Sunday, April 09, 2006

இந்திய கிரிக்கெட் அணி : யாரும் இங்கு நிரந்தரமில்லை!


இங்கிலாந்திற்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்ட இந்திய அணிக்கு முதலில் வணக்கம் சொல்லி விடுவோம்! அந்த வணக்கத்திற்கு அவர்கள் தகுதியான வர்கள்தான். இந்த வெற்றிகளின் பிண்ணனியாக பயிற்றுவிப்பாளர் கிரேக் சேப்பலின் திட்டமிடலும், ராகுல் திராவிடின் திறன்மிக்க தலைமைத்துவமும் இருப்பது நாமறிந்த விஷயம்தான்.

தொடரை கைப்பற்றி விட்டதால், புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்போம் என்று காரணம் சொல்லி,வீரேந்திர சேவாக்கை தலைவராக்கி இருக்கிறார்கள். ராகுல் திராவிடின் இடத்தில், இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளராகக் கருதப்படுகிற வி.ஆர்.பி.சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல விஷயம்தான். ஆனால், இந்த இரண்டு பேருமே அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்பை நியாயப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

தேவை : கொஞ்சம் ஓய்வு!

கடந்த 30 ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே அரைச் சதமடித்திருக்கிறார் சேவாக். மற்ற ஆட்டக்காரர்களாய் இருந்தால் இந்நேரம் கதவு சாத்தப்பட்டிருக்கும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 அடித்த ஒரே இந்திய ஆட்டக்காரரான சேவாக்கை அப்படி நடத்த முடியுமா? முடியாது. இந்த விஷயம் சேவாக்கிற்கும் தெரியும் என்பதால் "எனக்கென்ன ஆச்சு" என்று அவர் போக்கில் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை புதிதாக கொடுக்கப் பட்டிருக்கும் தலைமைத்துவம் அவரை சதமடிக்க வைக்கலாம். அது நடக்கு மென்றால், இந்திய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால் இந்த 3 போட்டிகளிலும் சேவாக் சரியாக விளையாடவில்லை என்றால், இந்தியத் தேர்வாளர்கள் அவருக்கு கொஞ்சநாள் "கட்டாய ஓய்வு" கொடுக்கத் தயங்கக்கூடாது.

வேகமும், விவேகமும்

இந்திய அணியின் உடனடித்தேவை மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய புஜபலமிக்க ஆசாமிகள் என்கிறார் கிரேக் சேப்பல். வி.ஆர்.பி.சிங் அதிவேகமாக பந்து வீசுவதாகச் சொல்கிறார்கள். வேகப்பந்து வீச்சில் ஒரு அபாயம் இருக்கிறது. 10 ஓவர்களில் 50ல் இருந்து 60 ரன்வரை தாரை வார்த்துவிடும் அபாயம். வி.ஆர்.பி.சிங்கும் அப்படி தாரை வார்க்கக் கூடும். அப்படி ஒரு சூழலில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து, தன்னம்பிக்கையும் கொடுக்கக்கூடிய அனுபவசாலி கிரேக் சேப்பல். பல வருடமாக வாய்ப்புக் கொடுத்தும் தனது திறனை முழுவதும் வெளிப்படுத்தாத அகர்கார் போன்றவர்களுக்கே இன்னும் வாய்ப்பு கொடுக்கிறபோது, வி.ஆர்.பி.சிங் போன்றவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பது அவசியம்.

போதும் இந்தப் பொறுமை

இந்திய அணிக்கு,நாடு முழுவதுமுள்ள மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்து விவசாயி மாதிரி இருக்கிற முனா·ப் படேல் அதற்கு ஒரு உதாரணம். இந்த நிலையில் அகர்கார் போன்றவர்கள் "வாழு அல்லது வாழவிடு" என்ற மூலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். பதானை முதல் ஆட்டக்காரராக களமிறக்கியபோது, போராடி ஜெயித்துக் காட்டினார்.அதே மாதிரி அகர்காரையும் முதல் நிலையில் களமிறக்கிப் பார்க்க வேண்டும். அகர்கார் விஷயத்தில் மட்டும் இந்திய தேர்வாளர்கள் தொடர்ந்து காட்டிவரும் "அளவிற்கு மீறிய பொறுமை" ஒரு முடிவிற்கு வருவது அவசியம்.

இன்னொரு சேவாக்?

துவக்க ஆட்டக்காரராக கர்நாடக இளைஞர் ராபின் உத்தப்பா களமிறங்குவார் என்று தோன்றுகிறது. இவரும் சேவாக் மாதிரிதான். "அடிப்பதற்குதான் மட்டை.. அடி வாங்கத்தான் பந்து" என்ற கொள்கையுள்ளவர். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ராபின் ஒரு சதமடித்து விட்டால் இந்திய அணியிலுள்ள மற்ற மட்டையாளர்கள் கட்டை போடாமல், முட்டை போடாமல் தரமாக ஆடத் துவங்குவார்கள். என்ன செய்யப் போக்கிறது இந்திய அணி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைக்கு மேல் போய்விட்டால்...

ஏற்கனவே ஒருநாள் போட்டித் தொடரை தோற்றுவிட்டதால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. "எங்கள் மேலிருந்த அழுத்தமெல்லாம் போய்விட்டது" என்று சொல்லியிருக்கிறார் நட்சத்திர ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன். இனிவரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி 'தலைக்கு மேல் போய்விட்டது, இனி ஜான் போனாலென்ன, முழம் போனாலாலென்ன' என்ற மனநிலையோடு அதிரடி ஆட்டத்தில் இறங்கும் வாய்ப்புகள் அதிகம். அதை இந்திய அணி எப்படி எதிர்க்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் இனிவரும் மூன்று போட்டிகளையும் சுவாரஸ்யமாக்குகிறது.

இன்னும் இருக்கும் பரபரப்பு

டெஸ்ட் போட்டிகளில் தங்கள் சக்தியை எல்லாம் கொடுத்து விளையாடி விட்டதால், தற்போது சக்தியற்ற சக்கை மாதிரி இங்கிலாந்து வீரர்கள் தோற்றமளிக்கிறார்கள். "உற்சாகத்தின் சேமிப்புக் கிடங்கு" மாதிரி கொப்பளித்துக் கொண்டிருக்கும் ·பிளின்டாப் கூட, எப்போது ஊருக்குப் போவோமென்று காத்திருப்பவர் மாதிரி தோன்றுகிறார். இந்திய வம்சாவளி வீரரான விக்ரம் சோலங்கி போன்ற சில புதிய வீரர்கள்தான் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார்கள். மொத்தத்தில் - இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நினைப்பில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்கும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பில் விளையாடும் இளம் இந்திய வீரர்களுக்கும் இடையிலான இந்த மூன்று போட்டிகளிலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.

Saturday, March 25, 2006

கதையல்ல : கற்பனையுமல்ல : அப்படியென்றால்...

(சில சமயங்களில் சில விஷயங்கள் மறுபடியும் பார்வையில் படுவதும், அதன் மீது, நமது நினைவுகளின் நிழல் மறுபடியும் விழுவதும் - நம்மையும் மீறி நடந்தே விடுகின்றன )

எதேட்சையாக இணையத்தில் சந்தித்துக் கொண்ட ஒரு சிங்கப்பூர் தமிழ் இளைஞனும்,இன்னொரு தேச தமிழ் பெண்ணும் பேசித் தொடங்கினார்கள். பேசித் தொடர்ந்தார்கள்.
இனி - அவர்கள் பேசியது!


"ஹாய்...டு யு லைக் டு சாட் வித் அன் இண்டியன் கைய் ·பிரம் சிங்கப்பூர்?""தாராளமாக. எனக்கும் தூக்கம் வரவில்லை. பேசலாம்."

"நீங்கள்?"

"நான் வித்யா. ஒரு நிறுவனத்தில் நிர்வாகியாக வேலை செய்கிறேன். வயது முப்பத்திஎட்டு. என் பெயரை வைத்து நானும் ஒரு இந்தியப் பெண் என்பதை யூகித்திருப்பீர்கள்"

"ஆச்சரியம்...நான் இணையத்தில் இந்தியப் பெண்களிடம் பேசியது மிகக் குறைவு.உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. நான் வல்லாளதேவன். நீங்கள் என்னை தேவன் என்றுகூப்பிடலாம்."

"அழகான பெயர். உங்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள் தேவன்..."

"அப்பா இறந்து விட்டார். அம்மாவும் நானும் மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கிறோம்.ஒரு கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்கிறேன். எனக்கு முப்பது வயதாகிறது."

"நிம்மதியான வாழ்க்கை. அது சரி, பார்க்க எப்படி - கமலஹாசன் மாதிரி இருப்பீர்களா?"

"அய்யோ... அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஒரு சராசரி இந்திய இளைஞன்தான்.ஐந்தடி ஒன்பதங்குல உயரத்தில், எழுபது கிலோ எடையில்..."

"இப்படி அடக்கமாகப் பேசும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள்இதுவரை எந்தப் பெண்ணின் வலையிலும் மாட்டவில்லையா?"

"உண்மையைச் சொல்வதென்றால், 'முன்பு' எனக்கொரு காதலி இருந்தார்.இப்போது இல்லை.அது கிடக்கட்டும்...நீங்கள் உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.."

"என்னைப் பற்றி...நான், அம்மா, அண்ணா என்று சிறிய குடும்பம். தங்கை கணவரோடு அமெரிக்காவில் இருக்கிறாள். மூத்தவளான எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.ஆனால் கனடாவில் எனக்கொரு காதலன் இருக்கிறார். நாங்கள் சீக்கிரமே திருமணம்செய்யப் போகிறோம்."

"உங்கள் காதலர் வெள்ளைக்காரராக இருக்க வேண்டும் என்பது என் யூகம்..."

"உங்கள் யூகம் சரிதான்"

"ஆக, இந்தியப் பெண்ணான நீங்கள் ஒரு வெள்ளைக்காரரை மணக்கிறீர்கள் ?"

"வெள்ளைக்காரர் என்பதை விட, ஒரு மனிதரை மணக்கிறேன் என்று சொல்லலாம். இனம், மதம். தேசம், மொழி என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டதுதானே?இது இன்டெர்னெட் யுகம். இந்த யுகத்தின் இன்னும் சில வருடங்களில் நாடுகளும்,எல்லைகளும் இல்லாமல் போய் விடலாம். அப்போது அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள்,ஆசியர்கள் என தனியாக யாரும் இருக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் நல்லமனிதர்கள், கெட்ட மனிதர்கள் என்று இரண்டு பிரிவினர் மட்டுமே இருக்கப் போகிறார்கள்."

"ஆழமாக சிந்திக்கிறீர்கள் வித்யா. உங்கள் காதலரை இணையத்தின் மூலம்தான்சந்தித்தீர்களா?"

"ஆமாம். நாகரிகமான, அன்பான அவரது பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. புகைப்படங்களை பறிமாறிக் கொண்டோம். தொலைபேசியில் பேசிக் கொண்டோம். மெல்ல மெல்லதான் எங்கள் காதல் வளர்ந்தது."

"அவரை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?"

"போன வருடம் ராபர்ட் இங்கு வந்து ஒருமாதம் என்னோடு தங்கி இருந்தார். அந்தசந்திப்பு எங்கள் காதலை மேலும் வளர்த்தது. இப்போது என் மனம் முழுக்க அவர் மீதுகாதல் மட்டுமே நிரம்பிக் கிடக்கிறது."

"நீங்கள் சொல்வது சரிதான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் காதல்தான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான். நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால், நான் ஒன்று கேட்கட்டுமா ?"

"நாம் முகம் தெரியாத நண்பர்கள். தயங்காமல் கேளுங்கள்"

"நமக்கு - இந்தியர்களுக்கென்று சில ஒழுக்க வரையறைகள் இருக்கிறது. மேல்நாட்டவர்களுக்கு அப்படிக் கிடையாது."

"உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. ராபர்ட் என்னோடு ஒருமாதம் தங்கி இருந்தாலும்இந்தியப் பண்புகளை நான் இழந்து விடவில்லை. எங்களுக்கிடையில் காதலும், காமமும்இருக்கத்தான் செய்தது. ஆனால், நாங்கள் எல்லை மீறிவிடவில்லை."

"ஆச்சரியமாக இருக்கிறது..."

"உண்மைதான் தேவன். நான் ஒரு இளைஞனை காதலித்திருந்தால், அவனது எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், என் ஐம்பத்தி இரண்டு வயது காதலரிடம் முதிர்ந்த கனிவுதான் இருக்கிறது."

"ஐம்பத்தி இரண்டா... வயது வித்தியாசம் அதிகமாகப் படவில்லை?"

"இல்லை. இரு கரைகளுக்கிடையில் அடங்கி ஓடும் ஆறு மாதிரி ஒரு கட்டுப்பாடான துள்ளலைதான் நான் ராபர்ட்டிடம் பார்க்கிறேன்."

"கவிதையாகப் பேசுகிறீர்கள் வித்யா. இதையெல்லாம் கேட்கும்போது, உங்கள் இருவரதுபுகைப்படத்தையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை வருகிறது..."

"ம்...நீங்கள் நல்லவர் என்று உள்மனம் சொல்கிறது. நான் உங்களை நம்பலாமா தேவன்?"

"நம்புங்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை?"

"ஓ.கே. நான் உங்களை நம்புகிறேன்.இதோ, நான் தருகிற முகவரியில் போய் பாருங்கள்.நான், ராபர்ட் உட்பட நிறைய புகைப்படங்கள் இருக்கிறது. ஆனால் நீங்களும் உங்களதுபுகைப்படத்தை இப்போதே எனக்கு அனுப்ப வேண்டும். அதுதான் நியாயம்."

"பிரச்சனையில்லை. இதோ அனுப்புகிறேன்"

"............"

"............"

"வித்யா, நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள். ஒரு சாயலில் நடிகை பானுப்பிரியாவைப்போல் இருக்கிறீர்கள்."

"பொய். இதே வசனத்தை இதுவரை எத்தனை பேரிடம் சொல்லி இருக்கிறீர்கள்?"

"நான் சொல்வது நிஜம். ராபர்ட் கூட இளமையாக, அழகாக இருக்கிறார்."

"நீங்களும்தான் தேவன். கைகட்டி, கராத்தே வீரரைப் போல் கம்பீரமாய் நிற்கிறீர்கள்"

"நன்றி வித்யா."

"தேவன்...உங்களது சினேகமான முகத்தில் களங்கமில்லா நட்பும், ஏதோ ஒருவித கவர்ச்சியும் தெரிகிறது."

"பாருங்கள்... நீங்களும் பொய் பேசுகிறீர்கள்...."

"ஹஹஹா... தேவன், நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் என் காதலருக்கு·போன் செய்ய மறந்துவிட்டேன். நாம் மீண்டும் பேசுவோம். இப்போது என்னை உங்கள்நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் அப்படியே செய்கிறேன்"

"ஆகட்டும் வித்யா"

________________________________________________


"ஹாய் தேவன்... என்ன நீண்டநாளாக ஆளையே காணவில்லை?"

"ஒரு பயிற்சிக்குப் போயிருந்தேன் வித்யா.அதுதான் காரணம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் ராபர்ட் எப்படி இருக்கிறார்?"

"ராபர்ட் நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் எனக்குதான் இரண்டு நாள் சளி, காய்ச்சல்."

"அடடா....தூரத்தில் இருக்கிறீர்கள். பக்கத்தில் இருந்தாலாவது மருந்து கொடுத்துதைலம் தேய்த்து, கஞ்சியும் வைத்து கொடுத்திருப்பேன்"

"ஆஹா...எவ்வளவு அக்கறையான மனிதர்! அம்மாவும் அண்ணாவும் வெளியூர் திருமணத்திற்குப் போயிருக்கிறார்கள். பக்கத்தில் யாராவது இருந்து கவனித்துக் கொண்டால் நல்லது என்றுதான் தோன்றுகிறது."

"நாம் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கிறோம். யார் கண்டது...ஒருநாள் நிஜத்தில்நாம் சந்தித்தாலும் சந்திக்கலாம். அது உங்கள் திருமணமாகக் கூட இருக்கலாம்"

"என் திருமணத்தில் என்னை சந்திப்பதென்றால் நீங்கள் கனடா வரவேண்டியிருக்கும்.வருவீர்களா?"

"ஆஹா...கனடாவிற்கு என்னால் வர முடியாது. ஆனால், கட்டாயம் ஒரு வாழ்த்து அட்டைஅனுப்ப முடியும்."

"இது நேர்மையான பதில். ஆனால் நம் இந்திய இளைஞர்கள் பலருக்கு இந்த நேர்மைஇருப்பதில்லையே தேவன்...அது ஏன்?"
"எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?"


"நான் சந்தித்த இளைஞர்களை வைத்து... ஒரு சில கயவர்களை வைத்து..."

"நீங்கள் யாராலோ காயப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கே தெரியும். ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை."

"புண்பட்டது ஒரு பக்கம் இருக்கட்டும். பொதுவாகவே இந்திய இளைஞர்களைப் பற்றிஎனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவர்களில் பலர் ஒரு பெண்ணின் ஆடையைத்திறக்கத் தவிப்பார்களே தவிர, அவளது மனதைப் பற்றி நினைப்பதேயில்லை."

"கசப்பான அனுபவங்கள் உங்களைப் புண்படுத்தி, இப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அதுதான் உண்மையாக இருக்க வேண்டுமென்றஅவசியமில்லை."

"என் அனுபவங்கள் தவிர, சக பெண்களின் அனுபவங்களை நிறைய கேட்டிருப்பதால்சொல்கிறேன்...நம்புங்கள் தேவன், இதுதான் உண்மை."

"சரி, நீங்கள் உங்களது முடிவில் இவ்வளவு தீர்க்கமாக இருப்பதால் சொல்கிறேன்...சென்ற வாரம் நான் நேரில் சந்தித்த இணையத்தோழியின் என்னைச்சார்ந்த அனுபவம்நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறானது."

"புரியவில்லை...கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் தேவன்"

"இதே சிங்கப்பூரில், நானும், ஒரு பிலிப்பைன் தேசத்துப்பெண்ணும் நீண்ட நாள் இணையநண்பர்கள். நாங்கள் நேரில் சந்தித்தது கிடையாது. அவள் ஒரு சிங்கப்பூரியனை மணந்துகொண்டிருக்கிறாள். சமீப காலமாக அவளது திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள்."

"ம்...அப்புறம்?"

"குடியுரிமை இல்லாததால், மூன்று மாதங்களுக்கு ஒர் முறையாவது சிங்கப்பூரை விட்டு வெளியேருவது அவளது வழக்கம். பெரும்பாலும் பக்கத்திலிருக்கும் மலேசியாவின்ஜோகூர்பாருவிற்கு கணவனோடு சென்றுவிட்டு, மறுநாளே சிங்கப்பூர் திரும்பி விடுவாள்.இந்த முறை அவளது கணவன் அப்படி வர மறுத்து விட்டான்."

"அடடா.."

"நானும் அப்படித்தான் பரிதாபப் பட்டேன். அவளோடு ஜோகூர் வருமாறு என்னைஅழைத்தாள். ஒப்புக் கொண்டேன். வாழ்க்கையில் முதல் முறையாக அவளும் நானும்ஜோகூர் பாருவில் சந்தித்தோம். இயல்பாக இருந்தோம். ஹோட்டலில்தான் பிரச்சனைவந்தது. எங்களுக்குக் கிடைத்தது ஒரே ஒரு இரட்டையறை மட்டும்தான்..."

"சுவரஸ்யம் !"

"இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களிடம் உள்ள பயம், அவளுக்கும் என்னிடம்இருந்தது. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவள் என்னோடு ஒரே அறையில் தங்கஒப்புக்கொண்டாள்."

"தைரியசாலிதான்..."

"அறையில் கட்டிலின் ஒரு ஓரத்தில் நான் படுத்துக் கொள்ள, அதன் மறு ஓரம் அவள்உட்கார்ந்து கொண்டாள். அசதியில் அப்படியே தூங்கி விட்டேன். மறுநாள் சூரியன்உதித்த பிறகுதான் எழுந்தேன். பார்த்தால்...கட்டிலின் ஓரத்தில், அதே இடத்தில் செய்தித்தாள் படித்தபடி அவள். தூங்கவே இல்லையா என்று கேட்டேன். இல்லை என்றாள். ஏன், என் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டேன். அப்படியில்லை...பக்கத்தில் ஒரு மனிதன் பன்றி மாதிரி குறட்டைவிட்டுத் தூங்கும்போது எனக்கு எப்படிதூக்கம் வரும் என்று சொல்லி சிரித்தாள்"

"ஹஹஹா..."

"இப்போது சொல்லுங்கள்...இந்த அனுபவத்திற்குப்பின், இந்திய இளைஞர்களைப்பற்றிய அவளது கணிப்பு என்னவாக இருந்திருக்கும்?"

"நீங்கள் சொன்னது சுவாரஸ்யமான சம்பவம் தேவன். ஆனால், நம்ப முடியவில்லை.இப்படி ஒரு சம்பவம் நிகழ இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும்."

"என்ன அது?"

"ஒன்று அந்தப் பெண் கொஞ்சம்கூட அழகில்லாதவளாக இருக்க வேண்டும்...அல்லது...கோபித்துக் கொள்ளாதீர்கள்...உங்கள் ஆண்மை பற்றி சந்தேகம் வரும்."

"ஹஹஹா...இரண்டுமே தவறான கணிப்பு வித்யா... என்னைப்பற்றி எனக்குத் தெரியும்.அவள் அழகானவள் மட்டுமல்ல...பல ஆண்களை எளிதில் வீழ்த்தி விடும் கவர்ச்சி மிக்கவளும் கூட. என்னைப் பொருத்தவரை இப்படிப்பட்ட சம்பவம் நிகழ ஒன்றேஒன்று போதும். அது - கட்டுப்பாடு."

"என்னதான் சொல்லுங்கள்...நீங்கள் சொல்வதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் தேவன்...ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சம்,கனடா போவதற்கு முன் ஒருமுறை நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்."

"எதற்கு...என்னை சோதிப்பதற்கா?"

"அப்படியில்லை தேவன். ஒரு பெண்ணின் உடலை மட்டும் பார்க்காமல், அவளதுஉள்ளத்தையும் பார்க்கக்கூடிய, மதிப்பற்குரிய ஒரு இளைஞனை என் வாழ்க்கையில்சந்தித்தேன் என்ற திருப்தியோடு கனடா போவேனில்லையா...அதற்காக!"

"என்னை மகான் ஆக்காதீர்கள் வித்யா. நான் சராசரி மனிதன்தான். ஆனால்...நாளைநடப்பதை யாரரிவார்.? ஒருவேளை நீங்கள் சொன்னது மாதிரி, நாம் நேரில் சந்திக்கநேரலாம். நல்லது...மனம் திரந்து நிறைய பேசிவிட்டோம்...இது எனக்கு உறங்கும் நேரம். அடுத்த முறை உங்களோடு இன்னும் நிறையப்பேச ஆசை. உங்களுக்கு சம்மதமா வித்யா?"

"நிச்சயமாக!"

_____________________________________________________

"ஹலோ தேவன்...உங்களை மறுபடியும் இவ்வளவு சீக்கிரம் இணையத்தில் சந்திப்பேனென்று எதிர்பார்க்கவில்லை."

"நானும்தான் வித்யா..."

"போனமுறை உங்களோடு பேசி முடித்ததும் என்னால் வெகுநேரம் தூங்கவே முடியவில்லை. மனம் முழுவதும் ஏதேதோ சிந்தனைகள்."

"நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். எனக்குள் இருந்த சின்ன ரகசியத்தை உங்களோடுபகிர்ந்துகொண்ட திருப்திகூட அதற்குக்காரணமாக இருக்கலாம்."

