Tuesday, March 08, 2005

விதைகளும் சிதைகளும்!

முளைப்பதற்கே பிறக்கிறது விதை.
தழைப்பதும், கிளைப்பதும் பின்விளைவுகள்!

மக்கி மண்ணோடு போவதெல்லாம் சிதை.
மூடிய மண் விலக்கி
சிலிர்த்து சிரிப்பதுதான் விதை.

ஆக்க விதைகள் சில.
அழிவு விதைகள் சில.

புல்லாங்குழலின் இருண்ட நாசி வழி
புகுந்து வரும் காற்று...
போகும் வழியெங்கும் இசை விதைக்கும்.

இரவில் நிலா முளைக்க
பகல் முழுக்க
வெளிச்சம் விதைக்கும் சூரியன்.

பூமி சூழ்கொண்ட நெருப்பு விதை
வெடித்துச்சிதறி கடல்கை நீட்டி
அரித்துச் செறித்த உயிர்கள் எத்தனை?

சிங்கள நெஞ்சங்களின் வெறுப்பு விதைகளில்
வடிந்ததெல்லாம் தமிழ் ரத்தம்.

ஆக்க விதைகள் சில.
அழிவு விதைகள் சில.

முளைத்த விதைகள் நாம்.
நாம் விதைக்க, அவை முளைக்க
காத்திருக்கிறது காலம்.
நம் கையில் என்ன விதை?

Monday, March 07, 2005

சில்க்குடன் ஒரு பேட்டி ( கற்பனையில்தான்! )

எங்கள் வாலிப வானத்தில் விளக்கெரித்த நிலா நீங்கள். இருந்த நீங்கள் இல்லாமல் போனதால் - நிலவின்றி நாங்கள் இருளாகிப் போனது தெரியுமா உங்களுக்கு ?
தெரியும். இருந்தாலும் என்ன...தீபங்களும், தீக்குச்சிகளும், ஏன்...மின்மினிப் பூச்சிகளும் கூட, இரவுக்கு வெளிச்சமூட்ட முடியும்.


புரியவில்லையே....

சில்க் என்ற சங்கதி தமிழ்ச் சினிமாவில் தற்காலிகம். கவர்ச்சி என்பதோ நிரந்தரம். நானில்லாவிட்டாலும் இன்னொருவர் விளக்கெரிப்பார்.



இறப்பதற்கு முன் என்ன நினைத்தீர்கள் ?
இன்னும் கொஞ்சநாள் இருந்துதான் பார்ப்போமே என்று நினைத்தேன்...


பிறகு ஏன் மனதை மாற்றிக் கொண்டீர்கள்?
மனம் ஏற்கனவே மரணமடைந்திருக்க, உடலுக்கு எதற்கு உயிர்?·


இப்போது என்ன செய்கிறீர்கள் ?
ரம்பா, ஊர்வசி, மேனகையோடு இந்திரன் சபையில் என்னையும் இணைத்து விட்டார்கள். பூலோகத்தில் பாமரர்களை நடனத்தால் பரவசப்படுத்திய எனக்கு, மேலோகத்தில் தேவர்களைத் திருப்திபடுத்தும் உத்தியோக உயர்வு.


பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது?
பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு.


இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி....
பச்சையாக சொல்வதென்றால்.... பரிதாபத்திற்குரியவர்கள்!·


கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன ?
ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று.


இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா?
உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்.

ஏன்?
அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது.


எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?
இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது !·

Saturday, March 05, 2005

ரொம்ப லேட்டாய் + லேட்டஸ்டாய் ஒரு பதிவு !

சிங்கப்பூரில் நடைபெற்ற 'மாலன்' மற்றும் 'ஆர்.வெங்கடேஷ்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் போயிருந்தேன்.மாலனைப் பார்த்தேன்.பேசவில்லை. அவர் அடுத்தவர்களிடம்பேசுவதை பார்ப்பதே போதுமானதாக இருந்தது.

பொது நிகழ்ச்சிகளில் நேரம் கடைபிடித்தல் சிங்கப்பூரின் அடிப்படைப் பண்பு. ஏழு மணி நிகழ்ச்சி என்றால் ஏழுமணி. ஒன்பது மணிக்கு முடியுமென்றால் - முடியும்! அல்லது முடித்து
விடுவார்கள்.

கொடுத்த காலத்தில் பேச்சை முடித்துக் கொள்ளும் அந்தப் பண்பை ' புஷ்பலதா' மற்றும் 'அழகிய பாண்டியனிடம்' பார்க்க முடிந்தது. தயாரிப்பு, கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் இது எல்லோருக்கும் சாத்தியம் என்று தோன்றுகிறது..

முனைவர் சுப.திண்ணப்பனின் உரை சற்று அல்லது 'மிக சற்று' நீண்டு போய், உதுமான்கனிக்கு
ஒதுக்கப்பட்ட நேரத்தை சாப்பிட்டுவிட, 'நான் பேச நினைத்ததை எல்லாம் சுப.திண்ணப்பன்' அவர்களே பேசிவிட்டார். நன்றி.வணக்கம்.' என்றுகூறி தன் பேச்சை சுருக்கிக் கொண்ட
உதுமான்கனியின் நகைச்சுவை அனைவரும் ரசித்த விஷயம். ( உதுமான்கனி வழக்கறிஞர்.
எனவே, காசு கொடுத்தால்தான் பேசுவார் - என்று மாலன் அவரை கிண்டலடித்தது பின்னால்
நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களிலேயே உதுமான்கனி மரணமடைந்ததது மிகப்பெரிய சோகம் )

நிகழ்ச்சியை வழிநடத்திய நெப்போலியன், மாலன் - ஒரு புதுமைப்பித்தனைப் போல், தி.ஜாவைப்போல், ஜெயகாந்தனைப் போல் ( இன்னும் பல போல்... ) சிறப்பாக எழுதுவதாக குறிப்பிட்டார்.எனக்கென்னவோ மாலன் - மாலனைப் போல் சிறப்பாக எழுதுவதாகத் தோன்றியது.இதையே நெப்போலியனிடமும் சொன்னேன். சிரித்தார்.

தனது கதைகளை விட, கட்டுரைகளே சமூகத்தில் நிறைவான பாதிப்பை உண்டாக்கி இருப்பதாகச் சொன்னார் மாலன். ' எழுத்துதான் முக்கியம்...எழுத்தாளன் அல்ல' என்பது இன்னொரு முக்கியகருத்து.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ்முரசின் முன்னாள் ஆசிரியர் வை.திருநாவுக்கரசை பார்க்க நேர்ந்தது.கூடவே - முன்னாள் 'ஞாயிறு முரசு' பற்றிய ஞாபகங்களும் வந்தன.

சில வருடங்களுக்கு முன்புவரை, ஞாயிறு முரசுக்கென்று சுளையாக தனிப் பக்கங்கள். நிறைய இலக்கிய வாய்ப்புகள்.கூடவே கொறிக்க கொஞ்சம் சினிமா. சேலை கட்டிய பெண் மாதிரி கவர்ச்சியாக இருக்கும்அது. இக்கால ஞாயிறு முரசில் அந்த தனிப்பக்கங்களைப் பார்க்க முடியவில்லை. கதை வருகிறது.கவிதை வருகிறது.அதை ஒட்டியே ஈமச்சடங்கு செய்திகளூம் வருகிறது....

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வழக்கமான சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளில் தென்படாத
பல புதிய முகங்களைப் பார்த்தேன். அவர்களில் பலர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான சகல
அடையாளங்களோடு பின் இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அல்லது
உட்காராமல் நின்று கொண்டிருந்தார்கள்.

இவர்கள் நல்ல தமிழ் இலக்கியங்களுடனானதங்கள் தொடர்புகளை நீடித்து வந்தாலும், வேலை, வீடு, குடும்பம், நண்பர்கள், இணையம்,சன் டி.வி, அவ்வப்போது யூசூன் தியேட்டரில் தமிழ் சினிமா என்ற வட்டத்துக்குள் சுருங்கிவிட்டார்களோ என்ற ஆதங்கம் வந்தது. ஆழ யோசித்தால், சிங்கப்பூரின் அடுத்த தலைமுறைஇலக்கியத்திற்கு இவர்களும், இவர்களது பிள்ளைகளும் கணிசமாக பங்களிக்கப் போகிறார்கள்என்று தோன்றுகிறது. பங்களித்தார்களா என்பதைக் காலம் சொல்லும்.

மறுநாள் ஆர்.வெங்கடேஷின் 'நேசமுடன்' நூல் வெளியீடு. தாமதமாகத்தான் போனேன். வேலை முடிந்த கையோடு, வியர்வையோடு, ஷ¥வில் அடர்ந்து படிந்த தூசோடு, டெக்ஸி எடுத்து அங்கு போய் சேர - இலக்கிய ஆர்வம்தான் காரணம். ( இலக்கியவாதிகள் ஆளையும், கூடவே காலையும் பார்க்கிறார்கள் )

நான் போனபோது வெங்கடேஷ் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

'படைப்பிலக்கியம் மட்டுமே என் வேலை. விமர்சனங்களுக்கு, எதிர்வினைகளுக்கு, பதில் வாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை. பா.ராகவன் சம வயது நண்பன். தலையணை, தலையணையாக புத்தகம் போட்டு விட்டான்.உறங்காமல் இன்னும் இன்னும் எழுதவேண்டுமென்ற தவிப்பு எனக்குள் இருக்கிறது.' என்று சொல்லிய வெங்கடேஷிடம், எதிர்வினை, அது, இது பற்றியெல்லாம் யோசிக்காமல் நிறைய கேள்வி கேட்டார்கள். அவரும் பதில் சொன்னார்.

உண்மையில் எனக்கு வெங்கடேஷின் எழுத்துகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது அல்லது ஒன்றுமே தெரியாது. இந்த நூல் வெளியீடு அவரைப் பற்றிய அல்லது அவரது எழுத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்தது.'நேசமுடன்' கட்டுரைத் தொகுப்பை மாதிரி, வாழ்க்கை என்பது கூட புதிய புதிய அறிமுகங்களின் தொகுப்புதனே?

எம்.கே.குமார் ஒரு கேள்வி கேட்டார்.

'இப்போது நிறைய வலைப் பூக்கள் வருகிறது. இப்படிஒவ்வொருவரும் ஒரு வலைப்பூவாக திறந்து கொண்டே போனால், அதன் அடுத்த நிலைஎன்ன?' இதற்கான பதில், வேறு திசைகளை சுற்றிவிட்டு கேள்வியின் உயிர்நாடியைத்தொடாமல் ஓய்ந்து போனது. ' ஒரு ஊரில் ஒரு இட்லிக்கடை என்றால் ஓகே. ஆனால்ஒவ்வொருவனும் தன் வீட்டு வாசலில் ஒரு இட்லிக் கடையை திறந்துவிட்டால் வியாபாரம்எப்படி? அவனவன் சுட்ட இட்லியை அவனவன் சாப்பிட்டுவிட்டு உட்கார வேண்டியதுதானா?'என்ற எம்.கே.குமாரின் ஆதங்கம் யோசனைக்குரியது.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் டி.வி 'வசந்தம் சென்ட்ரலின்' துணைத் தலைவர் முகம்மது அலியும் கலந்து கொண்டார்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த நடிகர் கமல்ஹாசனோடு அவர் நடத்திய பேட்டி தரமிக்கதாக இருந்தது.

கமல்ஹாசன் என்பது அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும் பூக்கூடை. சரியான கேள்விகள். தூண்டுகோல் மாதிரியான துணைக் கேள்விகள். சுடர் விட்டார்கமல்ஹாசன். சுடர்விட வைத்தார் முகம்மது அலி.

முகம்மது அலி மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால், ' இன்னொரு ரவி பெர்னாட்' என்று பேசப்பட்டிருப்பார் அல்லது ரவி பெர்னாடை 'இன்னொரு முகம்மது அலி' என்று சொல்லும் சூழலை உருவாக்கி இருப்பார்.ஏராளமான திறமைகள் இந்த இளைஞரிடம் கொட்டிக்கிடக்கிறது.

இரண்டு புத்தக வெளியீடுகள்...இரண்டு அனுபவங்கள்...ஞாபக அடுக்குகளில் இன்னும் சில
பக்கங்கள்!

Thursday, March 03, 2005

உடைந்து மிதக்கும்...


நேற்றை மறக்கும் இன்று.

நாளைகள் இன்றை மறக்கும்.

இழப்பவை மட்டுமே
இருந்து விடுகின்றன நெஞ்சில்.
இருப்பவை மறந்து விடுகின்றன.

மறந்தவற்றை வரிசைப்படுத்தி
வாசித்துப் பாருங்கள்...
மறக்காதவை ஆகிவிடும்.
வரிசைப்படாதவை மட்டுமே
மறந்தவை ஆகின்றன.

மறந்தும் மறவாதநிலை இருப்பதுண்டா?
இருக்கலாம்.

அவனுக்கும் இவனுக்குமான நிகழ்வுகளில்
அவனதை இவனும்
இவனதை அவனும் மறப்பார்கள்.
எதிரில் பார்க்கையில் சிரிப்பார்கள்.
வசதிக்கேற்ப மறப்பதுதான் வாழ்க்கை.

அவனுக்கும் இவளுக்குமான நிகழ்வுகளில்
அவனதை இவளும்
இவளதை அவனும் மறப்பதில்லை.
மறந்ததாய் சொல்வார்கள்.
பொய்யாக வாழ்வதும்தான் வாழ்க்கை.

அவர்களுக்கும் இவர்களுக்குமான
நிகழ்வுகளில்
அவர்களதை இவர்களும்
இவர்களதை அவர்களும் மறப்பதுண்டு.
மன்னிப்பதேயில்லை.
விழிப்போடு வாழ்வதும்தான் வாழ்க்கை.

எனவே அன்பர்களே.....
இதுவரை படித்ததை இப்போதே மறக்கலாம்.....
இது மறதியால் எழுதிய கவிதை.!

Wednesday, March 02, 2005

போன்சாய் செடியாகிப்போன தமிழ் ஆலமரம்

இப்படிச் சொல்லி வேதனைப்பட்டவர் பிரபல மலேசியத்தமிழ் எழுத்தாளர் சை.பீர்முகம்மது. சிங்கப்பூரில் நடந்த " கடற்கரைச்சாலையில் கவிமாலை " நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய விரிவான உரையை நண்பர் பனசை நடராஜன் பதிவு செய்தார். அதை அப்படியே உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்......


கவிமாலை (26/02/2005)

மாதந்தோறும் இறுதி சனிக்கிழமையன்று நடைபெறும் ‘கடற்கரைச்சாலை கவிமாலை’ நிகழ்ச்சி இம்மாதமும் ‘கம்போங் கிளாம்’ சமூக நிலையத்தில் பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது.

தொடக்கவுரை ஆற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக்கு பார்வையாளர்களாக வந்த பலர் இன்று நல்ல கவிஞர்களாக வளர்ந்திருப்பதுடன், ஆசியான் கவிஞர் திரு.க.து.மு.இக்பால் அவர்களின் பயிற்சியின் காரணமாக ‘மரபுக் கவிதை’ எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த மூத்த படைப்பாளிகளுக்கு கவிமாலை சார்பாக ‘கணையாழி விருது’ வழங்கப் படுவதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அடுத்து, கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளயும், படித்து ரசித்த கவிதைகளயும் பகிர்ந்து கொண்டனர்.

தமிழக எழுத்தாளர் டாக்டர்.ஹிமானா சையத் அவர்களை அறிமுகப் படுத்திப் பேசிய ஆசிரியர் ப.திருநாவுக்கரசு, ‘தமிழில் நாற்பத்தைந்து நூல்கள் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலங்கையிலும், கேரளாவிலும் பாடத்திட்டத்தில் உள்ளன’ என்றார்.

சமூக சேவைக்காகவே எழுதுகிறேன் என்று தொடங்கிய திரு,ஹிமானா சையத், ‘தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சுக்கோ உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ..’ எனத் தொடங்கும் பாடலைப் பாடி பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

‘ஒண்ணுமில்லா மாப்பிள்ளைக்கு
ஒரு லட்சம் கைக்கூலி..!
உன்னுடைய அப்பன் ஆத்தா
சொத்து பத்து எல்லாம் காலி..

உலகம் உன்னை பத்தி
உசத்தியா பேச வேணும்!
அதுக்கு ஒரே வழி கல்விதான்
அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்!”


என்ற சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு சொந்தக் காரரான இவர் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்திருந்தார் மலேசிய எழுத்தாளர் திரு. சை.பீர்முகமது. மலேசிய எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், துணைத்தலைவராகவும் இருந்தவர். ‘கைதிகள் கண்ட கண்டம்’ என்ற பயண நூலையும், ‘வெண்மணல்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘பெண்குதிரை’ என்ற நாவலையும், ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற வரலாற்றுத்தொடரையும் எழுதியுள்ளார். தனது முகில் பதிப்பகம் மூலமாக மலேசிய எழுத்தளர்களின் ஐம்பது ஆண்டுகால சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மூன்றுத் தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

‘உண்மைகளை ஒப்பனையின்றி உரக்கச் சொல்லும் தன்மையினால் அதிகமாக நேசிக்கப் படுகிற, வாசிக்கப்படுகிற, விமர்சிக்கப் படுகிற, ஆனால் ஒதுக்க முடியாத எழுத்துக்கள் இவருடையது’ என்று திரு பீர்முகமதுவை அறிமுகப் படுத்திப் பேசினார் சிங்கை எழுத்தாளர் திரு.பாலு மணிமாறன்.

‘முன்பெல்லாம் பெண்கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாக இருந்தார்கள். ஆனால் இன்று நிறைய பெண்கள் சிறப்பாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனத் தன் உரையைத் தொடங்கினார் திரு பீர்முகமது.

"ஒவ்வொரு என்ணூறு ஆண்டுகளிலும் தமிழ் இலக்கிய உலகம் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தொடங்கும் என்ணூறு ஆண்டுகள் தமிழுக்கு சிறப்பானதாக இருக்கும். இணையத்தின் மூலமாக அசுர வளர்ச்சி கண்டு வரும் தமிழ், தற்போது கைப்பேசியிலும் குறுஞ் செய்தியாக வலம் வரத்தொடங்கி விட்டது. இருபத்ததையாயிரம் பேர் மட்டுமே படிக்கும் இடிசு என்ற ஹீப்ரு மொழிப் படைப்பு நோபல் பரிசு பெறுகிறதென்றால் எண்பது நாடுகளில் பரவிக் கிடக்கும்எம்மொழியாம் செம்மொழித் தமிழ் எப்படி அழியும்?" என்ற கேள்வியினால் நல்லதொரு நம்பிக்கையை விதைத்தார். அதே சமயம் தமிழர்களிடம் இருக்கும் தாழ்ந்த குணங்களையும் பட்டியலிட்டார்.

‘அன்று முதல் இன்று வரை தமிழ் இலக்கியங்களைப் பற்றிய சரியான மதிப்பீடுகள் இல்லை. ஓலைச்சுவடிகளை ஆற்றில் வீசி எறிந்து, எதிர்த்து வருபவையே நல்லவை என்று நம்பிய நம் முன்னொர்களின் அறியாமையால் எத்தனை நிகரற்ற நூல்கள் அழிந்தனவோ?
இன்றும் தமிழிலிருந்து தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளமொழிப் படைப்புகளெல்லாம் பல ஞானபீட விருதுகள் பெற்றிருக்க நம் தமிழ் மொழியில் திரு.அகிலனுக்கு மட்டுமே கிடைத்ததற்கு என்ன
காரணம்? அவருக்கு விருது வழங்கப் பட்டதை எதிர்த்து சுமார் இரண்டாயிரத்து என்ணூறு எதிர்ப்புக் கடிதங்கள் தமிழர்களிடமிருந்து போனதுதான். அதனால்தான் ஆலமரமாக தழைக்க வேண்டிய தமிழ் இலக்கிய உலகம் ‘போன்சாய்’ என்ற தொட்டிச் செடியாகச் குறுகி விட்டதோ?’ என்றார் வேதனையுடன்.

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டுக் கறுப்பின எழுத்தாளன், சிறைச்சாலையில் கழிவறைக்காகிதத்தில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற நாவலை எழுதினான். பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றுமில்லை எனத் திருப்பித் தரப்பட்ட வெள்ளையரின் நிறவெறிக்கெதிரான அந்த நாவல் பெரியதொரு மறுமலர்ச்சியை மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.அதுபோன்று சுயமாக, நீங்களாக சிந்தித்து எழுதும் படைப்புகளே உங்களை அடையாளப் படுத்தும். அதற்கு ‘உழைத்து உண்மையாக எழுதுங்கள்..

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில்....

‘இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த
நான் என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாகக் கவிதை புனைந்ததால்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவனிக்கப் பட்டார். மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையில்

‘நம்மைக் கொண்டு
எத்தனை சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள்
ஒரு இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!’

போன்ற வித்தியாசமான சிந்தனைதான் இன்று எழுத்தாளர்களுக்குத் தேவை.

மலேசியாவை விட சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள். தமிழ்முரசு லதா எழுதிய ‘தீவெளி’ கவிதை நூலின் சிறப்புகளைப் பற்றி மலேசியாவில் ‘தென்றல்’ பத்திரிக்கையில் ‘சிந்தையே என் சித்தமே’என்ற பகுதியில் எழுதியுள்ளேன். மேலும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமான இலக்கிய உறவுகளை வலுப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் பிறந்த இளைஞர்களையும் படைப்பாளிகளாக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தையும் ஆலோசனைகளையும் தெரிவித்தார்.

‘முதலில் நான் மனிதன், அடுத்து நான் தமிழன், இறுதியாகத்தான் என் மதத்தைச் சார்ந்தவனாக அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்’ என்றார் முத்தாய்ப்பாக.

‘சுமை’ என்ற தலைப்பில் கவிஞர்கள் எழுதி வந்த கவிதைகளில் திரு.கருணாகரசு, திரு.திருமுருகன், திருமதி.மீரா மன்சூர் ஆகியோரின் கவிதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டன. கவிஞர்கள் அருண்கணேஷ், சேவகன் இருவரும் இம்மாதப் பரிசுகளை வழங்கியிருந்தனர்.

அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார் திரு பிச்சினிக்காடு இளங்கோ. நல்லதொரு தமிழ் நிகழ்ச்சிக்கு திரளாக வந்திருந்தோரைக் காணுகையில் மெல்லத் தமிழ் இனிச் சாகாது.. உலகம் உள்ள வரை தழைத்து வாழும்! என்றேத் தோன்றியது.

- பனசை நடராஜன், சிங்கப்பூர்-

Tuesday, March 01, 2005

பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?

பொதுமேடைகளில் உற்சாகமிகுதியால் கங்கைஅமரன் அள்ளிக் கொட்டும் அபத்தங்கள் உலக பிரசித்தம். ஆனால் அவரிடமிருந்து மண்டைக்குள் மணியடிக்கும் அற்புதமான வரியொன்று வெளிப்பட்டதை பத்திரிக்கைகளில் படித்தேன்.

இசையமைப்பாளர் தேவா வீட்டுக் கல்யாணம். மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது...பாடகர் " பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? " என்று உருகிக் கொண்டிருக்கிறார்...அதைக்கேட்டுவிட்டு மேடையேறும் கங்கைஅமரன் மைக்கைப் பிடித்து, அந்த வரியை கொஞ்சம் மாற்றிப் பாடுகிறார்..." பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா? "...வேடிக்கையாகத்தான் பாடுகிறார்...ஆனால் அந்த வரி, நாகரிக வேகத்தில், மாற்றுக்கலாச்சாரங்களின் தாக்கத்தில், சுயமிழந்து கொண்டிருக்கும் நமது இனத்தின் முகவரி காட்டும் வரியாக உரத்து ஒலிக்கிறது.....

யோசிக்கிறேன்...."ஆட்டோகிராப்" கதாநாயகன் அரைடிரவுசரில் காதலித்த, தாவணி அணிந்து, மாரணைத்த புத்தகங்களோடு நடந்து திரிந்த எம்மினப் பெண்கள் எங்கே?

என்பதுகளின் இறுதிவரை பெரும்பாலான தமிழ்நாட்டுப்பள்ளிகளில் பெண்களுக்கான சீருடை பாவாடை தாவணியாகத்தான் இருந்ததது. இன்று- மிகப்பல பள்ளிகளில் சுரிதார் அணிந்தே பள்ளிக்கு வருகின்றன தமிழ் சிற்பங்கள்! எப்படி வருகிறது என்பதை உணரமுடியாமலே வந்துவிடும் இரவு மாதிரி, தாவணிகளை உருவிக்கொண்டு நிற்கிறது சுரிதார்,ஜீன்ஸ் மற்றும் பிற சங்கதிகள்.

தாவணிக்கு மட்டுமா இந்த நிலை ... வேட்டி மட்டும் என்ன வாழ்கிறதாம் ? அரசியல் கட்சிகளின் தயவால், வேட்டிகள் - கரைகளோடும், கழுவ முடியாத கறைகளோடும் பிழைப்பு நடத்துகின்றன. மற்றபடி எஞ்சிய தமிழ் மக்கள்ஸ் " நாங்க பேண்ட் சட்டைக்கு மாறி ரொம்ப நாளாச்சு. நீங்க ? " என்று கேட்டபடி கார்பரேட் உலகிற்குத் தக்கபடி தங்களை உருமாற்றி விட்டார்கள்.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்... ஏன் நிகழ்ந்தது ?

யோசித்துப்பார்த்தால் - பரிணாம வளர்ச்சியால் இல்லாமல்போன மனிதவால் மாதிரி இந்த ஆடைகள் இடமற்றுப் போய்க்கொண்டிருக்கும் உண்மை புரியும். பெண்கள் அடுப்பூதும் நிலை உடைத்தெரிந்து, படிப்பதற்கும், வேலைக்கும் வந்த பிறகு, பாவாடை தாவணி, சேலை போன்ற ஆடைகளை அணிவதில் இருக்கும் நடைமுறை சங்கடங்கள் இந்த மாற்றத்திற்கு முதல் காரணம். இயல்பாகவே நம் மரபணுக்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வேற்றுக் கலாச்சார மோகமும், பல ஆண்டுகள் போராடியும் பெரியாரால்கூட மாற்றிவிட முடியாத நம்மைப் பற்றிய நமது தாழ்வான மதிப்பீடுகளும் - இன்னொரு காரணம்.

கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில், முடிந்த மட்டும், பிடிவாதாமாக பழைய மரபுகளை கட்டிக்காப்பதற்கும், கட்டி அழுவதற்கும், நாமென்ன மலையாளிகளா? வெள்ளைக்கார பில்கேட்ஸிக்கு பக்கத்திலிருக்கும் தமிழர்கள் இல்லையா .... அதான் - மாறிட்டோம் !

"பாவாடை தாவணி / சேலையைப்போல் பெண்களை அழகாக, அதே சமயம் கவர்ச்சியாகக் காட்டக் கூடிய ஆடையை இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அமெரிக்கர்கள் / ஐரோப்பியர்களால் வடிவமைக்கவே முடியாது " என்று நம்மின ஆண்கள் நினைப்பது, நம்மினப் பெண்களுக்குத் தெரியும் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் இந்திய சமூகம், சிங்கப்பூரின் புதிய பிரதமர் லீ சியான் லூங்கிற்கு விருந்தளித்தபோது, ஏறக்குறைய 80 சதவீதப் பெண்கள் சேலையணிந்து வந்து அந்த நினைப்பு சரியென்று நிரூபித்தார்கள்.

இப்படியாக - கோயில்களும், திருவிழாக்களும் கொஞ்சம் போலாவது காப்பாற்றிவரும் வேட்டி, பாவாடை, தாவணி, சேலை போன்ற நமது பாரம்பரிய பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை மேலும் காப்பாற்ற டாக்டர் ராமதாசு, தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏதாவது செய்தால், ஆதரவுக்கரம் நீட்ட நாமெல்லாம் தயார்தான். ( அதற்காக, சேலைகட்டி நடிக்காத ஜூலியா ராபர்ட்ஸின் படங்களைத் திரையிடும் திரையரங்குகளின் முன் எங்கள் கட்சி ஆட்களும், தமிழ் வலைப்பதிவர்களும் தீக்குளிப்பார்கள் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள் ஐயா! )

என்னாலான இன்னொரு யோசனை - வரும் மே மாதம், வெயில் மண்டையைப் பிளக்கும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம், " சேலை அழகுராணி / தாவணி அழகு ராணி 2005 " போன்ற போட்டிகளை நிறைய நடத்தலாம். அதன் மூலம் நமது பாரம்பரிய ஆடைகள் மீது நிறைய விழிப்புணர்ச்சியும், பார்ப்பவர்களது கண்களுக்கு குளிர்வுணர்ச்சியும் ஏற்படுவது நிச்சயம், நிச்சயம் நிச்சயம் !!!!

Monday, February 28, 2005

ஏதேனும் விட்டுச்செல் !

முதுகு வளைந்த கேள்விக் குறிகள்
மதிக்கப்படுவதில்லை.

நிமிர்ந்த ஆச்சரியக் குறிகளை
தென்றல் கூட முறித்து விடும்.

நிழல் என்ற அடைப்புக்குறிக்குள்
புல்கூட வளர்வதில்லை.

மரணம் என்ற முற்றுப் புள்ளியை
விரும்பியது யார் ?

நீ வினாக்குறியா ?
ஆச்சரியக்குறியா ?
அல்லது அடைப்புக்குறியா ?

ஏதாவது ஒன்றாய் இருக்கலாம்.
தப்பில்லை.

கூட்டலும் கழித்தலும்தான்
வாழ்க்கை.

சமன் செய்து பார்க்கையில்
மீதமாக வேண்டாம் பாவங்கள்.

வெற்று என்ற பெயரும் வேண்டாம்...
முற்றுப் புள்ளியாயேனும்
முடிந்து போ !

Friday, February 25, 2005

சுனை விடும் மூச்சு - ஒரு சிங்கப்பூர் கவிதைத் தொகுப்பு

பழகிப்பார்த்தவர்களுக்கு தெரியும்...வாசித்தல் என்பது ஒரு சுகானுபவம்! வாசிக்கிற புத்தகம் நேசிக்கிற மாதிரி இருந்து விட்டாலோ, ஆஹா...இன்னும் சுகம்!

சில புத்தகங்கள் வாசிப்பு என்ற நிலை தாண்டி யோசிப்பு என்ற நிலைக்கு நம்மை இட்டுச்சென்று விடும்.அப்படிப்பட்டவை காலம் கடந்தும் நம் நெஞ்சில் நிலைத்து நின்று விடுகின்றன...காற்றில் சலனப்படும் அலையாக மனசுக்குள் அவை எழுப்பிவிடும் சிந்தனைகள் காலத்தின் ஓட்டத்தில் ஓய்வதேயில்லை...சமீபத்தில் அப்படியொரு புத்தகம் படிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.புத்தகத்தலைப்பு -சுனை விடும் மூச்சு! எழுதியவர் - இந்திரஜித் என்ற சிங்கப்பூரர்! இது ஒரு கவிதைத்தொகுப்பு.

வழக்கமான கவிதை தொகுப்புகளுக்கு இருக்கும் பளபளப்பு இல்லாமல், ஒப்பனைஇல்லாதபெண் போன்ற எளிமையான அட்டைப்படம்...கதவு இல்லாத வீடு மாதிரி முன்னுரையோ,முகவுரையோ இல்லாமல் கவிதைகள் சட்டென துவங்கிவிட..நமக்கு ஆச்சரியம்! வாசகரோடு தான் பேசுவது தவறு...தனது கவிதைகள் மட்டும்தான் பேசவேண்டும் என்ற கவிஞரின் நினைப்பு நமக்கு புரிகிறது...

நமது வாழ்க்கையில் தினமும் பார்க்கின்ற பொருள்கள் கூட இந்தக்கவிஞனின் பார்வையில் புதுப்புது அர்த்தங்களோடு தம்மை வெளிப்படுத்திக்கொள்கிறபோது...அட! என்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து உட்காருகிறது மனசு!

குறுக்குப் பாலமாய்
புளோக்குகளூக்கு
இடையில் தொங்கும் வயரில் -

ஆடைகள் குத்தி மாட்டப்பட்ட
மூங்கில் கம்புகளில்

ஏதோ சொல்ல நினைத்து
கொஞ்சம் தயங்கியபின்
விருட்டென்று
பறக்கிறது ....

அந்த
ஒற்றைக்கால் மைனா.

இந்தக்கவிதை அந்த இனத்தில் சேர்த்தி. மைனாவின் கால்களை முடமாக்கிய கவிஞர்,எந்திரத்தனத்தால் முடமாகிப்போன நமது வாழ்க்கையின் கால்களுக்கு கவிதைமருந்திட்டிருப்பது சுகமான சோகம்...இந்தக்கவிதை எழுத்தாளர் சுஜாதாவையும் பாதிக்க..கனையாழியின்கடைசிப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். காதலைப்பாடாதவன் கவிஞனா? காதல் இந்தக்கவிஞரையும் பாடாய் படுத்தியிருப்பதைபார்க்க முடிகிறது.

காரை விற்றவன்
பழைய ஞாபகத்தில்
சாவியைத் தேடுவது போல!
என்னுள் அந்த அலை
எழுந்து கொண்டே இருக்கிறது.

என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.

பிழைப்பா,காதலா என்ற கேள்வி வரும்போது,பிழைப்பை நோக்கி ஓடோ ஓடென்றுஓடி விட்டு,பின்னர் கவிதையாகப் பெருமூச்சு விடும் ஏக்கத்தின் அடையாளங்கள் இந்தக்கவிதையில் ஏராளம்...

தாயை மகள் பிரிவதும்
தந்தையை மகன் பிரிவதும்
நண்பர்கள் பிரிய நேர்வதும்
ஏதோ ஒரு பிழைப்பைத் தேடிதான்!

அன்பே
உன் பிழைப்பு
எப்படி இருக்கிறது?

என்று கவிஞர் கேட்கும்போது...அதிர்ச்சி! 'உன் பிழைப்பு' என்ற வார்த்தை அந்தக்காதலை,அந்தக்காதலியை கொச்சைப்படுத்தி விட்டதோ என்ற நெருடல்.

மூளையை முன்வைக்கும்வாழ்க்கை வியாபாரத்தில்இதயம் இழக்கப்படுகிறது.
என அடுத்துவரும் வரிகள்...இதயத்தை இழந்துவிட்டால் இப்படியெல்லாம் பேசுவதுஇயல்புதானே என நினைக்கவைத்து நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன.

நகரமும்,நாகரிகமும் வாழ்க்கை வசதிகளை பெருக்கி, மனதின் வசதிகளை சுருக்கிவிட்டசோகத்தை சொல்லாமல் சொல்கிறது இவரது இன்னொரு கவிதை...

துருவங்கள்
எப்படி சந்திப்பது
புருவங்களே
சந்தித்துக் கொள்ளாதபோது ?

அதே நகரம், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியேஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் அவனுக்குக் கொடுத்துவிட்டதை ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவிலும் "அதோ ஒரு கிழவன் டைம்ஸ் நாளிதழை ஒரு வரி விடாமல் படித்துக் கொண்டிருக்கிறான்" என்ற வரிகள் படமாக்கி மனதில் பதியவைத்தும் விடுகிறது.

ஒரு மழை நாளில், புத்தகநிலைய வாசலில் தனியாக மாட்டிக்கொண்ட அனுபவம் கூடஇவரிடம் கவிதையாகி இருக்கிறது.

படிப்பதற்கு ஒன்றும் இல்லாமல்
நூல் நிலைய வாசலில்
ஒரு மனிதனால்
என்ன செய்ய முடியும்?

