Friday, April 01, 2005

சில நகர்வுகள்

முதல் நகர்வு
ஒரு முள் தைக்கும் மறுபடி மறுபடி ...
ஒரு தற்செயல் நிகழும் அடிக்கடி..
நிழல் தரும் சொற்பந்தல்.

அடுத்த நகர்வு
பதின்ம வயதுகளின் கூட்டில் நுரையும்
மலட்டு வார்த்தைகள்.
நுனிவிரல் ஓடும் இடைச்சாலை.
தொலைநோக்கும் விழி
விரல் நோக்கும் மனம்.

இன்னொரு நகர்வு
அழுத்தக்காற்றில் அலையும் குளிர்.
தூரச்சதுரம் துப்பிய இருள் வெளிச்சம்
படரும் வெகுவெளி.
சொல்லாத சொல்லில்
தீயாகும் காது மடல்.

இறுதி நகர்வு
அறைக்குள் தனித்திருந்தது இருள்.
குளிரில் குளிக்கும் வெப்பம்.
விடுதலை, தேடல், வினாக்கள், விடைகள்
ஓசை, அதிர்வு, உறங்கும் மதி.
அழுகையா அது?

போவதற்கு முன்..
நீண்டநாள் துக்கமாய்
நானிருந்து என்ன பயன்?
பிறக்கின்ற எல்லாம் ஓர்நாள் இறக்குமெனில்
பிறக்காமல் இறப்பதில் பிழையில்லை.
கோபமில்லை உன்னிடம்: கவலையுண்டு.
பொல்லாதது அம்மா உலகம்
பார்த்துக்கொள் உன்னை பத்திரமாய்.



No comments: