Saturday, March 05, 2005

ரொம்ப லேட்டாய் + லேட்டஸ்டாய் ஒரு பதிவு !

சிங்கப்பூரில் நடைபெற்ற 'மாலன்' மற்றும் 'ஆர்.வெங்கடேஷ்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் போயிருந்தேன்.மாலனைப் பார்த்தேன்.பேசவில்லை. அவர் அடுத்தவர்களிடம்பேசுவதை பார்ப்பதே போதுமானதாக இருந்தது.

பொது நிகழ்ச்சிகளில் நேரம் கடைபிடித்தல் சிங்கப்பூரின் அடிப்படைப் பண்பு. ஏழு மணி நிகழ்ச்சி என்றால் ஏழுமணி. ஒன்பது மணிக்கு முடியுமென்றால் - முடியும்! அல்லது முடித்து
விடுவார்கள்.

கொடுத்த காலத்தில் பேச்சை முடித்துக் கொள்ளும் அந்தப் பண்பை ' புஷ்பலதா' மற்றும் 'அழகிய பாண்டியனிடம்' பார்க்க முடிந்தது. தயாரிப்பு, கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் இது எல்லோருக்கும் சாத்தியம் என்று தோன்றுகிறது..

முனைவர் சுப.திண்ணப்பனின் உரை சற்று அல்லது 'மிக சற்று' நீண்டு போய், உதுமான்கனிக்கு
ஒதுக்கப்பட்ட நேரத்தை சாப்பிட்டுவிட, 'நான் பேச நினைத்ததை எல்லாம் சுப.திண்ணப்பன்' அவர்களே பேசிவிட்டார். நன்றி.வணக்கம்.' என்றுகூறி தன் பேச்சை சுருக்கிக் கொண்ட
உதுமான்கனியின் நகைச்சுவை அனைவரும் ரசித்த விஷயம். ( உதுமான்கனி வழக்கறிஞர்.
எனவே, காசு கொடுத்தால்தான் பேசுவார் - என்று மாலன் அவரை கிண்டலடித்தது பின்னால்
நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களிலேயே உதுமான்கனி மரணமடைந்ததது மிகப்பெரிய சோகம் )

நிகழ்ச்சியை வழிநடத்திய நெப்போலியன், மாலன் - ஒரு புதுமைப்பித்தனைப் போல், தி.ஜாவைப்போல், ஜெயகாந்தனைப் போல் ( இன்னும் பல போல்... ) சிறப்பாக எழுதுவதாக குறிப்பிட்டார்.எனக்கென்னவோ மாலன் - மாலனைப் போல் சிறப்பாக எழுதுவதாகத் தோன்றியது.இதையே நெப்போலியனிடமும் சொன்னேன். சிரித்தார்.

தனது கதைகளை விட, கட்டுரைகளே சமூகத்தில் நிறைவான பாதிப்பை உண்டாக்கி இருப்பதாகச் சொன்னார் மாலன். ' எழுத்துதான் முக்கியம்...எழுத்தாளன் அல்ல' என்பது இன்னொரு முக்கியகருத்து.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ்முரசின் முன்னாள் ஆசிரியர் வை.திருநாவுக்கரசை பார்க்க நேர்ந்தது.கூடவே - முன்னாள் 'ஞாயிறு முரசு' பற்றிய ஞாபகங்களும் வந்தன.

சில வருடங்களுக்கு முன்புவரை, ஞாயிறு முரசுக்கென்று சுளையாக தனிப் பக்கங்கள். நிறைய இலக்கிய வாய்ப்புகள்.கூடவே கொறிக்க கொஞ்சம் சினிமா. சேலை கட்டிய பெண் மாதிரி கவர்ச்சியாக இருக்கும்அது. இக்கால ஞாயிறு முரசில் அந்த தனிப்பக்கங்களைப் பார்க்க முடியவில்லை. கதை வருகிறது.கவிதை வருகிறது.அதை ஒட்டியே ஈமச்சடங்கு செய்திகளூம் வருகிறது....

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வழக்கமான சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளில் தென்படாத
பல புதிய முகங்களைப் பார்த்தேன். அவர்களில் பலர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான சகல
அடையாளங்களோடு பின் இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அல்லது
உட்காராமல் நின்று கொண்டிருந்தார்கள்.

இவர்கள் நல்ல தமிழ் இலக்கியங்களுடனானதங்கள் தொடர்புகளை நீடித்து வந்தாலும், வேலை, வீடு, குடும்பம், நண்பர்கள், இணையம்,சன் டி.வி, அவ்வப்போது யூசூன் தியேட்டரில் தமிழ் சினிமா என்ற வட்டத்துக்குள் சுருங்கிவிட்டார்களோ என்ற ஆதங்கம் வந்தது. ஆழ யோசித்தால், சிங்கப்பூரின் அடுத்த தலைமுறைஇலக்கியத்திற்கு இவர்களும், இவர்களது பிள்ளைகளும் கணிசமாக பங்களிக்கப் போகிறார்கள்என்று தோன்றுகிறது. பங்களித்தார்களா என்பதைக் காலம் சொல்லும்.

மறுநாள் ஆர்.வெங்கடேஷின் 'நேசமுடன்' நூல் வெளியீடு. தாமதமாகத்தான் போனேன். வேலை முடிந்த கையோடு, வியர்வையோடு, ஷ¥வில் அடர்ந்து படிந்த தூசோடு, டெக்ஸி எடுத்து அங்கு போய் சேர - இலக்கிய ஆர்வம்தான் காரணம். ( இலக்கியவாதிகள் ஆளையும், கூடவே காலையும் பார்க்கிறார்கள் )

நான் போனபோது வெங்கடேஷ் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

'படைப்பிலக்கியம் மட்டுமே என் வேலை. விமர்சனங்களுக்கு, எதிர்வினைகளுக்கு, பதில் வாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை. பா.ராகவன் சம வயது நண்பன். தலையணை, தலையணையாக புத்தகம் போட்டு விட்டான்.உறங்காமல் இன்னும் இன்னும் எழுதவேண்டுமென்ற தவிப்பு எனக்குள் இருக்கிறது.' என்று சொல்லிய வெங்கடேஷிடம், எதிர்வினை, அது, இது பற்றியெல்லாம் யோசிக்காமல் நிறைய கேள்வி கேட்டார்கள். அவரும் பதில் சொன்னார்.

உண்மையில் எனக்கு வெங்கடேஷின் எழுத்துகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது அல்லது ஒன்றுமே தெரியாது. இந்த நூல் வெளியீடு அவரைப் பற்றிய அல்லது அவரது எழுத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்தது.'நேசமுடன்' கட்டுரைத் தொகுப்பை மாதிரி, வாழ்க்கை என்பது கூட புதிய புதிய அறிமுகங்களின் தொகுப்புதனே?

எம்.கே.குமார் ஒரு கேள்வி கேட்டார்.

'இப்போது நிறைய வலைப் பூக்கள் வருகிறது. இப்படிஒவ்வொருவரும் ஒரு வலைப்பூவாக திறந்து கொண்டே போனால், அதன் அடுத்த நிலைஎன்ன?' இதற்கான பதில், வேறு திசைகளை சுற்றிவிட்டு கேள்வியின் உயிர்நாடியைத்தொடாமல் ஓய்ந்து போனது. ' ஒரு ஊரில் ஒரு இட்லிக்கடை என்றால் ஓகே. ஆனால்ஒவ்வொருவனும் தன் வீட்டு வாசலில் ஒரு இட்லிக் கடையை திறந்துவிட்டால் வியாபாரம்எப்படி? அவனவன் சுட்ட இட்லியை அவனவன் சாப்பிட்டுவிட்டு உட்கார வேண்டியதுதானா?'என்ற எம்.கே.குமாரின் ஆதங்கம் யோசனைக்குரியது.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் டி.வி 'வசந்தம் சென்ட்ரலின்' துணைத் தலைவர் முகம்மது அலியும் கலந்து கொண்டார்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த நடிகர் கமல்ஹாசனோடு அவர் நடத்திய பேட்டி தரமிக்கதாக இருந்தது.

கமல்ஹாசன் என்பது அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும் பூக்கூடை. சரியான கேள்விகள். தூண்டுகோல் மாதிரியான துணைக் கேள்விகள். சுடர் விட்டார்கமல்ஹாசன். சுடர்விட வைத்தார் முகம்மது அலி.

முகம்மது அலி மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால், ' இன்னொரு ரவி பெர்னாட்' என்று பேசப்பட்டிருப்பார் அல்லது ரவி பெர்னாடை 'இன்னொரு முகம்மது அலி' என்று சொல்லும் சூழலை உருவாக்கி இருப்பார்.ஏராளமான திறமைகள் இந்த இளைஞரிடம் கொட்டிக்கிடக்கிறது.

இரண்டு புத்தக வெளியீடுகள்...இரண்டு அனுபவங்கள்...ஞாபக அடுக்குகளில் இன்னும் சில
பக்கங்கள்!

2 comments:

Vijayakumar said...

//மறுநாள் ஆர்.வெங்கடேஷின் 'நேசமுடன்' நூல் வெளியீடு. தாமதமாகத்தான் போனேன். வேலை முடிந்த கையோடு, வியர்வையோடு, ஷ¥வில் அடர்ந்து படிந்த தூசோடு, டெக்ஸி எடுத்து அங்கு போய் சேர - இலக்கிய ஆர்வம்தான் காரணம். ( இலக்கியவாதிகள் ஆளையும், கூடவே காலையும் பார்க்கிறார்கள் )
//

அப்புறம் நீங்க கேள்வி கேட்டீங்களா? கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னாங்களா இல்லையா? எப்படி ட்ரீட் பண்ணினார்கள். எனக்கு அந்த மாதிரி போனால் எப்படி பெரிய ஆட்கள் மதிப்பு கொடுப்பார்கள் என்பதை பார்க்க ஆசை. இப்போ உங்களிடமிருந்து கேட்க ஆசை

பாலு மணிமாறன் said...

Its all logical to get respect based on your looks from unknown person. But when ppl u know, tend to look in to your "looks" it makes us feel uncomfortable...: ))