Saturday, April 09, 2005

நம்பிக்கைதாங்க வாழ்க்கை!!!

இணைய தளத்தின் பக்கங்களில்
பார்வை ஊர்வலம்...

மதிய உணவுக்குப்பின்
எம் எம் எஸ் அனுப்பி அவளோடு
பகிர்ந்து கொண்டேன் காதல்.

தரைவழி ஜோகூர் வான்வழி கூச்சிங்
பயண சீட்டுக்காய் சிங்போஸ்ட்* வாசலில்
செலவு சிலநிமிடம்.

மார்ச் மாதம் முதல் படுக்கையில் படுத்தபடி
டெலிவிஷன் திரைவழி
பங்கு பரிவர்த்தனைஉத்தேசம்.

ஒருநாள் கடந்து அலுவலகம் முடிந்து
வீதி நடக்கையில் மனசு கேட்டது....
இன்றாவது -
டோடோவில்**
முதல்பரிசு எனக்கென நல்ல சீட்டெடுக்குமா
சிராங்கூன் கூண்டுகிளி ?


*சிங் போஸ்ட் - சிங்கப்பூர் தபால் நிலையம்
** டோ டோ - சிங்கப்பூர் லாட்டரி

Thursday, April 07, 2005

இந்திய ஆண்களுக்கு மீசை அவசியமா?

நேற்று சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரலில் "அக்னி" என்றொரு தொடர் ஒளிபரப்பானது. மீசையில்லாத ஜெய்கணேஷ் என்ற இளைஞர் ஆண், பெண் என்று எல்லோரிடமும் மைக்கை நீட்டி " ஆண்களுக்கு மீசை அவசியமா? " என்று கேட்டுக் கொண்டிருந்தார். பதில்களை சுவாரஸ்யமாக கவனித்தேன் - முக்கியமாக பெண்களின்!

அவர்களின் பதில்கள் வெவ்வேறாக இருந்தது.

ஒருவர் பெண் சொன்னார் - ' மீசை என்பது ஆண்களுக்கு அவசியம். மீசை வைத்த ஆண்கள்தான் பார்க்க manly-யாக இருப்பாங்க. அவங்களைப் பார்க்கும்போதுதான் ஓ.கே. இந்த ஆள் நமக்கு பாதுகாப்பாக இருப்பார்னு ஒரு secured feeling வரும்" என்று. மீசை வைத்தவர்கள்தான் man மீசையில்லாதவர்கள் boys என்று கொசுறாக இன்னொரு விளக்கமும் சொன்னார். ஏனோ எனக்கு புஷ்ஷ¤ம், சதாமும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

மீசை இல்லாமல் இருப்பதுதான் இன்றைய fashion. ஆண்கள் மீசை இல்லாமல் இருப்பதே better. என்பது ஒரு பதின்ம வயது அம்மணியின் கருத்து.

ஆண்களின் கருத்தும் வெவ்வேறாகத்தன் இருந்தது.

பெரும்பாலான இளையர்கள் " அப்பா, மீசை வச்சாதான் இந்திய ஆணுக்கு அழகுன்னு சொல்றார். அது அந்தக்காலம் ... எங்களுக்கு மீசை இல்லாமல் இருக்கத்தான் பிடிக்குது " என்று மீசையில்லாமல் சொன்னார்கள்.

ஒருவர் மட்டும் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் பரம்பரையின் மிச்சம் மீதி மாதிரி, கடைசிவரை எக்காரணம் கொண்டும் மீசையை விட்டுதரவே மாட்டேன் என்று சொல்ல, பேட்டியெடுத்த ஜெய்கணேஷ் " மீசையை எடுக்கா விட்டால் வேலையே காலிங்கிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீங்க " என்று கேட்க, " வேலையை விட்டுடுவேன். இன்னொரு வேலை கிடைக்காதா என்ன ? என்று திருப்பிக் கேட்டார் கூலாக. அதைக்கேட்டதும் எனக்கு மெய்யும் சிலிர்த்தது, கூடவே மீசையும் சிலிர்த்தது.

