Wednesday, December 31, 2008

டைரிகள் - எழுதியவை, எழுதாதவை, எழுத இருப்பவை (நாலு வார்த்தை-031)

1997ம் வருட டைரி ஒன்று என்னிடம் இருக்கிறது. தரமான தாளால் செய்யப்பட்டது. இன்று பார்த்தாலும் புதுசாக இருக்கும். அதன் தரமும், அதில் ஒரே ஒரு நாள் மட்டுமே நாட்குறிப்பு எழுதினேன் என்பதுமே அதன் புதுசான தன்மைக்குக் காரணமென்று நினைக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்தை எனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்குமாறு கேட்டு மாமாவுடன் போய் சந்தித்தேன். அந்த ஒரு நாள் நிகழ்வு மட்டுமே டைரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குமேல் அந்த டைரியில் எதுவுமில்லை - ஒரு சில வரவு செலவு கணக்குகளைத் தவிர. இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது. எழுதிய சில பக்கங்கள்; எழுதாமல் பல பக்கங்கள். இதுதான் கடந்த வருடங்களில் நடந்தது. இனி வரும் வருடங்களிலும் நடக்கலாம்.

(சமீபத்திய புகைப்படம்)
என்னுடைய தந்தை தினமும் டைரி எழுதுவார். எண்ணூர் அனல்மின் நிலையத்தில் Turbine Maintenance பிரிவில் பணியாற்றிய காலத்தில், தினமும் அவர் வேலைக்கு டைரியோடு செல்வதை ஒரு சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். அந்த டைரிகளில் எந்திரங்களின் படங்களை dimension-களோடு வரைந்து வைத்திருப்பார். 1960கள் துவங்கி, இப்படிப்பட்ட பல பழைய டைரிகள் அவரிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். 1980களில் அவருக்கு தேக்கடி அணையின் அடிவாரத்தில், தமிழகப் பகுதியில் அமைந்துள்ள லோயர் கேம்பிற்கு பணிமாற்றலானது. அந்தப் புனல் மின் நிலையத்தில் அவர் ஏற்கனவே 1960களின் இறுதியில் பணியாற்றியவர். அந்த வேலை பற்றிய குறிப்புகளடங்கிய பழைய டைரியையும் எங்களிடம் புன்னகையோடு காட்டினார். தேக்கடி அணையிலிருந்து பென்ஸ்டாக் பைப்புகள் என்றழைக்கப்படும் பெரிய குழாய்களின் வழி தண்ணீர் புனல் மின் நிலையத்திற்கு வரும். செங்குத்தாக இறங்கும் அந்த பென்ஸ்டாக் பைப்புகள். அந்தக் குழாய்களின் வழி இறங்கி வரும் நீரை முறைப்படுத்த அதன் வழி நெடுக ஆங்காங்கே valveகளைப் பொருத்தி இருப்பார்கள். ஆனால், அந்த வால்வுகள் பல ஆண்டுகளாக திறக்கவோ, மூடவோபடாமல் ஒரே நிலையிலேயே இருந்து வர, ஆள் நடமாட்டமின்மையால், அவற்றைச் சுற்றி செடிகள் வளர்ந்து அவற்றை மறைத்து விட்டன. ஒரு முறை அந்த வால்வுகளைச் சோதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என் தந்தை ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, அங்கும் ஒரு 'வால்வு' இருக்கிறது என்று சொல்ல, மேலதிகாரிகள் இல்லையென்று திடமாக மறுத்திருக்கிறார்கள். கடைசியில் எல்லோரும் ஒரு குழுவாக ஜீப்புகளில் ஏறிப் போய் காட்டுப் பகுதியில் தேடினால்... அவர் சொன்ன இடத்தில் அந்த 'வால்வு' இருந்ததாம். அந்த துல்லியத்திற்கு உதவியது 60களில் எழுதப்பட்ட டைரிக் குறிப்புகள்.

(கீழிறங்கும் பிரமாண்ட குழாய்கள்)

ஒரு நாள் டைரி எழுதும் பழக்கத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, இப்படி ஒரு கவிதை மலர்ந்தது....

ஐந்தரை கண்விழிப்பு/ ஐந்தைந்து நிமிடமாய் எட்டிப்போகும் எழுகை.../ஏதேனும் மிக மறந்து / அலுவலக வாகனம் நாடி / அவசர ஓட்டம்.../அதை முடி, இதை முடி / அதிகார ஏவல்கள் / அது வேண்டும், இது வேண்டும் / தொழிலாளர் தேவைகள்...

அதை முடித்து இதை முடித்து / அதைச் செய்து இதைச் செய்து / எழுதாத டைரியோடு / ஓடியே போகும் ஒரு வாரம்! /

ஞாயிற்றுக்கிழமை நடுநிசியில் / எதேட்சைக் கண்விழிப்பில் / ஏக்கக் கைநீட்டி / என்மனம் துலாவும் / இன்னொரு சனிக்கிழமை சாயந்திரம்!
என்னைப் பொருத்தவரை எழுதாத டைரியோடு ஓடிப் போகும் வாரங்களும், வருடங்களும் அதிகம்.

2009 வருகிறது. ஒவ்வொரு வருடமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் புத்தாண்டு உறுதிமொழிகளும் கூடவே வந்து விடும். ஓரிரு வாரங்களுக்குள் அந்த உறுதிமொழிகள் மறந்து போவதும் வழக்கம்போல் நிகழக்கூடும். இது ஒரு pessimistic மனோபாவம் என்று தோன்றலாம். ஆனால், பெரும்பாலும் அப்படித்தானே ஆகிறது? இதுவரை படித்த பொன்மொழிகளிலேயே என்னுள் ஆழமாகப் பதிந்து போனது 'மனிதன் - பழக்கத்தின் அடிமை' என்பது. அதை ஆழமாக நம்புவதே அப்படி ஆழமாகப் பதியக் காரணம். இரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை 5 மணிக்கு எழுவது ஒரு காலத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகி விட்டது. அப்படியென்றால், டைரி எழுதுவதை ஒரு பழக்கமாக மாற்றி, அதற்கு அடிமையாவதும் சாத்தியம்தானே? அதைத்தான் இந்த வருடம் செய்வதாக உத்தேசம். அது மட்டுமே இந்த வருட உறுதிமொழியாகிறது. 2009 டிசம்பர் 31 பதிவில் இதைப் பற்றி எழுத முடிகிறதா... பார்ப்போம்! அனைவருக்கும் அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் இந்தப் புத்தாண்டு!!

Tuesday, December 30, 2008

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை - சில சிங்கப்பூர் கனவுகள் (நாலு வார்த்தை-030)

சிங்கப்பூரில் நிரந்தரவாசிகளாக இருக்கும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான கனவுகள் இரண்டு. 1.சிங்கப்பூரில் வீடு வாங்குவது. 2.இந்தியாவில் வீடு வாங்குவது. குழந்தை குட்டிகளோடு சிங்கப்பூரின் வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், சதா இந்திய நினைவுகளோடு துடித்துக் கொண்டிருக்கும் மனமே இரண்டாவது ஆசைக்குக் காரணமாகிறது. வேலை நிமித்தம் சிங்கப்பூரில் கால் வைத்த மறுநிமிடமே நிரந்தரவாசியாக வேண்டுமென்ற ஆசையும், அது கிடைத்ததும் கடனைக் கிடனை வாங்கி ஒரு வீட்டை வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் பலரது மந்திலும் ரெக்கை கட்டிப் பறக்கத் துவங்குகின்றன. நிரந்தரவாசம்- சிலருக்கு சுலபமாகவும், சிலருக்கு மிகுந்த போராட்டத்திற்குப் பிறகும் கிடைக்கிறது. சிலருக்கு அது இறுதிவரை கிடைக்காமலே போவதும் உண்டு.

ஏன் கிடைக்கிறது, ஏன் கிடைக்கவில்லை என்பது பலருக்கும் புரியாத சிதம்பர ரகசியம். ஆனால், சிங்கப்பூரின் நீண்ட காலத் தேவைகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டே அவை வழங்கப்படுவதை பலரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்குக் கூட கிடைக்காத நிரந்தரவாசம் ITI படித்த எலக்ட்ரிஷியனுக்குக் கிடைத்து விடுகிறது. நிரந்தரவாசத்துக்காக, ஒரு விக்கிரமாதித்தியனைப் போல மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நம் குடும்பத்தில் யாராவது புண்ணியம் செய்திருந்தால் நம் வாழ்வில் அதிசயங்கள் நடக்கின்றன. இந்தியாவில் டிப்ளமா படித்த பையனொருவன், நான் பணியாற்றிய ஜப்பானியக் கம்பேனியில் Work Permit-ல் எலட்ரிஷியனாக வேலை செய்து கொண்டிருந்தார். பொறுப்பாக வேலை செய்வார். கஷ்டப்பட்டு வேலை செய்தால் மாதம் 700 வெள்ளி சம்பளம் கிடைக்கும். 1999ல் நானொரு அமெரிக்கக் கம்பேனிக்கு வேலை மாறினேன். அங்கு ஒரு எலக்ட்ரிக்கல் சூபர்வைஸர் உடனடியாகத் தேவைப்படுவதாகவும், 2000 வெள்ளி சம்பளம் தருவதாகவும் கூறினார்கள். இந்தப் பையனை சிபாரிசு செய்தேன். ஆனால் 4000 வெள்ளியாவது சம்பளம் தரவேண்டுமென்றேன். அவர்களின் அவசரம் எத்தகையதென்ற ரகசியம் எனக்குத் தெரிந்திருந்தது. அதே சம்பளத்தில் அந்தப் பையனுக்கு வேலை கிடைத்தது. சீக்கிரமே நிரந்தரவாசம் கிடைத்தது. கல்யாணமானது. இன்று அந்தப் பையன் மனைவி, குழந்தைகள், சொந்த வீடு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆண்டவனது அன்புக் கரங்கள் நம்மை எப்போது தொடுமென்று நமக்குத் தெரியாது. அது தொடும்போது, நிரந்தரவாசம் உட்பட எல்லாமே கிடைக்கும்!

சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மறுவிற்பனைச் சந்தையில் வீடுகளை வாங்கலாம். சலுகை விலையில் கிடைக்கும் அரசாங்க வீடுகள் குடிமக்களுக்குக் கிடைக்கின்றன. 2 நிரந்தரவாசிகள் சேர்ந்துதான் வீடு வாங்க முடியுமென்பது விதி. அந்த இரண்டாம் நபர் பொதுவாக கணவரின் மனைவியாக இருக்கிறார்கள். 1997-98 ஆசிய நிதி நெருக்கடியின்போது, சிங்கப்பூரில் வீட்டு விலைகள் வெகுவாகக் குறைந்தன. 96ன் துவக்கமெல்லாம் peak period. அப்போது வீடு வாங்கியவர்கள் பெரும் விலை கொடுத்தார்கள். வாங்கி ஆறே மாதத்தில் வீட்டு விலை 10 -20 சதவீதம் குறைந்தால் அவர்களது மனநிலை எப்படி இருந்திருக்கும்? 1998-ல் இருந்து சிங்கப்பூர் வீவக வீடுகளின் (Housing Development Board) விலை கொஞ்சம் கொஞ்சமாக கூடியபடி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது. அந்த விலையேற்றம் தற்போது ஒரு சமநிலையை எட்டியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் போகப் போகத்தான் தெரியும். ஆனால் அது வீடு வாங்க வேண்டுமென்ற நிரந்தரவாசிகளின் தாகத்தைக் குறைக்கவில்லை. இந்திய நிரந்தரவாசிகள் சிங்கப்பூரில் வீடுகளை வாங்கினார்கள்; வாங்குகிறார்கள்; இனியும் வாங்குவார்கள்!

வாங்கியாச்சா... உடனே இந்தியாவில் வீடு வாங்கும் அடுத்த கனவு துவங்கி விடுகிறது. "என்னதான் இருந்தாலும், பிள்ளைகள் வளர்ந்த பிறகு, ஊர்லதாங்க செட்டில் ஆகணும்" என்பது அவர்கள் தரும் விளக்கம். அப்படிச் சொன்னவர்களில் யாரும் ஊருக்குத் திரும்பியதாகத் தெரியவில்லை. "ஊர்த் தண்ணி பிள்ளைகளுக்கு ஒத்துக்கவே மாட்டேன்னுதுங்க...குண்டு, குண்டா இருக்க கொசுக்களைப் பார்த்து பிள்ளைங்க அலர்றாங்க.." இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிங்கப்பூரில் தொடரும் வாழ்க்கை. சிங்கப்பூர் மண்ணின் மகிமை அப்படி. மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன. ஆனாலும் ஊரில் வீடு வாங்கும் அல்லது கட்டும் கனவைப் பலரும் கைவிடுவதில்லை. வாங்கிக் கட்டி, வாடகைக்காவது விட்டு விடுகிறார்கள். சொந்தக்காரர்களை அனுபவிக்க விடுபவர்களும், விடுமுறையில் ஊருக்குப் போகும்போது வாடகைக்கு விட்ட வீட்டைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டுத் திரும்புபவர்களும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலத்தில், இந்திய வீட்டுமனைகளை விற்பனை செய்யும் சிங்கப்பூர் நிறுவனங்களும் கூடி இருக்கின்றன. வானொலியில் அவர்களின் கவர்ச்சியான விளம்பரங்களும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவை, ஊரில் வீடு வாங்கும் இந்தியக் கனவிற்கு எண்ணெய் வார்க்க... ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலுமாக அல்லாடிக் கொண்டிருக்கின்றன பல மனங்கள்!

Monday, December 29, 2008

கம்பன், நடிகர் சிவக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும்! (நாலு வார்த்தை-029)



நேற்று இரவு, டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில், கம்பராமாயணத்தை மீள் ஞாபகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை வழங்கியவர் நடிகர் சிவக்குமார். 'கம்பன் என் காதலன்' என்ற தலைப்பில் அவரது இலக்கியப் பேருரைக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. ஏறக்குறைய 800 பேருக்கும் மேல் அவரது உரையை 2 மணி நேரத்திற்கும் மேல் அமைதியாக ரசித்துக் கேட்டார்கள். அந்த அமைதிக்கும் ரசனைக்கும் சிவக்குமாரின் ஆளுமை மிக்க பேச்சே காரணமானது. "உண்மையிலேயே சொல்றேன்... உலகத்தில் எங்கேயும் உங்களைப்போல் ஒரு அருமையான கூட்டம் கிடைக்கவே கிடைக்காது." என்று பேச்சை முடித்ததும், இரண்டு முறை அழுத்தமாகக் குறிப்பிட்டார் சிவக்குமார். அது உதடுகளில் இருந்து உதிர்ந்த ஒப்பனை வார்த்தைகளல்ல; மனதின் ஆழத்திலிருந்து வடிந்த உண்மை வார்த்தைகள் என்பதை அரங்கிலிருந்த அத்தனை பேரும் உணர்ந்து கொண்டார்கள்.


சிங்கப்பூர் போன்றதொரு நவீன தேசத்தில், கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் இன்னும் இரண்டு தலைமுறைக்கு மேல் உயிர்ப்போடு இருக்குமா என்ற கேள்வியை அங்கிருந்த பலரது மனதிலும் இந்தப் பேச்சு எழுப்பியிருக்கக் கூடும். எதிர்மறை பதில்களே விடையாகவும் கிடைத்திருக்கக் கூடும். நிஜத்தில், நாம் இழந்து கொண்டிருக்கும் பண்பாட்டுக் கலாச்சார அடையாளங்களில் இதிகாசங்களும் ஒன்றாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதிகம் புழக்கத்தில் இல்லாத எந்த ஒன்றும் தனது முடிவைத் தானே தேடிக் கொள்ளும் என்ற இயற்கை நியதிக்குள் இதிகாசங்களும் அடங்கி விடுமோ என்ற அச்சம் பலரது மனதிலும் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் இந்து அமைப்புகளும், அவை ஏற்பாடு செய்யும் இதிகாச உரைகளும் ஒரு சில தலைமுறைக்கு பலனளிக்கலாம்... அதற்கு அடுத்த தலைமுறைகள்? இளைய தலைமுறையின் தேவைகளும், தேடல்களும் வேறாக இருக்கின்றன. PSP விளையாட்டுகளும், MP3 இசையுலகும், ஆங்கிலத் திரைப்படங்களும், தொலைக்காட்சியும், கல்வி நிலையங்களும், விரைவு உணவகங்களும், நண்பர்களும் எடுத்துக் கொண்ட நேரத்திற்குப் பின் எங்கிருக்கும் இதிகாசத்திற்கான நேரம்? பதின்ம வயதின் இயல்பான பிரச்சனைகளைக்கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத இடைவெளிகளோடு இருக்கும் ஒரு தலைமுறையிடம், பெற்றோர், இதிகாசங்களை எடுத்துச் செல்வது எப்படி?


இருட்டாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில்..புலம்பும் குரல்களை விட, விளக்கேற்றும் விரல்கள்தானே முக்கியம்? சிவக்குமாரின் பேருரை ஒரு விளக்காக அமைந்தது. அவர் கம்பராமாயணத்தில் 100 முக்கியப்பாடல்களை எடுத்துக் கொண்டு, இரண்டு மணி நேரம் சொற்பொழிவாற்றினார். கம்பராமாயணத்தை முதல்முதலாகக் கேட்பவர்களுக்கும் அதன் முழு சாராம்சத்தையும் புரிய வைத்த பேச்சாக இருந்தது அது. தங்கள் பிள்ளைகளோடு அந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்கள், பின்னொரு நாளில் அந்தப் பிள்ளைகளிடம் அதைப் பற்றிப் பேசக்கூடும். இப்படியாக கம்பராமாயணம் இன்னொரு தலைமுறைக்கும் செல்லக்கூடும். பல பத்தாண்டுகளாக சிவக்குமார் ஒரு நடிகராக பெற்றிருக்கும் பயிற்சி, இந்த சொற்பொழிவிற்கு வெகுவாகப் பயன்பட்டதை உணர முடிந்தது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உடல் பாவனைகள், முக வெளிப்பாடுகள், சீற்றங்கள், சிணுங்கள்கள், காலகாலமாக நாமறிந்த சிவக்குமாரின் குரல் ஆளுமை - இவையெல்லாம் சேர்ந்து மகுடி ஊதிய ஒரு மாலையில், பாம்பாக படமெடுத்து நின்றது பார்வையாளர்களின் கவனம். தலைக்கு மேல கையுயர்த்தி கும்பிட்டு சிவக்குமார் தனது உரையை முடித்ததும் அங்கிருந்த அத்தனை பேரும் 5 நிமிடத்திற்கும் மேல் தொடர்ந்து கை தட்டினார்கள். அது - நான் இதுவரை பார்த்த சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் வேறு எந்த இலக்கியவாதிக்கும் கிடைக்காத பெரிய மரியாதை.

கம்பன் உயிரோடு இருந்திருந்தால் ஓடி வந்து சிவக்குமாரைக் கட்டிக் கொண்டு இந்த உரைக்காக நன்றி சொல்லியிருக்கக் கூடும். கம்பன் - சிங்கப்பூர் மக்களின் கரங்களில் நின்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தான். மொத்தத்தில், இந்த நிகழ்ச்சி, சிவக்குமார் என்ற மனிதரைப் பற்றி சிங்கப்பூர் மக்கள் மனதில் இருந்த நல்ல பிம்பத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. சிவக்குமார் பேசிய பொழுதெல்லாம் அவருக்குள் இருக்கும் நடிகனும் அவரறியாமல் அவருடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். போதும் வண்ணத்திரை, போதும் சின்னத்திரை என்று முடிவெடுப்பதற்கும், அந்த முடிவில் உறுதியாக நிற்பதற்கும் திடமனதும், ஒழுங்கும் வேண்டும் - அதை சிவக்குமாரிடம் காண்கிறோம். ஒரு ஓவியராக, இலக்கியவாதியாக தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருக்கும் சிவக்குமாரிடம் அளவற்ற அர்ப்பணிப்பையும், தெளிவையும் கூடவே காண்கிறோம். திட்டமிட்டு செயல்படுவதற்கும், அதில் ஒழுங்கை தொடர்ந்து கடைபிடிப்பதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது சிவக்குமாரிடம்!

Sunday, December 28, 2008

30 வெள்ளிக்கு வாங்கினால் 130 வெள்ளிக்குப் பேசலாம் - இது தொலைபேசும் காலம்! (நாலு வார்த்தை-028)

பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் சிங்கப்பூரிலிருந்து இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணம் மிக அதிகம். அந்த நாடுகளில் இருந்து வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்தவர்களுக்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை சொந்த பந்தங்களை அழைத்துப் பேசுவதே மிகுந்த செலவளிக்கும் விஷயமாக இருந்தது. பொரும்பாலானவர்கள் பொதுத் தொலைபேசிகளைத்தான் அதற்காகப் பயன்படுத்தி வந்தார்கள். என்ன கட்டணமாக இருந்தாலும் பரவாயில்லை, பாசத்திற்குரியவர்களின் குரலை கேட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில், மாதச் சம்பளத்தில் 20 - 30 சதவீதத்தை அதற்காக செலவு செய்தவர்களும் உண்டு. அதில் அடியேனும் ஒருவன். இப்போது நிலமை மாறி விட்டது.இன்று ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தொலைபேசியாவது இருக்கிறது. நமது தேவையைப் பொறுத்து, ரசனையைப் பொறுத்து, கைத் தொலைபேசிகளும் வித விதமான வடிவங்களில், வசதிகளில் கிடைக்கின்றன. அலுவலகங்களில், வீதிகளில், பேருந்துகளில், எம்.ஆர்.டிகளில் என்று எப்போதும் கைத்தொலைபேசியோடுதான் வாழ்க்கை நடக்கிறது. ஒரே வீட்டில் வேறு வேறு அறைகளில் இருப்பவர்கள் கூட கைத் தொலைபேசியில் பேசிக் கொள்ளக் கூடிய நிலமை கூட இருக்கிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் தொலைதொடர்புத்துறையில் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியும், அதன் காரணமாகக் குறைந்திருக்கும் தொலைதொடர்புக் கட்டணங்களும்தான்.

சிங்கப்பூரில், முன்பு சிங்டெல் நிறுவனம் மட்டுமே களத்தில் இருந்தது. இன்றோ ஸ்டார்ஹப், M1 போன்ற நிறுவனங்களும் அதற்குப் போட்டியாகக் களத்தில் இருக்கின்றன. சலுகைகளை அள்ளித் தெளித்து அவர்கள் அறிவிக்கும் புதுப் புதுத் திட்டங்களால், அதனால் குறைந்து கொண்டிருக்கும் கட்டணங்களால், வாடிக்கையாளருக்குத்தான் கொண்டாட்டம். அதா, இதா? எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் சராசரி வாடிக்கையாளர். தொலைதொடர்பு நிறுவனங்களுக்குள் நிலவும் ஆரோக்கியமான போட்டியால், ரொம்ப தூரத்தில் இருந்த நாடுகளும், ஊர்களும், சொந்தங்களும் குறைந்த செலவில் காதுக்கு மிக அருகில் வந்து விட்டன.வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் இந்த நிறுவனங்கள் விளம்பரங்கள் உட்பட புதுப்புது யுக்திகளைக் கையாளுகின்றன. இந்த நிறுவனங்களின் தயவில் தமிழகத்தின் திரை நட்சத்திரங்கள் சிங்கப்பூரிலுள்ள இந்திய ஊழியர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருகிறார்கள். தூரத்து நட்சத்திரங்களை, நிலா மாதிரி மிக அருகில் பார்ப்பதில் அவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.தினந்தோறும் வெளிநாட்டுத் தொலைபேசித் தொடர்பைப் பயன்படுத்தும் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். அதன் மூலம் கணிசமாக லாபம் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அந்த ஊழியர்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து முயலுகின்றன.


இப்போது இந்த பெரிய நிறுவனங்களோடு பல சிறிய நிறுவனங்களும் போட்டியில் குதித்து விட்டன. International calling cards என்று அழைக்கப்படும் சர்வதேச அழைப்பு அட்டைகள், call back cards என்று வெகு விலைக் குறைந்த, ஆனால் நீண்ட நேரம் பேசக் கூடிய அழைப்பு அட்டைகள் ஏராளமானவை இப்போது சந்தையில் கிடைக்கின்றன. 8 வெள்ளி கொடுத்து ஒரு அட்டை வாங்கினால் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இந்தியாவிற்குப் பேச முடியும் என்பதால், விவசாயம், பிள்ளைகளின் படிப்பு, குடும்பப் பிரச்சனைகள், கடன் என்று எல்லா விஷயங்களையும் நிதானமாகப் பேச முடிகிறது. பெரிய நிறுவனங்களும் இந்த போட்டியில் புது வியூகம் அமைத்துக் குதித்திருக்கின்றன. 28 வெள்ளிக்கு வாங்கினால் 128 வெள்ளிக்குப் பேசலாம், 30 வெள்ளிக்கு வாங்கி 130 வெள்ளிக்குப் பேசலாம் என்ற சொல்லும் விளம்பரங்களை சிராங்கூன் ரோடு முழுவதும் பார்க்க முடிகிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் அவற்றின் மேல் நடக்கவே முடிகிறது...


புறாக்களின் கால்களில் கடிதங்களைக் கட்டித் தூது விட்டது அந்தக்காலம். இப்போது பாசமுள்ளவர்கள் வளர்க்கவும், மாமிசப் பிரியர்கள் சமைக்கவும் மட்டுமே பயன்படுகிறது புறா. இன்றைய பொழுது, கால ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மற்ற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் முறைகள் நிறையவே மாறி விட்டன. அந்த வகையில் மனித குலத்தை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வதில் தொலைதொடர்புத்துறை பெரிய பங்கு வகிக்கக்கூடும். தேசம் விட்டுத் தேசம் வந்தவர்கள் தமது உறவினர்களோடு குறைந்த தொடர்பு கொள்ள வாய்ப்பளித்திருப்பதன் மூலம் தொலைவை குறைத்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை. சிங்கப்பூரிலிருந்து, சென்னையோ, மதுரையோ - எட்டத் தேவைப்படுவது, இப்போதெல்லாம் சில நொடிகளும், வெகு சில டாலர்களும்தான்!

Saturday, December 27, 2008

ந.வீ.சத்தியமூர்த்தி என்ற கவிதை சிந்துபாத் (நாலுவார்த்தை-27)

புயல் - பலத்த ஆரவாரத்தோடுதான் கடந்து போகிறது. வழியில் அது கழற்றிப் போட்டு விடும் வீடுகள் பல. தென்றல் எப்போதும் மென்மையாகத்தான் வீசுகிறது.... பெரும்பான்மையான நேரங்களில் அதன் இருப்பை நாம் உணர்வதில்லை. சிங்கப்பூர் கவிஞரான ந.வீ.சத்தியமூர்த்தி தென்றல் மாதிரிதான். தனது இருப்பை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை அல்லது மற்றவர்கள் அவரது இருப்பை உணர்வதில்லை. ஆனால், தேவையான நேரங்களில், தேவையானவர்களுக்கு தென்றலாய் வீசிக் கொண்டுதான் இருக்கிறார் அவர் . 50களில் இருக்கும் இந்தக் கவிஞர் பழகுவதெல்லாம் 30க்குக் கீழ் உள்ள இளைஞர்களிடம்தான். தமிழகக் கவிதைகள் நவீனம், பின்நவீனம் என்று நகர்ந்து விட்ட நிலையில், இன்னும் மரபுக் கவிதை, புதுக்கவிதை என்று மாரடித்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ்ச்சுழலில், வடிவங்களைப் பற்றி கவலைப்படாமல் கவிதைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர் ந.வீ.சத்தியமூர்த்தி. அவரது சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு 'தூரத்து மின்னல்'. வழி நெடுக புதுமை வாசனையும், மரபு நெடியும் அடிக்க... நம்மை மயக்குகிறது இந்தக் கவிதைத் தொகுப்பு.

"உண்மையில் / உங்களில் / யாருக்கு உவமையாக்குவேன் / யாரை.. " என்று 'இமை' பற்றிய கவிதைக் கேள்வியோடு வெடிக்கத் துவங்குகின்றன சத்தியமூர்த்தியின் கவிதைகள். கணவன், மனைவியைப் பற்றி பேசும்போதோ சரவெடியாகின்றன. "கணவன் - தொலைபேசியில் / 'அலோ' ஒரு முறையும் / 'சரி' பல முறையும் / திருப்பச் செல்லும் / அப்பாவி அப்பிராணி " என்று முதல் வெடியைக் கொளுத்திப் போட்டு, அதன் வெடிச்சத்தம் அடங்குவதற்குள், "மனைவி - கற்றைக் குழல் முடித்து / சற்றே தலை சாய்த்து... / ஒற்றைப் பார்வையில் / உதறல் தரச் செய்யும்.. / ஒசாமா பின் லேடி." என்று அணுகுண்டை அடுத்து வீசுகிறார். நகைச்சுவை இழையோடும் கவிதைகள் மனதின் வழியாக நினைவை ஆக்கிரமித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. நகைச்சுவை இயல்பாகவே இவரது கவிதை நரம்புகளில் ஓடுகிறது.சத்தியமூர்த்தி என்ற கவிதை விவசாயி நீளமாகவும், பல கவிதைகளில் ஆழமாகவும் உழுதிருக்கிறார்.

"இப்போதெல்லாம் / காலம் கரையக் கரைய... / கனவுகளின் / முகங்களில் கூட / முதுமைச் சுருக்கங்கள்." என்ற ஆழமான பார்வை நம்முள் அதிர்வலையை எழுப்புகின்றன. வயது கூடக் கூட, வயது கூடும் கனவுகள் என்ற நிதர்சனம் அதிர்வலைகளை எழுப்புவது இயல்புதானே? ஒட்டடை அடிப்பவர்கள் இனி வரும் வரிகளைப் படிக்கும்போது, ஒரு நிமிடம் யோசிக்கக் கூடும்.."தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத / விக்கிரமாதித்த சிலந்தி ஒன்று / கதவிடுக்கில் கால் பரப்பி / வாய்க்கரங்களால் / தன் அடுத்த வேளை உணவுக்கு / செய்து கொண்டிருந்தது, / மறுநடவு!" தவறிய தாய்மையை கூண்டிலேற்றி விசாரிக்கும் வழக்கறிஞர் கவிதைகளையும் வாசிக்க முடிகிறது. "இணையப் பக்கம் போனால் அருகமர்ந்து கவனிக்கிறாய் / உற்றுற்றுப் பார்த்தென்னை தாயே / நீயா... மணவிலக்கு கேட்டு மனுப்போட்டாய் அப்பாவுக்கு?" இப்படி மனித உறவுகளை, இயற்கையை, உணர்வுகளை சிக்கிமுக்கி கல்லாகி தீமூட்டிப் பார்க்கின்றன சத்தியமூர்த்தியின் கவிதைக் கரங்கள்.

கவிதையின் வடிவத்தை தீர்மானிப்பவன் கவிஞனல்ல; ஒவ்வொரு கவிதையும் தனக்கான வடிவத்தைத் தானே தீர்மானித்துக் கொள்கிறது. மீறி, தானே தீர்மானிக்க முற்படுபவனின் கவிதைக் குழந்தைகள் சிதைவுற்றுப் பிறக்கின்றன. பூமியை புதிதாக மாற்றி விடும் முனைப்பில் இன்றைய கவிதைகள் பிறப்பதில்லை. அவை, அழுத்ததில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஆயுதமாகவும், விடுபட்ட அழுத்தங்களை வேடிக்க பார்க்கும் களமாகவும் இருக்கின்றன. விட்டு விடுபட்ட கவிதைகளில் கவிஞனின் கடந்த காலம் விழுந்து கிடக்கிறது ; அனுபவங்கள் அடர்ந்து கிடக்கிறது. அவன் அனுபவங்களைப் பதிவாக விட்டுச் செல்ல முனைபடும் தருணங்களாகின்றன கவிதைகள். அழுத தருணங்கள் ; அழகிய தருணங்கள் ; ஆராதித்த தருணங்கள். உண்மையில், கவிதைகளும், வாழ்க்கையும் தருணங்களின் தொகுப்பாகும். முற்றும் என்ற சொல்லை என்றுமே எட்டாத கன்னித்தீவுதான், பேனாமுனை என்கிறார் சத்திய மூர்த்தி என்ற கவிதை சிந்துபாத். எந்தத் தீவிலும் இறங்கிவிடாமல் போய்க் கொண்டே இருக்கட்டும் இவரது எழுத்துக் கப்பல்!

Friday, December 26, 2008

ஆசியாவின் முதல் மில்லியன் டாலர் மேன் - In Golf! (நாலுவார்த்தை-026)

Flying Sikh மில்கா சிங், பழைய மற்றும் புதிய தலைமுறை இந்தியர்களுக்கும் நன்கு அறிமுகமான பெயர். ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மயிரிழையில் பதக்கத்தைத் தவற விட்டவர். அன்று அவர் தவற விட்டது தவற விட்டதுதான். அவருக்கப்புறம் இன்று வரை எந்த இந்தியரும் ஒலிம்பிக்ஸில் அத்லெட்டிக்ஸில் பதக்கம் பெறவேயில்லை. அவருடைய புத்திரர் ஜீவ் மில்கா சிங். அப்பா மாதிரி, வருமானமும், அங்கீகாரமும் இல்லாத அத்லெட்டிக்ஸில் கால் பதிக்காமல், கோல்·பைத் தேர்ந்தெடுத்து இந்தியாவின் பெயரை உலக விளையாட்டு அரங்கில் முன்னெடுத்துச் செல்கிறார். சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் ஒபன் கோல்ப் போட்டியில் வெற்றி பெற்று, முதல்பரிசான 792,500 அமெரிக்க வெள்ளியையையும் தட்டிச் சென்றிருக்கிறார். இந்தப்போட்டியில், உலகப் புகழ்பெற்ற வீரர்களான Ernie Els, Padraig Harrington போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, ஜீவ் வெற்றி பெற்ற விதம் அவரது மனஉறுதிக்குக் கிடைத்த பரிசு. இந்த வெற்றிகளைப் பெற அவர் பல ஆண்டுகாலம் கடுமையாக உழைத்திருக்கிறார். வாழ்க்கையில் எதுதான் எளிதாகக் கிடைக்கிறது?

உலக கோல்·ப் அரங்கில் வெற்றி பெற, மூன்று அடுக்குகளைத் தாண்ட வேண்டிய நிர்பந்தம் ஜீவ் மில்கா சிங்கிற்கு. இந்தியச் சுற்று, ஆசியச் சுற்று, அமெரிக்க தகுதிச் சுற்று என நீண்டது அந்தப் பயணம்.1990களின் துவக்கத்தில் அவர் ஆசிய சுற்று கோல்·ப் போட்டிகளில் விளையாடத் துவங்கியபோது அந்தப் பயணம் மிகத் தனிமையானதாக இருந்தது. உடன் எந்த இந்தியரும் இல்லை. ஏற்க்குறைய எவரெஸ்ட்டை முதல்முறை ஏறும்போது உணரும் தனிமை போன்ற தனிமை அது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெற்ற வெற்றிகள் மட்டுமே அவரது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன. 1999 வரை ஜீவ் பெற்ற வெற்றிகளும் , கிடைத்த வருமானமும் ஏதோ போதுமானதாக இருந்தது. ஆனால், 2000 முதல் 2004 வரை காயங்களும், தன்னம்பிக்கையின்மையும் அவரது விளையாட்டைக் கடுமையாகப் பாதித்தன. 1999-ம் ஆண்டிற்குப் பிறகு, ஏழு ஆண்டுகள் அவரால் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. தொடர்ந்து கடுமையான பயிற்சியும், தன்னம்பிக்கை தரும் புத்தகங்களைப் படித்ததும் அந்த கடுமையான காலகட்டத்தை கடக்க உதவியது என்கிறார் ஜீவ்.


2006-ம் ஆண்டு Volvo China Open-ல் பெற்ற வெற்றியோடு துவங்கியது ஒரு புதுப்பயணம். அந்த வருடம் ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் வெற்றிகளைக் குவித்தார் ஜீவ் மில்கா சிங். 2007-ம் ஆண்டு பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே விளையாடினார், குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார். ஜப்பானும் அவரது பிரியத்திற்குரிய இடமாகியது. அர்ஜூன் அட்வால், ஜோதி ரந்தாவா, ஷிவ் கபூர் போன்ற புதிய தலைமுறை இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடத்துவங்கியதும், அவர்களும் அந்தப் பயணத்தில் ஜீவோடு சேர்ந்து கொண்டதும் அவரது சூழலைச் சற்று சுலபமாக்கியது.


2008 - ஜீவ் மில்கா சிங்கின் வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றிகளைக் கொண்டு வந்த ஆண்டு. ஆஸ்திரியா, ஜப்பானில் பெற்ற வெற்றிகளோடு சிங்கப்பூர் வெற்றியும் சேர்ந்து கொண்டது. சிங்கப்பூரில் பெற்ற வெற்றி Asian Tour's Order of Merit என்ற ஆசியச் சாம்பியன் பட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. ஆசியச் சுற்றுப் போட்டிகளில் ஒரே ஆண்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் சம்பாதித்த முதல் ஆசியர் என்ற பெருமையும் அவருக்குப் போய் சேர்ந்திருக்கிறது. அதோடு இந்த ஆண்டு US PGA Championship-ல் 9தாவது இடத்தைப் பிடித்த பெருமையும் கிடைத்திருக்கிறது. "அடுத்த வருஷம் போட்டிகள் துவங்குவதற்கு முன்னால், எடையைக் குறைக்கணும் பாஸ்..." என்கிறார் ஜீவ். தினமும் ஓடுவதை வழக்கமாக வைத்திருந்த இவர், கால் ஆபரேஷனுக்குப் பிறகு ஓட முடியாமல் போனது. அதை மாற்ற வேண்டுமென்பதை அடுத்த வருட ஆசையாக வைத்திருக்கிறார் ஜீவ் மில்கா சிங். ஓடுங்க பாஸ்... உங்களைப் பின்பற்றி, உங்களுக்குப் பின்னால் ஒரு நூறாயிரம் இந்திய இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!

Thursday, December 25, 2008

தொடர்பற்ற மூன்று விஷயங்களின் தொடர்பு (நாலு வார்த்தை-025)

நேற்று முன்தினம் என் வாழ்வில் மூன்று விஷயங்கள் நிகழ்ந்தன. அவை எந்தவிதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. அவையாவன : 1.BCA Academy-யில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட course-ல் கலந்து கொண்டேன். 2. Singapore Flyer இயந்திரக் கோளாறினால் நின்றுவிட, அதிலிருந்த 173 பேரும் ஆறு மணி நேரத்துக்கு மேல் சிக்கி சிரமப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டேன் 3.சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தில் தீராநதிக்கு அவரளித்த பேட்டியைப் படித்தேன். தொடர்பற்ற இந்த மூன்று விஷயங்களில் இருந்த தொடர்பு நேற்றுதான் மனதில் தைத்தது.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து சிங்கப்பூரில் புதிய கட்டுமானத்துறை வரையறைகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதுபற்றிய 4 நாள் course ஒன்றின் இரண்டாம் நாள் வகுப்பில் நேற்று முந்தினம் கலந்து கொண்டேன். எந்த ஒரு விபத்தும் நமக்கு நிகழாதவரை அது மிகவும் துக்ககரமானது என்ற விஷயம் நமக்கு உரைப்பதில்லை. ஆனால் அத்தகைய விபத்துகளின் வலி எனக்குத் தெரியும். அதை இரண்டு முறை அனுபவித்ததுண்டு. 1992-ம் வருடம் காசிக்குப் பக்கத்திலுள்ளஅன்பாராவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, உடன் பணியாற்றிய நண்பனொருவன் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு உடல் செயலிழந்து போனான். அதே இடத்தில் பணியாற்றிய இன்னொரு நண்பன், சில வருடங்களுக்குப் பிறகு, வேறொரு கட்டுமானப் பணி விபத்தில் உயிரிழந்ததாகக் கேள்விப்பட்டேன். நிகழவே நிகழாது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது நிகழ்ந்து விடுபவைதான் - விபத்துகள்! நேற்று முந்தினம் ஒரு சீன விரிவுரையாளர் confined space பற்றி பாடம் எடுத்தார். காற்றோட்டமற்ற பூட்டிய அறை கூட confined spaceதான் என்றார். அப்போதுதான் பாடம் நடந்து கொண்டிருந்த அறையை உற்றுப் பார்த்தேன். ஜன்னல்களே இல்லாத, False ceiling போடப்பட்ட அறை. ஜன்னல்கள் இல்லை என்பதை அந்த நொடிவரை நான் உணரவில்லை. "இந்த அறையின் கதவைப் பாருங்கள். அது half hour rated fire door" என்றார் விவுரையாளர். அதாவது அந்த அறைக்குள் நெருப்பு ஏற்பட்டால் அது வெளியே பரவாமலும்,வெளியில் ஏற்படும் தீ உள்ளே வராமலும் தடுத்து விடும் சக்தி வாய்ந்தது அந்தக் கதவு.இவை ஏன் என் பார்வையில் பட்டு மனதில் பதியவில்லை? நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களைப் பற்றி நமக்குள் இருக்கும் அலட்சிய மனோபாவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் 'சிங்கப்பூர் ·பிளையரைப்' பற்றிய செய்தியும் வந்து சேர்ந்தது.

சிங்கப்பூர் ·பிளையர் மாலை 4 மணியளவில் திடீரென்று நின்று விட்டதென்றும், அதில் 173 பேர் உள்ளனர் என்றும் சொன்னது வானொலி. சிங்கப்பூர் பெருமை கொள்ளும் கட்டமைப்புகளில் ஒன்று சிங்கப்பூர் ·பிளையர். லண்டனின் புகழ்பெற்ற Londen Eye-யை விடப் பெரியது. இந்த வருடம் மார்ச் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டது. 15 மீட்டர் உயர கட்டிடத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் இந்த giant wheel-ன் சுற்றளவு 150 மீட்டர். 28 பேர் பயணம் செய்யக்கூடிய 28 அறைகள் கொண்டது இந்த ·பிளையர். இந்த அறைகள் capsules வடிவில் இருப்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஒரு சுற்று சுற்றிவர 30 நிமிடம் தேவைப்படும். அதன் உள்ளிருந்து சிங்கப்பூரின் அழகை இரவு விளக்கொளியில் ரசிப்பது அற்புதமான அனுபவமாக அமையக்கூடும்...சீக்கிரமே போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படியொரு கோளாறு. ஏற்கனவே இரண்டு முறை இப்படிப்பட்ட பிரச்சனைகள் நேர்ந்து அவை சீக்கிரமே சரி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த முறை அதிலிருந்தவர்கள் 6 மணி நேரம் அந்த capsulesகளுக்குள் சிக்கிக் கொண்டார்கள். எனக்கு சட்டென்று அந்த capsules-ம் ஒரு confined space-தானே என்று தோன்றியது. அந்த வீல் சுற்றுவதை நிறுத்தி விட்டாலும், ஏ.சி, இண்டர்காம் போன்ற மற்ற சேவைகள் முறையாக செயல்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன. அப்பாடா, தப்பித்தார்கள் மக்கள். இந்த செய்திகளை இணையத்தில் படித்தபடியே சாருநிவேதாவின் இணையப்பக்கத்தில் போய் நின்றேன்.

வலைப்பூவில் சூடாக விவாதிக்கப்படும் மனிதராக சாரு இருப்பதால், ஏன் அந்தச் சூடு என்று அறிந்துகொள்ளும் முகமாக நிகழ்த்தப்பட்ட வருகை அது. சாருவின் எழுத்துக்களை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால், எதையும் முழுமையாக படித்ததில்லை. அவர் எழுத்தின் சுவாராஸ்யம் அதற்குக் காரணமில்லை. ஏதாவது ஒரு கவனச்சிதறல் எப்படியாவது நிகழ்ந்து கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் சாரு சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு வந்திருந்தார். அப்போதும் பார்க்க வாய்க்கவில்லை. ஆனால், சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா அவரைப் பற்றி நல்ல படியாகச் சொன்னார். சாருவின் இணையத்தளத்தில் அவரது பேட்டிகளைத்தான் படித்தேன். தீராநதியின் பேட்டி தீராத சுவாஸ்யத்தோடு நீண்டது. அந்தப் பேட்டியைப் படிக்கும்போது வடிவேலின் 'கைப்புள்ள' கேரக்டர் மனதுக்குள் வந்து வந்து போனதன் காரணம் தெரியலில்லை. அவர் தன்னை ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லியிருந்தார். ஆனால், அவரது பதில்களில் கூடுதல் பட்சம் நேர்மையிருந்ததாகத் தோன்றியது. அவரது தர்க்கங்களில் உண்மையிருக்கிறதோ இல்லையோ, ஒருவித அப்பாவித்தனமும், புத்திசாலித்தனமும் இருப்பதாகவும் தோன்றியது. ஓரிடத்தில் அரண்மனைகளைப் பற்றிச் சொல்லும்போது "அங்கு பல் துலக்கும் இடம் , உப்பரிகை , நீச்சல் குளம் , குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட , இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால் , எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை " என்று எழுதியிருந்தார். அடக் கொடுமையே, வகுப்பறையின் ஜன்னல்களைக் கவனிக்காத மாதிரி, அரண்மனைகளில் இதையும் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது. சட்டென்று யோசனை சிங்கப்பூர் ·பிளையருக்கு மாறியது. அங்கும் அதே பிரச்சனைதானே இருந்திருக்கும்... ஆறு மணிநேரம் என்பது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கும் எவ்வளவு சிரமத்தைத் தந்திருக்கும்...ஒரு capsule-லில் சிக்கிக் கொள்பவர்களின் இயற்கை உபாதைகள் பற்றி எந்த பாதுகாப்பு விதிமுறைகள் கவலைப்பட்டிருக்கப் போகிறது - அந்த விதிமுறையின் பெயர் சாருநிவேதிதா என்று இல்லாத பட்சத்தில்! தொடர்பில்லாத மூன்று விஷயங்களுக்குள் ஏதோ ஒரு தொடர்பு இருக்க முடியும் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவு பதிவு போடாமலே தூங்கி விட்டேன்!

Wednesday, December 24, 2008

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற மாமனிதர் (நாலு வார்த்தை-024)

பல தன்முனைப்புப் புத்தகங்கள். அவை மாற்றியமைத்த பல்லாயிரம் வாழ்க்கைகள். டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை உலகத் தமிழர்கள் இப்படித்தான் அடையாளம் காண்கிறார்கள். அந்தப் புத்தகங்களைப் படிப்பவர்களின் மனதையும், அதன் நீட்சியாக அவர்களது வாழ்வையும் தொடுபவையாக இருந்து வருகின்றன டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எழுத்துக் கரங்கள். ஒரு முறை, "ஊழலை யாரால் ஒழிக்க முடியும்?" என்ற கேள்விக்கு, "அது பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும்" என்று பதிலளித்தார் டாக்டர் அப்துல்கலாம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன் மூலம், அவர்களோடு பெரும்பான்மையான நேரம் தொடர்பிலிருக்கும் இளைய தலைமுறையை மாற்றி அமைக்க முடியும் என்ற பொருள் பதிந்த பதில் அது. எல்லா சமூக மாற்றங்களும் தனிமனிதர்களிடமிருந்தே துவங்குகின்றன என்பதை வலியுறுத்தும் பதிலாகவும் அது அமைந்தது. தனிமனித வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சமூகத்தையும் மாற்றி அமைக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எழுத்துக்கள்.

என் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார் அவர். அந்த மாற்றம் நிகழ்ந்த ஆண்டு 1983. அப்போது நான் தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி ஹாஸ்டலில் தங்கி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். பரிட்சைக்கு பத்து நாட்களுக்கு முன்பு படிக்கத்துவங்கி 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து, வகுப்பின் 10 ரேங்கிற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளும் சராசரி மாணவன். யாரும் புகழவோ, இகழவோ முடியாத பாதுகாப்பான வாழ்க்கையது. அந்த வாழ்க்கையை மாற்றியது...பள்ளி நூலகத்தில் தற்செயலாகப் பார்த்த 'எண்ணங்கள்' என்ற நூல்! அந்த நூல் விவரித்த உலகம் அதுவரை பார்த்திராதது. அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் புதிய உலகிற்கு இட்டுச் சென்றன. அதுவரை படித்திருந்த சரித்திர, சமூக நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது 'எண்ணங்கள்'.

சிறுவயதில் ஒருமுறை பேராசிரியர் அன்பழகனைப் பார்க்க அழைத்துச் சென்றார் என் தந்தை. அப்பாவின் டைரியில் அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்கினேன். அதில் அவர், 'அறிவே அனைத்திற்கும் அடிப்படை' என்று எழுதிக் கையெழுத்திட்டார் . அதுதான் உண்மையென்று நீண்ட நாட்கள் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், 'மனமே அனைத்திற்கும் அடிப்படை' என்று சொன்னது 'எண்ணங்கள்'. மனம் எதை நம்புகிறதோ, எதை ஆசைப்படுகிறதோ அதை அடைந்து விடுகிறது என்ற கருத்து, புதிய எண்ணக் கதவுகளைத் திறந்தது. சின்னச்சின்ன நம்பக்கூடிய சம்பவங்களின் வழி மனதின் மகத்தான சக்தியைப் பற்றி விளக்கி இருந்தார் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி. அவற்றுள், 'உங்கள் லட்சியங்களை எட்டக்கூடியதாக வைத்துக் கொள்ளுங்கள்' என்ற வரியே அதிசய மாற்றங்களை நிகழ்த்தியது. அந்த அறிவுரையை வாழ்க்கையில் செயல்படுத்திப் பார்த்தாலென்ன என்றொரு கேள்வி உள்ளுக்குள் எழுந்தது.

கால் வருடத் தேர்வில் 325 மதிபெண்கள், அரைவருடத் தேர்வில் 350 மதிபெண்கள் என்பது முதல் இலக்கானது. இலக்கை இலக்காக வைத்துப் படித்ததில் அதை விடக் கொஞ்சம் அதிகமாகவே மதிப்பெண் வாங்க முடிந்தது. 3 revision test-களிலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் என்பது அடுத்த இலக்கு. ஒவ்வொன்றிலும் 425க்கு மேலே எட்ட முடிந்தது. இறுதித் தேர்வில் 400 மதிபெண்களுக்கு மேல் என்பதே உச்ச இலக்கு. மற்றவர்கள் என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள், என்ன ரேங்க் வாங்குகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத லாடம் கட்டிய பயணம். இறுதித் தேர்வில் 418 மதிப்பெண்கள் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். பிடித்தது நானல்ல - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள்! நான் அங்கு ஒரு சோதனைக் கருவியாக மட்டுமே இருந்தேன். அந்த வருடமும், அந்த நூலும் என் வாழ்க்கையை முற்றிலும் புதிதாக மாற்றி அமைத்தன.இதே போல், 'தலைவன் ஒரு சிந்தனை', 'பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?', 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்' போன்ற டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களும், அவரது மக்கள் சக்தி இயக்கமும் பல தனி மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சமூகத்தையும் மாற்றி அமைத்தன ; அமைத்துக் கொண்டிருக்கின்றன ; இனி வரும் நூற்றாண்டுகளிலும் மாற்றி அமைக்கும். அதுதான் தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வரமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற மாமனிதரின் மகத்தான சக்தி!

Tuesday, December 23, 2008

தூள் கிளப்பிய "தூள்' - Mega Entertainment Show From Singapore (நாலு வார்த்தை-023)

போன வருடம் விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'தூள்'என்ற சிங்கப்பூர் நடன நிகழ்ச்சியைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். தரமும், துள்ளலும், கவர்ச்சியும் சமவிகிதத்தில் கலந்து படைக்கப்பட்ட அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தமிழகத்தில் உள்ள மற்ற Entertainment showகளுக்கு இணையாக, அல்லது அதற்கும் மேலாகச் கூடச் சொல்லலாம் என்பது என் தாழ்மையானக் கருத்து. 6 கோடித் தமிழகத் தமிழர்களில் இருந்து சிறந்த நடனக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சுலபம். ஆனால், சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய நாட்டில், குறைவான சதவீத இந்தியர்களே உள்ள இடத்திலிருந்து மிகத் தரமான ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தத் தேவைப்படுவது - அளவுக்கு மீறிய உழைப்பு. அந்த உழைப்பைப் போட்டு அப்படிப்பட்ட நிகழ்ச்சியைத் தயாரித்தவர் 'Megastar Productions' என்ற மீடியா நிறுவனத்தை நடத்தி வரும் கலைச்செல்வன். சிங்கப்பூர் மீடியா வட்டாரத்தில் 'கலை' என்ற பெயரில் நன்கு அறிமுகம்.

1995ம் வருடம் முதல் கலை இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதற்கு முன் சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். அங்கு அவர் பெற்ற அனுபவங்கள்தான் சம்மட்டி அடியாக விழுந்து, விழுந்து இவரைச் செதுக்கி இருக்கின்றன. 'சம்மட்டி' என்ற வார்த்தைப் பிரயோகம் ஏனென்றால், அந்த அனுபவங்களை அப்படித்தான் பார்ப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சும்மா politics புகுந்து விளையாடிடும் இல்லெ...அப்படிப்பட்ட அனுபவங்களே இவரைப் புடம் போட்டிருக்கின்றன. இன்று தொலைக்காட்சியில் பெரிதாகப் பெயர் பதித்திருந்தாலும், மனதளவில் தன்னை ஒரு ரேடியோக்காரனாகத்தான் பார்ப்பதாக 1998ல் குறிப்பிட்டிருந்தார். "வானொலியில் பத்து காசு செலவில்லாமல் ஒரு தனிமனிதனால் பிரமாதமான நிகழ்ச்சியைத் தயாரித்து விட முடியும், ஆனால், தொலைக்காட்சியில் அது சாத்தியமில்லை." என்ற காரணத்தை முன் வைக்கிறார். "என்னுடைய மூலதனம் - மிருகத்தனமான உழைப்பு." என்கிறார். 'கலைகிட்டப் போனா அப்படியே பிழிஞ்சு எடுத்துடுவார்.' என்று சிங்கப்பூர் கலைஞர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். He is a perfectionist என்றும் சிலர் சொல்கிறார்கள்.

Think Big எனபது வெற்றியாளர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'என்று அதையே திருவள்ளுவர் தமிழில் சொல்லியிருக்கிறார். கலைச்செல்வன் தயாரிக்கும் தமிழ் நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் ஆங்கில, சீன, மலாய் நிகழ்ச்சிகளுக்குக் கூட முன்னுதாரணமாக அமைந்து விடுகின்றன. "நான் இருநூறு சதவீதம் முயற்சி செய்கிறேன். அப்படியே தோற்றுப் போனால் கூட அறுபது சதவீத மதிப்பெண் கட்டாயம் கிடைக்கும்"என்ற இவரது அணுகுமுறையே அந்த வெற்றிகளுக்குக் காரணம். தற்போது இவரது மெகாஸ்டார் நிறுவனம் ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு, கார்பரேட் வீடியோஸ், மொழிபெயர்ப்பு, மேடை நிகழ்ச்சிகள் எனப் பலவற்றிலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 2008ம் வருட தூள் நடன நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக இருந்தது. இறுதி நிகழ்ச்சிக்கு நடிகை சங்கீதா அழகாக சேலை கட்டி நடுவராக வந்திருந்தார். நிகழ்ச்சியின் பிரமாண்டம் அவரை பிரமிக்க வைத்ததை உணர்ந்தேன். 'ஜோடி நம்பர் 1'ல் கலகலப்பவர், சிங்கப்பூரில் கலகலத்துப்போய் காணப்பட்டார். வாய்ப்புக்கு அழுத்தமாக நன்றி கூறினார். அவரது பிரமிப்பு - கலைச்செல்வனுக்குக் கிடைத்த வெற்றி என்று தோன்றியது.

தற்போது வசந்தம் தொலைக்காட்சியில்'ஒலி,ஒளி' 'இது நம்ம கதை' 'உடலும் உள்ளமும்' 'அரங்கத்தில் இன்று' 'சுட்டீஸ் கிளப்' 'ஹலோ வசந்தம்' என்று 6 நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் கலைச்செல்வன். 'சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்ற டயலாக் கேட்க நன்றாக இருக்கலாம்; ஆறும், நூறு சதவீத முனைப்போடுதான் தயாரிக்கப் படுகிறது என்பதைப் பார்வையாளர்களை உணர வைக்கத் தேவைப்படுவது - மிருகத்தனமான உழைப்பு. அது - கலைச்செல்வனுக்குக் கைவந்த கலை.

Sunday, December 21, 2008

ஒலி 96.8 என்ற தமிழ்த் தோழன் (நாலு வார்த்தை-022)

சிங்கப்பூர் வானொலி, 'ஒலி 96.8'-ன் நேயர்களின் மனதுக்கு மிகப் பிரியமான படைப்பாளர் குமாரி விமலா சமீபத்தில் திருமதி.விமலாவாக ஆகிவிட்டார். சிம்ரன் மற்றும் ஜோதிகா திருமணம் செய்துகொண்ட பொழுது தமிழக இளைஞர்கள் எப்படித் தவித்துப் போனார்களோ, அதற்கு சற்றேறக்குறைய சமமான அளவில் சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களும் இந்தத் திருமணத்தால் தவித்துப் போனார்கள். அவர்கள் மனதில் ஊதி, ஊதி பெருத்துக் கொண்டிருந்த கனவு பலூன் படாரென்ற சத்தத்தோடு வெடித்து விட்டது. ஏனோ தெரிவதில்லை, சில ஆண்கள் அல்லது சில பெண்களின் திருமணம், சில ஆண்கள் மற்றும் சில பெண்களின் மனதுக்குள் விவரிக்க முடியாத சோகத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அடர்ந்த சோகத்திலும் 'அம்மா விமலா...நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்மா...நல்லா இருக்கணும்' என்று செவாலியர் சிவாஜி மாதிரி அந்த இளைஞர்கள் மொத்தமாக வாழ்த்தியது, விமலாவின் பிரபலத்தைச் சுட்டுகிறது; அவர் மீது சிங்கப்பூர் நேயர்கள் கொண்டுள்ள அபிமானத்தைக் காட்டுகிறது. விமலா, சிங்கப்பூர் வானொலி மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் மக்களுக்கிடையில் உள்ள காலகால நெருக்கத்தின் சமீபத்திய அடையாளம். 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் ஒலி 96.8, மக்களின் வாழ்வின் முக்கிய தருணங்களில் ஏதேனும் சிலவற்றில் இடம் பிடித்திருக்கிறது.

சிங்கப்பூர் பற்றிய எனது முதல் ஞாபகத்திலும் ஒலி 96.8-ற்கு முக்கிய இடம் உண்டு. ஒரு 1995ம் வருடத்திய இருட்டில் நான் முதல்முதலாக சிங்கப்பூர் மண்ணில் கால் பதித்தபோது, என்னை தாமான் ஜூரோங்கில் உள்ள குடியிருப்பிற்கு அழைத்துச் செல்ல, கம்பேனிக் கார் காத்திருந்தது. அகன்ற சாலைகள், அதை இரண்டாகப் பிரிக்கும் இரும்புத் தடுப்புகள், அழகான ஒழுங்குபடுத்தப்பட்ட மரங்கள், தலைமுடி வெட்டப்பட்ட செடிகள், உயர்ந்த விளக்குக் கம்பங்கள், அதிலிருந்த வடித்து சாலையை நிறைத்துக் கொண்டிருந்த மஞ்சள் வெளிச்சம், முதுகு முழுக்க சிவப்பு விளக்குகளோடு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள்... நிஜமாக நான் பட்டிக்காட்டான், ஆ..வென்று வாய் பிளந்து பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்திருப்பேன்? வானத்தில் மிதந்து கொண்டிருந்த என்னை பூமிக்குக் கொண்டுவந்தது சிங்கப்பூர் வானொலிதான். காருக்குள் ஏதோ ஒரு திரைப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த இசை, ஸ்டீரியோ எ·பெக்டில் காருக்குள் பரவி என்னுள் நுழைகிறது. அந்த காரில் தூவப்பட்டிருந்த நறுமணம் புலன்களில் சிலிர்க்கிறது...வெளியே ஒரு சொர்க்க பூமி...உள்ளே ஒரு இசை சிம்மாசனம்...ஒரு அரசன் மாதிரி நவீன ரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இரவு, பல ஆயிரம் பயணங்களைக் கடந்தும் மனசிலிருக்க, சிங்கப்பூர் வானொலி முக்கிய காரணம். இப்படி சில முக்கியமான தருணங்களை ஒவ்வொரு சிங்கப்பூர் தமிழரின் வாழ்க்கையிலும் தந்திருக்கிறது ஒலி 96.8.

சிறிது காலத்திற்கு முன்புவரை அழகிய பாண்டியன் அதன் தலைவராக இருந்தார். அவரே படைத்த 'வானம் வசப்படுமே' என்ற, சாதனை மனிதர்களைப் பற்றிய தன்முனைப்புத் தொடர், பலரையும் வலுவாகச் சென்று சேர்ந்தது. பின்னர் புத்தக வடிவிலும் வெளிவந்தது. ஒலி 96.8 தற்போது தீபன் மற்றும் கீதாவின் வழிகாட்டலில் வெற்றி நடைபோடுகிறது. பழைய, புதிய முகங்கள் கலந்த கலவையாக இருப்பதே ஒலி 96.8ன் பலம். நிகழ்ச்சிகள் பிரிவு, செய்திப் பிரிவு என்று இரண்டு பிரிவாக இயங்குகிறது ஒலி. நிகழ்ச்சிகள் பிரிவில் தீபன், பாலா, ரெ.சோமசுந்தரம், பிரேமா, மீனாட்சி சபாபதி, பாமா, ர·பி போன்ற முதல் தலைமுறையும், திருச்செல்வி, விமலா, விஜயா என்ற அடுத்த தலைமுறையும் கலந்து, சமூக அக்கறையும், பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்த சுவையான நிகழ்ச்சிகளைப் படைக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளில் மீனாட்சி சபாபதியின் தமிழுணர்வு பளிச்சென்று வெளிப்படுவதை நேயர்கள் உணர்வதுண்டு. செய்திகள் பிரிவில் செ.பா.பன்னீர் செல்வம், எஸ்.பீட்டர், பொன்.மகாலிங்கம் போன்றோர் சபா.முத்து நடராஜனோடு சேர்ந்து இயங்குகிறார்கள்.

சமையல் செய்தபடி வானொலி கேட்கும் பெண்களும், காரோட்டியபடி வானொலி கேட்போரும், வேலையிடத்தில் வானொலியின் இசைப் பின்னணியில் பணியாற்றுவோரும் ஒலி 96.8ன் நிரந்தர நேயர்கள். மகாபாரத்தை வானொலி நாடகமாக்கிய பெருமையும் 'ஒலி'க்கு உண்டு. பலவருடங்களுக்கு முன் ஒலிபரப்பான மகாபாரதம் இப்போது மறு ஒலிபரப்பாகிறது. Curise பயணம், ஆஸ்திரேலியப் பயணம் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் நேயர்களோடு அணுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது ஒலி. அது புதிய தலைமுறை படைப்பாளர்களைத் தொடர்ந்து உருவாக்கி வரும் விதம் எதிர்காலம் பற்றி நம்பிக்கையளிக்கிறது. தமிழை சிங்கப்பூர் இளையர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஒலி 96.8ன் பங்கு மிக, மிக முக்கியமானதாகும். "வெறும் சொற்களோடுதான் வேலை செய்கிறோம் என்று சில சமயம் அலுப்பு ஏற்படும். ஆறுதல் தருவது - எல்லாம் முடிந்த பிறகு சொல் மட்டுமே மிஞ்சும் என்று சர்ச்சில் சொன்ன சொல்!" என்று தன்னைப் பற்றிய குறிப்பில், ஒலி 96.8ன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் இந்திரஜித் (தற்போது அவர் ஒலி 96.8லிருந்து வெளியாகி விட்டார்). உண்மையில் ஒலி 96.8 என்பது வெறும் சொல் மட்டுமல்ல, சிங்கப்பூர்த் தமிழர்தம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம்.

ஒலி 96.8ன் இணையப் பக்க முகவரி :
http://www.oli.sg/

விமலாவின் வலைப்பூ முகவரி :
http://davimcicode.blogspot.com/

சிங்கப்பூர் கவிமாலையும், கவிச்சோலையும் (நாலு வார்த்தை-021)

நடிகர் சிவக்குமார் சிங்கப்பூர் வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கண்ணதாசன் விழாவும் ஒன்று. சின்ன நாடான சிங்கப்பூரில் பல தமிழ் அமைப்புகள் இருக்கின்றன. 30க்கும் மேல் என்று சொல்கிறார்கள். அவற்றில் சில மட்டும்தான் இடைவிடாது இயங்குகின்றன. மற்றவை சில தனிமனிதர்களுக்கு விசிட்டுங் கார்டாக மட்டுமே பயன்படுகின்றன. இடைவிடாது தொடர்ந்து இயங்கும் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளில் முக்கியமானது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம். கவிஞரேறு அமலதாசனால் வலுவூட்டப்பட்டு, தற்போது நா.ஆண்டியப்பன் தலைமையில் சீராக இயங்கி வருகிறது. அவர்கள் வருடம்தோறும் கண்ணதாசன் விழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொரு வருடமும் யாராவது ஒரு தமிழக வி.ஐ.பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். போன வருடம் எஸ்.பி.முத்துராமன் வந்திருந்தார். இந்த வருடம் நடிகர் சிவக்குமார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் கவிச்சோலை என்ற நிகழ்ச்சியை பெக் கியோ சமூக மன்றத்தோடு இணைந்து நடத்தி வருகிறது. கவிச்சோலையில் கவிதையைப் பற்றி பேசுவார்கள். கலந்து கொள்ளும் கவிஞர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தலைப்பில் கவிதை எழுதி வந்திருப்பார்கள். அதில் சிறந்த 3 கவிதைகளுக்கு தலா 30 வெள்ளி பரிசு வழங்கப்படும். இதோடு, இலக்கண வகுப்பும் நடக்கிறது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தோடு எனக்கு கடந்த 12 வருடங்களாக பரிட்சயமுண்டு. அந்த 12 ஆண்டுகளின் துவக்கத்தில் கவிஞரேறு அமலதாசன் தலைவராக இருந்தார்.(கவிஞரேறு அமலதாசனின் பல படங்களில் சில மேலே) மிக எளிமையான மனிதர். தமிழ் மேலும், தமிழினம் மேலும் மனமார்ந்த ஈடுபாடு உள்ளவர். தமிழைப் பற்றியும், தமிழினம் பற்றியும் பேசும்போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். அந்த நேரங்களில் அவர் கண்கலங்கி நிற்பதை பலமுறை பார்த்ததுண்டு. சிங்கப்பூர் தமிழினத் தந்தை என்று குறிப்பிடத்தக்க தமிழவேள் கோ.சாரங்கபாணி மேல் உள்ள அபிமானத்தில், அவரைப் பற்றி ஒரு கவிதை நூலை எழுதியுள்ளார். செயலாளராக இருந்த நா.ஆண்டியப்பன் தலையெடுத்ததும், தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, தற்போது ஆலோசகராக இருக்கிறார். எனது 'அலையில் பார்த்த முகம்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கையால் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு வழங்க வைத்தேன். தன்னலமற்ற ஒரு தமிழ்ச் சேவையாளருக்கு அது மட்டுமே என்னால் முடிந்தது. இன்று- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனக்கென்று சில வரையறைகளை வைத்துக் கொண்டு, அந்த வரையறைக்குள் சிறப்பாக இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட அதற்கு அரசாங்கத்தால் 25,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தால் இன்னும் நிறையவே செய்ய முடியும் என்பது பல வெளிப் பார்வையாளர்களின் கருத்து.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ ஒரு காலத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். திண்டுக்கல் லியோனி குழுவினரை மிகப் பிரபலமடையச் செய்த சிங்கப்பூர் பட்டிமன்றத்தை தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்தபோது, நிகழ்ச்சி அறிவிப்பாளராக செயல்பட்டவர் அவர். அவரோடு நட்பு ஏற்பட்ட நிலையில், பிச்சினிக்காடு இளங்கோவின் 'வியர்வைத் தாவரங்கள்' கவிதைத் தொகுப்பை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் வெளியிட ஏற்பாடு செய்தேன் (1999 என்று ஞாபகம்). எனது நண்பர் பாலகோபாலன் நம்பியார் கோலாலம்பூரில் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அந்த வெளியீட்டிற்கு அமலதாசன், நா.ஆண்டியப்பன், சுப.அருணாச்சலம், இளங்கோ, நான் என ஒரு பெரிய குழுவாகப் போயிருந்தோம். அற்புதமான சில நாட்கள் அவை. வெளியீடும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால், பிச்சினிக்காடு இளங்கோ மெல்ல மெல்ல எழுத்தாளர் கழக நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டார். அதற்கான காரணங்கள் இன்றுவரை சரியாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயம் பற்றியும் தனக்குத் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர் பிச்சினிகாடு இளங்கோ. அதுவா காரணம் என்றும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பிரிவு தமிழுக்கு லாபமாக அமைந்தது.

அந்தப் பிரிவிற்குப் பிறகுதான், பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்தோடு சேர்ந்து 'கவிமாலை' நிகழ்ச்சியை நடத்தத் துவங்கினார். அவரது நட்பார்ந்த அணுகுமுறை பலரையும் அந்த நிகழ்விற்கு இழுத்தது. 'காதலில் விழுந்தேன்' படத்தில் 'உன் தலைமுடி உதிர்வதைக் கூட' என்ற பாடலை எழுதிய நெப்போலியன் உட்பட பல கவிஞர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது கவிமாலை. வாசித்த, நேசித்த கவிதைகளைப் பற்றிய பகிர்வு, போட்டிக் கவிதை, சிறப்புச் சொற்பொழிவு என்று தமிழ் மணக்கும் மாலையாக அமைந்தது கவிமாலை. வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் நானும் அதில் கலந்து கொள்வது வழக்கம். கவிமாலையின் வெற்றி, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கவிச்சோலைக்கு வழிவகுத்தது. கவிஞர்களுக்கு கவிமாலை, கவிச்சோலை என்ற இரண்டு குதிரைகளில் பயணம் செய்யும் வாய்ப்பு. ஓவ்வொரு மாத முதல்வார ஞாயிற்றுக்கிழமையில் கவிச்சோலையும், கடைசிவார சனிக்கிழமையிம் கவிமாலையும் நடந்து வருகின்றன. தற்போது பிச்சினிக்காடு இளங்கோ பணிநிமித்தம் சென்னைக்கு சென்று விட்ட நிலையில், கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தி போன்றவர்கள் அதை உயிர்ப்புடன் இயக்கி வருகிறார்கள். கவிமாலை தற்போது ஜலான் பஸார் சமூக மன்றத்தின் ஆதரவுடன் நடப்பதையும் குறிப்பிட வேண்டும். சமீபத்தில் தனது 100வது நிகழ்வை நடத்திய கவிமாலை அமைப்பு 'கூடி வாழ்த்தும் குயில்கள்' என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டது. மொத்தத்தில், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலை துடிப்புடன் வைத்திருப்பதில் கவிமாலையும், கவிச்சோலையும் பெரும் பங்காற்றுகின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

Friday, December 19, 2008

ஒரு செப்டம்பர் மாத காலையும், சில்க் ஸ்மிதாவும் (நாலு வார்த்தை-020)



1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆள்த்துகிறது. எனக்குள்ளும் அந்த அதிர்ச்சி பரவியது. எதிர்பாராமல் நிகழும் மரணங்கள் வாழ்க்கையின் நிலையின்மை குறித்தும், இருப்பு குறித்தும், முன்னுரிமை தர வேண்டிய செயல்கள் குறித்தும் மறுபார்வை செய்யத் தூண்டும் வலுவுள்ளவை. அந்த மரணங்கள் நம் பிரியத்திற்குள்ளவர்களுடையதாக அல்லது அபிமானத்திற்குள்ளதாக அமையும்போது அந்தத் தாக்கம் நீண்ட வடுக்களை விட்டுச் செல்கின்றன. 'சில்க் ஸ்மிதாவுடன் ஒரு கற்பனைப் பேட்டி' என்ற எனது கவிதைப் பதிவின் மீதான நண்பர் ஷானவாஸின் பின்னூட்டம், அந்த செப்டம்பர் மாதக் காலையை மீண்டும் ஞாபகப்படுத்தியது. ஒரு கவர்ச்சி நடனக்காரி என்ற அடையாளத்தையும் மீறி, சில்க் ஸ்மிதா பலரையும் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கிறோம். பெண்களும் அவரது அபிமானிகளாக இருப்பது ஆச்சரியத்தையும், அதற்கு என்ன காரணம் என்ற துணைக் கேள்வியையும் எழுப்புகிறது. விதவிதமான பிம்பங்களை சில்க் வெவ்வேறு மனிதர்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார். என்னுள் இருந்த சில பிம்பங்கள் ஒரு கவிதையாக வெடித்தது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இப்படி அமைந்தன...

/பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது? பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு./ /இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி.... பச்சையாக சொல்வதென்றால், பரிதாபத்திற்குரியவர்கள்!/ /கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன? ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று./ /இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா? உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்./ /ஏன்? அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது./ /எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா? இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது!/ இவையெல்லாம் சில்க்கைப் பற்றி நானாக அவதானித்துக் கொண்ட பிம்பங்களின் பிரதிபலிப்புகள். விரும்பியோ, விரும்பாமலோ, அடுத்தவரின் தனிவாழ்க்கை, அந்தரங்கம் பற்றி நமக்குள் சில தீர்மானங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த அடுத்தவர், ஒரு பிரபலப் புள்ளியாக இருந்துவிட்டால், அவரது அந்தரங்கத்தை ஆடையுரித்து நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்து விடும் வேலையைச் செய்து விடுகின்றன ஊடகங்கள். சமீபத்திய தீவிரவாதம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் அத்துமீறி நுழைவதுகூட தீவிரவாத மனோபாவத்தின் இன்னொரு முகம் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியென்றால், நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தில் சதா மூக்கை நுழைக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளையும், சக ஊடகங்களையும் எப்படி வகைப்படுத்துவது?

பத்திரிக்கை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர் சில்க் ஸ்மிதா. தொடர்ந்து நிகழ்த்தப் பட்ட சிதைவுகளின் மொத்த விளைவாக முடிந்தது சாலிகிராமத்தின் 1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. அந்தநாள் வருவதற்குள்...ஆந்திர மாநிலத்தின் இளிரு கிராமத்தில் பிறந்து, வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவாக உருவெடுத்த விஜயலக்ஷ்மி ஒரு நெடிய பயணத்தை முடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் சிலநூறு படங்களை நடித்து விட்டார். எல்லாப் படங்களும் அவரது கவர்ச்சியை முதலீடாக எடுத்துக் கொண்டாலும், சில படங்கள் நடிக்கவும் வாய்ப்பளித்தன. மூன்று முகம், மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் சில்க் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களை பலரும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். மூன்றாம் பிறையும், பொன்மேனி உருகுதே பாடலும் தமிழ்த் திரையுலகின் அழியாத சித்திரங்கள். மலையாளத் திரையுலகமும் சில்கிற்கு கவர்ச்சியும், நடிப்பும் சமஅளவில் கலந்த பாத்திரங்களை வழங்கியது. ஒரு பதின்ம வயது இளைஞன், தன்னை விட வயதுகூடிய பெண்களை விரும்பும் கதையம்சம் கொண்ட 'லயனம்' என்ற மலையாளப் படம் கேரளாவில் பெறு வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்குப்பின் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் வசூலை அள்ளியது. அந்த வெற்றிக்கு ஆதாரமாக இருந்தது சில்கின் கவர்ச்சி. ஆனால், அந்தப்படத்தில் நடிந்த சில்க், அபிலாஷா, நந்து என்ற மூன்று நடிகர்களும் தற்கொலை செய்து கொண்ட துர்நிகழ்வை என்னவென்று சொல்வது?

சில்க் ஸ்மிதாவை தற்கொலைக்குத் தூண்டிய விஷயம் எதுவாகவும் இருக்கலாம்...அதைபற்றி ஊடகங்கள் போதுமான அளவில் அலசி ஆராய்ந்து விட்டன. அந்த அலசல்கள் திருப்பித் தரப் போவது எதுவுமில்லை - சில்க் மீதான ஞாபகங்களைத் தவிர. தமிழ்த் திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடம் இன்றும்கூட நிரப்பப்படாத நிலையில், இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால்...என்ற யோசனை சில விநோத விடைகளைத் தருகிறது. அந்த 48 வயது சில்க் ஸ்மிதா ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மாறி, ரஜினி கால்ஷீட்டிற்காக காத்திருக்கக் கூடும் அல்லது சின்னத் திரையில் ராடான் போன்றதொரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கக் கூடும் அல்லது இன்னும் கூட கவர்ச்சி நடிகையாகவே வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடும்... இப்படிப் பல கூடும்களுக்கு வழிவிடும் யூகம் இது. அடப் பாவமே...இருந்திருக்கலாமே என்று நினைக்க வைக்கும் யூகங்கள். சரிதானே, இருந்திருக்கலாமே ஸ்மிதா...

உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்! (நாலு வார்த்தை-019)



1981ம் வருடம். அப்போது திரு.குணாளனுக்கு வயது 39. அந்த வயதில் 400 மீட்டர் தொலைவை ஓடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 48.8 விநாடிகள் மட்டும்தான். நம்ப முடிகிறதா? குணாளன், 1968-ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிப்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 விநாடிகளில் ஓடி முடித்தவர். 33 ஆண்டுகள் அது சிங்கப்பூரின் தேசியச் சாதனையாக நிலைத்து நின்றது. சிங்கப்பூரின் தடகள சரித்திரத்தில் அவருக்கு ஒரு legendary place இருக்கிறது. தடகளத்தில் மட்டுமல்ல ; தனி வாழ்விலும் ஒரு சாதனையாளராக இருக்கிறார். இன்னும் சாதியே ஒழிந்திராத தமிழ்ச்சமூகத்தில் பிறந்த அவர், தனது மனைவியாகத் தேர்ந்தெடுத்தது ஒரு சீனப் பெண்ணை. இன்று - அவரது பெண் குழந்தைகளும், ஆஸ்திரேலியர் போன்ற வெளி நாட்டினரை மணந்து கொண்டிருக்கிறார்கள். 'நான் ஒரு சர்வதேசப் பிரஜை' என்று சிரித்தபடி சொல்கிறார் குணாளன். எத்தனையோ சாதனைகளுக்குப் பின்னும் அவரிடம் கர்வம் துளிகூட ஒட்டவில்லை. பணிவும் சிரிப்பும் அவருடன் பிறந்தவையோ என்று எண்ண வைக்கும் எளிமையோடு இருக்கிறார்.

பல பெரிய சாதனையாளர்களைப் போல், குணாளனது திறமையும் தற்செயலாகத்தான் அடையாளம் காணப்பட்டது. 17 வயதுவரை எதிர்காலம் என்னவென்று தெரியாத சராசரி மாணவர் அவர். படிப்பு அவருக்குப் பிடிக்கவில்லை.பறக்கும் பட்டாம்பூச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடுவதும், மரங்களில் ஏறி பழங்கள் பறிப்பதும், எந்த இலக்கும் இன்றி சுற்றித் திரிவதும், தனிமையில் இருப்பதுமே அவருக்குப் பிடித்தது. அப்படி, இப்படி என்று ஒரு வழியாகப் படிப்பை முடித்து, 1961 முதல் ஆசிரியராகப் பணியாற்றத்துவங்கினார். பள்ளி முடிந்தததும், அங்கு மற்ற ஆசிரியர்களோடு அவர் கால்பந்து விளையாடுவது வழக்கம். அப்படி கால்பந்து விளையாடும்போது, ஒருநாள் தற்செயலாக குணாளனைப் பார்த்தார் சிங்கப்பூர் தடகளக் கோச்சான, டான் யெங் யோங். ' இந்த இளைஞன் ஓடும் விதம் அசாதாரணமாக இருக்கிறதே' என்று அவருக்குத் தோன்றியது. குணாளனிடம் பேசினார்; தன்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொன்னார். 'இந்த வயதிலா..' என்ற குணாளனின் சிறு தயக்கத்திற்குப் பின், பயிற்சி துவங்கியது. இப்படியாக. தனது 21வது வயதில் ஓட்டப்பந்தய வீரராக வளர்சிதை மாற்றம் கண்டார் அவர். துவக்கத்தில், முறையான spikes கூட அவரிடம் கிடையாதாம். நண்பர்கள்தான் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு ஒரு spike shoeவை வாங்கித் தந்தார்கள். 5 மாதப் பயிற்சியிலேயே 100, 200, 400 மீட்டர்களை சாதனை நேரங்களில் ஓடத் துவங்கினார் குணாளன்.

சர்வதேச அரங்கிலும் அவர் மேல் வெளிச்சம் விழத்துவங்கியது. வருடங்களின் ஓட்டத்தில், பல சிங்கப்பூர் மற்றும் ஆசியான் (ASEAN) ஓட்டச் சாதனைகள் அவரால் மாற்றி எழுதப்பட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் உச்ச வருடங்கள் சில உண்டு. குணாளனைப் பொறுத்தவரை, 1960களின் மத்தியில், தனது ஓட்டத்திறனின் உச்சத்திலிருந்தார். அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றில், 2 நிகழ்வுகள் முக்கியமானவை. முதல் நிகழ்வு - 1966ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்று. தங்கப் பதக்கத்தை வெல்லப் போவது யார்? சிங்கப்பூரின் குணாளனா, அல்லது மலேசியாவின் மணி ஜெகதீசனா? ஒட்டு மொத்த ஆசியாவே ஆர்வத்தோடு உற்றுப் பார்த்தது. Photo Finish-ல் மணி ஜெகதீசனுக்குத் தங்கம் போனது. அந்த Photo Finishஐத் தனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறார் குணாளன். அதைக் காட்டிப் பேசும்போது அவரது குரலில் ஒரு மெல்லிய சோகம் ஒலிப்பதை உணர முடிந்தது. இரண்டாம் நிகழ்வு - 1968ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிம்பிக்ஸ். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரை இறுதிச் சுற்று. அமெரிக்க, ஐரோப்பிய வீரர்கள் மத்தியில் சீறிப்பாயக் காத்திருக்கும் சின்ன சிறுத்தையாய் குணாளன். அங்குதான் அவர் 10.38 விநாடிகளில் ஓடி சாதனை நிகழ்த்தினார். 33 ஆண்டுகள் நிலைத்திருந்த அந்தச் சாதனையை, 2001ம் ஆண்டு ஷியாம் 0.01 விநாடிகளில் முறியடித்தார்."அதில் எனக்கு வருத்தமில்லை. அந்த ஒரு சாதனையின் மூலம் எனக்கு 33 ஆண்டுகள் விளம்பரம் கிடைத்திருக்கிறது. அது அதிகம்." என்கிறார் குணாளன் சிரித்துக் கொண்டே.

1969 & 1970ம் வருடங்களின் Singapore sports person of the year awardஐப் பெற்ற குணாளன், தனது 33வது வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சீன இனத்தவரான தனது மனைவியின் ஆதரவே தன்னை இந்த அளவு உயர்த்தி இருப்பதாகக் கூறுகிறார். தாத்தா பாட்டி ஆகி விட்ட அவர்களுக்கிடையில் வற்றாத காதல் நதி ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் காணாமல் போய் விடுவார்கள். குணாளன், தனது 30களில் கல்லூரியில் சேர்ந்து படித்து, பட்டம் பெற்று, இன்று உதவிப் பேராசியராகப் பணியாற்றுக்கிறார். Functional Anatomy & Exercise physiology பாடம் எடுக்கிறார். அவர் பெற்றிருக்கும் பட்டங்களின் பட்டியல் அவரது பெயருக்குப் பின்னால் நீள்கிறது. இன்றும்கூட அவர்தான் உலகின் அதிவேகத் தமிழராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை, அதிவேக இந்தியராகக் கூட இருக்கக் கூடும். (இணையத்தில் தேடிப் பார்த்ததில் சரியானத் தகவலைப் பெற முடியவில்லை) குணாளனிடம் பேசும்போது, இன்னும் பல குணாளன்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து முளைத்து வர வேண்டுமென்ற ஆர்வம் அவரது குரலில் ஒலிக்கிறது. இதோ... இப்போது எனது வரிகளிலும் அது எதிரொலிக்கிறது.

Thursday, December 18, 2008

மலேசியப் பத்திரிக்கைகளும், ஒரு இலக்கியச் செடியும்!(நாலு வார்த்தை-018)

சமீபத்திய மலேசிய வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றிய பதிவில், மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையொன்றின் மீதான விமர்சனத்தைப் பார்த்தேன். அது- மலேசியப் பத்திரிக்கைகளோடு எனக்கிருந்த பழைய தொடர்புகளை ஞாபகப்படுத்தியது. அமரர் ஆதிகுமணனின் முயற்சியில் உருவான மலேசிய எழுத்தாளர் சங்கக் கட்டிடத் திறப்புவிழாவின் போதுதான் அந்தத் தொடர்புகள் துவங்கின. ஆதிகுமணன், மலேசிய நண்பன் நாளிதழின் ஆசிரியராக இருந்தாலும், அதைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டது கவிஞர் அக்கினி என்ற சுகுமாரன்தான். இவர் பின்னாளில் இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்து, அந்த அனுபவங்களைத் தொடர் கட்டுரையாக எழுதினார். ஆதிகுமணன் தெளிவான சிந்தனையாளர். மலேசியத் தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர். எந்த நிர்பந்தங்களுக்கும் வளைந்து கொடுக்காதவர். ஆதி, மலேசிய நண்பன் ஞாயிறுப் பதிப்பில் 'ஞான பீடம்' என்ற தலைப்பில் கேள்வி - பதில் எழுதுவார். அதைப் படிப்பதற்காகவே பலரும் மலேசிய நண்பனை வாங்கினார்கள். 'சூரியன்' மாத இதழ், அப்போதும், இப்போதும் வாசகர்களை மையமாகக் கொண்டு, அவர்களோடு நேரடித் தொடர்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இயங்கி வருகிறது. அதன் ஆசிரியர் ராமதாஸ் மனோகரன் மீது வாசகர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

மக்கள் ஓசையில் (இப்போது நாளிதழாக வெளி வருகிறது) குருசாமி ஆசிரியராக இருந்தபோது எழுத்தாளர்களுக்கு நிறைய சுதந்திரத்தை வழங்கினார். எழுத்தாளர்களும் அந்த சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தினார்கள். 96-97-ல் மக்கள் ஓசை இலக்கிய சர்ச்சைகளுக்கு நிறைய இடமளித்தது. அப்போது 'மண்ணும் மனிதர்களும்' தொடரை எழுதிக் கொண்டிருந்த சை.பீர்முகமது, விமர்சன வீச்சின் அனல் தாங்க முடியாமல் எழுத்து வனவாசம் போவதாக அறிவித்தார். எனக்கும், சிறுகதை மன்னர் எம்.ஏ.இளஞ்செல்வனுக்கும் கூட ஒரு இலக்கிய சர்ச்சை நடந்தது. அவரது தயவற்ற விமர்சனம் ஒன்றின் மீது, 'இலக்கியச் செடிகளின் வேர்களில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை; தயவு செய்து வெந்நீர் ஊற்றாதீர்கள்' என்று நான் கருத்துரைத்தேன். தற்போதைய தென்றல் வார இதழின் ஆசிரியர் வித்யாசாகர் வரிந்து கட்டிக் கொண்டு இளஞ்செல்வனுக்கு ஆதரவாக எழுதினார்.'ஊனமற்ற எம்.ஏ.இளஞ்செல்வனுக்கு நீங்கள் ஏன் ஊன்றுகோலாக இருக்க ஆசைப்படுகிறீர்கள்' என்று அவருக்கு பதில் எழுதினேன். ஆனால், இதைப் போன்ற சின்னச் சின்ன சர்ச்சைகளை எல்லாம் மீறிய அன்பும், அன்யோன்யமும் எழுத்தாளர்களுக்கிடையில் இருந்தது. நாலைந்து வருடங்களுக்குப் பிறகு மலேசிய எழுத்தாளர் மு.அன்புச்செல்வனை சிங்கப்பூரில் சந்தித்தபோது,'அப்போ இருந்த துடிப்பும், உயிர்ப்பும் இப்ப இல்லைங்க' என்றார்.

ஆதிகுமணனின் மூத்த சகோதரர் இராஜகுமாரன் தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத திறமைசாலி. தனது 'நயனம்' வார இதழைத் தரமாக நடத்தி வருபவர். சிங்கப்பூரின் இந்திரஜித் உட்பட பல நல்ல பத்திரிக்கையாளர்களை உருவாக்கியவர். சிங்கப்பூரின் இலக்கிய வரலாற்றிலும், தமிழ்க் கணினி வரலாற்றிலும் குறிப்பிடத்தக்கவரான அமரர் நா.கோவிந்தசாமியோடு ஆழமான நட்பும் அவருக்கு இருந்தது. ஆதிகுமணனின் மரணம் அனைத்து மலேசியத் தமிழர்களைப் போல அவருக்கும் பெரிய இழப்புதான். வடமாலை அவர்களால் நடத்தப்பட்டு வந்த 'அரும்பு' வார இதழ் ஆசிரியர் பி.கே.ராஜன் மறக்க முடியாத பெயர். 'அரும்பு' வாரஇதழ்தான் மலேசியாவில் நடந்த 'சரத்குமார் - நக்மா' சங்கதிகளை வெளிப்படுத்தியது. அதை அப்படியே வெட்டியெடுத்து அட்டைப் படமாக்கி பரபரப்பு கிளப்பியது குமுதம். எப்போதும் 'ஸ்டெடியான' மன்னன் மாத இதழ் பல வருடங்கள் மலேசிய இளைஞர்களின் நாடித் துடிப்பாக இருந்து வருகிறது. தனக்கென்று தனி பாணியை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருபவர் அதன் ஆசிரியர் எஸ்.பி.அருண். இவரது தலையங்கங்கள் வெகு தைரியமானவை. இந்திய சமூகத்தின் நாடித் துடிப்பாக இருந்தவை.அவரது கேள்வி-பதில் அங்கத்தைப் படிக்கையில் ஒரு முறையாவது சிரிக்காமல் இருக்க முடியாது. வலிமையும், இனிமையும் இணைந்த எழுத்துத் திறன் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

தற்போது தமிழ்நேசன் ஞாயிறு பதிப்புக்கு பொறுப்பு வகிப்பவர் சந்திரகாந்தம். தமிழ்நேசன் நீண்ட பாரம்பரியமுள்ள நாளிதழ். டத்தின்ஸ்ரீ இந்திராணியின் பராமரிப்பில் இருக்கும் அதற்கென்று பிரத்தியேக வாசகர்கள் உண்டு. தினமும் சிங்கப்பூரில் விநியோகிக்கும் அனுமதி உள்ள ஒரே மலேசியத் தமிழ் பத்திரிக்கை இதுதான். மலேசியாவில் காலகாலமாக பல நாளிதழ்கள்,வார,மாத இதழ்கள் தோன்றியும், மறைந்தும் இருக்கின்றன.மறைந்தாலும்,தமிழ்மலர் போன்ற சில பத்திரிக்கைகள் சில சரித்திரத் தடங்களையும் விட்டுச் செல்கின்றன. மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் நம்பிக்கையளிக்கும் புதிய வரவுகளில் பலரும், இப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் ஊக்கத்தில் உருவாகி வந்திருப்பதுதான் மலேசியாவின் எதிர்காலத்திற்கு ஜே சொல்ல வைக்கும் முக்கிய அம்சம்..

Wednesday, December 17, 2008

கோலிவுட்டின் கதவுகளைத் தட்டும் மலேசிய, சிங்கப்பூர் கரங்கள் (நாலு வார்த்தை-017)



யோகி பி இசைக்குழு. சமீபகாலமாக கோலிவுட்டில் பலராலும் உச்சரிக்கப்படும் பெயர் இது. "மடை திறந்து ஓடும் நதியலை நான்" என்ற ரீமிக்ஸ் பாடல் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ்ச் சினிமா ரசிகர்களை கவர்ந்த இந்த மலேசியக்குழு, இசையுலகில் புதிய அலைகளை எழுப்பி வருகிறது. தங்களுக்கென்று சுய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர்களை கோலிவுட்டில் பலரும் மரியாதையோடு பார்க்கிறார்கள். இவர்களுக்கு முன்னோடி மலேசியா வாசுதேவன். 16 வயதினிலே படத்தில் தன் கலைப்பயணத்தைத் துவங்கிய அவர், தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் மனதில் கோலிவுட் கனவை விதைத்தது மலேசியா வாசுதேவனின் வெற்றிப் பயணம்.

சிங்கப்பூரிலிருந்து விமானம் ஏறிப் போய் கோலிவுட்டின் கதவுகளைத் தட்டியவர்கள் பலர். சிலருக்கு அதன் கதவுகள் திறக்கவும் செய்தது. முதல் மரியாதை திரைப்படத்தின் மூலம் 'அந்த நிலாவைத்தான் கையில பிடிச்ச' சிவரஞ்சனி கொஞ்சகாலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். முகமது ர·பி "ஜும்பலக்கா, ஜும்பலக்கா" என்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கலக்கியபோது, பலரும் அவரை நம்பிக்கையோடு அண்ணாந்து பார்த்தார்கள். ஆனால் அந்தப் பாடலோடு அவரது இசைப்பயணம் முடங்கிக் கிடக்கிறது. இடையில் என்ன நடந்தது? கோலிவுட்டில் சாதிக்க திறமையைத் தவிர வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறதா? இன்றும் விடை சொல்லப்படாத கேள்வி இது. சிங்கப்பூர் பாடகர் இர்பானுல்லாவிடம், கோலிவுட் வாய்ப்புகளைப் பற்றிப் பேசும்போது அவரது குரலில் ஒரு வித விரக்தி வெளிப்பட்டதைப் பார்த்தேன். அந்த முயற்சிகள் சோர்வளிப்பதாகச் சொன்னார். சரோஜா படத்தில் மாடில்டா என்ற சிங்கப்பூர் பெண்ணுக்கு பாட வாய்ப்பளித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது நம்பிக்கையளிக்கிறது.

அண்ணாமலை, சித்தி போன்ற தொடர்கள் மூலம் சின்னத் திரைக்குள் நுழைந்து சிங்கப்பூர் கலைஞர்கள் சார்பில் பிள்ளையார் சுழி போட்டவர் மஞ்சரி. 'கோலங்களில்' இவரது காலங்கள் கழிந்து விட்டது. பெரியதிரை இவருக்கு பிடிபடவில்லை. சிங்கப்பூர் ஊடகத்துறையில் பெற்ற அனுபவத்தை மூலதனமாக வைத்து தமிழகச் சின்னத்திரையில் நுழைந்து, இன்று தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் ஆனந்தக் கண்ணன். தமிழ் பேசுவது தப்பில்லை என்று சிரித்துச் சிரித்தே தமிழகத்திற்குச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறார் என்பது இவரது சிறப்பு.

ஒலி 96.8ன் மூலம் சிங்கப்பூர் நேயர்கள் பலரையும் கவர்ந்து, மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரனின் மனதையும் கவர்ந்து, தமிழகச் சின்னத்திரையில் நிகழ்ச்சி படைப்பாளராக வலம் வருபவர், மாலினி என்ற ஹேமாமாலினி.நடன அமைப்பாளர் மணிமாறன், நடிகர் ஜேம்ஸ் துரைராஜ் போன்றவர்கள் தமிழ்த்திரையில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தாலும், அந்த வேடங்களைப் பெறுவதற்குக்கூட அவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தமிழகச் சின்னத்திரையில் மதியழகன் போன்ற சிங்கப்பூர் கலைஞர்களுக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தாலும், கோலிவுட் என்ற பெருங் கடலில் நீந்த முடியாமல் திரும்பி வந்தவர்களும், அதில் நீந்திக் கரை சேர முடியுமா என்று தயங்கி நிற்பவர்களும் பலர். சமீபத்தில் சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு நேரத்தை அதிகரித்துள்ள சூழலில், தமிழகத்தில் தங்களது திறன்களைக் கூர்தீட்டிக் கொண்ட கலைஞர்கள், சிங்கப்பூரில் அந்த திறன்களை வெளிப்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சிங்கப்பூர் ரசிகர்கள் மத்தியில் நிறையவே இருக்கிறது.

Tuesday, December 16, 2008

Rags to Riches - ஒரு சிங்கப்பூர்த் தமிழரின் கதை (நாலு வார்த்தை-016)



திரு.அப்துல் ஜலீல். அவரது நிறுவனம் MES Group of Companies. இந்த இரண்டு பெயரும் சிங்கப்பூர் இந்தியர்கள் மத்தியிலும் மற்ற இனத்தவர்கள் மத்தியிலும் பிரபலமான ஒன்று. சிங்கப்பூரில் உள்ள ஆயிரமாயிரம் இந்தியர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது திரு.அப்துல் ஜலீலின் வாழ்க்கைக் கதை. ஒட்டுக்கடை என்றழைக்கப்படும் பெட்டிக்டையில்தான் இவரது வாழ்க்கை துவங்கியது. தாயும், சகோதரிகளும் இந்தியாவில் தங்கிவிட, இவரும், இவரது தந்தையும் சிங்கப்பூரில் தனிமையில். இளம்வயது அப்துல்ஜலீல், கடைகளை சுத்தம் செய்தார்; கார் கழுவினார்; வாசனைத் திரவியங்கள் விற்றார்; டிரைவராகப் பணிபுரிந்தார்; எந்திரங்களைப் பாதுகாக்கும் வாட்ச்மேனாகப் பணிபுரிந்தார். அந்த வாட்ச்மேன் வேலைதான் அவரது வாழ்க்கையை மாற்றியது. எந்திரங்களை maintenance செய்யும் காண்ட்ராக்ட் கிடைத்தது. Piling வேலை நடக்கும்போது சாக்கடைகளை அடைத்துக் கொள்ளும் மணலை அகற்றும் காண்ட்ராக்ட் கிடைத்தது. நிறைய ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். நிறுவனம் வேகமாக விரிவடைந்தது. சீக்கிரமே, 200 ஆட்கள் 2000 ஆட்களானார்கள். அவர்களை தங்க வைப்பதற்கு சரியான இடமின்றி சிரமப்பட்ட போதுதான் Dormitries தொழிலில் தற்செயலாகக் கால்பதித்தார் திரு.அப்துல்ஜலீல். இன்று அந்தத் தொழில் பரந்து விரிந்து உயர்ந்து, அவரையும் உயர்த்தி நிற்கிறது. இதெல்லாம், நான் அவரைப் பேட்டி காண வாய்ப்பு கிடைத்தபோது, திரு.அப்துல்ஜலீல் சொன்ன விஷயங்கள். அவர் மேலும் சில முக்கியமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்...

"நாங்கள் கட்டிய முதல் டார்மெட்ரியில் 3000 பேர் தங்க வசதியிருந்தது. அதற்கப்புறம் நிறைய டார்மெட்ரிகள். அந்தத் தொழில் வளர்ந்தது. இன்றும் கூட தொழிலாளர்கள் தங்குவதற்கு அவ்வளவு சுலபமாக இடம் கிடைப்பதில்லை. எங்களது தேவைக்காக தொடங்கிய ஒன்று, ஒரு தொழிலாக மாறி இருக்கிறது. இப்போது எங்களுடைய 4 டார்மெட்ரிகளில் 25000 தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். இன்னும் 25000 பேர் தங்க வைக்கக்கூடிய அளவு டார்மெட்ரிகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அபுதாபியில் BCAவோடு சேர்ந்து ஒரு டார்மெட்ரி கட்டிக் கொண்டிருக்கிறோம்.ஓமான் நாட்டிலிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.ஆனால்,எனக்கு பெரிய ஆசைகளோ, தேவைகளோ கிடையாது. இப்போது இருப்பதே போதுமானது என்று நினைக்கிறேன்.

கடவுள் நம்பிக்கை முக்கியம். சுய ஒழுக்கம் மிக முக்கியம். ஆனால், சமூக சேவையில்தான் நிஜ திருப்தி கிடைக்கும் என்று நம்புகிறேன். என் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். இளம்வயதில், நான் தேர்ந்தெடுத்த நண்பர்களெல்லாம் என்னை விட வயது கூடியவர்கள். அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பேன். அதில் நிறைய அர்த்தமுள்ள விஷயங்கள் கிடைக்கும். இன்று - 50 வயதில், என்னை விட வயது குறைந்தவர்களோடு நட்பாக இருக்க ஆசைப்படுகிறேன். அப்போதுதான் இன்றைய உலக நிலவரங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். எந்த நிலையிலும், நாம் நாமாக இருப்பது முக்கியம். என் பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வியாபாரத்தில் சிலமுறை நாம் தோற்க நேரலாம். அதற்காக மனம் தளரக் கூடாது. ஒரு நல்ல வியாபாரிக்கு நஷ்டத்திலிருந்து எப்படி மீண்டு வருவதென்று நன்றாகத் தெரியும்.

இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல, நான் எப்போதுமே தயார்.பிள்ளைகள் எதை விருப்புகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் அவர்களுக்கு அடிப்படை ஒழுக்கத்தைக் கற்றுத் தருவது அவசியம் என்று நினைக்கிறேன்.சிங்கப்பூரில் ஏராளமான வியாபார வாய்ப்புகள் உள்ளன. கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில் அதிலொன்று. நமது இளைஞர்கள் அதில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். நேரம்தான் சிறந்த மூலதனம்.எந்தத் தொழிலைச் செய்தாலும் நம் முழு மனதும் அதில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். நாம் சமூகத்திற்கு என்ன கொடுத்தாலும், கடவுள் அதைவிட பல மடங்கு நமக்குத் திருப்பிக் கொடுக்கக் காத்திருக்கிறார். சிலர் கொடுப்பதற்கான வரம் வாங்கி வந்திருக்கிறார்கள். நான் என்ன சம்பாதித்தாலும், இன்றும் கூட என் ஒரு நாள் செலவு 10 வெள்ளிதான்." பலநூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபரான திரு.அப்துல்ஜலீலிடம் பேசி விட்டுத் திரும்பியபோது, மூடிக்கிடந்த சில மனக்கதவுகள் பெருத்த ஓசையோடு திறந்து கொண்டன.அந்த கடைசி வரி, திரும்பத் திரும்ப மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Sunday, December 14, 2008

சசிக்கலா மாலா, நீ விட்டதெல்லாம் பீலா...(நாலு வார்த்தை-015)

நீண்ட இடைவெளிக்குப்பின், மறுபடியும் பதிவுகளை இடத் துவங்கிய 10 நாட்களுக்குள், நான் வாழ்ந்திருந்த பழைய இடங்களைச் சார்ந்த இருவர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். எண்ணூரைச் சார்ந்த ஒருவர் இணையத்திலும், இராயப்பன்பட்டி அலோசியஸ பள்ளியில் படித்த ஒருவர் நேரிலும் என்னோடு பேசினார்கள். எண்ணூரைச் சேர்ந்தவர் ETPS கேம்பில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப்பள்ளியில் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நானும் அங்கு 5ஆம் வகுப்பு படித்தேன். காயத்ரி டீச்சர் எனக்குப் பாடம் எடுத்தார். அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரிடம் இருந்த பிரம்பு பலமாகப் பேசும். என்னோடு படித்த பர்மா நகர் அழகர், இளங்கோ, சசிக்கலா, லதா, முருகன், முருகனது தங்கை அம்சா, குப்பத்தில் இருந்த தேசிங்குராஜன் ஆகியோர் பெயரளவிலும், இளம் பிம்பங்களாகவும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறார்கள். நண்பரது மின்னஞ்சல் அவர்களையெல்லாம் ஞாபகப்படுத்தியது. அந்த வயதில் நடந்த ஓரிரு சம்பவங்களை இப்போது நினைத்தால் கொஞ்சம் ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட நபர்களில் அழகருக்கும், சசிக்கலாவுக்கும் ஆகவே ஆகாது. நான், சசிக்கலா, அழகர், லதா எல்லாம் கொஞ்சம் நன்றாகப் படிக்கிற சாதி. சசிக்கலாதான் கிளாஸ் லீடர். சர்வ அதிகாரம் படைத்த பெண். ஒருமுறை ஏதோ ஒரு தவறுக்காக டீச்சர் எல்லோருக்கும் கொட்டு வைக்கும்படி சொல்ல, வரிசையாக கொட்டிக் கொண்டு வந்த சசிக்கலா, அழகரை மட்டும் சும்மா டங்கென்று வலுவாகக் கொட்ட, வலி தாங்காமல் அழகர் சசிக்கலாவை பளாரென்று அறைய... பள்ளியே ரணகளமானது. ஏனென்ற காரணம் தெரியவில்லை; ஆனால், சசிக்கலாவைப் பிடிக்காத எதிரிகள் நிறையப்பேர் வகுப்பில் இருந்தார்கள். அவர்கள் சசிகலாவைப் பற்றி ஒரு பாட்டையே இயற்றி வைத்திருந்தார்கள். அந்தப் பாட்டு இதுதான் ... "சசிக்கலா மாலா... நீ விட்டதெல்லாம் பீலா" இந்த வரி பள்ளிச் சுவர்களில்கூட ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டதாக ஞாபகம். நான் சசிக்கலாவை சரியாக நிமிர்ந்து கூட பார்த்ததில்லை. அந்தக் காலத்தில் பெண்களென்றால் அப்படியொரு வெக்கம். முருகன், சசிக்கலா இருவரது தந்தைமாரும் என் தகப்பனாரோடு பணியாற்றினார்கள். முருகன் என்னைப் போல் வெட்கமெல்லாம் படமாட்டான். அந்த வயதிலேயே அவனுக்கு சசிக்கலாமேல் ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஒரு முறை சசிக்கலா சாமிக்கு மாவிலக்கு எடுத்து எண்ணூர் வீதிகளில் ஊர்வலம் போனபோது, கவசகுண்டலம் மாதிரி என்னையும் அவனோடு சேர்த்துக் கொண்டு சசிக்கலா பின்னால் சுற்றினான் முருகன்.

காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. முருகனுடைய அப்பா வேலையை ராஜினாமா செய்து விட்டு, அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போய்விட, அவனது குடும்பம் ஊட்டிக்கு ஜாகை மாறியது. நாங்கள், தேனி மாவட்டம் லோயர்கேம்பிற்கு இடம் பெயர்ந்தோம். சசிக்கலாவின் தந்தை எண்ணூரிலேயே இருந்தார். அந்தக் குடும்பத்தில் நாலைந்து பெண் பிள்ளைகள் என்று நினைக்கிறேன். எல்லோரும் இப்போது குழந்தை குட்டிகளோடு நன்றாக இருக்கக் கூடும். இருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுகிறேன். இளங்கோவும், அழகரும் (அழகர் டவுசரில் பட்டன் இருந்தாலும் அதை மாட்டாமல், டிரவுசரின் காதுகளை இழுத்து முடிச்சாகத்தான் போடுவான்) அவர்களது தாயகமான பர்மா நகரில்தான் இருக்க வேண்டும்.

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் பல குடியிருப்புகளும் இப்படிப்பட்ட பலரையும் பார்த்தவை, பல கதைகளை சுமப்பவை. அதன் காற்றில் பல ஆன்மாக்களின் சுவாசங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. கத்திவாக்கம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு நேர் எதிரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் நாங்கள் குடியிருந்தோம். சிறுமிகளாக இருந்த என் தங்கைகள் கீழே விழுந்து விடக்கூடாது என்ற கவலையில் கூடுதலாக இரண்டு இரும்புக் குழாய்களை பால்கனியில் தடுப்பாக வைத்தார் என் தந்தை.அந்தக் குழாய்கள் இன்றும் அங்கிருக்கக் கூடும். அல்லது எங்களைப் போலவே அவையும் இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.அந்த வீட்டிற்குக் குடிபோன புதிதில் இரவு நேரத்தில் தூங்க மிகவும் சிரமப்பட்டோம். காரணம் இரவில் பெருத்த ஓசையோடு கடந்து போகும் ரயில்கள். குறிப்பாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போகும்போது அந்தக் கட்டிடமே அதிரும். ஆனால், நாட்களின் ஓட்டத்தில் அது எங்களுக்கு பழகிப் போனது ; எங்களை உறங்க வைக்கும் தாலாட்டாகவும் ஆனது! இன்று அந்த நினைவுகளின் தாலாட்டில்.....

சென்னை மாநகரின் நெரிச்சலில் "வாரணம் ஆயிரம்" (நாலு வார்த்தை-014)

அன்புள்ள கெளதம் வாசுதேவ் மேனன்... இன்றுதான் 'வாரணம் ஆயிரம்' பார்த்தேன். படம் வெளியாகி சில வாரங்கள் ஆகியும் சிங்கப்பூர் தியேட்டர்களில் கணிசமான கூட்டம் இருக்கிறது. அயல்நாடுகளின் கலெக்ஷனைப் பொறுத்தவரை கட்டாயம் இது வெற்றிப் படம்தான் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகள் உட்பட பல்வேறு ஊடகங்களும் பாராட்டுகளை பஞ்சமின்றி தெரிவித்திருக்கின்றன. சிங்கப்பூர் மக்களின் பாராட்டுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். கெளதம் மேனன் என்ற மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞரும், சூர்யா என்ற மிகச் சிறந்த நடிகரும் இணையும்போது இயல்பாக ஏற்படுகின்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் படத்தை எடுத்திருக்கிறீர்கள். "அது யார்னு தெரியுதா" "எது" "அந்த வயசான ஆளு" "தெரியலையே" "அது சூர்யா..." "சூர்யாவா????!!!" பக்கத்து இருக்கையில் நான் கேட்ட டயலாக் இது. அங்கு தொடங்கியது உங்கள் அதிரடி ஆட்டம். நீங்கள் தைரியசாலிதான். சூர்யாவை துவக்க சீன்களிலேயே சாகடிக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்....நீங்கள் கிரிக்கெட் நன்றாக விளையாடுவீர்கள் என்று நினைக்கிறேன். தற்காப்பு ஆட்டமும், அதிரடி ஆட்டமும் சேர்ந்த கலவையாக அமைந்திருக்கிறது 'வாரணம் ஆயிரம்'.

படத்தை 10 segments ஆக பிரித்துச் செதுக்கி இருக்கிறீர்கள். ஒரு சிறுகதைத் தொகுப்பு மாதிரி என்று சொல்லலாம். ஒவ்வொரு segmentற்கும் ஒரு துவக்கம், ஒரு சிக்கல், ஒரு முடிவு. அந்த ·பார்முலாவை அடுத்தவர் அடையாளம் காண முடியாதபடி முடிச்சவிழ்த்திருக்கும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. 1. முதியவர் சூர்யாவின் மரணத்திற்கு முந்திய நிமிடங்கள் 2. அவரது இளமைக் காலத் தருணங்கள் 3. மகன் சூர்யாவின் இளமை + கல்லூரி கால வாழ்க்கை 4. சமீரா ரெட்டியின் வருகையும், நீட்சியும் 5. சமீரா, சூர்யா - அமெரிக்க நினைவுகள் 6. சமிராவின் இழப்பும், சூர்யாவின் போதைத் தவிப்பும் 7. காஷ்மீரத் தேடல் + மோதல் 8. மேஜர் சூர்யா and his rescue operation 9. சூர்யா வாழ்க்கையில் வரும் மாற்றுப் பெண் 10. ஒரு மரணமும், ஜனனமும். பல சிறுகதைகள் பிரமாதம். சில சுமார் ரகம். ஒரு சில ஏதோ இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், பெற்றிருக்கும் மதிப்பெண்கள் கெளரவமாகத்தான் இருக்கின்றன.

சமீரா ரெட்டி - சூர்யா ஜோடி is a sweet cameo. திரும்பத் திரும்ப மெளனராகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கார்த்திக் attack is the best form of defense என்று நடித்திருப்பார்; But Surya has shown controlled aggression. அடுத்து அதிகம் ஈர்த்தது - அப்பா சூர்யா. குறிப்பாக மரணத்திற்கு முந்திய மாதங்கள். யாருக்கும் பாரமாகி விடக்கூடாது என்ற தவிப்பு. மகன் மேல் காட்டும் கடைசி நேரக் கரிசனம். நடிப்பில் இன்னும் சில படிகள் உயர்ந்திருக்கிறார் சூர்யா. 'You are my hero daddy' 'i am in love with u' என்று உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குன்றிய குரலில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகள், தெருவில் கரைந்துவிடும் ராப்பிச்சைகாரனின் வார்த்தைகளாய் சிதறி விடுகின்றன.

ஹாரிஸ் ஜெயராஜைப் பிரிகிறீர்களா? நிச்சயம் அது ஒரு இழப்புதான் எல்லோருக்கும். பின்னணி இசையில் அவர் செலுத்தியிருக்கும் செல்லுவாய்ட் கவனம் பிரமாதம் என்ற வார்த்தையில் அடக்க முடியாதது. கேமராமேன் ரத்னவேல் வழி நெடுக கவிதைகளைத் தவழ விட்டிருக்கிறார். ஆனால், ஒரு ஹைவேயில் பெருத்த இரைச்சலோடு பயணம் செய்திருக்க வேண்டிய படம், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிச்சலில் சிக்கி, பிரேக்கில் கால் வைத்தபடி பயணம் செய்திருப்பதன் காரணம் என்ன... சென்னையில் இன்னொரு மழைக்காலம் வரும் முன் இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நம்பும்... ஒரு தமிழ் நண்பன்!

Saturday, December 13, 2008

கவிஞர் கருணாகரசின் "தேடலைச் சுவாசி" (நாலு வார்த்தை-013)



இரண்டு வருடங்களுக்கு முன்னைய நாளொன்றின் சிங்கப்பூர் ராத்திரி. பெக் கியோ சமூக மன்றத்தின் வாயில். பாலைவனச்சோலை சந்திரசேகரை நகலெடுத்த மாதிரி இருந்த ஒர் ஒடிசலான கருப்பு இளைஞர் தனது கவிதை தொகுப்பொன்றை என்னிடம் நீட்டுகிறார். "தேடலை சுவாசி" என்பது அதன் தலைப்பு. கருணாகரசு அவரது பெயர். பொருளாதார நிமித்தம் சிங்கப்பூர் வந்திருந்தாலும், தன்னையும், தமிழையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர். கவிதைத் தொகுப்பின் பின்பக்கத்தைப் புரட்டிப் பார்க்கிறேன். அதில் இருந்த கவிதை ஒன்று படாரென்று என்னைப் புரட்டிப் போடுகிறது. "உழுதவன் கண்ணீரை / அழுதே துடைக்கிறது / வானம்". என்னை மட்டுமல்ல, பலரையும் பாதித்த கவிதை அது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

மூங்கிலாய் நிமிர்ந்திருந்த அந்த கருப்பு இளைஞனுக்குள் ஏதோ ஒரு கோபம் தொடர்ந்து கனன்று கொண்டிருப்பதையும், அது கவிதை நெருப்புத் துண்டுகளாய் விழுவதையும் பக்கத்திலிருப்பவர்கள் உணர்ந்தார்கள். அந்த இளைஞனது கண்களிலோ, எப்போதும் நட்பு வெளிச்சமிருந்தது. அவர் தனது முன்னுரையில் தனது வேர்களைப் பற்றிச் சொல்லும்போது, "தமிழ்ப் பற்றுள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததுதான் நான் தமிழ்ப் பிடிப்போடு இருப்பதற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். பொதுவாக கவிஞர்கள்தான் கவிதை எழுதுவார்கள், ஆனால் ஒரு கவிதைதான் என்னைக் கவிஞாக்கியது" என்று எழுதியிருந்தார் ; அந்தக் கவிதைகளில் அடர்த்தியாய் இருந்த கோபத்தின், சோகத்தின் மூலம் புரிந்தது. "நீங்கள் / அனுசரிக்க வேண்டாம் / அன்னையர் தினத்தை. / மூடினால் போதும் / முதியோர் இல்லங்களை. /" என்று கட்டளையிடும் கவிதைக்கான காரணம் தெரிந்தது. அவள் மற்றும் அவள்கள் இல்லாமல் முழுமையடைந்த தொகுப்பு எது..."அவள் / கசிய விட்டதென்னவோ / ஒரு மெல்லிய / புன்னகையைத்தான் / உடைந்தது / என் மனத் தடாகத்தின் / கரைகள் / அங்கே / தத்தளிக்கின்றன / என் கவிதைகள்." என்றொரு அழகான வாக்குமூலம்.

எமது கிராமங்களில் தமிழ் வாழ்வின் பழைய அடையாளங்களோடு, பகடியும், எள்ளலும் இன்றும் காற்று வெளியிடை கலந்து கிடக்கின்றன. அப்பத்தா ரவிக்கை அணிந்து அவன் பார்த்ததில்லை. அத்தை மகள் அணிந்து பார்த்திருக்கிறான் ; இன்றும் பார்க்கிறான். அட.. அதைப் பார்த்து இந்தக் கவிதை ஏன் இப்படிக் கிழிகிறது? "சன்னல் வழி / அவளைப் பார்த்தேன் அன்று./ சன்னலையே / அவளிடம் பார்த்தேன் / இன்று. /" இந்த கிராமத்துச் சன்னல்தான் நம்பிக்கையை, நம்பிக்கை இன்மையை என்று எத்தனை எத்தனை விஷயங்களை விழிமுன்னால் விரித்து வைக்கிறது. இதழோரம் புன்னகை வழிய, கருணாகரசு இப்படிச் சொல்கிறார்..."நம்பிக்கை இழந்தவனை / நம்பி வாழ்கிறான் / ராசிக்கல் வியாபாரி"

தத்துவத் தளங்களிலும் தத்தளிக்கின்றன கவிதைகள். "நான் கருவறைக்குள் / இருளில்தானே / என்னைத் தொடங்கினேன்./" அறிவுரையாகவும் வழிகின்றன. "எதிரியிடம் / அடிக்கடி சிரித்துவை / அல்லது / அதுபோல் நடித்து வை./ இவை இந்தத் தொகுப்பு முழுவதும் சிதறிக் கிடக்கும் கவிதைகளின் சில துளிகள்தான். சுருக்கமாகச் சொல்வதும், சுருக்கென்று தைக்கும் விதத்தில் சொல்வதும் கருணாகரசுக்கு இயல்பாக வருகிறது. அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தில் அமுங்கிப் போய்விடாமல் இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார் பொன்.மகாலிங்கம். நமக்கும் அதே ஆசைதான். நிறைய எழுதுங்கள் கவிஞர் கருணாகரசு.

Friday, December 12, 2008

ஒவ்வொரு வருடமும் வெடிப்பான் ஒரு 'பருத்தி' வீரன்! (நாலு வார்த்தை-012)



2008 இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்சினிமா செய்த சாதனைகள் மற்றும் எதிர்க்கொண்ட சோதனைகளைப் பற்றிய அலசல் சீக்கிரமே துவங்கி விடும். பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், சங்கர் போன்ற சாதனையாளர்களைத் தொடர்ந்து ஒரு புதிய தலைமுறை தன்னை வெகு தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கும் ஆண்டு என்பதால், 2008 தமிழ்ச் சினிமா சரித்திரத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும். கார்ப்பரேட் கம்பேனிகளின் வருகையால் நேர்ந்த குட்டை குளம்பிய நிலையும் மெல்ல மாறி வருகிறது. இந்தச் சூழலில், திரைப்படங்களை மொத்தமாக விலைக்கு வாங்கி வெளியிடத் துவங்கியிருக்கிறது சன் டி.வி. இதைப் பற்றிய விவாதங்கள் உள்ளும், புறமும் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது எங்கு போய் முடியும் என்ற கேள்விக்கான விடை, 2009-ன் இறுதியில் கிடைக்கலாம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இளைய தலைமுறை படைப்பாளிகளின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய வரவுகளில், அமீர், வெற்றிமாறன், ராம், வசந்தபாலன், விஷ்ணுவர்த்தன், கெளதம் மேனன், பாலாஜி சக்திவேல், செல்வராகவன், மிஷ்கின், சசிக்குமார், வெங்கட் பிரபு, சிம்புதேவன் போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையளிக்கிறார்கள். சமீபத்திய வரவென்றால் - கடந்த 5 அல்லது 6 ஆண்டுக்குள் என்று வைத்துக் கொள்ளலாம்... இவர்களைத் தவிர பாலா, முருகதாஸ், சேரன், சுசி கணேசன், லிங்குசாமி, தங்கர் பச்சன், சசி என்று இன்னொரு முக்கியமான பட்டியலும் இருக்கிறது. இவர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தவர்கள்.

இன்றைக்கு படமெடுக்க வருகிற இயக்குனர்கள் பலருக்கும் கலை நுணுக்கமும், வடிவமும் எளிதில் கைவருவதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களில் பலருக்கும் கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லையே என்ற நியாயமான கவலையோடு இருக்கிறார்கள் தமிழ் மக்கள். 'சமூக அக்கறை, ஆலைச் சக்கரை என்று பேசுபவர்கள் பலரும், திருட்டு வி.சி.டியில் படத்தைப் பார்த்து விட்டு விமர்சிக்கும் ஆட்கள்' என்ற மறுவாதம் படைபாளிகளிடம் இருந்து வரக்கூடும். அதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இன்றைய சினிமா, ஆயிரமாயிரம் கோடிகள் புரளும் வர்த்தகப் பொருளாகி விட்டது. இந்தியாவைப் பொருத்தவரை Cinena is not an art, but a bussiness என்ற தெளிவு நமக்கு வந்து விட்டால், படைப்பாளிகளைக் குற்றம் சொல்வதைக் குறைத்துக் கொள்ள முடியும்.அதனால்தான், வர்த்தக நிர்பந்தங்களை மீறி,'பருத்திவீரன்','காதல்','வெயில்'
'சுப்ரமணியபுரம்" போன்ற நல்ல படங்கள் வரும்போது, அந்தப் பெருமை முழுவதும் படைப்பாளிக்கும், அதன் தயாரிப்பாளருக்கும் போய்ச் சேருவது அவசியமாகிறது.

2009ம் ஆண்டு தமிழ்ச்சினிமா எப்படி இருக்கும்? உலகப் பொருளாதரச் சிக்கலின் தாக்கம் சினிமாவரைக்கும் நீளுமா என்று தெரியவில்லை. புதுப்படங்களில் கார்பரேட் கம்பேனிகள் மிகவும் யோசித்தே முதலீடு செய்வார்கள் என்று தோன்றுகிறது. சன் டி.வி 10 ~ 15 படங்களையாவது வாங்கி வெளியிடக்கூடும். 'சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும்' என்ற வியூகத்தை சில கம்பேனிகள் கையில் எடுக்கலாம். அந்தச் சூழலில் 'காதல்' போன்ற கதையம்சமுள்ள படங்கள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. பல கம்பேனிகள் ஸ்டார் வேல்யூ உள்ள படங்களையே நாடக்கூடும். ஆனால், எல்லா சூழ்நிலைச் சிக்கல்களையும் மீறி, ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பருத்திவீரன் எப்படியாவது வெடித்து முளைத்து விடுவான் என்பதுதான் தமிழ்ச்சினிமா பெற்றிருக்கும் அதிசய வரம்!

நான் கிளீன் போல்டு செய்த இரண்டு டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் (நாலு வார்த்தை-011)

பலத்த பாதுகாப்புகளுக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டி துவங்கி விட்டது. எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு உலக டெஸ்ட் வரலாற்றில் மிக ஸ்பெஷ்லான இடம் உண்டு. இந்தியா - ஆஸ்திரேலியா Tied Test உட்பட பல சரித்திர சம்பவங்கள் நிகழ்ந்த தளம் அது. பலரும் சேப்பாக்கம் மைதானம் பற்றிய பல நினைவுகளை தங்களுக்குள் தக்க வைத்திருப்பார்கள். எனக்கும் சில நினைவுகள் உண்டு. 1. வாலாஜாபாத் முனையில் தொப்பியைக் கழற்றி விட்டு ரசிகர்களை நோக்கி தலைவணங்கிய மதன்லால் 2. ஒரு உள்ளூர் போட்டியில், விவேக் ரஸ்டான் பந்து வீச, பின்காலில் சென்று எல். சிவராமக்கிருஷ்ணன் அடித்த cover drive 3. இன்னொரு உள்ளூர் போட்டியில், எம்.செந்தில்நாதன் தொடர்ந்து இரண்டு பந்துகளை ஸ்டேடியத்தின் உச்சத்திற்கு அனுப்பி விட்டு, மூன்றாவது பந்தில் ஸ்டம்பிங் ஆனது. இப்படி பல நினைவுகள்.இவை மட்டும்தானா? இன்னும் இருக்கின்றன. இரண்டு பிரசித்தி பெற்ற டெஸ்ட் பிளேயர்களை நான் கிளீன் பொல்ட் செய்த கதையை எப்படி மறக்க முடியும்....சும்மா கதை விடவில்லை. உண்மையில் நடந்த கதை.

1978-ல் வெஸ்ட் இண்டீஸோடு நடந்த டெஸ்ட் போட்டிதான் நான் முதல் முதலாக நேரில் பார்த்தது. அப்போது எனது தந்தை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இப்போதும் மீதமிருக்கும் கிரிக்கெட் ஆர்வம் அவர் ஊட்டியதுதான். பாரிமுனையில் பேரம் பேசி, ஆப்பிள், ஆரஞ்செல்லாம் வாங்கிக் கொண்டு வாலாஜாபாத் சிமெண்ட் படிகளில் போய் உட்கார்ந்து கொண்டோம். அன்று வெஸ்ட் இண்டீஸ்தான் பேட்டிங். மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக ஞாபகம் இல்லை; ஆனால், இடது கை ஆட்டக்காரர் காளிச்சரண் மட்டும் ஞாபகம் இருக்கிறார். அவர் பவுண்டரிகளாக விளாசித் தள்ளியதும் ஞாபகம் இருக்கிறது. காளிச்சரண் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்தபோது வெங்கட்ராகவன் பந்து வீச வந்தார். தலைமுடி எம்பி, எம்பிக் குதித்தபடி வெங்கட் பந்து வீச வர, எல்லோரும் காளிச்சரணின் செஞ்சுரிக்கு கைதட்ட எழுந்து விட்டார்கள். நானும் எழுந்தேன். ஆனால், அது என்னவோ தெரியவில்லை...அந்தப் பந்தில் காளிச்சரண் கிளீன் போல்டு ஆகப் போவதாக எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பை மெய்யாக்கி,கிளீன் போல்டு ஆகி, ஆத்திரத்தோடு வெளியேறினார் காளிச்சரண்.

அடுத்து 1979-ல் பாகிஸ்தானோடு நடந்த டெஸ்ட் போட்டியையும் சேப்பாக் மைதானத்தில் பார்த்தேன். அது - கபில்தேவ் என்ற இளம்சிங்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டெஸ்ட் மேட்ச். கபில்தேவின் பந்து வீச்சு சீற்றமாக வெளிப்பட்ட விதம் பிரமிக்க வைத்தது. அதற்கப்புறம், 1982-ம் ஆண்டு இங்கிலாந்தோடு நடந்த டெஸ்ட் போட்டியைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார் என் தந்தை. முதல்நாள்தான் பாப் வில்லிஸின் பந்தை தொடர்ந்து மூன்று முறை பவுண்டரிக்கு அடித்து, எகிறிப் பாய்ந்த இன்னொரு பந்தில் முகத்தில் அடிபட்டு மருந்துவமனைக்குச் சென்றிருந்தார் வெங்சர்க்கார். நாங்கள் போன தினத்தன்று விஸ்வநாத்தும், யஷ்பால் ஷர்மாவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விஸ்வநாத் இரட்டை சதமடித்தார். போத்தம், யஷ்பாலுக்கிடையே கொஞ்சம் gamemanship நிலவியது. யஷ்பால் இரண்டு சிக்ஸர் விளாசிய பிறகுதான் அடங்கினார் போத்தம்.

வழக்கம்போல், பாப் வில்லிஸின் பந்து வீச்சுதான் கொஞ்சம் குழப்பமிக்கதாக இருந்தது. அவர் ஓடி வரும் விதமும், பந்து வீசும் முறையும் அப்படி. ஆனால், பந்து ஆடுகளத்தில் பட்டதும் எகிறும், nip, எப்போதும் அவரது பந்து வீச்சில் இருக்கும். வில்லிஸ், பெவிலியன் முனையிலிருந்து பந்து வீச ஓடி வருகிறார். விஸ்வநாத் 222-ல் பேட்டிங் செய்கிறார். Again, ஏனோ தெரியவில்லை. அந்தப் பந்தில் விஸ்வநாத் கிளீன் போல்டு ஆகப் போகிறார் என்று தோன்றுகிறது. நினைத்த மாதிரியே, விஸ்வநாத் கிளீன் போல்டு. ஒருவேளை நான் ஒன்றுமே நினைக்காமல் கடலைப்பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் கூட, அவர் போல்டாகியிருக்கக் கூடும். ஆனால், அன்று நான் நினைத்த போது நடந்து விட்டது. அவ்வளவுதான். என்றாலும், ஏதாவது ஒரு டெஸ்டில், இந்திய அணி பெளலர்கள் நாள் முழுக்க விக்கெட் எடுக்க முடியாமல் திணறும்போது, நான் 'நினைப்பால்' கிளீன் போல்டு செய்த இரண்டு Legendary பேட்ஸ்மேன்கள் ஞாபத்துக்கு வருவார்கள். தயவு தாட்சண்யமின்றி எதிரணி பேட்ஸ்மேன்கள், நமது பெளலர்களை வெளுத்துக் கட்டும் ஒரு சோக தினத்தில், டி.வி முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னைப் போன்ற சாமானிய இந்தியனால் இதைத் தவிர வேறேன்னங்க செய்ய முடியும் சொல்லுங்கள்?

Thursday, December 11, 2008

உன் தலைமுடி உதிர்வதைக்கூடத் தாங்க முடியாது அன்பே...(நாலு வார்த்தை-010)

இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் நெப்போலியன். காதலின் விழுந்தேன் படத்தில் வரும் இந்தப்பாடல் தமிழக இளைஞர்களின் சமீபகால தேசியகீதம். யார் இந்த நெப்போலியன் என்ற கேள்வியோடு பலரும் புருவம் உயர்த்தி இருக்கும் நிலையில் - அவர் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கவிஞர் நெப்போலியன் எழுதிய பாடல் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் என்று அவர் வாய்ப்புகளுக்காக முனைப்பாக இருக்க வேண்டுமென்றுதான் ஒரு சராசரி ரசிகர் கற்பனை செய்திருப்பார். ஆனால் அவரது வாழ்க்கை சிங்கப்பூரின் கட்டுமானத் தளங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. ஏன்?

நெப்போலியனை எனக்கு 1998 முதல் தெரியும். ஒரு துடிப்புமிக்க இளைஞராக அவரைப் பலரும் அடையாளம் கண்டார்கள். தொடர்ந்து தமிழ்முரசில் அவரது கவிதைகள் வரும். அந்தக் கவிதைகளின் கோணம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். கவிமாலை போன்ற ஏதாவது சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டமாக உட்கார்ந்து, கோப்பி சாப்பிட்டபடி கவிதையும், கதையும் பேசுவோம். சுற்றிலும் சீனச் சமையல் வாசனை நெடி மூக்கைத் துளைக்க, சீன, மலாய் மொழிப் பேச்சுக்களின் நெடி காதைத் துளைக்க, தமிழ் பேசியிருக்கும் சுகம் சிங்கப்பூரில் கிடைக்கும். அனுபவிப்போம். நெப்போலியன் தான் எழுதிய கவிதைகளை "நானும் என் கருப்புக் குதிரையும்" என்ற தலைப்பில் தொகுத்து சிறப்பாக வெளியிட்டார். நான் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சில வருடங்கள் கழித்தும் சில நண்பர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால், அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததை உணர முடிந்தது.

அங்மோ கியோ நூலகத்தில் ஒரு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, எம்.ஆர்.டி நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தபோதுதான் நெப்போலியன் பேச்சோடு பேச்சாகச் சொன்னார், "சென்னைக்குப் போறேன் பாலு, சினிமாவுக்கு பாட்டெழுதத்தான். எப்படியாவது எழுதிடுவேன்னு நினைக்கிறேன்." அவரது குரலில் தெரிந்த உறுதி, 'முடிகிற விஷயமா அது' என்ற என் மனக் கேள்வியை அசைத்துப் பார்த்தது. மெல்ல அசை போட்டதில், அவர் அதுவரை எடுத்து வைத்து வந்திருந்த அடிகள் தெளிவானவை என்பதும் புரிந்தது. "வாழ்த்துக்கள் நெப்போலியன்" என்று நான் அவரிடம் சொன்னபோது அந்தி, இரவுக்குள் நகர்ந்து கொண்டிருந்தது; விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருந்தன சாலைகள். அப்புறம் அவர் சென்னைக்குப் போனார். நாங்கள் அவரை மறந்து போனோம். எந்திரமாய் ஓடும் வாழ்க்கைச் சூழலில் சிலசமயம் அவரவர் வாழ்க்கையே மறந்து விடுகிறது.

அஞ்சப்பர் உணவகம் போகும்போது அவர் நினைவு வரும். அவரது நண்பரிடம் விசாரிப்பேன். "முயற்சி பண்ணிட்டு இருக்காருங்க. எப்படியும் எழுதிருவேன்னு சொல்றாரு" என்பார். ஆழ்கடலில், ஒரு மரத்துண்டை பிடித்தபடி நீந்தும் மனிதனின் பிம்பம் மனதில் வந்து போகும். எத்தனை பேர் மூழ்கிய கடல் இது? எத்தனைபேரை தாகத்தோடு பருகியிருக்கிறது அந்தக் கடல்? 'இருந்த நல்ல வேலையை விட்டுட்டு, ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வெள்ளியை விட்டுட்டு, எதுக்குங்க இதெல்லாம்' என்று அவரைப் பற்றி கவலைப்பட்டார்கள் சில நண்பர்கள். ஆனால் 2007 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் போன ஸ்டாலில் எல்லாம் அவரது கவிதைத் தொகுப்பைப் பார்த்தபோது, நெப்போலியன் சரியான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். ஒருநாள் விஜய் டி.வியின் "விஜய் டைம்ஸ்" அவரைக் காட்டியது. அதில் அவர், தான் விஜய் ஆண்டனியின் இசைக்கு பாடல் எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது. நினைத்ததை சாதித்து விட்டார் நண்பர். சில நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் அவரை மறுபடியும் சந்தித்தேன். வேலையில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது "பாட்டு?"... என்றேன். "சம்பாரிக்கணும் பாலு. வாழ்க்கையையும் பார்க்கணும்" என்றார். ஆனால், போனமுறை பார்த்தபோது, 'வாய்ப்புகள் வருகின்றன, சென்னை போகணும்' என்றார். போவார் என்றுதான் தோன்றுகிறது. இசை ஜாம்பவான்களே... இந்த கவிதைப் படகு கரைசேர நீங்கள் துடுப்பாகக் கூடாதா?

Wednesday, December 10, 2008

கவிஞர் நா.முத்துக்குமாரும், சிங்கப்பூர் தேசிய நூலகமும் (நாலு வார்த்தை-009)




"விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற பாடல் வரி தேய்ந்த ரிகார்டு மாதிரி உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது ஓரிரு மாதங்கள். அந்த பாடல் வந்த படம் 7G ரெயின்போ காலனி என்ற விவரம் அறிந்து கொண்டேன். பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் என்றும் தெரிந்து கொண்டேன். "விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற வரி பல கதைகளின் சில சம்பவங்களைக் கண்முன் கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தது. "காட்டிலே காயும் நிலவைக் கண்டு கொள்ள யாருமில்லை" என்ற சோகம் கூட ஒரு இரவில், நீண்ட சாலையின் ஆட்களற்ற தனிமையில் வானம் பார்க்க நிறுத்தியது என்னை. நா.முத்துக்குமாரைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

செல் நம்பர் வாங்கி, சிங்கப்பூரிலிருந்து நா.முத்துக்குமாரை அழைத்துப் பேசினேன். மிக எளிமையான மனிதராக இருந்தார். அந்த எளிமை இன்னும் பிடித்தது. எப்படியாவது அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வர வேண்டுமென்று தோன்றியது. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம், பாலு மீடியா என்ற முக்கோண சங்கமத்தில் முத்துக்குமார் சிங்கப்பூர் வருவதென்றும், தேசிய நூலகத்தில் "திரைப்படப் பாடல்களும், இன்றைய தமிழ் இலக்கியமும்" என்ற தலைப்பில் அவர் பேசுவதென்றும் முடிவானது. எல்லா ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்தன. விசா ஒரு பிரச்சனையில்லை என்று நம்பினேன். ஆனால் அதுதான் தலைபோகிற பிரச்சனையானது. Chennai Travel agent, on line visa application-ல் முத்துக்குமார் பெயரை எழுத்துப்பிழையோடு கீ இன் செய்து வைக்க, நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்பாக, விசா rejected. எல்லா விளம்பரங்களும் செய்யப்பட்ட நிலையில், என் மனநிலையை யூகிப்பது மிக சுலபம். அங்கே இங்கே ·போன் பேசியும், தேசிய நூலக அதிகாரி சென்னை சிங்கப்பூர் ஹைக்கமிஷனருக்கு ·பேக்ஸ் அனுப்பியும்- ஒரு வழியாக நிகழ்ச்சிக்கு முதல் நாள் காலையில் விசா வாங்கி, மதியம் ·பிளைட் பிடித்து இரவு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நா.முத்துக்குமார்.

அன்றைய தின இரவு, சிங்கப்பூர் வானொலி 96.8-ல் முத்துக்குமார் கொடுத்த பேட்டி சுவையானதாக இருந்தது. தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டவில்லை அவர். தமிழை சரியாக உச்சரிக்காத பாடகர்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்றார். எனக்கும், பேட்டியெடுத்துக் கொண்டிருந்த தீபனுக்கும் தூக்கிவாரிப் போட்டது. அது Live Programme. ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், மறுநாள் தேசிய நூலக நிகழ்ச்சியில் சரியான கூட்டம். அதற்கு அந்த பேச்சுதான் காரணமா என்று தெரியவில்லை. 100 பேருக்கும் மேல் நின்றபடி நிகழ்ச்சியை ரசித்தார்கள். தனது 'தூர்' கவிதை, மனுஷ்யபுத்திரனின் 'கால்கள்' கவிதை போன்றவற்றை மேற்க்கோள்காட்டி எளிமையாக அவர் உரையாற்றிய விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. என்ன, மற்ற நிகழ்ச்சிகள் நேரத்தை சாப்பிட்டுவிட, அவருக்கான நேரம்தான் போதவில்லை.

சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 வருட இறுதியில், ஆண்டின் ஆகச் சிறந்த தமிழ்ப் பாடலைத் தேர்ந்தெடுக்கும். கடந்த 3 வருடங்களாக கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்கள்தான் சிறந்த பாடல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கவிஞர் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதோ.. இந்த வருடமும் 100 பாடல்களை அடையாளம் காட்டி, அதிலிருந்து சிறந்த பாடலை தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கிறது ஒலி 96.8. இந்த முறையும் கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல் முதலிடத்தைப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். அப்படி அவரது பாடல் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும் நா.முத்துக்குமார் கவலைப் பட காரணமில்லை. ஒரு போட்டியில் எப்போதுமே முதலிடம் என்பது சாத்தியமில்லாத விஷயம். ஆனால், ஓடிக் கொண்டிருப்பது முக்கியம்.கண்ணதாசன் - வைரமுத்து வரிசையில் அடுத்து இடம் பிடிக்க இருக்கும் இளைய தலைமுறைக் கவிஞர் இவர்தான் என்று எப்போதுமே எனக்குள் இருக்கிறது நம்பிக்கை. அதே நம்பிக்கை ஆயிரம், பல்லாயிரம் தமிழ் நேயர்களிடமும் இருப்பதால்தான் அவரது பாடல்கள் சிங்கப்பூர் மண்ணில் ஹாட்ரிக் அடித்திருக்கின்றன.

Tuesday, December 09, 2008

வை.திருநாவுக்கரசு, ஒரு சில நினைவுகள் (நாலு வார்த்தை-008)

வை.திருநாவுக்கரசு என்ற பெயர் சிங்கப்பூர் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான பெயராக இருந்தது. 'இருந்தது' என்று சொல், இப்போது அப்படி இல்லை என்பதையோ அல்லது இப்போது அவர் இல்லை என்பதையோ உணர்ந்த்தியிருக்கும். சில வாரங்களுக்கு முன் தனது 80களில் மறைந்து விட்டார் வி.டி.அரசு. தமிழ்முரசு நாழிதளின் முன்னாள் ஆசிரியர்.

1995-ம் ஆண்டு நான் முதல்முதலாக சிங்கப்பூர் வந்தபோது, தமிழ்முரசு தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டது. அப்போது அவர்தான் அதற்கு ஆசிரியர். ஒரு முறை சற்றே சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவம் ஒன்றைக் கதையாக்கி அனுப்பியிருந்தேன். அதில் நான் பயன்படுத்தி இருந்த சொற்றொடர் ஒன்றை அப்படியே எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர் ஒரு ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். நல்லவேளை...ஒரு பெரிய blunder-ல் இருந்து தப்பித்தேன். பின்நவீனத்துவம், உடலிலக்கியம் என்ற பேச்செல்லாம் இல்லாத அந்தக் காலத்தில், அந்தக் கதையை type set செய்த பெண் 'உங்க ·பிரெண்ட் என்ன இவ்வளவு அசிங்கமா எழுதுறாரு' என்று என் நண்பனிடம் கேட்டாராம். அதுவே அன்று எனக்குக் கிடைத்த அதிகபட்ச பாராட்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சவால்மிக்க விஷயங்களை வெளியிடும் துணிச்சல் அவருக்கு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

1999-ல் அவரை நேரில் சந்திக்கவும், அவரோடு நெருங்கிப் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வருடம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதைப் பற்றி தமிழ்முரசில் எழுதலாம் என்ற யோசனை. நேரில் வரச் சொன்னார். சென்றேன். சாந்தமான புன்னகை என்று சொல்வார்களே, அந்தப் புன்னகையோடு வரவேற்றார். அவரிடமிருந்த அதீத சுத்தமும் கவனத்தை ஈர்த்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பே அணிகளைப் பற்றிய அலசல், நட்சத்திர விளையாட்டு வீரர்களைப் பற்றிய write up என்று எழுதச் சொன்னார். ராத்திரியெல்லாம் கிரிக்கெட் பார்த்து, காலையில் எழுதி ·பேக்ஸ் செய்து, ஏறக்குறைய 60 நாட்கள் சிரமகதியில் போனது வாழ்க்கை. ஆனால், முடித்து விட்டேன். ·போன் செய்து, வாய்ப்புக்கு நன்றி சொன்னேன். "நான்தான் நன்றி சொல்லனும், ஏன்னா, எந்த ஒரு வேலையும் துவங்குவது சுலபம். இறுதிவரை செய்து முடிப்பதுதான் கடினம்" என்றார் அவர். 1500 சிங்கப்பூர் வெள்ளிக்கான காசோலையையும் அனுப்பி வைத்தார். அதுதான் வை.திருநாவுக்கரசு.

பிறகு சிலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம், சகவயதுத் தோழனிடம் பேசுவதுபோல் சகஜமாகப் பேசுவார். திராவிட இயக்கங்களின் மேல் அவருக்கு இருக்கும் பாசம் அந்தப் பேச்சில் வெளிப்படும். தமிழவேள் கோ.சாரங்கபாணியோடு பழகியது, சிங்கப்பூர் தேசத் தந்தை திரு.லீ.குவான் யூவுடனாக அவரது நட்பு பற்றியெல்லாம் பேசுவார். ஒரு முறை லீ குவான் யூ அவரை அழைத்து, 'இப்போதெல்லாம் இந்தியாவில் காசு கொடுத்து டாக்டர் சீட்டு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாராம். இவரும் தயங்கியபடி, "ஆமாம்" என்றாராம். அதற்கு, "அப்படி டாக்டருக்குப் படித்த ஒருவர், நாளை உங்களுக்கோ, எனக்கோ சிகிச்சையளிக்க நேர்ந்தால் நம் கதி என்னாவது?" என்ற மறுகேள்வி பட்டென்று வந்ததாம் திரு.லீ குவான் யூ அவர்களிடமிருந்து.எவ்வளவு நியாமான கேள்வி. அப்படிப்பட்ட தலைவர்களின் பாரட்டைப் பெற்றவர் வை.திருநாவுக்கரசு. அவரது இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரால் முடியும் என்ற கேள்வி எழுமானால், அதற்கு பதில், இன்றைய நிலையில் வெறும் மெளனமாக மட்டுமே இருக்கும்.