Wednesday, June 06, 2007

சை.பீர்முகமது என்ற எழுத்தாளரும், அவர் சார்ந்த நிலவெளியும்


மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் "திசைகள் நோக்கிய பயணம்" பற்றிய முனைவர் ரெ.கார்த்திகேசுவின் கட்டுரையை காலச்சுவட்டில் படிக்க நேர்ந்தபோது, சை.பீர்முகம்மது பற்றியும் அவர் சார்ந்த நிலவெளி பற்றியும் வெகுவாக சலனங்கள் எழுந்தன.


தமிழகத்திலிருந்து பணிநிமித்தமாக மலேசியா சென்றிருந்த 1996-ல்தான் சை.பீர்முகமது என்ற எழுத்தாளரை, அவருக்குள் இருந்த ஒப்பனையற்ற நல்ல மனிதரை எனக்கு இனங்காண வாய்த்தது.


பீர்முகமதின் பெண்குதிரை நாவலுக்கு நான் எழுதியிருந்த விமர்சன வரிகளின் கையெழுத்துப் பிரதியை பார்த்துவிட்டு தொலைபேசியில் கூப்பிட்டு பாரட்டியவர் அந்த நூல் வெளியீட்டு விழா மேடையிலும் உட்கார வைத்தார்.ஒருவரது ஆதி அந்தம் தெரியாமல், எழுத்து மதிப்பீட்டின் அடிப்படையில் ஆதிகுமணன், ரெ.கார்த்திகேசு, பூபாலன் போன்ற மலேசிய இலக்கிய ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு மேடையில் "ஊர்க்காரப் பையனை" உட்கார வைக்கிற இலக்கிய தைரியம் பீர்முகமதிற்கு மட்டுமே சாத்தியம்.
அதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் பீர்முகமதின் மீதான மதிப்பை இன்னும் கூட்டின.


மலேசியாவில் நானும் எனது நண்பர் தண்ணீர்மலையும் நாங்கள் பணியாற்றிய காப்பார் என்ற இடத்தில் ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தினோம். அதன் சார்பில் நடந்த ஒரு நிகழ்வில் பீர்முகமது வாசகர்களை கடுமையாக தாக்கி பேச, அதன் எதிர்வினை மலேசிய நாழிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் எதிரொலித்தது. அவரை தாக்கியும், தூக்கியும் வாசகர் கடிதங்கள் வாரம்தோறும் வந்தன.


அதற்கெல்லாம் அசராத சை.பீர்முகமதால், அவர் அப்போது எழுதிக் கொண்டிருந்த மண்ணும் மனிதர்களும் தொடரின் நகலின்மை குறித்த கேள்வி எழுப்பிய தண்ணீர்மலையின் கடிதத்தை தாங்க முடியாமல் போனது. எழுத்து வனவாசம் போவதாகவும், இனி இந்த ராமன் எழுத்து அயோத்திக்கு வரமாட்டான் என்றும் அறிவித்தார். பலரையும் அதிர வைத்த அறிவிப்பு அது.

பின்னர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த ஆதிகுமணன் '"வரலாறை நூறு பேர் எழுதினாலும் அதையேதான் எழுத முடியும். மாற்றியா எழுத முடியும். நீங்கள் எழுதுங்க பீர்" என்று சமாதானம் சொல்லி, வற்புறுத்தி அவரது வனவாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் .(இனிமேல் காப்பார்காரர்கள் இருக்கும் இடத்தில் பல்வலிக்குக் கூட வாயைத் திறக்க மாட்டேன் என்று சை.பீர் நகைச்சுவையாக குறிப்பிட்டது பின்னர் நிகழ்ந்தது)


சுங்கைப்பட்டாணியில் நடந்த கோ.புண்ணியவானின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள கோலாலம்பூரிலிருந்து கவிஞர் இளமணி, பி.ஆர்.ராஜனுடன் என்னையும் சை.பீர் அவரது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் (அந்த ரகக் காரை வாங்கிய முதல் தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்க வேண்டும்) கூட்டிப்போயிருந்த சில நாட்களில் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் அதிக இடைவெளி இல்லாத அவரது இயல்பை இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள முடிந்தது.


புத்தக வெளியீட்டிற்கு முந்திய இரவு உணவு நேரத்தில் சிறுகதை எழுத்தளர் எம்.ஏ.இளஞ்செல்வனும், சை.பீரும் விடிய விடிய தங்களது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, நாங்கள் ரசித்துக் கொண்டிருக்க, உணவு பறிமாறிய சீனப் பெண்ணோ புரியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். பேச்சு முடிந்ததும் இளஞ்செல்வனும் பீர்முகமதும் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் சீனப் பெண்ணுக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததால், அவளது சாபத்திலிருந்து மற்ற நாங்களும் ஒரு வழியாக தப்பித்தோம். குழந்தை மனம் கொண்ட, ஒப்பனைகளற்ற இளஞ்செல்வனின் திடீர் மரணம் பெரிய சோகம். மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் உந்துகோலாக இருந்த ஆதிகுமணனின் மறைவு இன்னொரு சோகம்.


சிங்கப்பூரிலிருந்து மலேசியா போயிருந்த ஒரு பயணத்தில் எனது பாஸ்போர்ட் தொலைந்துபோக, புது பாஸ்போர்டிற்காக என்னோடு சை.பீரும் அலைந்தது நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வுதரும் இலக்கியம் சாராத தனிமனித அனுபவம்


வெண்மணல் சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு இதயம் தொடும் சிறுகதைகளை பீர்முகமது படைக்கவில்லை என்பது என்னைப் போன்ற தூரத்து பார்வையாளர்களின் ஆதங்கம். கட்டுரைகள், கவிதைகள், நெடுங்கதைகள் என அவரது பாதை வேறுதிசைகளில் விரிந்தது அதற்கான ஆதார காரணமாக இருக்கக்கூடும். பீர்முகமது என்ற இலக்கிய ஒருங்கிணைப்பாளர், பீர்முகமது என்ற எழுத்தாளரை பின்னுக்குத் தள்ள நேர்ந்தது மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு நிகழ்ந்த வரமா சாபமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.


ஒரு சின்னப்பையன் மாதிரி தேடித் தேடி சை.பீர்முகமது தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பது பலரும் வியக்கும் விஷயம். அவர் மைக் பிடித்துவிட்டால் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகள் கூட சூடாகிப் போவதை பலமுறை பார்த்திருக்கிறேன். அது மலேசியத் தமிழ் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியத்திலிருந்து எந்த விதத்திலும் பின்தங்கி விடக்கூடாது என தகிக்கும் மனமொன்றின் வெளிப்பாடென்பதை நெருங்கியவர்கள் அறிவார்கள்.


தங்களது எழுத்திற்கான அங்கீகாரம் பேட்டிகளின் பரிசுதானென்று நினைக்கும் மனோபாவமுள்ள ஒரு மூத்த எழுத்துத் தலைமுறை, பரிசுகளைப்பற்றி கவலைப்படாத இளைய தலைமுறை மலேசிய எழுத்துகளுக்கு மெல்ல மெல்ல வழிவிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் - ஜாசின் தேவராஜன், பா.அ.சிவம், ம.நவின் போன்ற இளையமுறையின் கைகளில், சை.பீர்முகமது, ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற மலேசியத்தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பத்திரமாகவே இருக்கிறது என்பதை அருகிருந்து பார்ப்பவர்களால் உணர முடிகிறது

Tuesday, June 05, 2007

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இலக்கியக் கருத்தரங்கம்



சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் (விக்டோரியா ஸ்டிரீட்) ஐந்தாவது தளத்தில், வரும் ஜூன் 9ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு " சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் - நேற்று, இன்று, நாளை " என்ற தலைப்பில் கருத்தரங்கமும், கலந்துரையாடலும் நடைபெறுகிறது.

சிங்கப்பூர், மலேசியாவின் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவில், சிங்கைத் தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வு பாலு மீடியாவால் ஒருங்கிணைக்கப் படுகிறது.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி ஒலி 96.8 செய்திப்பிரிவின் மூத்த செய்தி ஆசிரியர் செ.ப.பன்னீர்செல்வம், தேசிய கல்விக்கழகத்தின் முனைவர் சீதாலட்சுமி, எழுத்தாளர் சுப்பிரமணியன் ரமேஷ் ஆகியோர் கட்டுரை படைக்கிறார்கள்.

தமிழ் உலகம் நன்கறிந்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது, மலேயாப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷணன் மணியம், மலேசியாவின் புகழ் பெற்ற வார இதழான "தென்றலின்" ஆசிரியர் வித்யாசாகர் போன்றோர் மலேசிய இலக்கிய சூழல் பற்றிய செய்திகளை சிங்கப்பூர் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

வாசகர்கள் - எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சித்தார்த்தன் தலைமை வகிக்க கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ கலந்துரையாடலை வழி நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம்!!

மேல் விவரம் வேண்டுவோர் பாலு மணிமாறனோடு 90753234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Sunday, June 03, 2007

கனிமொழி பற்றி ஒரு மீள்பதிவு

கனிமொழி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பதிவை ஒரு வருடத்திற்கு முன் எழுதியபோது, "சங்கமம்" உட்பட எந்த அரசியல் வெளிச்சமும் அவர் மீது விழுந்திருக்கவில்லை.

சிங்கப்பூரில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு, கனிமொழிக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் " எதுக்கு இந்த வீண் வேலை. அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை" என்று கருத்துரைத்தார்கள்.

எனினும் கனிமொழியின் அரசியல் பிரவேசம் என்பது தாமதப்படும் ஒரு நிச்சயம் என்ற எண்ணம் எனக்குள் (பலரையும் போல்) இருந்தது. கனிமொழியைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது அவசியம் என்ற பேராசையின் வெளிப்படாகவும் அப்பதிவு இருந்தது.

இன்று - அரசியலுக்கான கனிமொழியின் கதவு படாரென்று திறந்து கொண்டது மட்டுமில்லாமல், அவரை ஒரு மாயக்கரம் யாரும் எதிர்பாராத தொலைவுகளுக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், "கனிமொழி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் - 10 காரணங்கள்" என்ற 2006 வருட மார்ச் மாதத்திய பதிவை மீள்பதிவு செய்கிறேன்.


1. இன்றைய தமிழக, இந்திய அரசியலுக்கு புரையோடிப்போன பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட்ட புதிய சிந்தனையாளர்கள் தேவை. கனிமொழி - புதுச்சிந்தனையாளர்

2. அரசியலுக்கு வரச் சரியான, இளமையின் உச்ச வயது அவருக்கு. இளமையின் வேகமும், இதுவரை பெற்ற அனுபவங்கள் தந்த விவேகமும் சரி விகிதம் கலந்த வயதில் இருக்கிறார். இதுவே சரியான சமயம்.

3. இந்தியப் பொருளாதாரம் புதுப் பாய்ச்சலில் போகத் துவங்கியிருக்கும் இன்றைய சூழலில், திறன்மிக்க நிர்வாகிகளைக் கொண்ட மாநிலங்களையே உலக நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன. கனிமொழிக்கு சிறந்த நிர்வாகியாகின்ற தகுதிகள் இருக்கிறது.

4. கனிமொழியை தங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக, புதுச்சிந்தனை சார் இளம் பெண்கள் பார்க்கிறார்கள். பெரியவர்களும் மதிக்கிறார்கள்.

5. கல்வியும், கவிதாச் சிந்தனையும், அடக்கமான பொருள் பொதிந்த பேச்சும், செயலும் வழக்கமான ஆரவார அரசியல்வாதிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

6. அரசியல்வாதிகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்திருப்பது, அவரது பலம். சிலர் அதை பலவீனமாகக் கருதலாம். ஆனால், அரசியல் செல்வாக்கை தனது சுயஆதாயத்திற்காக பயன்படுத்தினதாகச் சொல்லும் எந்த சுட்டுவிரலும் அவரை நோக்கி இல்லை.

7. அடக்கமானவர்தான், அமைதியானவர்தான். ஆனால் பலமற்றவரல்ல என்பதை கலைஞர் கருணாநிதி கைது சம்பவத்தின்போது உலகம் உணர்ந்து கொண்டது. தனது கருத்துகளுக்காக போராடும் போர்க்குணம் கனிமொழிக்கு இருக்கிறது.

8. வானில் பறப்பதற்க்கான வாய்பிருந்தும், தரையில் காலூன்றி நிற்கும் கனிமொழியின் இயல்பு, ஊழலற்ற நிர்வாகத்திற்குத் தேவையான அடிப்படை குணம். அது அவரால் ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளமிட முடியும் என்று உறுதியளிக்கிறது.

9. சில ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசம், அவருக்கு உலகின் புதிய கதவுகளை திறந்து காட்டியிருக்கிறது. ஒரு தலைவன் திறமையானவனாக, திடமானவனாக இருத்துவிட்டால் எதுவெல்லாம் சாத்தியம் என்பதை கண்கூடாக பார்த்திருப்பதால், அது அவரது அரசியலில் எதிரொலிக்கும்.

10. ஒரு புகழ் பெற்ற தலைவரின் மகளாக இருந்தும், கனிமொழிக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. சுயம் உள்ளவர்களே வெற்றிகரமான தலைவராக விளங்கினாரகள், விளங்குகிறார்கள் என்பது சரித்திரம். வாய்ப்பிருந்தால், கனிமொழியும் ஒரு சரித்திரமாகலாம்!