Friday, October 21, 2005

ஒளியும் இரவு

யாரும் பார்க்காமல் அழியலாம்

சூரியச்சூட்டில்
ஈரமிழந்து உதிரலாம்

அசலை தொலைத்த சாயலில்
இன்னொரு சாயல்
விழுந்துமிருக்கலாம்

நிலவொளியில்
இரவில்

கடற்கரை மணலில்

வளைவெளி நண்டுகள்
விளையாடுகையில்

ஒளியும் இடமாய்
உருமாறலாம்

உனதான, எனதான
காலடித்தடங்கள்!

Monday, October 17, 2005

எழுதாத நினைவின் வரிகள்

எனக்காக வருந்தாதீர்கள் -
வாழ்க்கையை பூரணமாய் வாழ்ந்தவன் நான்.

எனக்கான இரங்கல் கூட்டங்களும் வேண்டாம் -
இயல்பானவர்கள் கூட
போலிமுகம் தரிக்கும் கட்டாயத் தருணங்கள்
அவை.

விட்டு விடுங்கள் -
எனக்கான எந்த மெனக்கெடல்களும்
அவசியமற்றவை.

என்றோ
எப்போதோ
என்னை ஆசையாய் பார்த்திருந்தவனின் -
ஏதோ ஒரு தெரிப்பில்....

எவருமறியாமல் வெளிவந்து
எவருமறியாமல் உள்புகுந்து
சிரிக்கும் சுகம்
போதும் எனக்கு.

உஙகளுக்குக் காத்திருக்கின்றன
உங்களது வேலைகள்!

பசித்திருந்தவன்

உன்னிடம் சொல்வதற்கு ஏதும் இல்லாமல்
நடந்து போகிறவளின் பின்னால்
யாசித்தபடி நடக்கின்றன
வார்த்தைகள்.

நீ யாசிக்கமாட்டாய் என்பதை அறிந்திருப்பவள்
ஏதுமற்ற உன் பாத்திரத்தில்
ஓரிரு வார்த்தைகளையேனும்
பிச்சையிட்டிருக்கலாம்.

இதுவரை -
யாரோ இட்ட பிச்சைகளில்
இல்லாமல் போயிருந்த உணவைத்தேடுவதில்
உன் இளமை போய்விட்டது :
அவள் இடும் பிச்சைக்காக
இருக்கிறது பசி மட்டும்.

அவளோ
உன்னை உண்டபடி போகிறாள்
நடந்து.