Monday, April 18, 2005

இந்த மானிட சாதிகளில்....

உங்கள் ஊரில் எத்தனை சாதி இருக்கிறது?

சிங்கப்பூரில் இருக்கிற இந்த சாதியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.... அந்த ஜாதி - ஊரில் நில,புலன்களை விற்றோ...கடன் வாங்கியோ, மனைவியின் தாலி உட்பட எல்லா நகைகளையும் அடகு வைத்தோ - சிங்கப்பூர் ஏஜெண்டிற்கு பணம் கட்டி, சிங்கப்பூர் வந்து இரவு,பகல், ஞாயிறு, திங்கள் பாராமல், உழைத்து உயிர் தேயும் நம்பிக்கையாளர்கள் சாதி!

அவர்களது நம்பிக்கை - ஒவ்வொறு நாளும் மேற்கில் அஸ்தமனத்தை மட்டுமே கண்டு வரும் எனக்கு, ஒரு நாள் எனக்கும் கிழக்கில் விடியும் என்பதே!

ஓரளவு பணம் சேர்த்து, நிலபுலம் வாங்கி, வீடு கீடு கட்டி, தொழில் கிழில் செஞ்சு, வாழ்க்கையில் நானும் நாலு பேர் மதிக்க வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன், கட்டிய மனைவியின் காதல் நினைவுகளுடன், சிரிக்கும் பிள்ளையின் சிந்தனையுடன் வாழும் இவர்களது வாழ்க்கை பயணத்தை துயரங்கள் மட்டும்தான் தொட்டுச் செல்லும் என்று யார் சொன்னது... அவ்வப்போது இப்படி சிரிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு இருக்கவே செய்கிறது......


Image hosted by Photobucket.com

போன தீபாவளியை இவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்று கேட்டேன்.அவர்கள் இப்படித்தான் கொண்டாடினார்களாம்...........

வீட்டுக்கு வெளித் தெரியும்
எதிர் புளோக் ஜன்னலில் எரியும்
எலக்ட்ரானிக் பல்புகளைத் தவிர
தீபாவளி சேதி சொல்ல ஏதுமில்லை
இவ்விடம்.


விடுமுறையில்லா உழைப்பு ஞாயிறுகள்
டாலராகி,ரூபாயாகி, பட்டாசாகி
வெடித்துச் சிதறுகையில்
பயந்து சிரிக்கும் பத்து வயது மகளின்
போன வருட முக ஞாபங்களோடு
சன் டி.வி முன்னால்
சத்தமில்லாமல்
எங்கள் தீபாவளி தினம் !

No comments: