றான் அவன். மனோவிற்கு ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.'தெரியலடா நாயே' என்று பதில் சொன்னான்.

'நண்பரே...நீங்கள் என்னை மிருகத்தின் பெயர் சொல்லி அழைக்கிறீர்கள். சொல்லுங்கள்... அன்பு என்றார் என்ன?'

'என் தாய், நான் உறங்கியபின் கொசுக்கடிக்ககூடாது என்று போர்வை போர்த்தி விடுவாளே... அதற்குப் பெயர்தான் அன்பு'

'சரி, காதலென்றால் என்ன?'

'எனக்கு ஜோதிகா மேல் இருப்பது.. அவருக்கு சூரியா மேல் இருப்பது, என்மேல் இல்லாதது'

'புரியவில்லை...'

'காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவது'

'எதற்காக?'

'வேறு எதற்கு... தோல்வியடைந்தபின் கவிதை எழுதத்தான்'

'கவிதையா?'

'ஆமாம்...

காற்றிலே காயும் நிலவை
கண்டு கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கரையைக் கடந்த பின்னும்
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

என்று சோகம் கொப்பளிக்கப் புலம்புவது!'

'நீங்கள் எழுதியதா?'

'நானெங்கே எழுத... 7G ரெயின்போ காலனி படத்துக்காக கவிஞர் நா.முத்துகுமார் எழுதியது'

'காதலிக்காமல் இதை எழுத முடியாதா?'

'முடியும்... ஆனால் அதில் உயிர் இருக்காது'

'அப்படியென்றால் நீங்கள் ஜோதிகாவைக் காதலித்து கல்யாணம் செய்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைக்கு கொசுக்கடிக்கும்போது ஜோதிகா அன்போடு போர்வை போர்த்திவிட்டு வாழ்வதுதான் வாழ்க்கை.சரியா?'

'அப்பாடா... ரொம்ப சரி'

'ஒருவேளை தோல்வியடந்தால் கவிதையென ஒன்று எழுதுவீர்கள்'

'வெரிகுட்.ரொம்ப ரொம்ப சரி. சரியாகப் புரிந்து கொண்டாய்'

'இதில் எனக்குப் புரியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. நீங்களும் ஜோதிகாவும் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள் சரி. ஆனால் குழந்தையை எப்படி உண்டாக்குகிறீர்கள். மாத்திரை மூலம் அல்ல என்று சொல்லி விட்டீர்கள்.அப்படியென்றால் எப்படி?'

கேலியாகப் பட்ட இந்தக்கேள்வியால் கோபப்பட்ட மனோ அவனை தீவிரமாக முறைத்தான்.'சொல்லுங்கள்...நீங்கள்.. குழந்தை...' மனோ கை நீட்டி அந்தப் பேச்சை நிறுத்தினான். ' என்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது'

"அவன்" விழிகளை உருட்டி மனோவை விநோதமாகப் பார்த்தான். இரவுப் பூனை மாதிரி அந்த விழிகள் பளபளத்தது.

'சரி.. அது கிடக்கட்டும். கோபம் என்றால் என்ன?'

'நான் உன்னை முறைத்தேனே... அந்த உணர்வுக்குப் பெயர்தான் கோபம்'

'புரிகிறது...நீங்கள் எத்தனை வருடத்துக்கு ஒரு முறை மாத்திரை சாப்பிடுவீர்கள்?'

'சாப்பிடுவோம்...காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு இப்படி சகலவிதமான நோய்கள் வரும்போதும் மாத்திரை சாப்பிடுவோம். வருடத்திற்கு நாலைந்து கிலோவாவது தேறும்'

'காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு என்றால்?'

'போச்சுடா...ஏய்...உண்மையைச் சொல்... உனக்குத் தெரியாது?'

'தெரியாது நண்பரே'

மனோ ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தான். இவன் யார்? நான் ஏன் இவன் கேட்டும் பைத்தியக்காரத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அவனிடமிருக்கும் எந்த விசை என்னை இயக்குகிறது. வேண்டாமென்று நினைத்தாலும் ஏன் வாய் பதில் பேசி விடுகிறது? பேசினான்.

'தலையென்றால், இதோ.. என் வாய் பேசுகிறதே அது இருக்கும் இடம் தலை. இதோ, சட்டை போட்டு மூடியிருக்கிறேனே இந்தப்பகுதியின் பெயர் வயிறு.போதுமா?'

'வலியென்றால்..'

'நான் உன்னை ஓங்கி அறைந்தால் உன் கன்னத்தில் சுர்ரென்று உறைக்குமே அதற்குப் பெயர் வலி. இந்த பஸ் ரோட்டில் ஓடுவதற்குப் பதில் உன்மீது ஓடினால் அப்போது ஏற்படுமே அதற்குப் பெயர் வலி.'

'ம்.. ஆக நீங்கள் மாத்திரை உணவு சாப்பிடுவதில்லை?'

'மடையா, மாத்திரையை உணவாக சாப்பிட முடியுமா? சாப்பிட நிறையப் பொருள்கள் இருக்கின்றன. மீ கோரெங், வடை, பாயாசம். கே எ·சி சிக்கன், நேசமிக்க பெண்ணின் அழகிய உதடுகள்...இப்படி!"

'சரி, மீ கோரெங், வடை, பாயாசம். கே எ·சி சிக்கன், நேசமிக்க பெண்ணின் அழகிய உதடுகள் போன்றவற்றைச் சப்பிட்டபிறகு என்ன செய்வீர்கள்?'

'ஓய்... அந்தக் கடைசி விஷயத்தை விட்டுவிடு. அது சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.'

'சரி, விட்டு விடுகிறேன். சொல்லுங்கள், என்ன செய்வீர்கள்?'

'சாப்பிட்ட பிறகுதானே? ஏதாவது வேலை செய்வோம்'

'வேலையென்றால்?'

'பெரிய்ய லொள்ளுய்யா உன்னோட. வேலையென்றால் தெருக்கூட்டுவது, தொழிற்சாலைகளில் காடி தயாரிப்பது, காய்கறி விற்பது, பஸ் நிலையங்களில் பெண்களை 'சரக்கு' என்று சொல்லி கிண்டலடிப்பது..இப்படி பல முக்கியமான வேலைகள்'

'எனக்குப் புரியவில்லை...'

'அதோ பஸ் ஓட்டுகிறாரே அவர் செய்வதுகூட வேலைதான்'

'சரி, எதற்காக வேலை செய்ய வேண்டும்?'

மனோ தவித்துப் போனான். வெளியே தெரு விளக்குகள் மனோவின் பரிதவிப்பைப் பார்த்து சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன.

'வேலை செய்யாவிட்டால் பஸ்ஸில் போக ஒரு வெள்ளி அறுபது காசு, தே தரெக் குடிக்க காசு இதெல்லாம் யார் தருவார்? காசு வேண்டுமென்றால் உழைக்க வேண்டுமய்யா'

'உங்கள் தலைவர் தரமாட்டாரா?'

'எங்கள் தலைவர் வாய்ப்புகளைத்தான் தருவார்.அதைப்பயன்படுத்தி முன்னேற வேண்டியது எங்களது வேலை. அவனவன் திறமையைப் பொறுத்து, சம்பாத்தியத்தைப் பொறுத்து, ஸ்டார் தியேட்டரில் சினிமாவிற்கோ, ஷா ஆலம் ஸ்டேடியத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கோ போகலாம்.'

'இசையென்றால்?'

'ஐயோ, சாமி, இவன் இம்சை தாங்க முடியலையே' என்று மனோ கவுண்டமணி ஸ்டைலில் புலம்புவதைப் பார்த்துவிட்டு கண்டக்டர் 'என்னங்க, ஏதாவது பிரச்சனையா?' என்றார். 'பிரச்சனைதான், ஏதாவது ஒரு பாட்டுப் போடுங்க சார்.'

'சுட்டும் விழிச்சுடரே, சுட்டும் விழிச்சுடரே' என்று வடிந்தது இசை.

'இதோ, இதுதான் இசை, இதுதான் பாட்டு, போதுமா?' அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

'புரிகிறது.நீ என்ன கேட்கப் போகிறாய் என்று புரிகிறது. பாட்டு என்றால் என்ன? அதுதானே!'

அவன் ஆச்சரியமாக 'அதுதான்' என்றான்.மனோ கை கூப்பினான். 'ஐயா, இதற்குமேல் எனக்குப் பொறுமையில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடு'. அவன் ஏதோ சொல்ல முற்பட்டான். அதற்குள் காப்பார் வந்து விட்டது.

மனோ"அவன்" இறங்குவானா என்று ஆவலாய் கவனித்தான்.இறங்கவில்லை. ஒரு மலாய் இளைஞன் ஏறிக் கொள்ள பஸ் மறுபடியும் கிளம்பியது.
இன்னும் ஐந்து நிமிடத்தில் தோக்முடா வந்துவிடும். மனோ மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாகக் கேட்டான்.

' ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி பேசுகிறாயே..உண்மையைச் சொல், நீ எந்த பைத்தியக்கார மருத்துவமனையைச் சார்ந்தவன்?'

'என்ன நண்பரே...'

'எந்த பைத்தியக்கார மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தாய் என்று கேட்டேன்'

அவன் கொஞ்ச நேர யோசனைக்குப்பின் சொன்னான், 'நண்பரே...உண்மையில் நான் ஒரு செவ்வாய்கிரகவாசிதான்'

'இதோ பார்யா..எல்லாம் என் நேரம். உன்னை மாதிரி ஒரு பைத்தியத்துகிட்ட மாட்டி நொந்து நூலாகனும்னு விதி.அப்படி இப்படி பேசி கடைசியில் என்னையே முழு பைத்தியக்காரனாக்கி விட்டாய்.'

'நம்புங்கள் நண்பரே.. உண்மையில் நான் ஒரு செவ்வாய்க்கிரகவாசிதான். சிலகாலமாக மனிதர்கள் எங்களுக்கு அனுப்புகிற செய்திகளும், எங்களது கிரகத்தைப் பற்றி அறியச் செய்கிற முயற்சிகளையும் பார்த்துவிட்டு எங்கள் தலைவர் ஒரு குழு அமைத்து மனிதர்கள் மீதான சோதனையை நடத்தி வருகிறார். நானும் அதில் ஒரு அங்கம். எனக்குக் கொடுக்கப்பட்ட பணி - மனிதப் பொறுமையின் எல்லையை சோதிப்பது.

இந்த சில நிமிடங்களில் நான் உங்களிடம் சேகரித்த செய்திகள் ஏராளம். சாதாரண மனிதப் பொறுமையிலும் மூன்று மடங்கு உயர்ந்தது உங்கள் பொறுமை.

உங்களோடு பேசியதில், பழகியதில் மகிழ்ச்சி. உங்களைப்பற்றி, ஜோதிகா பற்றி, நா.முத்துக்குமார் கவிதை பற்றி எங்கள் தலைவரிடம் எடுத்துச் சொல்வேன். ஜோதிகா மீதான உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள். வருகிறேன். மீண்டும் சந்திப்போம்' என்று "அவன்" சொன்ன அந்த விநாடி பஸ் தோக் முடாவில் நின்றது. மனோ அவனை விநோதமாகப் பார்த்தபடி கீழிறங்க முற்பட்டான்.

அப்போதுதான் அந்த் அதிசயம் நிகழ்ந்தது.

திடீரென பஸ்ஸின் கீழ்ப்பாகம் இரண்டாக பிளந்து கொள்ள உள்ளிருந்தவர்கள் உதிர்ந்து விழுந்தார்கள்...அந்த "அவன்" தவிர!

பஸ் மெல்ல மேல் எழத்துவங்கியது...தரையிலிருந்து ஒரு அடி, இரண்டு அடி, மூன்று அடி.... போதுமான உயரம் மேல் எழுப்பியதும் பிளந்த பஸ்ஸின் அடிப்பாகம் மறுபடியும் ஒட்டிக் கொள்ள, அந்த கோலாசிலாங்கூர் பஸ் ராக்கெட் வேகத்தில் ஆகாயத்தை நோக்கிப் பறக்கத் துவங்கியது.

அதை அந்த தோக்முடா இருட்டில் மனோ, ஒரு சீனப்பெண், ஒரு மலாய் இளைஞன், பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் அதிர்ந்து போய் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்று நான் சொன்னால் தமிழ்மணம் வாசகர்ளாகிய நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

Wednesday, April 26, 2006

தற்கொலை : சில ரகசியக்குறிப்புகள்

ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்து இன்றைய தேதிக்குள் தற்கொலை சார்ந்ததான மூன்று விஷயங்களை கேட்டேன் : பார்த்தேன் : படித்தேன்!

கேட்டது : சின்னத்திரை நடிகை வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதை சன் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன். எவ்வளவு உற்சாகமான, தன்னம்பிக்கையை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்துகிற பெண்... எப்படி பெண்ணே உனக்கு முடிந்தது இப்படி ஒரு முடிவு?

பார்த்தது : நாகரிகத்தின் சகல கூறுகளையும் தாங்கிய சிங்கப்பூரில், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஒரு இளம் ஜோடியை நேரில் பார்த்தேன் : பேசினேன். தூக்க மாத்திரையின் தாக்கத்திலிருந்து விடுபடாமல் நின்றிருந்த அவர்களை அறைய வேண்டுமென்கிற அளவு கோபம் வந்தது. அறையவில்லை. அட பைத்தியக்காரர்களா.. உயிர் என்பது என்ன அவ்வளவு சின்ன விஷயமா? என்ற கேள்வியை மட்டுமே முன் வைத்தேன்.

படித்தது : கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடத்தும் "உயிர்மை" மாத இதழில் நகர் சார்ந்த தற்கொலைகள் பற்றிய அவரது கவிதையை படிக்க நேர்ந்தது. நவீனத்துவ வாசத்தோடு எழுதப்பட்ட, எல்லோருக்கும் புரிகிற மாதிரியான, அவரது நெடுங்கவிதை அது. அதை உங்களோடு இங்கு பகிர்வது ... தற்கொலை தப்பான விஷயம்: அதன் மீதான ஆக்கப்பூர்வமான கருத்துப் பறிமாற்றம் நல்ல விஷயம் என்ற எண்ணத்தில்தான்.

( மனுஷ்ய புத்திரன் சிங்கப்பூர் வருகிறார். அவருக்காக 3 நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை இனிமேல்தான் அவருக்கு மின்னஞ்சலில் சொல்ல வேண்டும். அதற்கு முன் உங்களிடம் சொல்லி விட்டேன்! இனி உங்களுக்கான கவிதைக் கதவு திறக்கிறது! )


உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள்

நெடுங்கவிதை : மனுஷ்ய புத்திரன்

0.01:
லாட்ஜ்களில் தற்கொலை
செய்து வருபவர்களில்
எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு
அதிகரித்து வருவதாகவே
காவல்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன

0.02:
முப்பதிலிருந்து நாற்பத்தைந்து
வயதிற்குள்
பெரும்பாலான
லாட்ஜ் தற்கொலைகள் நிகழ்கின்றன

0.03:
இளைஞர்களும் யுவதிகளும்
பெரும்பாலும் வீடுகளில்
அல்லது
தமக்கான பிரத்யேக விடுதிகளிலேயே
தற்கொலை செய்துகொள்கிறார்கள்
லாட்ஜ்களில் இறப்பவர்கள்
தமக்கான எல்லா பிரத்யேக இடங்களையும்
உபயோகிக்க முடியாமல் போனவர்கள் என
கருதப்படுகிறது

0.04:
லாட்ஜ்களில் தற்கொலை
செய்துகொள்பவர்கள்
தற்கொலை செய்துகொள்ளும்
நோக்கத்துடன் ஒரு அறையைப்
பதிவு செய்யும்போது
பதிவேடுகளில் அளிக்கப்படும்
பொய்யான பெயர்களும் முகவரிகளும்
யாராலும் தீர்க்க முடியாத
ரகசியக் குறிப்புகளாகத் திகழ்கின்றன

0.05:
லாட்ஜ்களில் தற்கொலை செய்துகொள்பவர்கள்
தங்களது மரணத்தில் அந்தரங்கத்தைப் பேணுகிறவர்களாகவும்
லாட்ஜ்களின் கறைபடிந்த விரிப்புகளின்மீது
இறந்துபோவதன் மூலம்
தம்முடைய நினைவின் கறைகளை
துடைத்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்

0.06:
தனியாக தற்கொலை செய்துகொள்பவர்கள்
அநேகமாக மின் விசிறியில்
தூக்கிட்டுக் கொள்கிறார்கள்

0.07:
ஜோடிகளாக தற்கொலை செய்துகொள்பவர்கள்
மதுபானங்களில் விஷம் கலந்து அருந்துவது
வழக்கமாகிவிட்டது

0.08:
மணிக்கட்டில் நரம்பை வெட்டிக்கொண்டு
பெருகும் தம் குருதியில் மிதப்பவர்களின்
கண்களில் மரணபயம் படிவதே இல்லை

0.09:
தனியாக தற்கொலை செய்துகொள்பவர்கள்
அநேகமாக தங்கள் துணிகளை ஒழுங்காக மடித்து வைத்துவிட்டே
தற்கொலை செய்து கொள்கிறார்கள்

0.10:
பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும்போது
தங்கள் உள்ளாடைகளை கவனமாக அணிந்து கொள்கிறார்கள்

0.11:
ஜோடியாக இறப்பவர்கள்
புணர்ச்சிக்குப் பின்போ அல்லது
நிர்வாண நிலையிலோ இறந்திருந்தால்
அதை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மீதான
ஒரு பழிவாங்குதலாகவே நாம் கருத வேண்டும்

0.11 A:
அத்தகைய ஒரு காட்சியை
தான் பார்க்க நேர்ந்தது
வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத
சுயநிந்தனையைத் தருவதாக
பாரடைஸ் லாட்ஜ் உரிமையாளர்
சிவஞானம் தெரிவிக்கிறார்

0.12:
லாட்ஜ்களில் தற்கொலை செய்துகொள்பவர்கள்
தங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல
என்று எழுதி வைப்பது
ஒரு நல்லெண்ண நடவடிகையே அன்றி
எந்த விதத்திலும் நம்ம்முடைய பொறுப்புகளிலிருந்து
நம்மை விடிவிப்பதாகாது

0.13:
கடன்தொல்லை அல்லது
கள்ளக் காதல் தொடர்பான
போலீஸ் அறிக்கை காரணங்கள்
லாட்ஜ்களில் இறப்பவர்களின் மர்மத்தை
நிரந்தரமாக மூடிவிடுகின்றன

0.14:
லாட்ஜ்களில் இறப்பவர்களில்
பலர் உரிமை கோரப்படாமலேயே
மின்மயானங்களில் எரியூட்டப்படுகிறார்கள்

0.14 A:
தன் சாவுச் செலவுக்கு
இந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
என எழுதப்பட்ட குறிப்புகளையும்
தன் அனுபவத்தில் கண்டிருப்பதாக
தலைமைக் காவலர் நாச்சிமுத்து தெரிவிக்கிறார்

0.15:
லாட்ஜ்களில்
நிகழும் மரணம் தரும் தனிமை
இந்த வாழ்க்கையின் தனிமையே தவிர
அது மரணத்தின் தனிமை அல்ல
என ஒரு நவீன கவிஞர் எழுதியிருப்பது
இங்கு முற்றிலும் பொருத்தமானது

0.16:
மூன்று மாதங்களுக்கு முன்பு
தனது அறையில் தற்கொலை செய்துகொண்ட
ஒரு பெண்
தனது கடைசி இரவில்
'நீ கடைசியாக
எப்போது வீட்டிற்குப் போனாய்'
என்ற கேள்வியை திருப்பத் திரும்பக் கேட்டதாக
முருகன் லாட்ஜ் ரூம்பாய் செல்லப்பாண்டி
தெரிவிக்கிறார்

(செல்வி.G.மஞ்சுளா எம்.ஏ(சமூகவியல்) தனது M.Phil பட்டத்திற்காக 'நகர்சார் தற்கொலைகளில் நவீன உளவியலும் சமூக எதார்த்தமும்' என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேட்டிலிருந்து எடுக்கப்பட்டசில குறிப்புகள்)

Tuesday, April 25, 2006

கட்டிப்புடி வைத்தியம்



வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் நடத்தும் கட்டிப்புடி வைத்தியத்தைப் பார்த்தபோது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தோன்றி இருக்கும்...எனக்கு, அட, இது நமக்கு 20 வருஷத்துக்கு முன்பே தெரியுமே என்று தோன்றியது.

கட்டிப்புடி வைத்தியத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தந்தவர் துறவறம் பூண்ட ஒரு கிருத்துவச் சகோதரர். கிருத்துவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த நாங்கள் இப்படி துறவறம்பூண்டவர்களை brothers என்று அழைப்போம். பிரிவுத்துயரில் விடாமல் அழுது கொண்டிருந்த தமிழரசி அக்காவை கட்டிப்பிடிக்குமாறு என்னிடம் சொல்லியதன் மூலம் எனக்கு கட்டிப்புடி வைத்தியத்தை (ஆனால் அப்போது அவர் அதற்கு கட்டிப்புடி வைத்தியம் என்ற பெயரையெல்லாம் சொல்லவில்லை) அறிமுகம் செய்து வைத்தவர் பிரதர் ஜான். 20 வருஷத்துக்கு முந்திய பதின்ம வயதின் ஒரு குற்றால மாலையில் அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு தீயில் மிதித்த மாதிரி இருந்தது . நான் மனதில் நினைத்தேன்..." அடப்பாவி, இவரெல்லாம் ஒரு சாமியாரா!"


நான் படித்த பள்ளியில் ஒரு மாணவர் இயக்கம் இருந்தது. அதில் தலைமைத்துவம் பற்றியும், சகோதரத்துவம் பற்றியும் சொல்லித் தந்தார்கள். சின்ன வயதில் எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. மனதை ஒரு white board மாதிரி வைத்திருக்கும் பழக்கம். உங்கள் திறமைக்குத் தக்கவாறு நீங்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் அதில் எழுதிக் கொள்ளலாம். அந்த குணம் மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களுக்குப் பிடித்திருந்தது. +2 படிக்கிற பசங்களைக் கூட தவிர்த்து விட்டு என்னை முன்னிலைப் படுத்தினார்கள்.

ஒரு சிறுவனின் சிந்தன ஆற்றலை வளர்க்க அவர்கள் கையாண்ட விஷயங்கள் அந்த வயதில் பிரமிப்பளித்தன. உதாரணத்திற்கு, ஒரு இருட்டறையின் மத்தியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பார்கள். இதை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை சொல்லுங்கள் என்பார்கள். சொல்லுவோம். தன்னை அழித்து உலகுக்கு ஒளி தருது மெழுகுவர்த்தி என்பான் நண்பன். தன்னை அழிக்காமல் தொடர்ந்து ஒளி தந்தால் இன்னும் நல்லா இருக்குமே என்பேன் நான். இப்படிப்போகும் கருத்துப் பகிர்வு.

ஆணும் பெண்ணும் கூச்சங்கள் ஒதுக்கி சகோதரத்துவத்துடன் பழக வேண்டுமென்று கற்றுக்கொடுத்தது இயக்கம். பொதுவாக இந்த இயக்கத்தின் கூட்டங்கள் துவங்கும்போது, ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களை கலந்து உட்கார வைக்க ஏற்பாட்டாளர்கள் ஒரு விளையாட்டு உத்தி வைத்திருந்தார்கள். அதன்படி, நாங்கள் அமர்ந்திருக்கிற பென்ச்சுகளை சுவர் ஓரமாக ஒட்டிப் போட்டுவிட்டு, அறையின் மத்தியில் நின்று கொள்வார் ஏற்பாட்டாளர்.

ஒரு கதை சொல்லுவார் ...

"எங்க ஊர்ல புயல் வந்துச்சாம்..அது செருப்பு போட்டவங்களை எல்லாம் தூக்கிட்டுப் போயிடுச்சாம்" என்பார். உடனே செருப்பு போட்டிருப்பவர்கள் எல்லாம் இடம் மாறி உட்கார வேண்டும். அதற்குள் ஏற்பாட்டாளர் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார். ஒரு நபருக்கு இடம் இல்லாமல் போகும். அவர் சொல்வார் " எங்க ஊர்ல ஒரு புயல் வந்துச்சாம்.. அது வாட்ச் கட்டுனவங்களை எல்லாம் தூக்கிட்டுப் போயிடுச்சாம்" என்று சொல்வார்.

இப்படி தொடர்ந்து ஒருவரே மூன்று முறை மாட்டும் வரை ஆட்டம் தொடரும். ஆட்டத்திம் முடிவில் யார் மாட்டுகிறார் என்பது வேறு கதை. ஆனால், இந்த விளையாட்டு முடியும்போது ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் கலந்து உட்கார்ந்திருப்பார்கள்.

ஒரு தலைப்பைக் கொடுத்து, குழுக்கள் பிரித்து கருத்துக்கள் எழுதி வந்து வாசிக்கச் சொல்வார்கள். அதை மறுத்தோ, ஒட்டியோ கருத்துப் பறிமாற்றம் நடக்க விவாதங்கள் சூடாகும்: சுவையாகும்.

ஒவ்வொரு ஊரிலும், கிருத்துவப் பள்ளிக்கூடங்களிலும் இந்த இயக்கம் உண்டு. மாநில ரீதியான தலைமை உண்டு.மாநில ரீதியான கூட்டங்களும் உண்டு. அப்படி மாநில அளவில் குற்றாலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்தான் தமிழரசி அக்காவைப் பார்த்தேன்.எங்கள் பள்ளியை பிரதிநிதித்து 4 பேர் போயிருந்தோம். 2 அக்காக்கள், ஒரு அண்ணன் & நான். அதாவது போனவர்களிலேயே நான்தான் சின்னப்பையன்.

சற்று ஒதுக்குப்புறமாக இருந்த பழைய பங்களாவில் நடந்த அந்த குற்றால கேம்பிலும் நான்தான் சின்னப்பையன். 10,11,12வது படிக்கிற அண்ணன்மார்கள், அக்காமார்கள் மத்தியில் 7வது படிப்பவன் "சோட்டு' பையன்தானே? ஏற்கனவே பள்ளியில் நடந்த இயக்கக்கூட்டங்களில் எதைப்பற்றியும் கருத்து சொல்கிற அல்லது மறுப்பு சொல்கிற பயிற்சி பெற்றிருந்ததால், குற்றாலக் கேம்பிலும் அதே காரியத்தை தைரியமாக செய்ய முடிந்தது.

அட, சின்னப்பையன் இவ்வளவு தைரியமாக பேசுகிறானே விஷயம் எல்லோரையும் ஈர்த்திருக்க வேண்டும்... அப்படித்தான் தமிழரசி அக்காவும் என்னிடம் வந்து பேசினார்... எந்த ஊர், குடும்ப விவரங்கள் என விசாரித்து அன்பு காட்டினார்.

அந்த கேம்பில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது - சாப்பிடும்போது யார், யார் தட்டிலிருந்து வேண்டுமானாலும் சாப்பாடு எடுத்து சாப்பிடலாம் அல்லது உங்கள் உணவை அடுத்தவர் தட்டிலும் போடலாம். அந்த ஏற்பாடு சகோதரத்துவ மனப்போக்கை தவிர்க்கும் கோடுகளை எடுத்தெறிந்ததை அனுபவிக்கும்போது உணர முடிந்தது.

இந்த ஏற்பாட்டால் நிகழ்ந்த மற்றொன்று என்னவென்றால்... சின்னப்பையனான நான் அங்கிருந்தவர்களின் விளையாட்டுப் பொருளானேன். ஒருமுறை கூட எனது உணவை நான் எடுத்து சாப்பிட முடியாமல் போனது. நான் சாப்பிடுவது முழுக்க மற்றவர்கள் தரும் அல்லது மற்றவர்கள் ஊட்டி விடும் உணவாகவே இருந்தது. சந்தடி சாக்கில் "டேய்... அந்த அக்கா உனக்கு ஊட்டி விடுற மாதிரி எனக்கும் சாப்பாடு ஊட்டி விடுவாங்களான்னு கேளு" என்று அன்பாக நலம் விசாரித்த அண்ணன்மார்களும் இருந்தார்கள். ஏதோ புரிகிற மாதிரி இருக்கும் ஆனால் முழுசாக புரியாது. அந்த வயசு அப்படி!

தமிழரசி அக்கா சாப்பாடு நேரத்தில் மற்றவர்கள் என்மீது உரிமை கொண்டாடுவதை முழுக்க தவிர்க்க நினைத்து முடியாதபோது, கோபப்படுவார். " நீ என் தம்பி இல்லை...போ" என்று சொல்லி சாப்பிடாமல் இருப்பார். நான் தேடிப்போய் அவரை சாப்பிட வைப்பேன். பொறாமை என்பது கூட அதீத அன்பின் இன்னொரு வடிவம்தானே?

அந்த முகாமில் இரவு நேரங்களில் நாங்கள் தங்கியிருந்த பங்களாவின் மேல்தளத்தில் ஜெபம் நடக்கும்.

தரையில் கம்பளம் விரித்து, கூட்டமாக அமர்ந்து, ஜெபிப்போம். அப்படி ஒரு ஜெபநேரத்தில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த தமிழரசி அக்கா என் தோள்களில் அவரது கைகளை மடித்து வைத்து அதில் அவரது தலையை சாய்த்துக் கொண்டார். அவ்வளவு பேர் அமர்ந்திருக்கும் ஒரு ஜெபக்கூட்டத்தில் அவர் காட்டிய அன்பு, அன்யோன்யம் எனக்கு சங்கட்டமாக இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது மாதிரி ஒரு உணர்வு. நிமிர்ந்து பார்த்தால்...என்னை கூட்டிக் கொண்டு போயிருந்த பிரதர் ஜான் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை இழையோடிக் கிடந்தது. அவர் முகத்தில் அந்தநாள் வரை அப்படி ஒரு புன்னகையை பார்த்ததில்லை. சல்மாவின் கவிதைகள் மாதிரி, எல்லாம் புரிந்த மாதிரியும், ஆனால் எதுவும் புரியாத மாதிரியுமான ஒரு புன்னகை.

பாதிரியார் "ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னதும், கிடைத்தது சாக்கென்று படக்கென எழுந்து எதிர்பட்டவர்களிடம் எல்லாம் சமாதானம் சமாதானம் என்று சொல்லிக் கொண்டே கீழ்தளத்துக்கு ஓடி விட்டேன். அப்படி ஓடி வந்தது சரியா தவறா என தீர்மானிக்க இயலாத உணர்வுகள் உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்க, இரவு சாப்பாட்டின்போது தமிழரசி அக்கா போகிற போக்கில் " ஏன் ஓடிப்போயிட்ட? " என்று மட்டும் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை.

இரண்டு நாட்கள் சர்ரென்று ஓடிப்போனது. அந்த இரண்டு நாட்களும் தமிழரசி அக்காவின் அன்பை தெரிவிக்கும் சம்பவங்கள் பல உள்ளடக்கியதாக இருந்தது. அவர் வீட்டில் அவர் ஒரே பிள்ளையாம். ஆண்வாரிசே கிடையாதாம். "உன்னை மாதிரி ஒரு தம்பி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?" என்றார். எனக்கும் அவர் மாதிரி ஒரு அக்கா இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

முகாம் முடிந்து - ஒரு ஞாயிறு எல்லோரும் அவரவர் ஊருக்குக் கிளம்பினோம்.

ஏனென்று தெரியவில்லை... எனக்குள் உருண்டையாய் ஒரு சோகம் மேல் எழும்பி வந்து தொண்டையை அடைத்தது. தமிழகத்தின் ஏதேதோ மூலைகளில் இருந்து வந்த பலரும், சட்டென்று நண்பர்களாகி பழகி உணர்வுகள் பகிர்ந்து சட்டென்று பிரிவது சோகமளித்தது. அங்கிருந்தவர்களில் யாரும் மற்றவரை வாழ்நாளில் இன்னொரு முறை பார்ப்போமா என்ற நிரந்தரமின்மை இன்னும் இதயத்தை அழுத்தியது.

பலரது முகத்திலும் சோகத்தின் சுவடுகள் ஓடியபடி இருக்க, சிலர் என் முன் கண்கலங்கவும் கண்டேன். அப்போதுதான் பிரதர் ஜான் என்னை அழைத்தார்.

"சொல்லுங்க பிரதர்"

"தமிழரசி உன் ·பிரண்டுதானே?"

"ஆமாம். தமிழரசி அக்கா என்னோட ·பிரெண்டுதான்!"

"தமிழரசி உனக்கு அக்காவா, ·பிரெண்டா?"

"தமிழரசி அக்கா ·பிரெண்டுதான், அக்காவும்தான்..."

"சரி அதை விடு...உனக்கு தமிழரசி பிடிக்கும்தானே?"

"ரொம்ப பிடிக்கும் பிரதர்..."

"அப்போ... தமிழரசி அழுதா உனக்கு பிடிக்காதுதானே..."

"அய்யய்யோ பிரதர்... தமிழரசி அக்கா அழுவுறாங்களா?"

"ஆமாம். அரைமணி நேரமா தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டு இருக்கா"

"அய்யோ, இந்த அக்கா இப்படித்தான் பிரதர், சரியான அழுமூஞ்சி. அய்யய்யோ இப்போ என்ன பிரதர் செய்றது..."

"அந்த அழுகையை நிறுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கு"

"என்ன வழி பிரதர்?"

"தமிழரசியை கட்டிப் பிடிச்சு கன்னத்தில் ஒரு முத்தம் கொடு"

20 வருஷத்துக்கு முந்திய பதின்ம வயதின் ஒரு குற்றால மாலையில் அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு தீயில் மிதித்த மாதிரி இருந்தது . அப்போதுதான் நான் மனதில் நினைத்தேன்..." அடப்பாவி, இவரெல்லாம் ஒரு சாமியாரா!"

"அய்யோ...என்ன பிரதர் சொல்றீங்க.. அதெல்லாம் என்னால் முடியாது"

"இது ஒன்னும் தப்பில்லை. கட்டிப்பிடிக்கிறது ஒரு ஆறுதல். முத்தம் கொடுக்கிறது நம்ம அன்பை வெளிப்படுத்திற முறை"

"ம்ஹ¤ம்...அதெல்லாம் என்னால முடியாது. என்னை விட்டுடுங்க பிரதர்"

அதற்குமேல் பிரதர் ஜான் என்னை எதுவும் வற்புறுத்தவில்லை. தீராத கண்ணீரோடு எனக்கு விடை கொடுத்தார் தமிழரசி அக்கா. பஸ் ஏறியதும் யாரும் பார்க்காத ஒரு தருணத்தில் நான் என் கண்களை துடைத்துக் கொண்டேன்."மன்னிச்சுக்கங்க தமிழரசி அக்கா... இதான் என்னால முடிஞ்சது..."

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பார்க்கும்போது தமிழரசி அக்காவிற்கு என் நினைவு வர நியாமில்லை. ஆனால் பிரதர் ஜான் பார்த்திருந்தால், " நான் 20 வருஷத்துக்கு முன்னால் சொல்லிக் கொடுத்தும், ஒரு பயந்த குழப்பமிக்க சிறுவனால் பயன்படுத்த முடியாத சிகிச்சை முறைதான் இது" என்று நினைத்திருப்பார்.

Monday, April 24, 2006

"ராசுவைக் கொன்ன பய"

அது 70களின் இறுதி வருடங்கள்.

நாகரிகத்தின் சுவடுகள் கொஞ்சமும் படாத தென்கிழக்குச் சீமையின் ஒரு கிராமத்தில் சிறுவனாக இருந்தான் சிவகுரு. குறும்புக்காரன். மதுரக்காரனுங்களுக்கே உரிய திமிர், தெனாவட்டு, நக்கல் எல்லாம் அவனிடம் எக்கச்சக்கமாக இருந்தது.

அவனது குசும்பை யாராலும் சகித்துக் கொள்ள முடியாத காலத்திலும் சகித்து, அணைத்துக் கொண்டவள் அவனது அப்பத்தா மட்டும்தான். பொறுப்பற்ற கணவனை பொறுத்துக் கொண்ட அவனது தாயால், பொறுப்பற்ற மகனை பொறுத்துக்கொள்ள முடியாமல் போக " நாசமாப்போற போக்கத்த சிறுக்கி மக்களோட சேர்ந்து" சிவகுரு நாசமாவதற்கு முன்னால் ராயப்பன்பட்டியில் கிருத்துவ சாமியாருங்க நடத்தும் ஹாஸ்டலில் போய் சேர்த்து விட்டார்.

அங்குதான் நான் அவனை சந்தித்தேன்.

பாட்டு அவ்வளவு அழகாப் பாடுவான்.அதில் ஒரு சுயம் இருக்கும். அவன் முன்னால் எல்லாத் திறமைகளும் மண்டி போட்டு நிற்பதை எல்லோராலும் உணர முடிந்தது. படிக்கவே மாட்டான், பரிட்சைக்கு ரெண்டு நாள் முன்னாடி உட்கார்ந்து படிச்சு பாஸாகிடுவான். பந்தயம் கட்டினால், ஒரு முழுப்பக்கத்தையும் அரைப்புள்ளி, கால் புள்ளி கூட மாறாமல் மனப்பாடம் செஞ்சு அப்படியே எழுதிக் காட்டுவான்.

அதையெல்லாம் மீறி அவனிடம் ஒரு வித raw குறும்புத்தனம் சுடர் விட்டது. அது எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்கள் சொல்கிறேன்...

1.மாலைகளில் பள்ளி முடிந்ததும் 6 மணிவரை எல்லோரும் ஹாஸ்டலை ஒட்டியுள்ள மைதானத்தில் விளையாட வேண்டுமென்பது விதி. பெரும்பாலும் ·புட்பால்தான் தூள் கிளப்பும். ஓரமாய் வாலிபால், பேட்மிட்டன் என விளையாடுவார்கள். சும்மா வேடிக்கை பார்ப்பவர்களும் உண்டு. சிவகுரு ஒரு குட்டி சைக்கிளை வாடகைக்கு எடுத்து வருவான். வேகமாய் ஓட்டுவான். முதுகு காட்டியபடி விளையாடிக் கொண்டிருப்பவன் யாராவது ஒருவனது பின்னால் போனதும், சட்டென்று காலை ஊன்றி எழுந்து கொள்வான். சைக்கிள் அதன் போக்கில் போய்க் கொண்டிருக்க, முதுகு காட்டியிருப்பவனின் தோளைத் தட்டி, " அதோ பார்... சைக்கிள் தானாப் போகுது " என்று சுட்டுவான். முதுகுகாட்டி குழப்பமும், திகிலுமாக சைக்கிளைப் பார்க்க, சுற்றியிருக்கும் கூட்டம் ஓவென சிரிக்கும்.

2. ஞாயிற்றுக்கிழமைகளில் ஹாஸ்டலில் மொத்த கூட்டமும் பக்கத்திலிருக்கும் ஆற்றில் குளிக்கப்போகும். அங்கும் சிவகுருவின் கைவரிசை இருக்கும். யாராவது ஏமாந்த ஆளாய் பார்த்து " தண்ணிக்குள்ள மூக்கைப்பிடிச்சு முங்கி, 100 வரைக்கும் எண்ணிட்டு வெளிய வந்து, "ஆமாம்"னு சொல்லனும்.. உன்னால முடியுமா" என்பான். "ப்பூ...இதென்ன பிரமாதம்" என்று சம்பந்தப்பட்ட ஆசாமி தண்ணீரில் மூழ்கியதும், சிவகுரு 95 வரை எண்ணிவிட்டு, correct timingகோடு " நாந்தானே உன் அக்கா புருஷன்?" என்று கேட்பான். அதற்கு நீரிலிருந்து பந்து மாதிரி வெளிவரும் அந்த அப்பாவி "ஆமாம்" என்று சொல்ல, வேடிக்கை பார்ப்பவர்களின் சிரிப்பொலி பட்டாசு மாதிரி வெடிக்கும்.

3. ஒரு முறை வார்டன் அளவுக்கு மீறி அடித்ததால் கோபப்பட்ட சிவகுரு , வார்டனது அறைக்கதவில் ஒட்டியிருக்கும் "இயேசு ஒரே வழி" என்று ஸ்டிக்கரின் மேல் "இயேசுவுக்கு ஒரே வயிற்று வலி" என்று எழுதி ஒட்டிவிட்டான். ஹாஸ்டலே அல்லோகோலப்பட்டது. கடைசியில் சிவகுரு அடையாளம் காணப்பட்டு, மிகப்பெரிய அளவில் அடி வாங்கினான். அத்தனை அடிக்கும், அலறாமல், கதறாமல் இருந்தான். கடைசியில், கண்ணோரம் ஒரு சொட்டு கண்ணீரை மட்டுமே காண முடிந்தது.

சில மாலைகளில் விளையாட்டு மைதானத்தை ஒட்டியிருக்கும் உயரமான சுவரில் அமர்ந்து கொண்டு, விளையாடுபவர்களை வேடிக்கை பார்த்தபடி, நானும் சிவகுருவும் பேசிக் கொண்டிருப்போம். அப்படி ஒரு மாலையில்தான் அவன் ராசுவைக் கொன்ன கதையை என்னிடம் சொன்னான்...

அந்தக்கதை சிவகுரு second show சினிமாவிற்கு போனதிலிருந்து துவங்கியது.

1970களில் எல்லாம் மதுரை மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான கூடலூருக்கு கம்பத்திலிருந்து 9 மணிக்கு மேல் பஸ் கிடையாது. 9 மணிக்கு மேல் கம்பத்தில் வந்து இறங்குபவர்கள் ஏறக்குறைய கம்பம்-கூடலூருக்கு இடைப்பட்ட தூரமான 5 கிலோமீட்டரை சைக்கிளிலோ, லாரிகளில் இடம்பிடித்தோ அல்லது நடந்தோதான் போய்ச்சேர வேண்டும்.

புது சினிமாப்படங்கள் எல்லாம் கம்பத்திலிருக்கிற தியேட்டர்களில்தான் ரிலீசாகும். அப்படி ரிலீசாகிற படங்களை கூட்டமாகப்போய் second show பார்த்துவிட்டு கிண்டலும் கேலியுமாக பேசியபடி ஊர் வந்து சேர்வது கூடலூர் இளவட்டங்களின் வழக்கம். தப்பிதவறிக்கூட யாரும் தனியாகப் போவது கிடையாது. காரணம் - இரண்டு ஊர்களுக்கும் மத்தியில் இருக்கிற "முண்டஞ் செத்த ஆலமரம்".

முன்பகை காரணமாக ஓர் ஆசாமி ஓட ஓட விரட்டுப்பட்டு, வீச்சருவாளால் தலை வெட்டப்பட்டு, அப்போதும் ஓடுவது நிற்காமல், தலையற்ற முண்டமாக கொஞ்சதூரம் ஓடி, கடைசியில் அந்த ஆலமரத்தடியில் உயிர்விட்டு, அதே மரத்தில் பேயாக உலாவுகிறான் என்பதுதான் அந்த " முண்டஞ் செத்த ஆலமரத்தின்" தல புராணம். அவன் ஒரு கோபம் தணியாத உக்கிரமான பேய் என்று ஊர் மக்கள் நம்பினார்கள்.

அதெல்லாம் சரி, ஆனால் இந்தக் கதையை யாருமே சிவகுருவிடம் சொல்ல மறந்து போனார்கள்.

இதையெல்லாம் அறியாத சிவகுரு ஒரு ராத்திரியில், தனது படுக்கையில் தலையணைகளை வைத்து செட்டப் செய்துவிட்டு நைஸாக கிளம்பி கம்பத்தில் second show சினிமாவிற்குப் போயிருந்தான். நள்ளிரவைத் தண்டி படமும் முடிந்தது. நமது ஊர்க்காரர்கள் யாராவது அந்தப்பக்கமாக் சைக்கிளில் வந்தால் தொற்றிக் கொண்டு போய்விடலாம் என்று காத்திருந்தான் சிவகுரு. ரொம்ப நேரமாகியும் யாரும் வருவது மாதிரி தெரியவில்லை. பொறுத்தது போதுமென்று நடக்க ஆரம்பித்தான். நிலவற்ற அந்த இருட்டு ராத்திரியில், ரோட்டோரம் தொடர்ந்த தோட்டங்களுக்கு மத்தியில், இரவுப்பூச்சிகளின் ஓசைகளை ரசித்தபடி நடந்துபோன அவனுக்கு ஒரு நேரம் கால் வலிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்றும் தோன்றியது.சரியென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான்.

