Thursday, January 01, 2009

புதுவருஷமும், புதுவசந்தமும் (நாலு வார்த்தை-032)

சிங்கப்பூர் இந்தியர்களுக்கென்று இருக்கின்ற ஒரே தொலைக்காட்சி 'வசந்தம்'! சில மாதங்களுக்கு முன்புவரை 'வசந்தம் சென்ட்ரல்' என்றிருந்த அதன் பெயர் இப்போது மாற்றம் கண்டுள்ளது. வாரத்திற்கு 29 மணி நேரமாக இருந்த ஒளிபரப்பு நேரம் 65 மணி நேரமாகவும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. Arts Central, Kids Central போன்ற மற்ற ஒளிவழிகளோடு நேரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த வசந்தம், தற்போது தனி ஒளிவழியாக இயங்குவதன் மூலம், சிங்கப்பூர் இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது என்று சொல்லலாம். ஸ்டார் ஹப் கேபிள்விஷன் (SCV) வழி, சன் டி.வி மற்றும் விஜய் டி.வியின் நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழும் வாய்ப்பு இருந்தாலும், 'தங்களது பிரச்சனைகளைப் பேசும் தங்களது தொலைக்காட்சி' என்பது சிங்கப்பூர் இந்தியர்களின் நீண்டநாள் கனவு. துவக்க அறிகுறிகள் சரியென்றால், தரமான நிகழ்ச்சிகள் என்ற இலக்கை நோக்கி வசந்தத்தின் பயணம் வெற்றிகரமாகப் போகிறது என்று துணிந்து சொல்லலாம்...

தற்போது அதன் தலைமை நிர்வாகியாக இருக்கிறார் சபநிதா சண்முகசுந்தரம். அவர் பேசுவதை வசந்தம் தொலைக்காட்சியில் சின்ன, சின்ன 'கிளிப்பிங்'குகளாக சில முறை பார்த்திருக்கிறேன். அந்தப் பேச்சில் பளிசென்று தென்படுவது - அழுத்தமும், தெளிவும்! அவர் வசந்தத்தில் பதவியேற்றபின் வருகின்ற நிகழ்ச்சிகளில் அதே அழுத்தமும், தெளிவும் தென்படுவதாகச் சொல்கிறார்கள் நண்பர்கள். நிகழ்ச்சிகளின் தரத்தை உறுதி செய்வதில் அனுபவமும், இளமையும் உள்ள குழுவொன்று சபநிதாவிற்குப் பக்கத் துணையாக இருக்கிறது. திருமதி.விஜயா சரவணன், துடிப்புமிக்க இளைஞரான சரவணன், காமாட்சி அபிமன்னன், கண்ணன் கார்த்திக் போன்றோர் நிகழ்ச்சி நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அதிகரிக்கப்பட்ட நேரம், புதிய நிகழ்ச்சிகளை பரிச்சித்துப் பார்க்க வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக நேரடி ஒளிபரப்புகள். 'உடலும், உள்ளமும்', 'அரங்கத்தில் இன்று' என்ற இரண்டும் முக்கிய நேரடி நிகழ்ச்சிகள்.

'உடலும், உள்ளமும்' மருத்துவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி. அழகிய பாண்டியன் வழி நடத்துகிறார். நிறைய நேயர்கள் அழைத்து மருத்துவச் சந்தேகங்களைக் கேட்கிறார்கள். இருதய நோய் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் அழைக்கிறார்...."டாக்டர் எனக்கு இதயநோய் இருக்கிறது. நான் Wine குடிக்கலாமா?" என்பது அவரது கேள்வி. டாக்டர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆர்வமாகக் கவனிக்கிறேன். டாக்டரின் இதழோரம் சிறு புன்னகை வெளிப்படுகிறது. சொல்கிறார்..."குடிக்கலாம்" "என்ன டாக்டர் இப்படி இப்படி சொல்றீங்க. என்னோட டாக்டர் குடிக்கக் கூடாதுன்னு சொன்னாரே." "குடிக்கலாம்மா...ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு." என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டாக்டரின் நேர்மையானப் பதிலைப் பற்றி நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் நடந்த 'அரங்கத்தில் இன்று' நிகழ்ச்சியில் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் பொருளாதாரப் பின்னடைவைப் பற்றி எளிமையான தமிழில் தெளிவாக விளக்கினார். தொலைக்காட்சி பார்ப்பவர்களின் வாழ்க்கையோடு நெருங்கி விடுகின்றன இப்படிப்பட நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சியை வழி நடத்தும் G.T.மணி நிறைய தயாரிப்போடு வருவதை உணர்கிறார்கள் நேயர்கள். இதே G.T.மணி, 'ஒலி, ஒளி' நிகழ்ச்சியில் நடுவராக அவர் சொன்ன கருத்தொன்று கவனத்தை ஈர்த்தது, 'ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிப் படைப்பாளர் மனதுக்குப் பிடித்தமானவராக மட்டுமல்ல, மரியாதைக்குரியவராகவும் இருக்க வேண்டும்.." விஜய் டி.வியில் 'நீயா, நானா' நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத்தின் முகம் சட்டென்று மனதில் வந்து போனது. ஒரு வாசகமானாலும், திருவாசகம்!

தகவல், கல்வி, பொழுதுபோக்கு, இளையர் நிகழ்ச்சிகள் என பல பிரிவுகளிலும் சம கவனம் செலுத்தி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருகிறது வசந்தம். தற்போது தொடர் நாடகங்களும் ஒலிபரப்பாகத் துவங்கியுள்ளது. கூடவே தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட நாடகங்களையும் ஒலிபரப்புகிறது. சிங்கப்பூர் தமிழ் ஒளிபரப்புத் துறையில் கலைஞர்களும், தொழில் நுட்பத் திறனாளர்களும் அதிக அளவில் உருவானால், சீக்கிரமே, தமிழ்நாட்டு நாடகங்களுக்கான தேவையில்லாத நிலை வரலாம். வசந்தத்தில் - தமிழ்த் திரைப்படங்களோடு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களும் ஒலிபரப்பாக ' பகுத் அச்சா ஹாய்' என்று சம்சாரித்தபடி படம் பார்க்கிறார்கள் பலஇன, மொழி மக்கள். வசந்தம் சென்ட்ரல், வசந்தமாக மாறி கொஞ்ச நாள்தான் ஆகிறது. அதற்குள் சிலர் வசந்தம் மீதான விமர்சனத்தை வைக்க துடிக்கலாம் சிலர். ஆனால், That is too early! இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் வசந்தம் பற்றிய விமர்சனங்களை முன் வைக்க முடியும். அதுதான் நியாயம்! அதுவரை, வசந்தத்தைப் 'பார்த்தாலே பரவசம்' என்று பார்ப்பது மட்டுமே சிங்கப்பூர்த் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் வேலையாக இருக்கும்!!

1 comment:

வடுவூர் குமார் said...

பார்க்க கொடுத்துவைக்கவில்லை. :-(