Friday, January 02, 2009

கிராமத்துக்காரனின் நகரப் பொம்மலாட்டம்! (நாலு வார்த்தை-033)

பொம்மலாட்டத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கும், வெற்றி, தோல்விகளுக்கும் அப்பால், பாரதிராஜா என்ற பெயர் தமிழ் சினிமா சரித்திரத்தில் மிக, மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தமிழ்ச்சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் பாலா, அமீர் உட்பட பல படைப்பாளிகளுக்கு அவரே நம்பிக்கையாக இருந்திருக்கிறார். வழிகாட்டி என்ற வார்த்தைக்குள் அடங்க முடியாதபடி பாரதிராஜா பல கலைஞர்களையும் பாதித்திருப்பது தமிழ்ச் சினிமா வரலாற்றில் அவரது இடத்தை இன்னும் முக்கியமாக்கி விடுகிறது. பல கிராமங்களின் கருப்பு, வெள்ளை கனவுகளுக்கு வண்ணம் பூசிய இந்தக் கலைஞர், காலத்திற்கேற்பத் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருக்கும் அற்புதம் அதிசயிக்க வைக்கிறது. பொம்மலாட்டம் அதற்கான சாட்சியாக பரிணமித்திருக்கிறது.

கலைப் படைப்புகள் அதனைப் படைப்பவனின் வாழ்க்கையிலிருந்தே வார்த்தெடுக்கப்படுகின்றன. உண்மையும்,கற்பனையும் சரியான விகிதத்தில் கலக்கும்போது அதுவே அற்புதமான கலைப்படைப்பாக வடிவம் பெறும். பொம்பலாட்டம் படத்தின் பல காட்சிகளில் வெள்ளை எழுத்துகளில் DIRECTOR என்று எழுதிய வெற்று நாற்காலி காட்டப்படும். அந்த நாற்காலியின் மேலாக ஒலிக்கும் இயக்குனரின் குரல். அந்த நாற்காலி மாதிரியே, நானா படேகர் வெற்றாகி விட, படம் நெடுக SUPER IMPOSE ஆகித் தெரியும் பாரதிராஜாவின் முகம். பிரசித்த பெற்ற அவரது கோபம், mood swings, களிமண்ணிலிருந்து பொம்மை பிடிக்கும் திறன் போன்ற இன்னும் பல, ஒவ்வொரு காட்சியாக வெளிப்பட, நானா படேகர் ஐஸ் கட்டியாக உருகிப் போய் விடுகிறார்; அங்கு பாரதிராஜாவே வெப்பமாகத் தகிக்கிறார். தன்னில் ஒரு பாதியை கலைப்படைப்பாக்கி விமர்சித்துப் பார்க்கும் தன்னம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கிறது... இருப்பதும், இப்படி இருந்தால் நல்லதே என்று நினைப்பதுமாக, பொம்மலாட்டத்தில், 'ராணா' ஒரு அற்புதப் படைப்பு.

2006ன் துவக்க மாதத்தின் ஒரு Singapore Pan Pacific Hotel பகலில், பாரதிராஜா என்ற கலைஞருக்குள் தகித்துக் கொண்டிருக்கும் வெற்றி தாகத்தை பக்கத்திலிருந்து பார்த்தேன். அன்று அவர் 'மயிலு' என்ற பெண்ணின் நிஜமுகத்தை இன்னொரு முறை பதிவு செய்யும் ஆசையைச் சொன்னார். அந்த நிஜ மயிலு ஒரு ஸ்ரீதேவி போல் அழகானவளாக இருப்பாளா என்று கேட்கத் தோன்றியது; கேட்கவில்லை. 'குற்றப்பரம்பரை' என்பதே தனது லட்சியப்படம் என்று குறிப்பிட்டார். தென்பாண்டிச் சீமை என்ற பழக்கமான சூழலை பின்னணியாகக் கொள்ளப் போகும் அந்தப் படத்தில் அவர் சாதிப்பார் என்று ஒளிவிட்ட அவரது கண்கள் உறுதி கூறின. எனது கணிப்பு தவறில்லையெனில், அந்தப் படத்தில் பாரதிராஜா நிச்சயம் நடிப்பார். பொம்மலாட்டத்தில் நானா படேகர் நடித்த வேடத்தில் அவரே நடித்திருக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். நடித்திருக்கலாம். அல்லது குரலாவது கொடுத்திருக்கலாம்...முடிந்து போன ஒரு விஷயத்தைப் பற்றி எத்தனை 'லாம்'கள் போட்டு என்ன ஆகி விடப் போகிறது? அந்த காலகட்டத்தில் அவர் மூன்று விஷயங்களைப் பற்றி கொஞ்சம் போல் கவலைப்பட்டார்.முதல் 2 விஷயங்கள் கொஞ்சம் பர்சனல். மூன்றாவது விஷயம், இன்னொரு வெற்றிப் படத்தைப் பற்றி! அந்த மூன்று கவலைகளும் 2008ன் இறுதிக்குள் தீர்ந்திருக்க, அந்த மாபெரும் கலைஞர் 2009ல் இன்னும் புதிய உச்சங்களைத் தொட முயல்வார் என்ற நம்பிக்கை வருகிறது.

பொம்மலாட்டம் படத்தில் பலரும் பல காட்சிகளை சிலாகித்தாலும், ருக்மணியை நானா படேகர் அடையாளம் காணும் பாடல் காட்சியில், ருக்மணியின் துப்பட்டா ஒரு நொடி தாளக் கருவியைத் தடவிவிட்டுப் போகும் அந்த shot - That is Bharathiraja என்று சொல்ல வைத்தது. அது பாரதிராஜாவுக்கே உரிய பிரத்தியேக touch! அமீர், பாலா, செல்வராகவன், சசிக்குமார், மிஷ்கின் கொண்ட இன்னொரு தலைமுறைக்கும் சவால்விடும் படைப்பாக 'பொம்மலாட்டம்' அமைந்திருக்கிறது. பாரதிராஜாவின் அடுத்த படைப்பு எதுவாக இருந்தாலும், அது, இளைய தலைமுறையின் நாடித் துடிப்பையும் உணர்ந்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும். ஒவ்வொரு கலைஞனும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் 'தான், தானாக இருப்பது சரியா...அல்லது அவனைப் போல், இவனைப் போல் மாறணுமா?' என்ற குழப்பமான நிலையைக் கடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆனால், தன் மீதும், தனது படைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவனே காலத்தைக் கடந்து நிற்கிறான். பாரதிராஜா எடுக்கும் பாரதிராஜா படத்தைப் பார்க்கவே பாரதிராஜா ரசிகர்களூம், தமிழ்த் திரை ரசிகர்களும் விரும்புக்கிறார்கள் என்பதை பாரதிராஜாவும் புரிந்து கொண்டிருப்பார் - பொம்மலாட்டத்தின் வெற்றி மூலம்!

No comments: