Tuesday, January 06, 2009

நான் தொலைக்காட்சி நடிகனான கதை (நாலு வார்த்தை-035)

ஒரு நாள் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். டபுள் டெக்கர் பஸ். அதன் மேல் தளத்தில் உட்கார்ந்து கொண்டு, ஓரமாக நகர்ந்து கொண்டிருந்த கட்டிடங்களைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் முகமது அலியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "தொலைக்காட்சி நாடகத்தில் ஒரு சின்ன வேடம் இருக்கு. நடிக்கிறீங்களா?"என்றார். அதைப்பற்றி அவர் ஏற்கனவே பேசி இருந்ததால் அது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. பெருமாள் கோயில் கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் நடந்த சை.பீர்முகம்மதின் 'திசைகள் நோக்கிய பயணம்' நூல் வெளியீட்டின்போது அதைப் பற்றி என்னிடம் சொன்னார். நான் ஏதோ ஜோக்குக்குத்தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு 'நாங்க மதுரக்காரங்கள்ல... நடிச்சிருவோம்ல' என்று வடிவேலு பாணியில் சொல்லி விட்டேன். 'சரி, பார்ப்போம்' என்றார். உண்மையாகவே அழைத்து விட்டார்.'சரி, நாடகத்தில் என் கேரக்டர் எப்படி....' என்று இழுத்தேன்.'அதெல்லாம் நல்ல கேரக்டர்தான். கவலைப்படாதீங்க' என்றார்.'இல்லை...என் இமேஜைப் பாதிக்கிற மாதிரி...' என்று இன்னொரு இழுவை. பட்டென்று 'நீங்க என்ன எம்.ஜி.ஆரா?' என்ற மறுகேள்வி அவரிடமிருந்து வந்தது. நாம் பதில் சொல்வதற்குள் 'கவலைப்படாதீங்க...நல்ல கேரக்டர்தான். மீதி விஷயங்களை டைரக்டர் குமரன் பேசுவார்' என்றார். குமரன் தமிழ்த்திரைப்பட அனுபவமுள்ளவர். மிஷ்கின், சசி போன்றவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பேசினார்.' சின்ன வேடம்தான் சார். ஒரு 5 வயது குழந்தைக்கு அப்பா. உங்களுக்கு மனைவி வேடத்தில் சோனியா நடிக்கிறாங்க' என்றார். அட... முதல்முறையா நடிக்கும்போதே நமக்கு ஒரு ஹீரோயினா?

Peace Centre-ல் இருக்கும் அலுவலகத்துக்கு அழைத்து ஒரு பக்க வசனத்தைக் கொடுத்தார்கள். ஒரு சீனில் மட்டும்தான் டயலாக். அதுவும் கொஞ்சம் புலம்பல், கொஞ்சம் மனைவியிடம் எரிச்சல் படுவது மாதிரி சீன். அடச்சே... அவ்வளவுதானா...'இல்ல சார்...இன்னும் மூணு சீன் இருக்கு. ஒரு பர்த்டே சீன், ஒரு தீபாவளி சீன், கடைசியில கொஞ்சம் புறாவெல்லாம் செத்துக் கிடக்கும். அதைப்பார்த்து அதிர்ச்சியடையிற மாதிரி இன்னொரு சீன்.ஆனால், அதிலெல்லாம் ரியாக்ஷன் மட்டும் காட்டினால் போதும் சார்' என்றார் இயக்குனர். என் வேடம் எப்படிப்பட்டது என்று புரிந்து விட்டது. பத்தோட பதினொன்னு... அத்தோட இது ஒண்ணு!. ஹீரோயின் சோனியாவும் வந்திருந்தார். அவரைப் பார்க்கிறபோது, என்னுடைய சகோதரியைப் பார்க்கிறமாதிரி இருந்தது. ஆனால் அதை அவரிடம் சொல்லவில்லை. சொன்னா, நடிக்கும்போது கெமிஸ்டரி workout ஆகாதில்ல? 'ஞாயிற்றுக்கிழமை ஷ¥ட்டிங் இருக்கு சார்..காலையில உங்க குழந்தையோட பர்த்டே பார்ட்டி சீன். அதுக்கு கொஞ்சம் ரிச்சா டிரஸ் போட்டுக்கங்க. நீங்க டயலாக் பேசுற சீனுக்கு கொஞ்சம் கேஷ¤வல் டிரெஸ் ஓகே..." என்று சொல்லியனுப்பினார்கள். அந்த ஒரு பக்க டயலாக்கை மனப்பாடம் செய்யவே பெரும்பாடாக இருந்தது. வயசாகிடுச்சில்ல... அந்த டிரஸா, இந்த டிரெஸான்னு யோசிச்சு, யோசிச்சு...ஒரு வழியா நாலைந்து செட் துணிமணிகளை எடுத்துத் திணித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஷ¥ட்டிங் நடக்கிற இடத்துக்குப் போய் சேர்ந்தேன்.

நான் போனபோது பர்த்டேக்கு ஏற்றவாறு அந்த இடத்தை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நானும் பலூனெல்லாம் ஒட்டினேன். நிறைய குழந்தைகள் தம் அம்மாக்களோடும், சிலர் அப்பாக்களோடும் வந்திருந்தார்கள். எல்லாம் பர்த்டே சீனில் நடிக்கதான். கேக் வெட்டும்போது என் அப்பாவாக நடிப்பவர் ஏதோ சொல்ல, மனைவி என்னை முறைக்க, நான் குற்ற உணர்வோடு தலைகுனிய வேண்டுமென்றார் Executive Producer ஆன முகமது அலி. பதட்டத்தோடு அப்படியே நடித்தேன். ஷாட் முடிந்தது. அடுத்த ஷாட்டிற்குப் போய் விட்டார்கள். நான் ஒழுங்க நடித்தேனா இல்லையா என்று சொல்ல ஆளில்லை. மெதுவாக அலியிடம் 'நான் ஒழுங்கா நடிச்சேனா?' என்று கேட்டேன்.'பிரமாதமா நடிச்சீங்க. குற்ற உணர்ச்சி கொஞ்சம் அதிகமோ?' என்றார் நக்கலாக. 'அவ்வ்வ்வ்' என்று வடிவேலு மாதிரி அழனும்போல இருந்தது. யோவ்... ஏன்யா இப்படித் தாளிக்கிறீங்க... அதற்கப்புறம் அந்த சீன், இந்த சீன், நொந்த சீன், வெந்த சீன் என்று ஏதேதோ சீன்கள் எடுத்துக் கொண்டே இருந்தார்கள். நான் நடிக்க வேண்டிய சீனை மட்டும் எடுக்கிற மாதிரி அறிகுறியே காணோம். மற்றவர்களது சீனை முதலில் எடுப்பதற்கு நிறைய காரனங்கள் இருந்தன - குழந்தைகள் சீக்கிரம் போகணும், அவரு சீனியர்...அவர் சீனை முதல்ல முடிச்சிடலாமே, அவருக்கு 7 மணிக்கு டியூட்டி...இப்படி நிறையக் காரணங்கள். ஒரு வழியாக என்னுடைய சீன் வந்தபோது இரவு மணி 8. நான் நடிக்க வந்து 12 மணிநேரமாகி இருந்தது.

நான் டயலாக் பேசியபடி நடந்து வந்து, கப்போர்டைத் திறந்து எதையோ தேடிவிட்டு, டயலாக் பேசியபடி கேமராவை விட்டு exit ஆக வேண்டும். நடித்தேன்."என்னங்க... கவிதையெல்லாம் எழுதுறீங்க... ஒரு நாலு டயலாக்கைப் பேச முடியலையா...மனைவிகிட்ட கொஞ்சம் டென்ஷனாக பேசுங்க.. இன்னும் கொஞ்சம் கோபம், விரக்தி வேணும்". உண்மையிலேயே 12 மணி நேரம் காத்திருந்ததில், எனக்குள் விரக்தி பொங்கி வழிந்தது. மறுபடியும் நடித்தேன். ஷாட் ஓகே. தயங்கியபடி, "எப்படிங்க நடிச்சேன்?" என்று அலியிடம் கேட்டேன். "உண்மையிலேயே நல்லா நடிச்சீங்க. நானே எதிர்பார்க்கல" என்று பதில் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ ஆறுதலுக்காக சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அந்த நாடகம் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது நண்பர்கள் பலரும் நடிப்பு இயல்பாக இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு அனுபவம், ஒரு சில நினைவுகள்! என்றாலும், இனிமேல் நடிப்பு, கிடிப்பு பக்கமெல்லாம் தலைவைத்தே படுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அதாங்க, பெரியவங்களே சொல்லிட்டாங்களே...களவும் கற்று மற - ன்னு!

2 comments:

சி தயாளன் said...

ஹா..ஹா..

//ஒரு வழியாக என்னுடைய சீன் வந்தபோது இரவு மணி 8. நான் நடிக்க வந்து 12 மணிநேரமாகி இருந்தது. //

படப்பிடிப்புகளே இப்படித்தான் போல் இருக்கே :-)

பாலு மணிமாறன் said...

Thanks for your comments.

Infact, the team i worked with is nice one. They are full of energy. I was able to learn how things do go about in a local televisin shoot.

though, Waiting seems to be an unavoidable thing