Saturday, December 27, 2008

ந.வீ.சத்தியமூர்த்தி என்ற கவிதை சிந்துபாத் (நாலுவார்த்தை-27)

புயல் - பலத்த ஆரவாரத்தோடுதான் கடந்து போகிறது. வழியில் அது கழற்றிப் போட்டு விடும் வீடுகள் பல. தென்றல் எப்போதும் மென்மையாகத்தான் வீசுகிறது.... பெரும்பான்மையான நேரங்களில் அதன் இருப்பை நாம் உணர்வதில்லை. சிங்கப்பூர் கவிஞரான ந.வீ.சத்தியமூர்த்தி தென்றல் மாதிரிதான். தனது இருப்பை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை அல்லது மற்றவர்கள் அவரது இருப்பை உணர்வதில்லை. ஆனால், தேவையான நேரங்களில், தேவையானவர்களுக்கு தென்றலாய் வீசிக் கொண்டுதான் இருக்கிறார் அவர் . 50களில் இருக்கும் இந்தக் கவிஞர் பழகுவதெல்லாம் 30க்குக் கீழ் உள்ள இளைஞர்களிடம்தான். தமிழகக் கவிதைகள் நவீனம், பின்நவீனம் என்று நகர்ந்து விட்ட நிலையில், இன்னும் மரபுக் கவிதை, புதுக்கவிதை என்று மாரடித்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ்ச்சுழலில், வடிவங்களைப் பற்றி கவலைப்படாமல் கவிதைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர் ந.வீ.சத்தியமூர்த்தி. அவரது சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு 'தூரத்து மின்னல்'. வழி நெடுக புதுமை வாசனையும், மரபு நெடியும் அடிக்க... நம்மை மயக்குகிறது இந்தக் கவிதைத் தொகுப்பு.

"உண்மையில் / உங்களில் / யாருக்கு உவமையாக்குவேன் / யாரை.. " என்று 'இமை' பற்றிய கவிதைக் கேள்வியோடு வெடிக்கத் துவங்குகின்றன சத்தியமூர்த்தியின் கவிதைகள். கணவன், மனைவியைப் பற்றி பேசும்போதோ சரவெடியாகின்றன. "கணவன் - தொலைபேசியில் / 'அலோ' ஒரு முறையும் / 'சரி' பல முறையும் / திருப்பச் செல்லும் / அப்பாவி அப்பிராணி " என்று முதல் வெடியைக் கொளுத்திப் போட்டு, அதன் வெடிச்சத்தம் அடங்குவதற்குள், "மனைவி - கற்றைக் குழல் முடித்து / சற்றே தலை சாய்த்து... / ஒற்றைப் பார்வையில் / உதறல் தரச் செய்யும்.. / ஒசாமா பின் லேடி." என்று அணுகுண்டை அடுத்து வீசுகிறார். நகைச்சுவை இழையோடும் கவிதைகள் மனதின் வழியாக நினைவை ஆக்கிரமித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. நகைச்சுவை இயல்பாகவே இவரது கவிதை நரம்புகளில் ஓடுகிறது.சத்தியமூர்த்தி என்ற கவிதை விவசாயி நீளமாகவும், பல கவிதைகளில் ஆழமாகவும் உழுதிருக்கிறார்.

"இப்போதெல்லாம் / காலம் கரையக் கரைய... / கனவுகளின் / முகங்களில் கூட / முதுமைச் சுருக்கங்கள்." என்ற ஆழமான பார்வை நம்முள் அதிர்வலையை எழுப்புகின்றன. வயது கூடக் கூட, வயது கூடும் கனவுகள் என்ற நிதர்சனம் அதிர்வலைகளை எழுப்புவது இயல்புதானே? ஒட்டடை அடிப்பவர்கள் இனி வரும் வரிகளைப் படிக்கும்போது, ஒரு நிமிடம் யோசிக்கக் கூடும்.."தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத / விக்கிரமாதித்த சிலந்தி ஒன்று / கதவிடுக்கில் கால் பரப்பி / வாய்க்கரங்களால் / தன் அடுத்த வேளை உணவுக்கு / செய்து கொண்டிருந்தது, / மறுநடவு!" தவறிய தாய்மையை கூண்டிலேற்றி விசாரிக்கும் வழக்கறிஞர் கவிதைகளையும் வாசிக்க முடிகிறது. "இணையப் பக்கம் போனால் அருகமர்ந்து கவனிக்கிறாய் / உற்றுற்றுப் பார்த்தென்னை தாயே / நீயா... மணவிலக்கு கேட்டு மனுப்போட்டாய் அப்பாவுக்கு?" இப்படி மனித உறவுகளை, இயற்கையை, உணர்வுகளை சிக்கிமுக்கி கல்லாகி தீமூட்டிப் பார்க்கின்றன சத்தியமூர்த்தியின் கவிதைக் கரங்கள்.

கவிதையின் வடிவத்தை தீர்மானிப்பவன் கவிஞனல்ல; ஒவ்வொரு கவிதையும் தனக்கான வடிவத்தைத் தானே தீர்மானித்துக் கொள்கிறது. மீறி, தானே தீர்மானிக்க முற்படுபவனின் கவிதைக் குழந்தைகள் சிதைவுற்றுப் பிறக்கின்றன. பூமியை புதிதாக மாற்றி விடும் முனைப்பில் இன்றைய கவிதைகள் பிறப்பதில்லை. அவை, அழுத்ததில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஆயுதமாகவும், விடுபட்ட அழுத்தங்களை வேடிக்க பார்க்கும் களமாகவும் இருக்கின்றன. விட்டு விடுபட்ட கவிதைகளில் கவிஞனின் கடந்த காலம் விழுந்து கிடக்கிறது ; அனுபவங்கள் அடர்ந்து கிடக்கிறது. அவன் அனுபவங்களைப் பதிவாக விட்டுச் செல்ல முனைபடும் தருணங்களாகின்றன கவிதைகள். அழுத தருணங்கள் ; அழகிய தருணங்கள் ; ஆராதித்த தருணங்கள். உண்மையில், கவிதைகளும், வாழ்க்கையும் தருணங்களின் தொகுப்பாகும். முற்றும் என்ற சொல்லை என்றுமே எட்டாத கன்னித்தீவுதான், பேனாமுனை என்கிறார் சத்திய மூர்த்தி என்ற கவிதை சிந்துபாத். எந்தத் தீவிலும் இறங்கிவிடாமல் போய்க் கொண்டே இருக்கட்டும் இவரது எழுத்துக் கப்பல்!

2 comments:

பாண்டித்துரை said...

//50களில் இருக்கும் இந்தக் கவிஞர் பழகுவதெல்லாம் 30க்குக் கீழ் உள்ள இளைஞர்களிடம்தான்///

இதுதான் அவரின் இளமையின் ரகசியம் + நகைச்சுவை உணர்வு (எந்த தருணத்திலும்)

பாலு மணிமாறன் said...

Yes he has great humour. He has the this great ability to switch between modern and marabu kavithai with effortless ease.