Friday, October 21, 2005

ஒளியும் இரவு

யாரும் பார்க்காமல் அழியலாம்

சூரியச்சூட்டில்
ஈரமிழந்து உதிரலாம்

அசலை தொலைத்த சாயலில்
இன்னொரு சாயல்
விழுந்துமிருக்கலாம்

நிலவொளியில்
இரவில்

கடற்கரை மணலில்

வளைவெளி நண்டுகள்
விளையாடுகையில்

ஒளியும் இடமாய்
உருமாறலாம்

உனதான, எனதான
காலடித்தடங்கள்!

Monday, October 17, 2005

எழுதாத நினைவின் வரிகள்

எனக்காக வருந்தாதீர்கள் -
வாழ்க்கையை பூரணமாய் வாழ்ந்தவன் நான்.

எனக்கான இரங்கல் கூட்டங்களும் வேண்டாம் -
இயல்பானவர்கள் கூட
போலிமுகம் தரிக்கும் கட்டாயத் தருணங்கள்
அவை.

விட்டு விடுங்கள் -
எனக்கான எந்த மெனக்கெடல்களும்
அவசியமற்றவை.

என்றோ
எப்போதோ
என்னை ஆசையாய் பார்த்திருந்தவனின் -
ஏதோ ஒரு தெரிப்பில்....

எவருமறியாமல் வெளிவந்து
எவருமறியாமல் உள்புகுந்து
சிரிக்கும் சுகம்
போதும் எனக்கு.

உஙகளுக்குக் காத்திருக்கின்றன
உங்களது வேலைகள்!

பசித்திருந்தவன்

உன்னிடம் சொல்வதற்கு ஏதும் இல்லாமல்
நடந்து போகிறவளின் பின்னால்
யாசித்தபடி நடக்கின்றன
வார்த்தைகள்.

நீ யாசிக்கமாட்டாய் என்பதை அறிந்திருப்பவள்
ஏதுமற்ற உன் பாத்திரத்தில்
ஓரிரு வார்த்தைகளையேனும்
பிச்சையிட்டிருக்கலாம்.

இதுவரை -
யாரோ இட்ட பிச்சைகளில்
இல்லாமல் போயிருந்த உணவைத்தேடுவதில்
உன் இளமை போய்விட்டது :
அவள் இடும் பிச்சைக்காக
இருக்கிறது பசி மட்டும்.

அவளோ
உன்னை உண்டபடி போகிறாள்
நடந்து.

Wednesday, August 17, 2005

சாயல்

எதன் சாயலுமற்ற ஏதேனும் ஒன்று
காற்று வெளியிடை காணத்தவித்து
பறந்ததொரு பறவை

கிழக்கில் சிறிதும் மேற்கில் சிறிதும்
வடக்கில் சிறிதும் தெற்கில் சிறிதும்
அலைந்தலைந்து ஓய்ந்து அமர்ந்ததொரு
மரக்கிளையின் ஆடாக் கிளைகள்
அசைவற்ற ஓய்வின் சாயலில்
ஓய்ந்த்திருப்பதாகக்கண்டு
சிலிர்த்தது சிறகு

இருட்டின் சாயலில்
கீழ் நீண்டதொரு நிழல்
இறகின் சிலசதவீத
நிறச்சாயலுமதற்கு

இருட்டின் நிழல் முகமும்
அழுக்கின் கிழிதுணியும்
போலொரு கிளை மேனி
இலைநீட்டி கையேந்தலென
அவள் நிற்கிறாள் ஏந்தி

கடந்து நடந்து நின்று திரும்பி
மேலும் கீழும் பைதடவி
சில்லறையற்ற பத்து ரூபாய்
அவளுக்கிட்டு விரைகிறான் அவன்
சாயலற்ற கடவுளின் சாயலில்.

Saturday, July 23, 2005

அலையில் பார்த்த முகம்

ஒரு மழைநாளின் மனிதச்சகதியில்
நடக்கிறது மண்.

அதிகாலை பூஜையின் பாடலுக்கு
அவரால் வாசிக்கப்படுகிறது
ஒரு ஆர்மோனியப்பெட்டியும்
வீணையும்.
மரியாதானே உன்பெயர்?

கிணற்றின் இருள் மறைவில்
கருத்தப்பாண்டியின் மேகம்
அவனினின்று
காற்றாகிறது.

துவைத்து உலர்கிறது துணி.
கொங்கை குலுங்கிய ராணி
வாய் சிவந்து அழுக்காகிறாள்.

ஆற்றிலும் வருகிறது அலை
ஒவ்வொரு முறையும்
இழுத்துச் செல்கிறது ஏதேனும்.

Friday, July 22, 2005

அவனது கவிதைகள்

நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.

அவனைக் கேட்காமலே
தம்மைத் தாமே
எழுதியும் கொள்கின்றன.

அவன் உடுத்தி விடும்
ஆடைகளையெல்லாம்
கழற்றி எறிந்துவிட்டு
ஒரு குழந்தை மாதிரி அவை
நிர்வாணமாய் சிரிக்கின்றன.

சில நடக்கும்,
சில நடனமிடும்
சின்ன சில்மிஷங்களோடு
ஓய்ந்து போகும் சில.

ஒரு வரியோடு
படுத்தே கிடப்பதுண்டு
சில சோம்பேறிக் கவிதைகள்.

வந்த சுவடின்றி வந்துவிட்டு
வனப்புக் காட்டி, உயிர்ப்பித்து
சதையோடும், வளைவோடும் சரசமாடி
கலந்துவிட்டுப் போகும் சில
காமுகிக் கவிதைகள்.

அறைவதும் உண்டு சில.
தெளிய சில நாள் பிடிக்கும்.
தெளிந்ததாய் நினைக்கையில்
மறுபடியும்
உச்சிமயிர் பிடித்து உலுக்கும்.

இப்படித்தான் என்றில்லை...
நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.


Thanks to : " Thinnai "

Tuesday, July 19, 2005

இடைவெளிகள்

கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !

நட்புக்கும்
இடைவெளிகள் நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...

தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம் நீள
காரணமாகிறது...

தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டுஅமர்கிறது
கெளரவக் காதல்.

பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?

இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!

Saturday, April 30, 2005

சாமிகிட்ட கேட்ட வரம்

சாமிகிட்ட கேட்பதற்கு எத்தனையோ வரங்கள் நினைப்பில். எல்லா வரமும் தருமா சாமி? தெரியவில்லை. குறைந்தபட்சம் இதைத் தந்தாலாவது தேவலை...!!!

Image hosted by Photobucket.com


சாமி...

வேலை அவசரத்தில்
சிகப்பு சிக்னல் பரிதவிப்பில்
பச்சை விளக்குக்கு
பதற்றமாய் பார்த்திருக்க....
வயிற்றுப் பிழைப்புக்கு
முகம் முன்னே கரம் நீட்டும்
குருட்டு மனிதனின் இருட்டுக்குள்
கரையாமல் மறையாமல்
ஏதேனும் ஈகின்ற
இளகிய மனம் எனக்குத்தா!

Thursday, April 28, 2005

பார்ப்பதற்கு மட்டுமான டைரிகள்

டைரிகள் - எழுதவதற்காக மட்டுமல்ல... எழுதாமல் இருப்பதற்கும்தான். எப்போதும் எழுதிய பக்கங்களை விட
எழுதாத பக்கங்களே ஏராளமாய் பேசுகின்றன என்னிடம்!


Image hosted by Photobucket.com

ஐந்தரை கண்விழிப்பு
ஐந்தைந்து நிமிடமாய்

எட்டிப்போகும் எழுகை...
ஏதேனும் மிக மறந்து
அலுவலக வாகனம் நாடி
அவசர ஓட்டம்...
அதை முடி, இதை முடி
அதிகார ஏவல்கள்
அது வேண்டும், இது வேண்டும்
தொழிலாளர் தேவைகள்...

அதை முடித்து இதை முடித்து
அதைச் செய்து இதைச் செய்து
எழுதாத டைரியோடு
ஓடியே போகும் ஒரு வாரம்!

ஞாயிற்றுக்கிழமை நடுநிசியில்
எதேட்சைக் கண்விழிப்பில்
ஏக்கக் கைநீட்டி என்மனம் துலாவும்
இன்னொரு சனிக்கிழமை சாயந்திரம் !


Wednesday, April 27, 2005

ஓவியங்களில் தொங்கிய சுவர்

மெளனம் ஓவென்று கூச்சலிடும் தருணங்களில் - கூச்சல்கூட கண்களுக்கு மெளனமாய்த் தெரிகிறது.ஒரு மெளனமிட்ட கூச்சல் வடிகிறது இப்படி.....

Image hosted by Photobucket.com

வார்த்தைக்கும் வரிகளுக்கும்
அர்த்தங்கள் வெகுசிலவே.
மௌனம் -
ஆயிரம் வகையில் அர்த்தப்படும்.

அதிகம் பேசுபவனிலும்
ஆழ்ந்து மெளனிப்பவனிடமே
அச்சம் வருகிறது.

மெளனமாய் இருப்பதால்தான்
மோனாலிசா ஓவியம் மதிக்கப்படுகிறது.
மெளனம் -
ஓவியங்களின் பொதுமொழி.

நாய்கூட
பிடிக்காதவர்களை மட்டுமே குரைக்கிறது.
பிடித்தவர்களோடு பேசும் அது
நக்கியபடி மெளனமொழி!

நம் ஊர் சாமிகளும் பேசியதேயில்லை.
சாமியாடிப் பேசும் நம்மைப்பார்த்து
மெளனமாய்...
புன்னகை மட்டுமே செய்கின்றன.

பதின்மவயதில் பார்த்த ஒரு பெண்
இறுதிவரைக்கும் மெளனித்தே போனதனால்
இன்றுவரை அவளுக்கு
ஆயிரம் குரல் பொருத்தி
அழகு பார்த்திருக்கிறேன்....

பலநூறு முறை பேசியதுண்டு அப்பா...
கடைசி நாற்காலியில்
மெளனித்த அவர் மட்டும்
இன்னும் நெஞ்சில் புகைப்படமாய்!

ஊர்விழிக்கா காலையில் விழித்த மனம்
வாழ்க்கை வருடுகையில்
சத்தமில்லா மெளனமே சந்தோஷம்.

இப்போதும்.....
என் ஜன்னலுக்கு வெளியே
விரிந்து கிடக்கிறது இரைச்சல்.
மனசுக்குள்
நிறைந்து கிடக்குது மெளனம்!