"என்னை நம்பி உங்கள் ரகசியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தேவன்.நானும் ராபர்ட்டும் தனித்திருந்தவேளையில் உணர்வுகள் எங்களை எப்படி தத்தளிக்க வைத்தது என்பதை அனுபவத்தால் உணர்ந்தவள் நான். அதனால்தான் நீங்கள் சொன்னவிஷயத்தை நம்பக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.மேலும், இந்திய ஆண்களைப்பற்றியஎன் அனுபவங்களும் அப்படி..."

"நீங்கள் சொன்ன உணர்வுத் தூண்டல்கள் எதுவும் எனக்கும் அந்தப்பென்ணுக்கும்இடையில் நடக்கவே இல்லையே வித்யா...அப்படி ஏதும் நடந்திருந்தால் அதன் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.ஆனால், ராபர்ட்டோடு ஒரு மாதகாலம் நீங்கள் கட்டுப்பாடாக இருந்ததுதான் எனக்கு ஆச்சரியம்."

"நான் ஒரு விஷயம் சொல்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்."

"சொல்லுங்கள்"

"ஒருவேளை உங்களைப் போன்ற ஒரு இந்திய இளைஞனை என் வாழ்க்கையில்முன்பே சந்தித்திருந்தால் நான் கனடா போகவேண்டிய அவசியமே வந்திருக்காது."

"அவசரமாக அனுமானிக்கிறீர்கள். நானும் சராசரி இளைஞன்தான். எனக்கும் பல,பலஹீனங்கள் உண்டு. ஒரு இரவு முழுவதும் ஒரு அழகான பெண்ணோடு எந்தத்தவறும் செய்யாமல் தனித்திருந்தேன் என்பதற்காக என்னை மகாத்மாவாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வளவு ஏன்...ஒருவேளை நீங்களும் நானும் இதேபோல் தனித்திருக்கநேர்ந்தால், நான் விடிய விடிய உறங்குவேனென்று சொல்ல முடியாது."

"ஏன் அப்படி?"

"பல காரணங்கள். காலகாலமாக நமது ஜீன்களில் நமக்குள் இருக்கும் ஈர்ப்பு. காதல்பற்றி, அதன் அடுத்த நிலை பற்றி இவ்வளவு ஆழமாக நீண்டு விட்ட நமது பேச்சு...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்."

"நீங்கள் ஒரு வாதத்திற்காக அப்படிச் சொல்கிறீர்கள் தேவன். யோசித்துப்பார்த்தால்...நாம் இருவரும் தனிமையில் சந்தித்தாலும் கட்டுப்பாடோடு எல்லை மீறாமல் இருப்பது சாத்தியம் என்றே எனக்குப்படுகிறது. ம்...தேவன்...ஒரு சவாலுக்காக, நாம் ஏன் உண்மையில் அப்படி சந்திக்கக்கூடாது?"

"எப்படி...ஒரு ஹோட்டலில், தனியறையில், இரவு முழுவதும் தனியாகவா?"

"ஆமாம்."

"விளையாடாதீர்கள் வித்யா..."

"விளையாட்டில்லை தேவன்..ஒரு சவால்! நாம் இருவருமே ஜெயிக்க வாய்ப்பிருக்கிறசவால். இங்கு பக்கத்து நகரில், ஒரு பிரபல ஹோட்டலின் உச்சதளத்தில் நான் ஒருமுறை தங்கியிருக்கிறேன். பெரிய ஜன்னல்கள். அங்கு நின்று பார்த்தால், இரவுநேரம் ஊர் முழுக்க விளக்குகளால் அற்புதமாய் மின்னும். அப்படி ஒரு அறையின் ஜன்னலோரம் நின்று, நல்ல நண்பர்களாக, விடிய விடிய பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும்...உங்களாலும் முடியும்!"

"உண்மைதான்....முடியலாம்தான்...விமானம் ஏறினால் விரைவில் தொட்டுவிடக்கூடியதூரத்தில்தான் நீங்கள் இருகிறீர்கள்.ஆனால்...ஆனால்...வேண்டாம் வித்யா!"

"மறுக்காதீர்கள் தேவன்.நான் பார்க்க விரும்புவதெல்லாம், கட்டுப்பாடுமிக்க 'அந்த'உங்களைத்தான். ஒருவேளை, இந்திய இளைஞர்களைப் பற்றிய எனது எண்ணங்கள்தவறு என்று உங்களால் நிருபிக்க முடிந்தால், அது நீங்கள் எனக்குத்தரும் திருமணப்பரிசென்று நினைத்துக்கொள்வேன்."

"குதிரையின் கண்களுக்கு முன்னால் கட்டித்தொங்க விடப்படும் கேரட் போன்ற இந்தசவாலை ஏற்றுக் கொள்ள எனக்கும் ஆசைதான். ஆனால் பின்விளைவுகளைப் பற்றிபயப்படுகிறேன் வித்யா."

"அதிகம் யோசிக்காதீர்கள். உங்களால் இதில் ஜெயிக்க முடியும்."
"ம்..சரி..நீங்கள் இவ்வளவு சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் இது ஒரு அபாயகரமான அல்லது அபத்தமான பரிசோதனை என்று எனக்குப்படுகிறது. இருந்தாலும்...சந்திப்போம்! எப்போது என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்!"


"சந்திப்பது என்று முடிவான பிறகு, நாட்களைத் தள்ளிப்போட வேண்டாம். வரும் சனிக்கிழமை இரவு, நான் சொன்ன அதே ஹோட்டலில் சந்திப்போம். எனது தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.உங்களுடையதை எனக்குக் கொடுங்கள்."

"சரி வித்யா..."


______________________________________________________

"ஹாய் தேவன்..."

"........................."

"தேவன், இருக்கிறீர்களா?"

"........................."

"தயவுசெய்து பேசுங்கள் தேவன்...."

"சொல்லுங்கள் வித்யா."

"உங்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன், ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள்?"

"தவறுதான்...என்னை மன்னித்து விடுங்கள்."

"எப்படி தேவன்...விமானமேறி அவ்வளவு தூரம் வந்து, ஹோட்டல் வரவேற்பறையில் உஙளுக்காக் காத்திருந்த என்னைப் பார்த்தபிறகும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல்டெக்ஸியில் ஏறி ஓடிப்போக உங்களுக்கு எப்படி மனம் வந்தது?"

"எனக்கு வேறு வழி தெரியவில்லை வித்யா...நீங்கள் என் மீது வைத்தது எவ்வளவுபெரிய நம்பிக்கை? என்னால் எப்படி அந்த நம்பிக்கையை உடைக்க முடியும்?"

"என்ன சொல்கிறீர்கள் தேவன்?"

"உண்மையைச் சொல்கிறேன் வித்யா...ஹோட்டல் வாசலில் ஒரு தேவதை மாதிரிநின்ற உங்களைப் பார்த்ததும், சூழ்நிலை நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால்தான்..."

"ஆக நீங்களும் ஒரு சராசரி இந்திய இளைஞர்தானா? நீங்கள் சொன்ன மாதிரிஒழுக்கம்மிக்க ஒரு இளைஞனை நான் என் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாதா?"

"உண்மையில் அப்படிப்பட்ட ஒருவரை என்னில் நீங்கள் சந்தித்துவிட்டீர்கள் வித்யா..."

"என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் ஓடிப்போன உங்களிலா?"

""யோசித்துப்பாருங்கள்...எப்போது நீங்கள் என்னை சந்திக்கத் துடித்தீர்களோ,அப்போதே நாம் உங்களை ஏதோ ஒருவகையில் பலவீனப்படுத்தியிருப்பதை புரிந்துகொண்டேன். நாம் சந்திக்கும்போது எல்லைகள் மீறி தவறுகள் நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொள்ள நாம் மனரீதியாக தயாராகி விட்டதும் எனக்குப் புரிந்தது."

"................."

"நான் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் உங்களிடம் ஏற்படுத்திய பிம்பம் அப்படி.வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஒரு கதாநாயக பிம்பம்.இப்படிப்பட்ட ஏங்கித் தவிக்காத ஒழுக்கமுள்ள இளைஞனுக்காகத்தான் இதனை நாள்காத்திருந்தேன், இவனிடம் ஒருநாள் வசமிழந்தாலும், வாழ்ந்துவிட்டுப் போனாலும் தப்பில்லை என்று நீங்கள் நினைப்பதாகக் கூட எனக்குத் தோன்றியது. என் கணிப்பு தவறா வித்யா?"

"இந்த கேள்விக்கு என்னிடம் உடனடி பதிலில்லை தேவன். நீங்கள் நினைத்ததைசொல்லுங்கள்..."

"ஒருவேளை உங்களைப் பற்றிய எனது கணிப்புகள் தவறாக இருக்கலாம்...தவறாகஇருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.அனால், இப்போது மனம் திறந்து ஒருஉண்மையை உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன் வித்யா..."

"................."

"ஹோட்டல் வாசலில், சேலை கட்டி,செதுக்கிய சிற்பம் மாதிரி நின்ற உங்களைப்பார்த்த விநாடி...நான் சலனப்பட்டேன்.அந்தநாள் முழுவதையும் உங்களுடனே கழித்துவிட வேண்டுமென்று சபலப்பட்டேன்."

"இதுதான்... உங்களின் இந்த நேர்மைதான் ... எப்படிச் சொல்வது? எத்தனை பேரால்இப்படி உண்மையையை ஒப்புக்கொள்ள முடியும் சொல்லுங்கள்?"

"இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை.ஆனால், நாம் சந்தித்து, எல்லை மீறிஏதாவது நடந்திருந்தால், நீங்கள் சந்தித்த சராசரி மனிதர்களின் பட்டியலில் நானும் சேர்ந்திருப்பேன்."

".................."

"அப்படி ஏதும் நிகழ்ந்து, நீங்கள் என்மீது வைத்திருக்கும் உயரமான நம்பிக்கைகளைதகர்த்துவிட வாய்ப்பு தராமல், டெக்ஸியில் ஏறிய அந்த விநாடியில் 'கட்டுப்பாடுமிக்க'ஒரு இளைஞனை என்னில் நீங்கள் சந்தித்தீர்கள். இது சுய தம்பட்டமாகத் தெரியலாம்.ஆனால், உண்மை."

".................."

"எந்த வகையிலும் உங்களை ஏமாற்றுவது என் நோக்கமல்ல. நான் அப்படி நடந்துகொண்டதால் நாம் இருவருமே சில இழப்புகளைத் தவிர்த்திருக்கிறோம். எனக்குத்தெரியும், உங்களை சந்திக்காமல் திரும்பியதால், நான் உங்களை காயப்படுத்தி இருக்கிறேன். இன்னும் தொடரப்போகும் குற்ற உணர்வில்லாத நமது நட்பு அதற்குமருந்தாக அமையும். மீண்டும் ஒருமுறை நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.நாம் என்றுமே நல்ல நண்பர்களாக, எந்த விஷயத்தையும் எழுத்தில், பேச்சில் பகிர்ந்துகொள்ளக் கூடியவர்களாக இருப்போம். நான் முன்பு நான் சொன்ன மாதிரி, உங்கள்திருமணத்திற்கு என் வாழ்த்துமடல் கனடா வந்து சேரும். மீண்டும் இணையத்தில் சந்திப்போம். பை வித்யா!"

________________________________

Thursday, March 23, 2006

கண்கள்,கண்ணாடிகள்!!!

சில வாரங்களாக
அந்தக் கிழவரைக் காணவில்லை.
கறுப்புக் கண்ணாடியும்
கை தள்ளு வண்டியில் அமர்ந்த அவருமற்று
வெறுமையாய்த் தெரிகிறது எனது தளம்.

வண்டியைத் தள்ளிச் செல்லும் பணிப்பெண்
சப்தமெழுப்பிச் செல்லும் சப்பாத்தோடு
இன்னும் நடந்தபடிதான் இருக்கிறாள்

லிஃப்டிற்காக
ஒருசேர காத்திருக்கையில் ஓரவிழிகளில்
அந்த கருப்புக் கண்ணாடிக்குப்
பின்னிருக்கும் விழிகளின் உணர்வுகளை
கற்பனை செய்ய வாய்ப்பற்ற காலைகள்
வெறுமையளிக்கின்றன.

ஏதேனும் ஒரு மகன் / மகள்
நாட்களுக்கு அழைத்திருக்கலாம்…
வாரங்கள்?

சிலநாட்களில்
பணிபெண்ணையும்
காணவில்லை.

வாரங்கள் சில முன்
புளோக் தாழ்வாரத்தில் கூடிய கூட்டமும்
உறக்கமற்ற அவர்களின் இரவுப் பேச்சும்
உதித்து மறைந்த தற்காலிக கழிப்பிடங்களும்
அந்த கறுப்புக் கண்ணாடிக்காரரின்
இறப்பைச்சொன்னது இப்போது புரிகிறது.

மாநகரங்களில் -
பக்கத்து வீட்டுக்காரரின் மரணம்கூட
வாரங்களுக்குப்பின் தான் அறிய முடிகிறது…

இப்போதும்
லிஃப்ட் எனது தளம்வரும் அவகாசநேரத்தில்
கறுப்புக் கண்ணாடிக்குப்பின் பார்த்திராதவிழிகளை
கற்பனையில் பார்த்திருக்கிறேன்…

கண்களற்ற உலகத்திற்கு
இழுத்துச் செல்ல
வந்து விடுகின்றன
லிஃப்டுகள்!

Saturday, March 18, 2006

மும்பை கிரிக்கெட் டெஸ்ட் - ஒரு சின்ன அலசல்.

அஞ்சு பெளலரா ? இல்லை...நாலா?

அஞ்சுதான் என்னோட சாய்ஸ். உசரமான, வேகமான ஹார்மிசன் இருக்கும்போதே ஒரு பேட்ஸ்மேனை வெளியே உட்கார வைக்க முடியும்னா.. அவர் இல்லாதப்ப ஏன் இன்னொரு பேட்ஸ்மேனைக் கொண்டு வரணும்? இர்·பான், படேல், ஸ்ரீஷாந்த், கும்ளே, ஹர்பஜன்தான் பந்து வீசுவாங்கன்னு நினைக்கிறேன்... பார்ப்ப்போம்!


கவனிக்க வேண்டிய ஆசாமி : முனா·ப் படேல்

கிராமத்து முரட்டுத்தனம் டாலடிக்கும் உடல்வாகு, அதே கிராமத்து வெகுளித்தனம் மிதக்கும் நாணம் கலந்த புன்னகை... இந்தியக் கிரிக்கெட்டுக்கு இன்னொரு பரிணாமத்தைத் தருகிறார் படேல். அவர் பந்துவீச்சு - பாம்பு ஊர்வது மாதிரி இல்லங்க, பாம்பு சீறுவது மாதிரி இருக்கு. bounce - இதுதான் அவரை மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுது. அவருக்கும், மற்ற இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் - வேறொன்றுமில்லை ஜெண்டில்மேன் - 10 கிலோமீட்டர்தான் என்கிறார் ஸ்ரீநாத். இந்த டெஸ்டில் 150km / hour என்ற எல்லையைத் தொடுவார்.



ஒரு டெஸ்டில் ரன் அடிச்சிட்டா 9 டெஸ்டில் தூங்கும் வியாதி

இந்த வியாதி நம்ம ஆளுங்க பலருக்கும் இருக்கு. கிரிக்கெட்டை பரதநாட்டியம் ரேஞ்சுக்கு நளினமாக விளையாடக்கூடிய லட்சுமணன் இந்த வியாதியால்தான் பாதிக்கப் பட்டிருக்கிறார். யுவராஜ் சிங்கும், வாசிம் ஜ·பாரும் இதே வியாதியால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று சிங்கப்பூர் சிராங்கூன் ரோடு கிளி ஜோசியர் சொல்லியிருக்கிறார். நானும் அதை நம்புறேன். இந்த டெஸ்டில் இன்னொரு செஞ்சுரி அடிப்பார் ஜ·பார்னு தோணுது. உங்க ஊரு... உங்க பிட்சு, அடிங்க வாசிம் பாய்!


10 விக்கெட் எடுப்பாரா கும்ளே?

இப்பவெல்லாம் ஒரு டெஸ்டுக்கு ( குறிப்பா இந்தியாவில ) 7, 8 விக்கெட் எடுக்கிறதை வழக்கமா வச்சிருக்கிறாரு கும்ளே. முதல் நாளே கூட மும்பை விக்கெட் ஸ்பின் எடுக்கலாம்னு சொல்றாங்க. போன டெஸ்ட் மேட்சில கும்ளே லெக்ஸ்பின் போட்ட விதம் கண்கொள்ளா காட்சியா இருந்தது... ஒவ்வொரு பந்தும் உண்மையாவே ஸ்பின் ஆச்சு. இந்த டெஸ்டில் அவர் 10 விக்கெட் எடுத்தால் அது எனக்கு ஆச்சரியமில்லை... எடுக்காவிட்டால் - அது ஆச்சரியம். ஹர்பஜன்ஜீ - is it your last chance ?


அடிபட்ட புலி : இங்கிலாந்து அணி

இழப்பதற்கு ஒன்றுமே இல்லங்கிற சூழ்நிலையில என்னவாகும்? முடியே போச்சு போப்பா... என்று மனம் லேசா ஆகிடும். முக்கிய ஆட்டகாரர்களையும், போன டெஸ்ட்டையும் இழந்து - இங்கிலாந்து அணி ஏறக்குறைய அந்த மனநிலையில்தான் இருக்கிறது. அது ஆபத்தான மனநிலை. அந்த மனநிலையில் அவர்கள் ஆதீதமாக நன்கு விளையாடி இந்திய அணியை சுருட்டிவிட வாய்ப்பு இருக்கிறது. ஹோக்கார்ட் ரொம்ப ஆபத்தான ஆசாமி.... கண்மூடி திறக்கிறதுக்குள்ள ஆட்டத்தின் போக்கையே மாத்திடுவாரு. ·பிளின்ட்டாப் வேற - யாராவது ஒருத்தர் பெரிய செஞ்சுரி அடிக்கணும்னு சொல்லி சொல்லி பிட்டர்ஸ்னை வெறுப்பேத்திக்கிட்டு இருக்காரு. என்ன வேணும்னாலும் நடக்கலாம்... அதுதான் கிரிக்கெட்டின் beauty. ஆனால், இந்தியாதான் ஜெயிக்கணும்னு நினைக்கிறதுதானே ஒவ்வொரு இந்தியக் குடிமகனோட duty ???


கடைசியா 1 -ன்னு!

டிராவிடைப் பற்றி ஒரு கவிதை....

உலகம் உங்களுக்கு வச்சிருக்க பட்டப்பெயர் wall...
டாஸ் போடும்போது சரியா இருக்கணும் உங்க call...
மேட்சில உங்க பேட்டில பட்டு 40 முறை பவுண்டரிக்குப் போகணும் ball...
எப்பவுமே நீங்கதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஆள் ! ஆள் !! ஆள் !!!


சுனாமி ஓசையும், சில கவிதைகளும்

சிப்பிகளும், சிறுநண்டுகளும்
சிறுபிள்ளைகளின்
மணல்வீடுகளும்
இருந்த இடம் எது?

நிலா பார்த்து
இரவு நுழைந்து
பகலில் வெளிவந்த
மணல்பாதை எது?

காலங்களின் ஓட்டத்தில் -
கடற்கரையில்
கரை பார்த்து
நாளாகிறது...

நீர் மூழ்க நிற்கிறது கரை.

ஓசைச் சுனாமியின் ஓலத்தில்
அமிழ்ந்து ஒலிக்கிறது
தமிழ் மூச்சு.

எப்போதேனும்
நீர் மேல் எழும்பி விடும்
நீண்ட மூச்சுக்கள்
மீண்டும் மூழ்கின,
மூச்சுத் திணறின...

மெல்லிய பாடலின்
உள்ளிருந்து ஒலிக்கும்
ஒரு உயிர்க்கவிதை!

(சமீபத்திய தமிழ் திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது, இப்படித்தான் வருகிறது பெருமூச்சு! )

Monday, March 13, 2006

இங்கு இப்படியாக இலக்கியம்

ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
சுஜாதா, பாலகுமாரன்
இன்னும் எவர் எவரோ

நூலக அடுக்குகளில் வரிசையாக
எத்தனையோ நாளாய்
என்னோடு பேச....

மன்னிக்கவும்.

ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.

ஒரு மணி நேர இண்டர்னெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப்பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!

எங்கே போய்விடும் இலக்கியம்?
பேசலாமே பின்னொருநாள்!

Saturday, March 11, 2006

எனும் நண்பர்களே.....


எம்.ஆர்.டி பயணங்களில்
உட்கார இடமிருந்தும்
நிற்கும் என்னை
உற்றுப் பார்ப்பதேன்
மனிதர்கள்?
நிற்பது பிடிப்பவர்கள்
நிற்கலாம்தானே?

ஞாயிற்றுக்கிழமைகளில் -
தேக்காவீதிகளை
தேய்ப்பதும்..
ஆர்ச்சர்ட் ரோட்டை
அளப்பதும்..
திரையரங்கு வாசலை
மொய்ப்பதும்தான்..
இளமையின் அடையாளமா?
உறக்கம் பிடிப்பவர்கள்
உறங்கலாம்தானே?

இளமையில் காதல்
அவ்வளவு அவசியமா?
பெண்மீது
பூப்பதுமட்டுமா காதல்?
சன்னலில் கிளைகள் நீட்டும்
இளம்பச்சை மரத்தின் மீது
என்னுள்ளே பூப்பதற்கும்
இந்தப் பெயர்தானே?

நீங்கள் நீங்களாய்
இல்லாமல் இருக்கலாம்...
நான் நானாய்
இருப்பது தவறா
?

Friday, March 10, 2006

மறைந்து, மறைந்து போன ஒரு பதிவு!



இரண்டு, மூன்று தடவை இந்தப்பதிவை வலைப்பூவில் போட்டுவிட்டேன். ஆனால். .. காணாமல், காணமல் போய் விடுகிறது. இந்த முறையாவது, இது இப்படியே இருக்க...எல்லா ஆண்டவர்களும் அருள் புரிவார்களாக!!!!!


இன்றைய திரைப்படப் பாடல்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உண்டு.இருந்தாலும் அவற்றை நாம் நம்மையறியாமல் கேட்ட படியோ,முணுமுணுத்தபடியேதான் இருக்கிறோம்.

அத்தகைய பல பிரபலமான பாடல்களைசமீபத்திய திரைப்படங்களில் எழுதி வரும் இளம் பாடலாசிரியர், கவிஞர்நா.முத்துக்குமார். அவர் கலந்து கொண்ட இலக்கிய பல்சுவை நிகழ்ச்சி சென்ற25/02/06 அன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்ட்ரீடில்அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பாலு மீடியாமேனேஜ்மெண்ட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.திரு விஷ்ணு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்நூலக வாரிய மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா.

தொடர்ந்து 'சுட்டும் விழிச்சுடரே', 'காதல் யானை வருகிறதே'பாடல்களுக்கும், திரு அமலதாசன் வரிகளுக்கு திரு குணசேகரன் இசையமைத்துநான்கு மொழிகளுள் முதலாவதாக வென்ற "சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே"பாடலுக்கும் நிறைவான நடனவிருந்து படைத்தனர் கவிதாகிருஷ்ணன் குழுவினர்.அதன்பின் மாணவர்கள்பங்கேற்ற "திரைப்பட பாடல்களால் சமுதாயத்துக்கு நன்மையா? தீமையா?" என்றகலக்கல் பட்டிமன்றம் நடைபெற்றது.

' நான் ஆணையிட்டால்,' 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பழைய பாடல்கள்காலம் கடந்து வாழவில்லையா? ' நல்ல பேரைவாங்க வேண்டும் பிள்ளைகளே' போன்ற பாடல்கள் குழந்தைகளுக்கு நன்னெறிகளைபோதிப்பதாகதானே உள்ளது. இன்றைய திரைப்படங்களிலும்,கவித்துவம் நிறைந்த'காதல் கடிதம் தீட்டவே', தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும்'காலையில் தினமும்கண்விழித்தால் நான் கைதொழும்' போன்ற பாடல்கள் நிறைய உள்ளனவே. எனவே அன்பை, கருணையை, மனித நேயத்தை வளர்க்கிறதுதிரைஇசைப் பாடல்கள் என்று வாதிட்டனர் " நன்மையே" என்ற தலைப்பில் பேசிய அணியினர்.

'கட்டிப்புடிக் கட்டிப்புடிடா' போன்ற விரசப் பாடல்களும், 'சோடாபாட்டில்கையில' போன்ற வன்முறைப் பாடல்களுமே அதிகமாகஉள்ளன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிப் பாடல்களில் தமிழ்ச்சொற்கள் உண்டா?தமிழ்ப்பாடல்களில்தான் 'கண்ணும் கண்ணும் நோக்கியா?', 'ஷக்கலக்க பேபி',என்றெல்லாம் 'கலப்படம்' செய்கிறார்கள். பரவாயில்லையென்று இவற்றைவிட்டுவிட்டால் நன்னீர் குளத்தில் நஞ்சை கலந்தது போலாகி விடும் என்றுவேடிக்கையாக தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர் "தீமையே" என்றஅணியில் பேசியோர்.

நடு நடுவே தன் நகைச்சுவைப் பேச்சால் கலகலப்பூட்டிய நடுவர் திரு சேவகன்மாணவர்களின் சிறப்பான பேச்சை கேட்டு'சிங்கையில் தமிழ் தழைத்து வாழும் என்ற நம்பிக்கை வலுக்கிறது' என்றார்.மேலும் 'ராக்கம்மா கையத்தட்டு' என்ற துள்ளாலோசைப்பாடலிலும் 'குனித்த புருவமும்' என்ற ஏழாம் நூற்றாண்டு இலக்கியம்இருக்கிறதே! `ஏ குட்டி' போன்ற பாடல்களையும்தமிழ்ப்பாடலைச் சிதைக்கும் தமிழ்த் தெரியாதோர் பாடும் பாடல்களையும்அன்னப்பறவையென ஒதுக்கி விடுங்கள். 'இன்னிசை பாடிவரும்' என்ற பாடலில்'காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை' என்ற அறிவியல் செய்தி,'ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடலில் 'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு' போன்றதத்துவக் கருத்துக்கள் நிறைந்து கிடக்கன்றன. அந்தாதிப் பாடலாக அமைந்த கண்ணதாசனின் 'வசந்தகால நதிகளிலே','கண்ணோடு காண்பதெல்லாம்' போன்றஇலக்கிய நயம் கொணட எண்ணற்ற நல்ல பாடல்களைக் கேளுங்கள்" என்று கூறி"திரைபடப் பாடல்களால் சமுதாயத்துக்குநன்மையே" எனத் தீர்ப்பளித்தார்.

கவிஞர் நா.முத்துக்குமாரைப் பற்றிய அறிமுகஉரை நிகழ்த்தினார்சிவஸ்ரீ.சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8-ல் 2005-ம் ஆண்டுமுதலிடத்தைப் பிடித்த 'காதல் வளர்த்தேன்' என்ற பாடலையும், 2006-ம் ஆண்டுமுதலிடத்தைப் பிடித்த 'சுட்டும் விழிச்சுடரே' என்ற பாடலையும் எழுதியவர் திரு நா.முத்துக்குமார்.

இவர் எழுதிய 'உனக்கென இருப்பேன்', என்ற பாடல், தான் சென்ற கார் ஓட்டுனரைகண்கலங்க வைத்ததென்றும், தமிழ் சரளமாக பேச முடியாதவர்களும், "உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களன்றோ" என்று பாடுவதையும் சுவைபடக் கூறினார்.'காட்டிலே காயும் நிலவை' என்றும் 'அய்யர் பொண்ணு மீன் வாங்க வந்தா'என்றும் எல்லாவிதமான பாடல்களையும் எழுதத் தெரிந்தவர். 'புலி வளர்க்ககாடும் காசும் இல்லாததால் நாங்கள் நாய் வளர்த்தோம்' போன்ற நல்லகவிதைகளையும் படைத்துள்ளார்" என்ற சிவஸ்ரீ இணையம் உட்பட பெரும்பாலும்பாடலாசிரியரின் பெயர்கள் குறிப்பிடப் படுவதில்லை என்ற ஆதங்கத்தையும்வெளிப்படுத்தினார்.

'திரைப்படப் பாடல்களும் இன்றைய தமிழ் இலக்கியமும்' என்ற தலைப்பில் பேசியகவிஞர் நா.முத்துக்குமார் தான் மூன்றாவதுவகுப்பில் படிக்கும் போது கவிதை எழுதியதாகக் கூறினார்."காஞ்சிபுரம்சொந்த ஊர். எனது வீட்டில் சுமார் மூவாயிரம் புத்தகங்கள் இருந்தன. நிறையநேரம் நூல் வாசிப்பதிலேயே செலவிடுவேன். அப்போதும் 'திரைப்படப் பாடல்களால்நன்மையா? தீமையா?' என்ற பட்டிமன்றத்தில் நானும் பேசியிருக்கிறேன்.ஆசிரியர் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய் என்று கேட்டதற்கு'விஞ்ஞானியாவேன்' என்று சொன்னேன். ஆனால் இப்போது எதிர்பாராத விபத்தாகபாடல் எழுத வந்துவிட்டேன்" என்று தனதுநினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சொந்த மண்ணைப் பிரிந்தவன் பாடுவதுபோல் அமைந்த 'திரைகடல் தாண்டி வந்துதிரவியம் தேடுகின்றோம்' என்ற பாடலில்'செல்லம் கொஞ்சி நம்மைக் கடிக்க வரும் கொசுக்கள்" போன்ற யதார்த்தமும்ஏளனமும் நிறைந்த வரிகளை திரு முத்துக்குமார்வாசிக்கையில் பலத்தக் கைத்தட்டலைப் பெற்றார்.."வேப்பம்பூ மிதக்கும்எங்கள் வீட்டுக் கிணற்றில்' என்ற எனது 'தூர்' கவிதையை கையாண்ட எழுத்தாளர்சுஜாதா, கவிஞர் அறிவுமதி, இயக்குனர் பாலுமகேந்திரா போன்றோர் மறக்கமுடியாதவர்கள்" என்றார்.

நல்ல பாடல்கள் பிறப்பது இயக்குனர் உள்ளிட்டோரின் கைகளிலும் உள்ளது. எழுதசுதந்திரம் கொடுத்ததால்தான் இயக்குனர் பாலாவுக்கு "ஓராயிரம் யானை" என்றபாடலும், இயக்குனர் செல்வராகவனுக்கு "கண்பேசும் வார்த்தைகள்" என்றபாடலும், இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு,"உனக்கென இருப்பேன்" என்றபாடலும் எழுத முடிந்தது. மோசமான பாடல்கள் என்று நீங்கள் நினைப்பதைகேட்காதீர்கள். அவ்வாறு நீங்கள் நிராகரித்தாலே அதுபோன்ற பாடல்கள்வெளிவருவது குறைந்து விடும்.

" வானத்தைப் போல திரைப்படத்தில் வரும் 'எங்கள் வீட்டில் எல்லா நாளும்'என்ற பாடல் மெட்டில் சிறுவன் பாடுகிறான்."எங்கள் வீட்டில் எல்லா நாளும் இட்லிதான்,தொட்டுக் கொள்ள கெட்டுப் போனசட்னிதான்"..இப்படி எல்லோருக்குள்ளுமே ஒருகவிஞன் இருக்கிறான்."மனுஷ்யபுத்திரன், தபூசங்கர் போன்ற பலருடையகவிதைகளையும் பிடிக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நீண்ட பாரம்பரியம் கொண்ட இலக்கணத்தைபின்பற்றி எழுத வேண்டி உள்ளது. நம் மரபும் வாழ்வும் பாடலோடு இணைந்த மரபுஎன்பதால் திரையிசைப் பாடல்களை அழிக்க முடியாது."என்று நம்பிக்கையூட்டிநிறைவு செய்தார் திரு நா.முத்துக்குமார்.

கவித்துவமிக்க, சுருக்கமான செய்திகளோடு நிகழ்ச்சியை சிறப்பாகவழிநடத்தினார் கவிஞர் பாலு மணிமாறன்.தரமிக்க தமிழ் இலக்கியநிகழ்ச்சிகளுக்கு தங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்பதை அரங்கு முழுக்கத்திரண்டிருந்த கூட்டம் நிருபித்தது

Thursday, March 09, 2006

ரசிச்ச பாட்டு நாலு

1. " செண்பகமே, செண்பகமே"

........ 80 களில் இறுதியில், எத்தனையோ இரவுகளில் என் இதயம் பிழிந்திருக்கிறது இந்தப் பாடல். " எள்ளுப்பூ நாசிப்பத்திப் பேசிப் பேசித் தீராது...உம் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது " என்ற வரிகளை உச்சரிக்கையில் மனோவில் குரல் நெகிழ, நெகிழ - கேட்க்கும்போதெல்லாம் - அதில் வழுக்கி, வழுக்கி விழுந்து விடுகிறது மனசு ......


2. " பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா"

......... பச்சைக்கம்பளம் விரித்த ஒரு கிராமத்து வெளியில் - ஆதரவற்ற அநாதையாக - ஓடைகளில், ஒற்றையடிப் பாதைகளில், சிறகு விரிக்கும் தென்னந்தோப்புகளில், ஓய்ந்திருக்கும் செம்மண் குளக்கரையில் ஓடியபடி இருக்கும் இந்த ஓசை - இன்றும்கூட, என்னை வந்து சேரும்போதெல்லாம்... தன்னைத் தந்து விட்டு என்னை வாங்கிக் சென்று விடுகிறது......


3. "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்"

......... TMSன் குரலில் சாகா வரம் பெற்ற பாடல்கள் பல்லாயிரம். இந்தப்பாடலின் இடையில் வரும் " உனக்கான என் பாடல் ஒலிக்கின்றது..அதில் ஏதேதோ எண்ணங்கள் இருக்கின்றது " என்ற வார்த்தைகள் எ·கை உருக்கும் தீயாக நம்மை வார்த்து - வடிவமைத்தும் விடுகின்றன. நம் வாழ்வில் இடையிடையே வந்து போகும் ஏதேதோக்களின் சாயலோடு, உறக்கங்களிலும், கனவுகளிலும் கூட ஒலிக்கும் பாடல் இது.


4. "கண்பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை..."

...... உலகக் காதலர்களில் ஏக்கமெல்லாம் சேர்ந்து ஒலித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வைக்கிற பாடல் இது. அவள் விழியும், அதனால் வரும் வலியும் ஒவ்வொரு காதலனும் உணர்ந்ததுதான். ஆனால், " விழி உனக்குச் சொந்தமடி... வேதனைகள் எனக்குச் சொந்தமடி" என்ற வரிகளைக் கேட்கும்போதோ...அட, நாம் சொல்ல நினைத்து வார்த்தைகளின்றி தவித்த விஷயத்தை இந்தக் கவிஞன் எப்படி இவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் என்று வியப்புக்கல் மீது கால் இடறி விழுந்தே விடுகிறோம். விழ்ந்த நம்மை பரிதாபமாகப் பார்த்தபடி கடந்து போய் விடுகின்றன வரிகள்.

Tuesday, February 28, 2006

சங்கிலிப்பதிவில் நான்

இந்தத் தொடரில் என்னையும் மாட்டி விட்ட devற்கு கோடானகோடி நமஸ்காரங்களுடன் நான் சொல்வதெல்லாம் கீழே இருக்கிறது ..........

Four jobs I have had:

1. சின்ன வயதில், கூளையனூர் ஊர்த் திருவிழா சமயம் தோட்டதில் இருந்து வாழைத் தாரை வெட்டி வந்து கடமையே கண்ணாக வாழைப்பழம் விற்றது.

2. டிப்ளோமா முடித்து பொலிகாளை மாதிரி ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு காலையில், கம்பம் மாமாவின் ரி·பிரிஜிரேஷன் கடையில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தபோது, "உன்னால் சொந்தத் தொழில் செய்ய முடியாது" என்று அவர் சவால் விட, அன்று இரவே மதுரையில் இருந்து வாங்கி வந்த stationaries கொண்டு, அவர் தந்த இடத்தில் கடை போட்டு லாபம் பார்த்தது.

3. சுயமாக வேலை தேடி சென்னை வந்தபோது carewell homes என்ற கம்பெனியில், என்னென்னவோ வேலையெல்லாம் பார்த்தது.(கேபிள் டிவி புதிதாக வந்த காலம் அது. kadar Nawaz Khan ரோட்டிலிருந்த ஒரு பங்களா வீட்டில் கேபிள் கனெக்ஷன் கொடுக்கப் போனபோது, அங்கிருந்த சேச்சி, கனெக்ஷன் கொடுக்கணும் என்று ரொம்ப உள்ளே கூட்டிக் கொண்டு போக அரண்டு போய் ஓடி வந்து, சீக்கிரமே வேலையை விட்டு விட்டேன்)

4. 1992 முதல் இன்று வரை வட இந்தியா முதல், மலேசியா வரை பல இடங்களில் எலக்டிரிக்கல் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் வாழ்க்கை நடத்துவது!


Four movies I would watch over and over again:

1. சதி லீலாவதி (அட..நம்ம பாலு மகேந்திரா எடுத்ததுங்க!)
2. முதல் மரியாதை
3. தர்மத்தில் தலைவன்
4. தில்லானா மோகனாம்பாள்
(இங்கிலீஷ் படமெல்லாம் நமக்கு அம்புட்டு புரியாதுங்கோ...)


Four places I have lived (for years):

1. எண்ணூர் ( கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகில் )
2. ராயப்பன்பட்டி ( St.Aloysious Hr.Sec.School Hostel )
3. பொள்ளாச்சி ( Nachimuthu Polytecnic - இறந்துபோன லட்சுமனன் காதலித்த அஜிதா நீ எங்க இருக்க?)
4. வாரணாசிக்கு பக்கத்தில் அன்பாரா, மலேசியாவின் காப்பார் மற்றும் 10 வருடத்திற்கு மேலாக சிங்கப்பூர்.


Four TV shows I love to watch:

1. ஹார்ஷா போக்ளே வர்ற show எல்லாம்
2. மெட்டி ஒலி ( முதல் நாள் பார்த்துமே சொன்னேன் - இது நிச்சயம் வெற்றி பெறும்னு! )
3. அது மட்டும் ரகசியம் ( சமீப காலத்தில் ஜவ்வடித்த போதும்.. ரசிக்கிறேன்!)
4. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரலில் தில், தில், மனதில் (படைப்பவர் - சிங்கப்பூர் "ரவி பெர்னாட்" கலைச்செல்வன்)


Four places I have been on vacation:

1. சின்ன வயசில இருந்து அடிக்கடி - சுருளித்தீர்த்தம்
2. மலேசியாவின் பிரேசர் ஹில்
3. அதே மலேசியாவின் பங்கோர் தீவு
4. இந்தோனேசியாவின் பாதாம் தீவு


Four of my favourite foods:

1. அதாங்க .. சிக்கன் பிரியாணி
2. இரவென்றால் - சப்பாத்தி
3. முன்னாடியெல்லாம் இடியாப்பம்... இப்போ புட்டு
4. தக்காளி சாதம்


Four sites I visit daily:

1. www.cricinfo.com
2. http://us.rediff.com
3. www.its.uci.edu/~jaykay/leander.html
4. www.thamizmanam.com


நான் tag செய்ய நினக்கும் 4 பேரை ஏற்கனவே மற்றவர்கள் tag செய்திருக்கக் கூடும் என்பதால், tag செய்வதை தவிர்த்து விடை பெறுவது உங்கள் , உங்கள் , உங்கள் ..........................