Tuesday, December 02, 2008

அதிகாலை அலாரமாய் சன் டி.வி (நாலு வார்த்தை-001)

ஒவ்வொரு நாள் காலையும், காபி, டீ, இல்லாமல் என்னை எழுப்பும் சன் டி.வியின் பாடல்கள். அலாரம் போல் அவஸ்தை தரும் வஸ்து இல்லை. சத்தம் சற்று அதிகமென்றால் குறைத்துக் கொள்ளலாம். முற்றிலுமாக அணைக்க வேண்டிய அவசியமில்லை. பிடித்த பாடலென்றால், ஊர் உறங்கும் அதிகாலையில், பழைய பாடல்கள் எழுப்பி விடும் பழைய நினைவுகளோடு கண் மூடியபடி நாமும் நடக்கலாம்.

இன்று காலையும் சன் டி.விதான் எழுப்பியது. "தேவதாஸ¤ம் நானும் ஒரு ஜாதிதானடி","குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு" என்று ஒரு காலத்தில் வானொலியிலும் மனதிலும் பலமுறை ஒலித்த பாடல்கள் வரிசை பிடித்து நின்றன. "மைக்" மோகன் கோலோச்சிய 80களின் ஞாபகங்கள் வந்தன. சன் டி.வியில் போடாத ஒரு பாடலின் ஞாபகமும் கூடவே வந்தது. வந்ததன் காரணம் தெரியவில்லை. அதிகாலை - காரணம் தெரியாத பலவற்றை அசை போட ஏதுவான நேரம். பொள்ளாச்சியும், அங்கு பார்த்த "கடலோரக் கவிதைகள்' படமும், குடையோடு நடந்துபோன ரேகா டீச்சரும், சத்யராஜின் சற்று பெரிய பற்களுக்குப் பின் ஒளிர்ந்த சங்கும், அசை போட வாய்த்தது இன்று.

நாளையும் காலை வரும். சன் டி.வி பாடல்கள் வரும். என்னோடு நடக்கும் நினைவுகளும் உடன் வரும்.

No comments: