Wednesday, March 28, 2007

குடிகாரர்களுக்கு மட்டும்




அதிகாலை மது மாதிரி
விருப்பும்போது குடிக்கலாம்
விரும்பாவிட்டால் தவிர்க்கலாம்

அதிகாலை மது மாதிரி
நாம் கூச்சல் போடாதவரை
அது அமைதியாகத்தான் இருக்கிறது


அதிகாலை மது மாதிரி
எப்போதும் தன் வாசனையை
மூடிகளுக்குப்பின் ஒளித்தே
வைத்திருக்கிறது

அதிகாலை மது மாதிரி
காலம் குடிக்கக் குடிக்க
தான் காலியாகிறது

அதிகாலை மது மாதிரி
அதை அருத்துபவர்கள் மட்டுமே
பறவைகள் ஆடுவதை
பார்க்க முடியும்


போதையுற்றதால் சொல்கிறேன்

அதிகாலை மது மாதிரி
விரும்பினால் குடிக்கலாம்
விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்

Sunday, March 25, 2007

இந்தியா தோற்றதற்கான பத்து காரணங்கள்

1. சரியான தயாரிப்பில்லை

மற்ற நாடுகளின் கிரிக்கெட் அணிகள் உலகக்கோப்பைக்குத் தங்களை முழுமையாக தயார் செய்து களமிறங்கிய நிலையில், இந்திய அணி கடைசி நிமிடம் வரை பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. "எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்கிறோம்" என்று காரணம் சொன்னார் சேப்பல். அப்படி வளர்த்தத் திறன், பங்களாதேஷை தோற்கடிக்கக்கூட பயன்படவில்லை என்பது பெரிய சோகம்.

2. எதிரணியை குறைத்து மதிப்பிட்ட குற்றம்

இந்த உலகக்கோப்பையில் பங்களாதேஷ் ஒரு அபாயகரமான அணியாக இருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருந்தார்கள். ஆனால்,"பங்களாதேஷ்தானே..ஜெயித்து விடலாம்" என்ற ஏளன மனப்போக்கு அனுபவமிக்க இந்தியா பேட்ஸ்மேன்களிடம் இருந்தது. அதற்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய விலை - தோல்வி!

3. அள்ளி வழங்கிய உபரி ரன்கள்

நூறு போட்டியில் விளையாடிய அனுபவம், இருநூறு போட்டியில் விளையாடிய அனுபவம் என்று பெருமைப்பட்டு என்ன பயன்? இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டியில் 16 உபரி ரன்களை வாரி வழங்கினார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள். அதை கட்டுப்படுத்தியிருந்தால், 220 ரன்களில் இலங்கை அணியை சுருட்டி இருக்க முடியும்.

4. டெண்டுல்கர் என்ற கேள்விக்குறி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கரா? அல்லது லாராவா ? என்ற கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள் - லாரா என்று. தனது அணி ஜெயிக்க வேண்டிய அல்லது தோல்வியை தவிர்க்க வேண்டிய சூழலில் சிறப்பாக விளையாடுபவர்தான் சிறந்த பேட்ஸ்மேன். டிராவிட், இன்சமாம், வாவ், லாரா போன்றவர்கள் இந்த இனத்தில் சேர்த்தி. யோசித்துப் பாருங்கள் - டெண்டுல்கர் ஜெயித்துத் தந்த முக்கிய போட்டிகள் எத்தனை?

5. உத்தப்பா என்ற பலவீனம்

உலகக் கிரிக்கெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புத் திறமைகள் இல்லாதவர்கள் கூட பெயர் போட்டுவிட முடியும். ஆனால் பலவீனமுள்ளவர்களால் அது முடியாது.அவர்களது பலவீனத்தை எதிரணிகள் இரக்கமே இல்லாமல் தொடர்ந்து தாக்கி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவதே அதற்குக் காரணம். உத்தப்பாவின் பலவீனம் விக்கெட்டுக்கு சற்று வெளியே விழுந்து எகிறும் பந்து.

6. செத்த பாம்பை அடிப்பது வீரமா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக இருந்தவர் வீரேந்திர சேவாக். இந்த உலகக்கோப்பையிலும் அந்தத் தலைவலி தீர்ந்த பாடில்லை. அதுதான் பெர்மூடா அணிக்கு எதிராக சதம் அடித்தாரே என்றால், அதே சதத்தை இலங்கை அல்லது பங்களாதேஷிற்கு எதிராக அடித்திருக்க வேண்டியதுதானே? செத்த பாம்பை அடிப்பதா வீரம்?

7. தோல்வியைப் பற்றிய வெட்கமில்லை

இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டி. இந்தியா டாஸ் ஜெயிக்க வேண்டுமென்று படபடக்கிறார் சிவராமக்கிருஷ்ணன். அதிசயிக்கிற மாதிரி ஒரு கேட்ச் அல்லது அதிசயிக்கிற மாதிரி ஒரு ரன் அவுட் என நூறுசதத்திற்கும் மேற்பட்ட திறனோடு இந்தியா விளையாட வேண்டுமென்று சொல்கிறார் ஆஸ்திரேலியரான டீன் ஜோன்ஸ். ஆனால் இந்திய அணியோ, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என்ற தொனியில் விளையாடியது. மிகப்பல வீரர்களிடம், வேகமில்லை, ஜெயிக்க வேண்டுமென்ற வெறியில்லை, தோற்றால் அவமானமே என்ற கவலையுமில்லை. தோற்றதில் கவலையில்லை, தோற்றவிதம்தான் அவமானமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் வெங்கட்ராகவன்.

8. துணி அழுக்காகி விடுமா?

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இளைஞர்களின் விளையாட்டு. இதில் பந்தடிப்பது, பந்து வீசுவது போன்றே, பந்தைத் தடுப்பதும் முக்கியம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைந்த இந்திய அணியின் ·பீல்டிங் திறன் மிகப்பரிதாபமாக இருந்தது. ரன்களை தடுப்பதைக் காட்டிலும், கீழே விழுந்தால் ஆடையில் அழுக்குப் படும் அல்லது கை,கால் பிசகிவிடும் என்ற கவலையிலேயே பலரும் நடமாடியதை பார்க்க முடிந்தது. இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்படும் முனாப், சேவாக் போன்றவர்கள் கூட ·பீல்டிங் திறனற்றவர்களாக இருப்பது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம்.

9. கை கொடுக்காத அனுபவம்

கங்குலி, டெண்டுல்கர், சேவாக், அகர்கார் போன்றவர்களது அனுபவம் இந்திய அணியை அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்ல தவறிவிட்ட நிலையில், அதைப் பற்றி பெருமை பேசி பயனில்லை. அகர்கார் போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் போதும். அவரைப் போன்றவர்கள் புதியவர்களுக்கு வழிவிடும் நேரம் வந்து விட்டது. கங்குலி இன்னும் ஒரு வருடம் விளையாடலாம். ஆனால், மரியாதைக்குரிய இன்றைய நிலையில் ஓய்வு பெறுவதே அவருக்கு நல்லது. சேவாக்கை குறைந்த பட்சம் ஒரு வருடமாவது உள்ளூர் போட்டிகளில் விளையாட வைத்து, அப்புறம் இந்திய அணிக்குள் கொண்டு வரலாம். ஒரு தேசத்தை விட எந்த வீரரும் உயர்ந்தவரில்லை. டெண்டுல்கரும் அவரது விளையாட்டைப் பற்றி மறு பரிச்சீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதென்றே தோன்றுகிறது. ஆனால் அவரைப் பற்றிய முடிவுகளை அவரிடமே விட்டு விடுவதே டெண்டுல்கருக்குத் தருகிற மரியாதை.

10. திராவிட் மற்றும் சேப்பல்

1995க்குப் பிறகு இந்தியா வெளிநாடுகளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிடவில்லை என்கிறார் சேப்பல். ஆனால் 1983க்குப் பிறகு இந்தியா இவ்வளவு அவமானகரமான தோல்வியை சந்தித்ததில்லை என்பதை அவர் உணர வேண்டும். சிறந்த ஆட்டக்காரர்கள் நிறைந்த இந்திய அணியை சூப்பர் எட்டு சுற்றுக்குக்கூட கொண்டு செல்ல முடியாத யாருமே சிறந்த பயிற்றுவிப்பாளராக இருக்க முடியாது - அது கிரேக் சேப்பலாக இருந்தாலும் கூட! திராவிட் புத்திசாலி கேப்டன். இந்த உலகக் கோப்பையில் அவர் சில தவறுகளை செய்திருக்கிறார் ( உதாரணம் : சேவாக் ). ஆனால் அவர் இன்னும் ஓரிரு வருடங்கள் தொடரலாம். எதுவரை என்றால், மகேந்திரசிங் தோனி முழுமையாகத் தயாராகும் வரை!

உனக்கென பறந்தவை


"எத்தனை அழகு
இந்த சுவரோவியம்..."
என்பதோடு நிறுத்தி இருக்கலாம்

சிரித்து விழி நோக்கினாய்

அருவமாகி விழிநுழைந்து
இருள்வெளி கடந்து
புழுதியின் சிதிலங்களுக்குப் பின்னிருந்து
உனதான ஓவியத்தை எடுத்து வந்தேன்

அதில்
ஒரு பழைய வீட்டைச்சுற்றி
பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன