Wednesday, May 03, 2006

கனிமொழி ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? 10 காரணங்கள்

1. இன்றைய தமிழக, இந்திய அரசியலுக்கு புரையோடிப்போன பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட்ட புதிய சிந்தனையாளர்கள் தேவை. கனிமொழி - புதுச்சிந்தனையாளர்

2. அரசியலுக்கு வரச் சரியான, இளமையின் உச்ச வயது அவருக்கு. இளமையின் வேகமும், இதுவரை பெற்ற அனுபவங்கள் தந்த விவேகமும் சரி விகிதம் கலந்த வயதில் இருக்கிறார். இதுவே சரியான சமயம்.

3. இந்தியப் பொருளாதாரம் புதுப் பாய்ச்சலில் போகத் துவங்கியிருக்கும் இன்றைய சூழலில், திறன்மிக்க நிர்வாகிகளைக் கொண்ட மாநிலங்களையே உலக நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன. கனிமொழிக்கு சிறந்த நிர்வாகியாகின்ற தகுதிகள் இருக்கிறது.

4. கனிமொழியை தங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக, புதுச்சிந்தனை சார் இளம் பெண்கள் பார்க்கிறார்கள். பெரியவர்களும் மதிக்கிறார்கள்.

5. கல்வியும், கவிதாச் சிந்தனையும், அடக்கமான பொருள் பொதிந்த பேச்சும், செயலும் வழக்கமான ஆரவார அரசியல்வாதிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

6. அரசியல்வாதிகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்திருப்பது, அவரது பலம். சிலர் அதை பலவீனமாகக் கருதலாம். ஆனால், அரசியல் செல்வாக்கை தனது சுயஆதாயத்திற்காக பயன்படுத்தினதாகச் சொல்லும் எந்த சுட்டுவிரலும் அவரை நோக்கி இல்லை.

7. அடக்கமானவர்தான், அமைதியானவர்தான். ஆனால் பலமற்றவரல்ல என்பதை கலைஞர் கருணாநிதி கைது சம்பவத்தின்போது உலகம் உணர்ந்து கொண்டது. தனது கருத்துகளுக்காக போராடும் போர்க்குணம் கனிமொழிக்கு இருக்கிறது.

8. வானில் பறப்பதற்க்கான வாய்பிருந்தும், தரையில் காலூன்றி நிற்கும் கனிமொழியின் இயல்பு, ஊழலற்ற நிர்வாகத்திற்குத் தேவையான அடிப்படை குணம். அது அவரால் ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளமிட முடியும் என்று உறுதியளிக்கிறது.

9. சில ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசம், அவருக்கு உலகின் புதிய கதவுகளை திறந்து காட்டியிருக்கிறது. ஒரு தலைவன் திறமையானவனாக, திடமானவனாக இருத்துவிட்டால் எதுவெல்லாம் சாத்தியம் என்பதை கண்கூடாக பார்த்திருப்பதால், அது அவரது அரசியலில் எதிரொலிக்கும்.

10. ஒரு புகழ் பெற்ற தலைவரின் மகளாக இருந்தும், கனிமொழிக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. சுயம் உள்ளவர்களே வெற்றிகரமான தலைவராக விளங்கினாரகள், விளங்குகிறார்கள் என்பது சரித்திரம். வாய்ப்பிருந்தால், கனிமொழியும் ஒரு சரித்திரமாகலாம்!

Tuesday, May 02, 2006

எண்ண அலைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சம்பவம் - 1

அந்தப் பெண்ணின் பெயர் ஷீலா தங்கம். ரொம்ப யுனிக்கான பெயர். இந்தப் பெயருள்ள பெண்ணை அதற்கு முன்னும், அவரை அறிந்ததற்குப் பின்னும் நான் பார்த்ததேயில்லை. பெயருக்கேற்ற மாதிரியே ஷீலா, தங்கம் போல் தகதகவென ஜொலித்தார். ஒரு இளம்பெண் அப்படி ஜொலித்தால், என்ன நடக்கும்? அதிலும் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் மாணவர்கள் கல்வியிலும், காதலிலும் சிறந்தவர்கள்.

பல பேர் காதல் அம்பு விட்டாலும், செழியன் எய்த அம்பு மட்டுமே ஷீலா தங்கத்தை சரியாக தைத்தது. அவர்கள் காதலித்தார்கள். என்னைப் போன்றவர்கள் ராமாயணம், மகாபாரதம் ரேஞ்சில் அவர்களது காதல் கதையை பேசித் திரிந்தோம். யாருக்கு என்ன முடிகிறதோ அதைத்தானே செய்ய முடியும்?

நான் ஷீலா தங்கத்தின் முகத்தை தூரத்தில் பார்த்ததோடு சரி, பக்கத்தில் வந்தால் தலையைக் கவிழ்ந்து கொள்வேன். அப்படி ஒரு கூச்சக்காரப் பையன் அந்த காலகட்டதில். ஒவ்வொரு கால கட்டத்திலும் என் கூச்சத்தின் தன்மை மாறி வந்திருக்கிறது... அதை விடுங்க, இங்கு நான் சொல்ல வந்த முக்கியப் பாயிண்ட் என்னன்னா, அந்த ஷீலா தங்கத்துக்கும் எனக்கும் ஒரு மேட்டரில் தொடர்பு இருந்தது. அப்படி ஒரு மேட்டர் இருந்ததுன்ற விஷயமே ஷீலா தங்கத்துக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாதுன்குறதுதான் இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.

அந்த மேட்டர் என்னன்னா - என் எண்ண அலைகள் ஏதோ ஒரு வகையில் ஷீலா தங்கத்தைப் பாதித்தது. நான் அதைத் தற்செயலாகத்தான் உணர்ந்தேன்.

ஒரு நாள் காலை ஏனோ அந்தப் பெண் இந்த நிற உடையில்தான் வருவார் என்று தோன்றியது. அட ஆச்சரியம் - அந்த நிற உடையில்தான் வந்தார். கொஞ்சம் அதிசயமாக இருந்தது. ஆனால் அந்த தற்செயலை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சீக்கிரமே மறந்து விட்டேன். ஒரு மாதம் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள், மறுபடியும் ஷீலா தங்கம் - சேலை நிற நினைவு - அட, அதே நிறம்! இப்போது நான் நிறைய யோசித்தேன். தற்செயல் ஒருமுறை நிகழலாம், மறுமுறை மறுமுறை நிகழுமா? நிகழ்ந்தது.

திடீரென்று ஏதாவது ஒர் இடத்தில், பஸ்ஸில், மணீஸ் கார்னரில், ஒரு முறை மருத்துவமனையில் கூட, அந்தப் பெண்ணை பார்க்கப் போகிறேன் என்று தோன்றும்... பார்த்து விடுவேன். துவக்கத்தில் இது எப்படி, ஏன் நிகழ்கிறது என்று குழப்பமாக இருந்தது. அப்புறம் அந்தக் குழப்பம் பழகி விட்டது.

ஏதோ ஒரு அலைவரிசையில் எப்படியோ ஒத்துப் போன எண்ண அலைகளின் விளையாட்டுதான் அது என்று அன்று நம்பினேன்... இன்றும் நம்புகிறேன்... நம்புவேன் இனிமேலும்!

(செழியன் - ஷீலாத்தங்கம் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கான பின் குறிப்பு இது. செழியனுக்கும், ஷீலாத்தங்கத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது. செழியன் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். ஷீலாத்தங்கமும் இன்னொரு ஆணை மணந்து கொண்டார். எனவே, முடிவு -சுபம்!)


சம்பவம் - 2

இது ஷீலா தங்கம் சங்கதிக்கு வெகுமுன்னால், நான் ராயப்பன்பட்டி அலோசியஸ் ஹாஸ்டலில் படித்த காலத்தில் நிகழ்ந்தது.

அங்கு ஒரு பழக்கம். ராத்திரி ஸ்டடி நேரம் முடிந்ததும் தூங்கப்போவதற்கு முன்னால், ஜெபம் சொல்ல வேண்டும். எல்லோரும் எழுந்து நின்றதும், எங்கள் முதுகிற்குப் பின்னால் நிற்கும் வார்டன் யார் யார் ஜெபம் சொல்ல வேண்டுமென்று வரிசையாக பெயர் சொல்லுவார். அவர்கள் சொல்ல வேண்டும். அப்படி ஜெபம் சொல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை 5 என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

அப்போது வார்டனாயிருந்தவர் பிரதர் ராயப்பன்.

அந்த குறிப்பிட்ட நாளில், பிரதர் ராயப்பன் முதலில் சைமனைதான் ஜெபம் சொல்லச் சொல்வார் என்று தோன்றியது . பிரதர் அழைக்கிறார் ...

"சைமன் ஜெபத்தைத் தொடங்கு"

ஹை...இதென்ன நான் நினைத்த மாதிரி அழைக்கிறாரே.. சைமன் ஜெபம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முருகேசன் பெயர் மனதில் ஓடுகிறது.

"அடுத்து முருகேசன்"

என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் நம்ப வேண்டியிருக்கிறது. ஆக, அடுத்தது ராஜேந்திரன்தான் என்று மனதில் தோன்ற , பிரதர் ராயப்பனும் "ராஜேந்திரன்" என்கிறார்.

அது எப்படி நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து நான் நினைக்கும் பெயரைத்தான் பிரதர் ராயப்பன் அழைப்பார் என்பது தெளிவாக, விவேகானந்தனை நினைக்கிறேன்.

அவனையே ஜெபம் சொல்ல அழைக்கிறார்.

விவேகானந்தன் ஜெபம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இது தற்செயலாக நடக்கும் நிகழ்வுதான் என்று என்னை நம்ப வைக்க காரணங்கள் தேடுகிறேன். சரி, என் பெயரை நினைத்துக் கொள்கிறேன். அதை பிரதர் அழைக்காவிட்டால், இப்போது நடந்தது தற்செயலென்றாகி விடுமில்லையா?

" கடைசி - மணிமாறன்" என்கிறார் பிரதர் ராயப்பன். எனக்கு பேசமுடியாதபடி தொண்டை அடைத்துக் கொள்கிறது. மறுபடியும் பிரதர் பெயர் சொல்லி அழைக்கிறார். ஒருவாறு தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்கிறேன் ....

இந்த சங்கதி எப்படி நிகழ்ந்தது என்று அன்று எனக்குப் புரியவில்லை. ஷீலா தங்கம் விஷயம் நிகழ்ந்தபோதுதான் இதன் அர்த்தம் விளங்கியது. ஆனாலும், 200 பேர் இருக்கிற ஒரு ஸ்டடி ஹாலில் 5 பேர் நாம் நினைக்கிற வரிசைப்படி அழைக்கப்படுகிற சாத்தியப்கூறின் permutation and combination களைப் பற்றி யோசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

எது எப்படியோ, இப்போதெல்லாம் எனக்கு இந்தப்பிரச்சனைகள் கிடையாது. வாழ்க்கையைப் ப்ற்றி யோசிக்கவே நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் எந்திர வாழக்கையில் இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் எங்கிருக்கிறது நேரம்?

இப்போது எனது ஏண்ண அலைகள் என்ன சாதிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்றேனே .... இன்னும் ஐந்து நிமிடத்தில் பஸ் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் நின்றிருப்பேன்... கால் வலிக்கும்... பஸ் வரவே வராது. முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து சாவகாசமாக வந்து வெறுப்பேற்றும். இத்தகைய "வலிய சக்தியுடையவையாக" மாறி விட்டன எண்ண அலைகள். ஒருவேளை பஸ் டிரைவர்களுக்கும் நமக்குமான எண்ண அலைகள் ஒத்துப் போவதில்லையோ என்னவோ...

அடுத்தமுறை பஸ்ஸிற்காக காத்திருக்கும்போது நீங்களும் உங்கள் எண்ணங்களின் சக்தியை சோதித்துப் பார்க்கலாம். பாருங்கள்... பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள்!!

Monday, May 01, 2006

வந்து போகும் பறவைகள்

ஓடியே போய்விட்டது ஒருவாரம்.

மதி எனக்கும் நட்சத்திர வாரம் கொடுத்தபோது நாட்களில்லை, தயார் செய்து கொள்ளுங்கள் என்றார். தயாராயில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்ல முடிந்தாலும், சோம்பல் முன்நிற்கிறது....

போய் வருகிறேன் என்று சொல்லலாம். எங்கு போவது, எங்கு வருவது? இங்குதானே போவதும் வருவதும். உலகமெல்லாம் பரவிக்கிடக்கிற தமிழ் நெஞ்சங்களோடு கருத்துப் பகிரக் கிடைத்த வாய்ப்பாக நட்சத்திரவாரம் அமைகிறது.

அதற்கு காசி, மதி மற்றும் அவர்தம் குழுவினருக்கு அன்பு நன்றி!

பின்னூட்டமிட்டு உற்சாகமளித்த அன்பு நெஞ்சங்களுக்கு அடுத்த நன்றி!!

வாசித்த, என் வலைப்பூவில் வசித்த நேச உள்ளங்களுக்கும் நன்றி!!!

நேற்றுமுதல் சில சிக்கல்கள்.அதனால் புதுப்பதிவுகள் போட முடியவில்லை. எனினும், நிறைந்த மனதோடு விடை பெறுவது...

பாலு மணிமாறன்