மீசை பற்றிய எனது அனுபவங்கள் பலவிதம். பதின்ம வயதில் ஒருமுறை மொட்டையடித்து, மீசையெடுத்துவிட்டு வீட்டுக்குப் போக, என் தங்கைகள் பயமின்றி என்னுடன் பேச 2 வாரம் ஆச்சு. சிங்கப்பூருக்கு வந்த பிறகு மீசையோடு சிலவருடங்கள், மீசையின்றி சில வருடங்கள் என்று இருந்து பழகியதில் ஒரு விஷயம் தெரிந்தது - சீனர்கள், ஜப்பானியர்கள் போன்ற மாற்று இனத்தவர்கள் மீசையில்லாத இந்தியர்களையே அதிகம் விரும்புகிறார்கள். முத்து படத்தில் நடித்த மீனாவை ஜப்பானியர்களுக்கு பிடித்ததற்கு அதுதான் காரணம்.:))

சிங்கப்பூர், மலேசியாவில் இருக்கிற மலாய், சீன இனப் பெண்களுக்கு ஷாருக்கான், அமீர்கான் போன்ற ஆசாமிகள் மீது இருக்கும் லயிப்புக்கு மீசையற்ற அவர்களது மொழுக் முகமும் ஒரு காரணம் என்று உணர முடிகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் அரசியலில் இருக்கிற நம்ம ஆட்கள் மீசை என்ற விஷயத்தை வெகு ஜாக்கிரதையாக தவிர்க்கிறார்கள். மீசை நம்மை மற்ற இனத்தவரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற அதே வேளை, அந்நியப்படுத்தியும் விடுகிறது என்ற யதார்த்தமே அதற்குக் காரணம்.

அதே சமயம் மலேசியாவில் இருக்கிற நமது தமிழ் இளைஞர்கள் மீசையை இழந்துவிடாமல் ஆசையாய் அதை வளர்ப்பதை அதிசயித்து பார்த்திருக்கிறேன். " அது எப்பிடிலா மைக் மீசையை எடுக்கிறது...அதானே நம்ம அடையாளம் " என்பது அவர்களில் பலரது எண்ணம். மீசை இங்கு ஒரு இனத்தின் முகவரியாக இருக்கிறது.

வெளிநாட்டுச்சூழலை விடுங்க... இந்தியாவில்?

முன்னாடியெல்லாம், குமுதம், ஆனந்த விகடனில் கல்லூரி மாணவர்கள் குரூப் ·போட்டோ வரும் போது அதில் மீசையில்லாத தமிழ்க்குடி மகனை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேட வேண்டும். இப்போ? நீங்களே சமீபகால குமுதம், ஆனந்த விகடனை எடுத்துப் பாருங்களேன்....

சரி... " இன்றைய இந்திய ஆண்களுக்கு மீசை தேவையா, இல்லையா ?" உங்களை சாலமன் பாப்பையாவாக நினைத்துக் கொண்டு, சொல்லுங்கள் பார்ப்போம் தீர்ப்பை !

Wednesday, April 06, 2005

கதவின் சில ஜன்னல்கள்

சில நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துபோகும்
எம்.ஆர்.டி ரெயிலென வந்துபோகும் உன் நினைவுகள்....
ஒவ்வொரு முறையும் நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.

உட்கார்ந்தோ, நின்றோ
கர்ப்பிணிப் பெண் அல்லது முதியோருக்கு இடம் தந்தோ
சமமாக சாலைகளில் ஓடி, ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் எஸ்.பி.எஸ் பஸ்ஸை
பார்வையால் பிசைந்தபடியோ...
அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.

இன்னும் சிறிது நேரத்தில்
எவள் ஆங்கிலக் குரலிலாவது வந்துவிடலாம்
நானிறங்கும் ' நெக்ஸ்ட் ஸ்டாப் '.

இம்முறைவழக்கம் போல் நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி நானும் இறங்கிக் கொள்வேன்...
எம்.ஆர்.டியின் மூடிய கதவுகளுக்குப்பின்
அந்த மலாய்ப் பெண்ணின் படுதாமறைவில்
போகும்நம்மை பார்த்தபடி
நடந்து போவோம் நாம்!