இங்கே ஒருத்தியை எவனாவது
கற்பழித்தால் கூட
கையில் புத்தகத்தை
வைத்திருக்கும் மனிதனால்
அலறும் மழைக்குள்
என்ன செய்ய முடியும்?

சுயநலத்தால் நனைந்து போன மனிதன் இயலாமை இதழ் பிரித்தால் இப்படித்தானேபேசமுடியும்?மனிதனை இப்படியெல்லாம் கிண்டல் செய்வதில் இதில் வரும் கவிதைகள்சுகம் காண்கின்றன.

அங்கதச்சுவை இந்தக்கவிதைகளில் தூக்கலாக இருப்பதோடு,அவற்றை கை தூக்கியும் விடுகின்றன...

எவனாவது
எழுதி விடுவானோ
என்ற பயத்தில்
நிலா வாழைமரப் புதரில்.

மீ கடைக்கார
முதலாளியின்
வேட்டிக்கும் கைலிக்கும்
வெளுக்க நேரம் வரும்போது
எனக்கா வராது?

நேற்றைய மரம் எதுவென்று
தேடித்தவிக்கும் நாய்.

என்பதெல்லாம் சில உதாரணங்கள்.

இதுதான் என்றில்லாமல் எல்லா திசைகளிலும் பறக்கும் பட்டம் மாதிரி கண்ட திசைகளில்பறக்காமல் ஏதோ இலக்கைத்தேடி பறந்திருக்கிறது இந்திரஜித்தின் கவிதைகள்.

ஏதோ போக்கிடம்
ஏதோ இலக்கு
இல்லாவிட்டால்
ஏன் நடக்க வேண்டும்?

என்பது கவிஞரின் கேள்வி.

தமிழகம் தாண்டி பறந்துகிடக்கும் தமிழ்கவிதைகளில் தரமான கவிதைகள் பல உண்டுஎன்பதற்கு இந்த சிங்கப்பூர் கவிதை தொகுப்பு ஒரு உதாரணம்.இது விமர்சனக்கத்திகொண்டு கீறிப்பார்க்கும் எத்தனிப்பல்ல,வாசகநிலையில் இருந்து வீசப்பட்டிருக்கும்சாமரம்.உலகை சுருக்கிக்கொண்டிருக்கும் விஞ்ஞானத்தின் வீச்சில் தமிழ் கவிதைகள்மட்டும் விடுபடுவது நியாயமா?சிக்க வைப்போம்...

ஒரு கிணற்றுக்குள்
வீசப்படும் வாளி
திரும்பி வரும்போது
ஒரு தவளைக்கு
விடுதலை கிடைக்கலாம்...என்று முடிந்திருக்கிறது இந்திரஜித்தின் முத்தாய்ப்புக்கவிதை.

இந்த கவிதைத்தொகுப்பு நம் மனதுக்குள் இருந்தும் சில நினைவுகளுக்கு விடுதலை தரத்தவறவில்லை!வாசித்துப்பாருங்கள்...உங்களுக்கும் அந்த அனுபவம்வாய்க்கலாம்!!

Thursday, February 24, 2005

திட்டமிடல் (Planning) என்ற கெட்ட வார்த்தை

சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்திப்பைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அதை ஒருங்கிணைத்த எம்கே குமாரின் முயற்சியும், திட்டமிடலும் மனதுக்குள் அடிக்கடி வந்து போனது. கூடவே - திட்டமிடல் எந்த அளவு அவசியம்..எதற்கெல்லாம் அவசியம் என்ற கேள்வியும்!

யோசித்துப் பார்த்தால், நாம் வாழ்க்கையின் பெரும்பாலான நிகழ்வுகளை தெரிந்தோ தெரியாமலோ திட்டமிட்டே வாழ்ந்து வருகிறோம் என்ற உண்மை புரிகிறது. 'பையனை இஞ்சினியராக்க வேண்டும்...பெண்ணை டாக்டராக்க வேண்டும்..' என்று திட்டமிட்டு காய் நகர்த்தும் காய் நகர்த்தும் பெற்றோர் துவங்கி, 'அடுத்த valentines dayக்குள்ள அஜிதாவை எப்படியாவது மடக்கணும் மச்சி ( காதலில்தான்! )..' என்ற லட்சிய நோக்கோடு செயல்படும் கத்திவாக்கம் கார்த்திக் வரை ஏதோ ஒருவகையில் திட்டமிட்டே வாழ்ந்து வருகிறார்கள். அந்த திட்டமிடலின் ஆழத்தை, அகலத்தை, உயிர்தோய்ந்த ஈடுபாட்டைப் பொறுத்து வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப் படுகின்றன.

திட்டமிடல் (Planning) என்ற வார்த்தைக்கு சரியான உதாரணம் சிங்கப்பூர். 1965ல் மலேசியாவை விட்டு வெளியேற்றப்பட்டபோது, பெற்றோரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பிள்ளையின் தவிப்புதான் இங்கும். பலருக்கும் எதிர்காலம் என்பது குழப்பமானதாகவும், அவநம்பிக்கையூட்டுவதாகவுமே இருந்தது.

லீ குவான் யூ என்ற மாமனிதரின் மனதிலோ வேறு திட்டங்கள். அவருக்கு சிங்கப்பூரின் பல, பலவீனங்களைப் பற்றிய தெளிவிருந்தது; உடனடியாக செய்ய வேண்டிய காரியம் என்ன.. பத்து வருடங்களுக்குப்பின் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது பற்றி தீர்க்கமான முடிவிருந்தது; சின்னஞ் சிறிய சிங்கப்பூரை உலகே வியக்கும் நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டமும் இருந்தது (action plan). இன்று பல பில்லியன் டாலர் அன்னியச் செலாவணி கையிருபோடு, எந்த சோதனையையும் எதிர்கொள்ளூம் தைரியத்தோடு நிமிர்ந்து நிற்கிறது சிங்கப்பூர். All credits goes to honourable Minister Mentor Mr. Lee Kwan yew !

1965ல் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் இதுவரை சாதித்ததை 1947ல் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் இதுவரை சாதிக்க முடியாதது ஏன்? பதில் வெகு சுலபமானதுதான்...சுதந்திரத்திற்குப்பிறகு இன்றைய தேதிவரை தொலைநோக்கும், திட்டமிடலும், தன்னலமற்ற தலைமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைமைத்துவம் உருவாகவில்லை என்பதே அது.
சஞ்ஞய்காந்தியின் மரணம்தான் இந்தியாவிற்கு நேர்ந்த மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று சில சமயங்களில் தோன்றுவதுண்டு. அவரது நடவடிக்கைகளில் ஒருவித dictatorship தொனியிருந்தாலும், இந்தியாவைப் போன்ற பரந்த, பல்வேறு கலாச்சார, சிந்தனை, பொருளாதார ஏற்ற தாழ்வுள்ள நாட்டிற்கு, அந்தத் 'தொனி', பெருமளவு பயன்பட்டிருக்கக்கூடும். இந்தியாவில் பின்பற்றப்படுகிற அதிகபட்ச ஜனநாயகம் தன் கைகளைக் கொண்டே தன் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கிறது.

