Saturday, March 18, 2006

மும்பை கிரிக்கெட் டெஸ்ட் - ஒரு சின்ன அலசல்.

அஞ்சு பெளலரா ? இல்லை...நாலா?

அஞ்சுதான் என்னோட சாய்ஸ். உசரமான, வேகமான ஹார்மிசன் இருக்கும்போதே ஒரு பேட்ஸ்மேனை வெளியே உட்கார வைக்க முடியும்னா.. அவர் இல்லாதப்ப ஏன் இன்னொரு பேட்ஸ்மேனைக் கொண்டு வரணும்? இர்·பான், படேல், ஸ்ரீஷாந்த், கும்ளே, ஹர்பஜன்தான் பந்து வீசுவாங்கன்னு நினைக்கிறேன்... பார்ப்ப்போம்!


கவனிக்க வேண்டிய ஆசாமி : முனா·ப் படேல்

கிராமத்து முரட்டுத்தனம் டாலடிக்கும் உடல்வாகு, அதே கிராமத்து வெகுளித்தனம் மிதக்கும் நாணம் கலந்த புன்னகை... இந்தியக் கிரிக்கெட்டுக்கு இன்னொரு பரிணாமத்தைத் தருகிறார் படேல். அவர் பந்துவீச்சு - பாம்பு ஊர்வது மாதிரி இல்லங்க, பாம்பு சீறுவது மாதிரி இருக்கு. bounce - இதுதான் அவரை மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுது. அவருக்கும், மற்ற இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் - வேறொன்றுமில்லை ஜெண்டில்மேன் - 10 கிலோமீட்டர்தான் என்கிறார் ஸ்ரீநாத். இந்த டெஸ்டில் 150km / hour என்ற எல்லையைத் தொடுவார்.



ஒரு டெஸ்டில் ரன் அடிச்சிட்டா 9 டெஸ்டில் தூங்கும் வியாதி

இந்த வியாதி நம்ம ஆளுங்க பலருக்கும் இருக்கு. கிரிக்கெட்டை பரதநாட்டியம் ரேஞ்சுக்கு நளினமாக விளையாடக்கூடிய லட்சுமணன் இந்த வியாதியால்தான் பாதிக்கப் பட்டிருக்கிறார். யுவராஜ் சிங்கும், வாசிம் ஜ·பாரும் இதே வியாதியால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று சிங்கப்பூர் சிராங்கூன் ரோடு கிளி ஜோசியர் சொல்லியிருக்கிறார். நானும் அதை நம்புறேன். இந்த டெஸ்டில் இன்னொரு செஞ்சுரி அடிப்பார் ஜ·பார்னு தோணுது. உங்க ஊரு... உங்க பிட்சு, அடிங்க வாசிம் பாய்!


10 விக்கெட் எடுப்பாரா கும்ளே?

இப்பவெல்லாம் ஒரு டெஸ்டுக்கு ( குறிப்பா இந்தியாவில ) 7, 8 விக்கெட் எடுக்கிறதை வழக்கமா வச்சிருக்கிறாரு கும்ளே. முதல் நாளே கூட மும்பை விக்கெட் ஸ்பின் எடுக்கலாம்னு சொல்றாங்க. போன டெஸ்ட் மேட்சில கும்ளே லெக்ஸ்பின் போட்ட விதம் கண்கொள்ளா காட்சியா இருந்தது... ஒவ்வொரு பந்தும் உண்மையாவே ஸ்பின் ஆச்சு. இந்த டெஸ்டில் அவர் 10 விக்கெட் எடுத்தால் அது எனக்கு ஆச்சரியமில்லை... எடுக்காவிட்டால் - அது ஆச்சரியம். ஹர்பஜன்ஜீ - is it your last chance ?


அடிபட்ட புலி : இங்கிலாந்து அணி

இழப்பதற்கு ஒன்றுமே இல்லங்கிற சூழ்நிலையில என்னவாகும்? முடியே போச்சு போப்பா... என்று மனம் லேசா ஆகிடும். முக்கிய ஆட்டகாரர்களையும், போன டெஸ்ட்டையும் இழந்து - இங்கிலாந்து அணி ஏறக்குறைய அந்த மனநிலையில்தான் இருக்கிறது. அது ஆபத்தான மனநிலை. அந்த மனநிலையில் அவர்கள் ஆதீதமாக நன்கு விளையாடி இந்திய அணியை சுருட்டிவிட வாய்ப்பு இருக்கிறது. ஹோக்கார்ட் ரொம்ப ஆபத்தான ஆசாமி.... கண்மூடி திறக்கிறதுக்குள்ள ஆட்டத்தின் போக்கையே மாத்திடுவாரு. ·பிளின்ட்டாப் வேற - யாராவது ஒருத்தர் பெரிய செஞ்சுரி அடிக்கணும்னு சொல்லி சொல்லி பிட்டர்ஸ்னை வெறுப்பேத்திக்கிட்டு இருக்காரு. என்ன வேணும்னாலும் நடக்கலாம்... அதுதான் கிரிக்கெட்டின் beauty. ஆனால், இந்தியாதான் ஜெயிக்கணும்னு நினைக்கிறதுதானே ஒவ்வொரு இந்தியக் குடிமகனோட duty ???


கடைசியா 1 -ன்னு!

டிராவிடைப் பற்றி ஒரு கவிதை....

உலகம் உங்களுக்கு வச்சிருக்க பட்டப்பெயர் wall...
டாஸ் போடும்போது சரியா இருக்கணும் உங்க call...
மேட்சில உங்க பேட்டில பட்டு 40 முறை பவுண்டரிக்குப் போகணும் ball...
எப்பவுமே நீங்கதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஆள் ! ஆள் !! ஆள் !!!


சுனாமி ஓசையும், சில கவிதைகளும்

சிப்பிகளும், சிறுநண்டுகளும்
சிறுபிள்ளைகளின்
மணல்வீடுகளும்
இருந்த இடம் எது?

நிலா பார்த்து
இரவு நுழைந்து
பகலில் வெளிவந்த
மணல்பாதை எது?

காலங்களின் ஓட்டத்தில் -
கடற்கரையில்
கரை பார்த்து
நாளாகிறது...

நீர் மூழ்க நிற்கிறது கரை.

ஓசைச் சுனாமியின் ஓலத்தில்
அமிழ்ந்து ஒலிக்கிறது
தமிழ் மூச்சு.

எப்போதேனும்
நீர் மேல் எழும்பி விடும்
நீண்ட மூச்சுக்கள்
மீண்டும் மூழ்கின,
மூச்சுத் திணறின...

மெல்லிய பாடலின்
உள்ளிருந்து ஒலிக்கும்
ஒரு உயிர்க்கவிதை!

(சமீபத்திய தமிழ் திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது, இப்படித்தான் வருகிறது பெருமூச்சு! )

Monday, March 13, 2006

இங்கு இப்படியாக இலக்கியம்

ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
சுஜாதா, பாலகுமாரன்
இன்னும் எவர் எவரோ

நூலக அடுக்குகளில் வரிசையாக
எத்தனையோ நாளாய்
என்னோடு பேச....

மன்னிக்கவும்.

ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.

ஒரு மணி நேர இண்டர்னெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப்பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!

எங்கே போய்விடும் இலக்கியம்?
பேசலாமே பின்னொருநாள்!