அது - முண்டஞ் செத்த ஆலமரம்.

நீண்ட விழுதுகள் தொங்கிய அந்த மரத்தின் விழுதுகள் காற்றில் மெல்ல ஆடி சலசலத்து சிவகுருவை " வா... என்னைப் பற்றி ஆடு" என்று கூப்பிடுவது போலிருந்தது. யாராவது அந்தப் பக்கமாக வரும்வரை அந்த விழுதுகளைப் பற்றி ஆடிக்கொண்டிருந்தால என்ன என்று அவனுக்கும் தோன்றியது. எழுந்து, விழுதுகளைத் தாவிப்பிடித்து ஆனந்தமாக ஆட ஆரம்பித்தான்.கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூடியது.சட சடத்தன விழுதுகள்.

தூரத்தில் வந்த சைக்கிள்காரன் அதை கவனித்துவிட்டான். அந்த மரத்தில் பேய் இருப்பதுதான் அவனுக்குத் தெரியுமே... குறுகிய உருவமாக அது விழுதுகளைப் பிடித்து பேயாட்டம் போடுவதைப் பார்த்ததும் அவனுக்கு இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக பேயை நேரடியாகப்பார்க்கிறான். பேசாமல் வந்த வழியே திருப்பிப் போய் விடு... என்றது மனம். ஆனால் வீட்டில் அவனுக்கு அவசர வேலையிருந்தது. பேசாமல் சைக்கிளை ஒரே அழுத்தாக அழுத்தி அந்த மரத்தைக் கடந்து விட்டால்..... 1,2,3... அவனது சைக்கிள் வேகமெடுத்தது.

விழுதுகளைப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த சிவகுருவும், தொலைவில் தெரிந்த டைனமோ விளக்கு வெளிச்சத்தையும், அது தயங்கி இருண்டதையும், மறுபடியும் ஒளிர்வதையும் கவனித்துவிட்டான். அது கட்டாயம் கூடலூர்க்காரனாகத்தான் இருக்க வேண்டும். சைக்கிள் வேகமாக மரத்தை நோக்கி வந்தது. இருட்டுக்கு பழகியிருந்த சிவகுருவின் கண்கள், அது அவர்கள் ஊரைச் சேர்ந்த முடி திருத்துனர் ராசு என்பதைக் கண்டு பிடித்து விட்டது. உடனே " ராசண்ணே" என்று கத்தினான்.

பேய் அவனை சரியாக அடையாளம் கண்டு பிடித்து பேர் சொல்லி கூப்பிட்டதும், ராசுவின் மயிர்க்காள்கலெல்லாம் நட்டுக் கொண்டன. சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு இன்னும் வேகமாக சைக்கிளை அழுத்தினான். பேய் விடுவதாக இல்லை. விழுதுகளை விட்டுக் குதித்து, " ராசண்ணே, ராசண்ணே" என்றபடி பின்னால் ஓடி வந்தது. அவன் எவ்வளவு வேகமாக அழுத்தியும் அது விடுவதாக இல்லை.." அண்ணே நிறுத்துங்கண்ணே... நாந்தேன் முத்துசாமி மகன்" என்றும் சொன்னது. முத்துசாமி மகனா?

அவசரமாகத் திருப்பி, பேயின் கால்களைப் பார்த்தான். பேய்க்கு கால் தரையில் படாதே.. இதென்ன கால் பதியப் பதிய ஓடி வருது.? ஒருவேளை முத்துசாமி மகன்தானோ? " ஓடமுடியல, நிறுத்துங்கண்ணே" என்று மறுபடியும் சிவகுரு சொல்ல ராசு சைக்கிளை நிறுத்த, இருவரும் சற்று நேரம் மூச்சு வாங்கினார்கள்.

"ஏலே முத்துசாமி மகன்னு சொல்ற, அந்த ஆலமரத்துல என்னடா செய்ற?" என்று கேட்டான் ராசு. சிவகுரு சினமாவுக்கு வந்த கதையை, நடந்து வந்ததை, நின்றதை, மரத்திலாடியதை எடுத்துச் சொன்னான். " நல்ல காரியம் செஞ்சடா அப்பா.. நல்ல வேளை நான் பயத்திலேயே சாகத் தெரிஞ்சேன். சரி, சரி சைக்கிள்ல ஏறு" என்று சொல்லி அவனை ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதிக்கத் துவங்கினான். இருந்தாலும் இது பேயா அல்லது முத்துசாமி மகனா என்று ராசுவால் உறுதியாகத் தீர்மானிக்க முடியவில்லை. பேச்சுக் கொடுத்தபடியிருந்தான்.

ஊர் எல்லையைத் தொடுகிற சமயம், களைப்பினால் அவர்களுக்குள் ஏறக்குறைய பேச்சு குறைந்து நின்று விட்டது. சிவகுருவின் வீடும், ராசுவின் வீடும் Y ஆங்கில எழுத்தின் இருமுனைகளில் இருந்தன. அந்த முனைகளை குறுக்காக இணைக்கும் ஒரு தெருவும் இருந்தது. சிவகுருவோ "எதுக்கு இன்னும் ராசு அண்ணனுக்கு சிரமம்" என்று Y பிரியும் இடத்திலேயே சத்தமில்லாமல் இறங்கிக் கொண்டான். அவன் இறங்கியது ராசுவுக்குத் தெரியாது.

தனது வீட்டில் சைக்கிளை நிறுத்திய ராசு, " ஏய்..முத்துசாமி மகனே எறங்கு" என்றபடி திரும்பிப்பார்க்க, பின்னிருக்கை வெற்றாக இருக்கவும், "அய்யய்யோ... ஆத்தே" என்று அலறி ரத்தம் வழிய சாய்ந்து, சரியாக்க முடியாத காய்ச்சலால் சில நாட்களில் இறந்து போனாராம் ராசு. அன்றிலிருந்து ஊர் முழுக்க சிவகுருவை "ராசுவைக் கொன்ன பய" என்று அழைக்கத் துவங்கியதாம். இது உண்மைதானென்று கூடலூரில் இருக்கிற என் பாட்டி கூட உறுதிபடுத்தினார்.

பள்ளி வருடங்கள் முடிந்ததும், எனக்கும் சிவகுருவுக்குமான தொடர்புகள் குறைந்து விட்டது. ஒரு மலையாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சிவகுரு தற்போது சென்னையில் இருப்பதாகக் கேள்வி. அது ஒரு வகையில் நல்லதுதான்.. அங்கு யாரும் அவனை "ராசுவைக் கொன்ன பய" என்று அழைக்கப் போவதில்லை.