பொது இடங்களில் நினைத்த மாத்திரத்தில், பேன்ட் ஜிப்பை கீழிறக்கி ஏதாவது ஒரு சுவரில் 'சர்ர்ரடிக்கிற' சுதந்திரத்தைத் தரும் ஜனநாயகத்தால், அந்தப் பக்கம் போனால் நாறும் என்பதைத் தவிர, என்ன பயன்? இதைவிட, "இந்த லி·ட் CCTVயால் கண்காணிக்கப்படுகிறது.மீறி சிறுநீர் கழிப்பவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்" என்று எச்சரிக்கிற, தனிமனித சுதந்திரம் - பொதுமனித அத்துமீறலாக மாறாமல் பார்த்துக் கொள்கிற, சிங்கப்பூர் ஜனநாயகம் எவ்வளவோ மேலில்லையா?

இந்தியாவில், அதிகாரத்திலுள்ள சக்திவாய்ந்த மனிதர்களுக்கு 'திட்டமிடல்' என்ற வார்த்தையோடு சரியான பரிட்சயமில்லை. அது இருந்திருந்தால், மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இந்தியா இத்தனை ஆண்டுகள் பின்தங்கி இருக்காது.

1998ல் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னும், வாவாசான் 2020 திட்டத்தின் மூலம், கிபி 2020-ற்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிட முனைப்புடன் முயன்று வருகிறது மலேசியா.அங்கும் லஞ்ச லாவன்யம் இருக்கத்தான் செய்கிறது.தேனெடுப்பவர்கள் கையை நக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ தேன்கூடே திருடு போய்விடுகிற அவலநிலை.

சரி நாட்டை விட்டுவிடுவோம்... நம்மைப் பொருத்தவரை தனிமனித திட்டமிடல் எந்த அளவு இருக்கிறது? சுருங்கச் சொன்னால், நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. சிலருக்கு, 'திட்டமிடல்' என்பது ஒரு கெட்ட வார்த்தையாகத் தெரிந்தாலும், பலரும், படிப்பு, வேலை, திருமணம், பிள்ளைப்பேறு, வீடு, கார் என வாழ்க்கையை திட்டமிட்டே வாழ்கிறோம். அந்த திட்டமிடல் ஆழமிக்கதாக் இருக்கிறதா என்பதுதான் சிந்தனைக்குரிய விஷயம்.

சிங்கப்பூரில் துவாஸ் என்ற இடத்தில் புதிய மின்நிலைய கட்டுமானப்பணி நடக்கிறது.375 மெகாவாட் தயாரிக்கும் இரண்டு யூனிட்களை கட்டும் கான்ட்ராக்ட் MHI என்ற ஜப்பானிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அங்குதான் நிஷிகாமி ( Nishigami ) என்ற ஜப்பானிய அதிசயத்தை சந்தித்தேன். அவர்தான் புதிய மின்நிலையத்தின் மொத்த கட்டுமானப்பணியின் திட்டமிடலுக்கும் பொறுப்பாளர்.

அவர் செய்த முதல் வேலை மின்நிலைய கட்டுமானப்பணியில் உள்ள A to Z வரையிலான எல்லா வேலைகளையும் பட்டியலிட்டு, ஒவ்வொரு வேலைக்கும் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டது. அப்படி அடையாளம் காணப்பட்டவர்களிடம் அவர் செய்யச்சொன்ன முதல் வேலை PPSS தயாரிப்பது. Procees Procedure Schedule Sheet என்பதன் சுருக்கமே PPSS. அதில் நீங்கள் செய்யப்போகும் எல்லா வேலைகளையும் வரிசைப்படுத்தி, ஒரு விஷயம் கூட விடாமல், துவக்கம் முதல் கடசிவரை, ஒரு கதை மாதிரி எழுத வேண்டும். ஒரு வேலையை முடிக்க எவ்வளவு நாளாகும், எத்தனை ஆட்கள் + பொருட்கள் + எந்திரங்கள் தேவை, என்னென்ன இடஞ்சல்கள் வரலாம், அப்படி வந்தால் எப்படி சமாளிப்பது - இப்படி எல்லா விவரங்களையும் Excel spread sheetல் ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதி தயாரிக்க வேண்டும். அதை நிஷிகாமி ரிவியூ செய்து, கேள்வி மேல் கேள்விகள் கேட்பார்.

உதாரணத்திற்கு, ஒரு போல்ட் பயன்படுத்துவதாக எழுதியிருப்போம். அதன் நீளமென்ன, குறுக்களவு என்ன, GI materialலா அல்லது stainless steelலா, பொருத்தும் முறை என்ன, டிரில்லிங் மெஷின் பயன்படுத்துகிறோமா, எங்கிருந்து மின்தொடர்பை பெறுகிறோம்... இப்படி பல கேள்விகளை நிஷிகாமி கேட்பார். சம்பந்தப்பட்ட எஞ்சினியர் பதில் சொல்ல வேண்டும். ஒரு PPSS மீண்டும், மீண்டும் திருத்தப்படும். ஆகக்கடைசியில், நிஷிகாமி ஒரு PPSSற்கு ஒப்புதல் அளிப்பத்ற்குள் சம்பந்தப்பட்ட எஞ்சினியர் பல உறக்கமற்ற இரவுகளை கழிக்க வேண்டியிருக்கும்.

இதற்கான பலன் - ஒரு வேலை துவங்குவதற்குமுன்பே அதற்கான எஞ்சினியர், தேவையான எல்லா விவரங்களையும் விரல் நுணியில் வைத்திருப்பார். தனக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிடுவார். கடைசி உதவியாளருக்குக்கூட தனது வேலையைப்பற்றி ஒரு தெளிவு வந்துவிடும். இதுதான் திட்டமிடல்.பல ஆயிரம் எந்திரங்கள் இருக்கக்கூடிய இடத்தில், ஒரு சின்ன ஆணியை பொருத்துவது எப்படி என்றுகூட சிந்தித்துப்பார்க்கிற ஆழமான திட்டமிடல். இதோ...சாதனை நாட்களில் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது துவாஸ் மின்நிலைய கட்டுமானப் பணி. ஆழமான திட்டமிடலின் மூலம்,இந்த சாதனைக்கான ஆதார விதையை விதைத்தவர் நிஷிகாமி.

தொலைநோக்கோடு யோசித்து சரியாக திட்டமிடக்கூடிய, திட்டமிட்டபடி செயல்படக்கூடிய, இடையில் தென்படும் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய, இவரைப்போன்ற தலைவர்கள்தான் இந்திய தேசத்தின் இன்றைய தேவை. தலைவர்கள் கிடக்கட்டும்...ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு வாழ்ந்தாலே போதும், தானாக முன்னேறிவிடும் இந்தியா என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Monday, February 21, 2005

சிங்கப்பூர் கடற்கரைச் சாலையில் கவிமாலை

பிச்சினிக்காடு இளங்கோவுடனான என் முதல் சந்திப்பு எந்த காரணத்திற்காக நிகழ்ந்தது என்று ஞாபகம் இல்லை.சிங்கப்பூர் புகிஸ் எம் ஆர் டிக்கு அருகில் ஒரு கேஎ·ப்சி உணவகத்தில் நிகழ்ந்தது என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. BSc(Agri) படித்துவிட்டு கவிதைப்பயிர் செய்வதை தவமாக்கிக் கொண்டிருந்த அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன். மொழி என்ற தலைப்பில் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். ' வங்கி நீ .. வாங்கியவன் நான்.. ' என்ற வரிகள் இன்னும் ஞாபத்தில் இருக்கிறது. அதற்கப்புறம் நிறைய சந்திப்புகள்....

பிச்சினிக்காடு இளங்கோவின் ' வியர்வைத்தாவரங்கள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகியிருந்த காலம் அது. அப்போது இளங்கோ சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தில் ஏதோ பொறுப்பிலிருந்தார். ஒரு நல்ல படைப்பாளியை மலேசிய மக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். எனது நண்பரும், கிள்ளான் வாசகர் வட்டத்தலைவருமான பாலகோபாலன் நம்பியாரிடம் ' இளங்கோவின் புத்தக வெளியீட்டை கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?' என்று கேட்டேன். பிச்சினிக்காடு இளங்கோ யாரென்று அவருக்குத் தெரியாது என்றாலும், நட்புக்காகவும், தமிழுக்காகவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். கோலாலம்பூர், செந்தூல், செட்டியார்கள் மண்டபத்தில் 'வியர்வைத்தாவரங்கள்' வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் கழகத்தலைவர் அமலதாசன், செயலாளர் ஆண்டியப்பன், சுப. அருணாச்சலம் உட்பட பலரும் போயிருந்தோம்.

சிங்கப்பூரிலிருந்து நாங்கள் போனது பஸ்ஸில். மலேசியாவின் அகன்ற நெடுஞ்சாலையின் ஓரத்தில் விரைந்தோடும் சோடியம் விளக்குகளையும், இருட்டிலிருந்த செம்பனை மரங்களையும் பார்த்தபடி, நானும், பிச்சினிக்காடு இளங்கோவும் விடியவிடிய பேசிக்கொண்டே சென்றோம்.தனது கடந்தகால வாழ்க்கையின் பல வேதனைமிக்க சம்பாவங்களைச் சொல்லும்போது, அவரையும் மீறி அவர் கண்களில் கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். ரணப்படுத்திய அந்த சோகங்களின் ஆழத்தையும், அந்த கவிஞனின் மெல்லிய மனதையும் அந்த இரவில் வெளிச்சம் போட்டுக் காட்டிய கண்ணீர் அது.

பின்னாளில் ஏதேதோ காரணங்களுக்காக இளங்கோ, சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்திலிருந்து விலகி நின்றார். கம்போங் கிளாங் என்ற சமூக மன்றத்தின் உதவியுடன் ' கடற்கரைச் சாலையில் கவிமாலை' என்ற மாதாந்திர கவிதை நிகழ்ச்சியையும் துவங்கினார். 2000 ஆண்டு கண்ணதாசன் பிறந்த நாளன்று முதல் நிகழ்ச்சி நடந்தது.

துவக்க கால நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டேன். கவியரங்கம், ஏதேனும் ஒரு பொதுத்தலைப்பில் கவிதை, அதை சிறப்பாக எழுதும் மூன்று பேருக்குப் பரிசு, வாசித்த நேசித்த கவிதைகளை பகிர்ந்து கொள்வது என்று மிக பயனுள்ளதாக அமைந்த நிகழ்ச்சி அது.

வேலைப்பளுவின் காரணமாக என்னால் அதில் தொடர்ந்து கலந்து கொள்ளமுடியாமல் போனது துரதிர்ஷ்டம்.மறுபடியும் சமீப மாதங்களாகத்தான் கலந்து கொள்கிறேன்.இந்த இடைப்பட்டக் காலத்தில் 'கடற்கரைச்சாலையில் கவிமாலை' நிகழ்ச்சி பிரமிக்கிற அளவு வளர்ந்திருந்ததது. கவிஞர்கள், பார்வையாளர்கள், புதிய அங்கங்கள் என தானும் வளர்ந்து, மற்றவர்களையும் வளர்த்திருந்தார் இளங்கோ. அங்கிருந்தவர்கள் பலருக்கு நான்தான் புதியவனாகிப் போனேன்....

நான் பங்கேற்க்காத சிலவருடங்களில் நடந்தவை என நான் அறிந்தவை இவை.....

1) கவிக்கோ அப்துல்ரஹ்மான், ஈரோடு தமிழன்பன், நாஞ்சில் சம்பத், இளசை சுந்தரம், நாகூர் ரூமி, கனடா சேரன், தஞ்சைவாணன், சிங்கை உதுமான்கனி, சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியின் தலைவர் முகம்மது அலி என பலரும் பலந்து கொண்டு தமது கவிதை அனுபவங்களை பகிர்ந்து கொண்டது.

2) சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு நீண்ட நாட்களாக பங்களித்து வரும் மூத்த இலக்கியவாதிகளுக்கு கணையாழி விருதும், மோதிரமும் அளித்து வருவது . ( திரு. பி. கிருஷ்ணனும், கவிஞர் இக்குவனமும் கடந்த வருடங்களில் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள் )

3) சிங்கப்பூர் கடற்கரையில் நட்சத்திரங்களை துணைக்கு வைத்துக் கொண்டு, விடிய விடிய நடந்திய - கவிராத்திரி.

4) சிங்கப்பூரை ஒட்டியுள்ள பூலா உபின், St.John's தீவு போன்ற தீவுகளில் நடந்திய கவிமாலை நிகழ்ச்சிகள்.

கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இதையெல்லாம் விட அதிக மகிழ்ச்சியளித்த இன்னொரு விஷயம் - புதுக்கவிஞர்கள் பலர் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் அளித்த பயிற்சியால், முறையான இலக்கணத்தோடு மரபுக்கவிதை எழுதத் துவங்கியிருந்ததுதான். எங்கள் நோக்கு கவிதைதான்... அது புதுசாகவும் இருக்கலாம், பழசாகவும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிற செயல் - இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும் ?

சிங்கப்பூரிலிருந்து இணையத்தில் எழுதுகிற யாரவது கவிமாலையில் கலந்து கொள்கிறார்களா என்று பார்த்தேன். ம்ஹீம்... யாருமில்லை. அப்படியென்றால் பனசை நடராஜன், வீரமணி இளங்கோ, நெப்போலியன் போன்றவர்கள் ? அவர்களெல்லாம் கவிமாலை இணையத்திற்கு வழங்கிய கொடையாகவே தெரிகிறது.போன மாதம் எம்கே குமார் வந்திருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியவிதம், அழகு நிறைந்த, எளிமையான, ஒப்பனையற்ற கிராமத்துப் பெண்ணை ஞாபகப்படுத்தியது. கவிமாலை கவிஞர் கருணாகரசு 'மழை' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்....

உழுதவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது வானம்.

இவரைப்போன்ற நல்ல கவிஞர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள்.

வரும் 26 பிப்ரவரி சிங்கப்பூர் Beach Road-ல் உள்ள Kampong Klang Community Centre-ல் மாலை 7.00 மணிக்கு அடுத்த கவிமாலை நடக்கிறது. மலேசியாவிலிருந்து பிரபல எழுத்தாளர் சை.பீர்முகம்மது, தென்றல் வார இதழ் ஆசிரியர் வித்யாசாகரை சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிடலாமே என்றேன் இளங்கோவிடம். ' தாராளமாக' என்றார் அவர். கூப்பிட்டிருக்கிறோம். அவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் 99.99 உண்டு. இருவரும் ரொம்ம்ம்ப நல்ல பேச்சாளர்கள்... நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்டுப் பாருங்கள்... நான் சொன்னது 99.99 சதவீதம் உண்மை என்பது புரியும் !