1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆள்த்துகிறது. எனக்குள்ளும் அந்த அதிர்ச்சி பரவியது. எதிர்பாராமல் நிகழும் மரணங்கள் வாழ்க்கையின் நிலையின்மை குறித்தும், இருப்பு குறித்தும், முன்னுரிமை தர வேண்டிய செயல்கள் குறித்தும் மறுபார்வை செய்யத் தூண்டும் வலுவுள்ளவை. அந்த மரணங்கள் நம் பிரியத்திற்குள்ளவர்களுடையதாக அல்லது அபிமானத்திற்குள்ளதாக அமையும்போது அந்தத் தாக்கம் நீண்ட வடுக்களை விட்டுச் செல்கின்றன. 'சில்க் ஸ்மிதாவுடன் ஒரு கற்பனைப் பேட்டி' என்ற எனது கவிதைப் பதிவின் மீதான நண்பர் ஷானவாஸின் பின்னூட்டம், அந்த செப்டம்பர் மாதக் காலையை மீண்டும் ஞாபகப்படுத்தியது. ஒரு கவர்ச்சி நடனக்காரி என்ற அடையாளத்தையும் மீறி, சில்க் ஸ்மிதா பலரையும் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கிறோம். பெண்களும் அவரது அபிமானிகளாக இருப்பது ஆச்சரியத்தையும், அதற்கு என்ன காரணம் என்ற துணைக் கேள்வியையும் எழுப்புகிறது. விதவிதமான பிம்பங்களை சில்க் வெவ்வேறு மனிதர்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார். என்னுள் இருந்த சில பிம்பங்கள் ஒரு கவிதையாக வெடித்தது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இப்படி அமைந்தன...
/
பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது? பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு./ /
இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி.... பச்சையாக சொல்வதென்றால், பரிதாபத்திற்குரியவர்கள்!/ /
கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன? ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று./ /
இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா? உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்./ /
ஏன்? அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது./ /
எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா? இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது!/ இவையெல்லாம் சில்க்கைப் பற்றி நானாக அவதானித்துக் கொண்ட பிம்பங்களின் பிரதிபலிப்புகள். விரும்பியோ, விரும்பாமலோ, அடுத்தவரின் தனிவாழ்க்கை, அந்தரங்கம் பற்றி நமக்குள் சில தீர்மானங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த அடுத்தவர், ஒரு பிரபலப் புள்ளியாக இருந்துவிட்டால், அவரது அந்தரங்கத்தை ஆடையுரித்து நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்து விடும் வேலையைச் செய்து விடுகின்றன ஊடகங்கள். சமீபத்திய தீவிரவாதம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் அத்துமீறி நுழைவதுகூட தீவிரவாத மனோபாவத்தின் இன்னொரு முகம் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியென்றால், நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தில் சதா மூக்கை நுழைக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளையும், சக ஊடகங்களையும் எப்படி வகைப்படுத்துவது?
பத்திரிக்கை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர் சில்க் ஸ்மிதா. தொடர்ந்து நிகழ்த்தப் பட்ட சிதைவுகளின் மொத்த விளைவாக முடிந்தது சாலிகிராமத்தின் 1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. அந்தநாள் வருவதற்குள்...ஆந்திர மாநிலத்தின் இளிரு கிராமத்தில் பிறந்து, வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவாக உருவெடுத்த விஜயலக்ஷ்மி ஒரு நெடிய பயணத்தை முடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் சிலநூறு படங்களை நடித்து விட்டார். எல்லாப் படங்களும் அவரது கவர்ச்சியை முதலீடாக எடுத்துக் கொண்டாலும், சில படங்கள் நடிக்கவும் வாய்ப்பளித்தன. மூன்று முகம், மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் சில்க் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களை பலரும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். மூன்றாம் பிறையும், பொன்மேனி உருகுதே பாடலும் தமிழ்த் திரையுலகின் அழியாத சித்திரங்கள். மலையாளத் திரையுலகமும் சில்கிற்கு கவர்ச்சியும், நடிப்பும் சமஅளவில் கலந்த பாத்திரங்களை வழங்கியது. ஒரு பதின்ம வயது இளைஞன், தன்னை விட வயதுகூடிய பெண்களை விரும்பும் கதையம்சம் கொண்ட 'லயனம்' என்ற மலையாளப் படம் கேரளாவில் பெறு வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்குப்பின் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் வசூலை அள்ளியது. அந்த வெற்றிக்கு ஆதாரமாக இருந்தது சில்கின் கவர்ச்சி. ஆனால், அந்தப்படத்தில் நடிந்த சில்க், அபிலாஷா, நந்து என்ற மூன்று நடிகர்களும் தற்கொலை செய்து கொண்ட துர்நிகழ்வை என்னவென்று சொல்வது?
சில்க் ஸ்மிதாவை தற்கொலைக்குத் தூண்டிய விஷயம் எதுவாகவும் இருக்கலாம்...அதைபற்றி ஊடகங்கள் போதுமான அளவில் அலசி ஆராய்ந்து விட்டன. அந்த அலசல்கள் திருப்பித் தரப் போவது எதுவுமில்லை - சில்க் மீதான ஞாபகங்களைத் தவிர. தமிழ்த் திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடம் இன்றும்கூட நிரப்பப்படாத நிலையில், இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால்...என்ற யோசனை சில விநோத விடைகளைத் தருகிறது. அந்த 48 வயது சில்க் ஸ்மிதா ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மாறி, ரஜினி கால்ஷீட்டிற்காக காத்திருக்கக் கூடும் அல்லது சின்னத் திரையில் ராடான் போன்றதொரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கக் கூடும் அல்லது இன்னும் கூட கவர்ச்சி நடிகையாகவே வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடும்... இப்படிப் பல கூடும்களுக்கு வழிவிடும் யூகம் இது. அடப் பாவமே...இருந்திருக்கலாமே என்று நினைக்க வைக்கும் யூகங்கள். சரிதானே, இருந்திருக்கலாமே ஸ்மிதா...