Thursday, March 31, 2005

இக்கவிதையைப் படிக்கலாம்: கண்ணீர் வேண்டாம்!

துளிர்த்துக் கொண்டே இருக்க
நீ விடிந்து கொண்டே இரு.

வளர்ந்து கொண்டே இருக்க
என்னைப் பிடுங்கி நடு.

வாழ்ந்து கொண்டே இருக்க
உன் கைக்குட்டையை பரிசளி.

தேய்ந்து கொண்டே இருக்க
என்னை நிலவாக்கி
நிமிர்ந்து பார்.

நெகிழ்ந்து கொண்டே இருக்க
விழிக்குளத்தில் தேக்கு
ஒரு துளி நீர்.

நடந்து கொண்டே இருக்க
உன் வாயால் ஒரு
கவிதை சொல்.

கிழிந்து கொண்டே இருக்க
என்னை குப்பையாக்கு.

வடிந்து கொண்டே இருக்க
உன்னை தாளாக்கி
என்னை எழுது.

தெரிந்து கொண்டே இருக்க
வினாவாக என்னை
மாற்றிக் கொள்.

மறந்து கொண்டே இருக்க
நீ நானாகி விடு.

இறந்து கொண்டே இருக்க
இன்னொரு முறை சிரி.

இதில் எதையும் செய்ய இயலாதா?
அப்ப சரி....
மரியாதையாய் என்னை
காதலித்து விடு !

Wednesday, March 30, 2005

நாய்களும் நடை பழகும் காலை

கொடிநீள் கழிவுநீர் ஆடியில்
நொடிக்காற்றில் நீட்சியாகும்
வேர்ஹவுஸ் விளக்குச்சித்திரம்.....

பதிவற்ற சுற்றுச்சுவர் முத்த நினைவில்
எட்டிக்கிடக்கும் ஒளிப்படுகையை
இருள் அணைத்துப் பார்த்தபடி
மரமுதிர்ந்து கிடக்கும் ஒரு மயிர்ச்சிறகு.

வியர்வை நடும் நகர்வில்
எட்டி எட்டி நடந்தபடி
நீண்ட உயிர் நோக்கும்
சீனக்கிழவியின் தளர்கால்கள்.

இரவு அடங்க
இருக்கிறது இன்னும் நேரம்!
ஜன்னல் திரைச்சீலைகளின்
பின்அதிர இயங்கும் அது.

கசியும் வெளிச்சத்தை இழுத்துமூடும்
காண்டோ வீட்டு சீன முதலாளி
பிலிப்பினோ பணிப்பெண்ணிடம் சொல்கிறான்...

'மறந்து விடாதே...
காலை ஐந்திற்கு அலாரம் வை.
நாயும், நீயும் நடை பழக வேண்டும்'

Monday, March 28, 2005

ஒரு பணிப்பெண்ணின் சமையலறை மெட்டுகள்


Image hosted by Photobucket.com



ஒரு சல்லடை பிரயோகத்தின் பின்னும்
விரல் தாண்டி உதிரியாக
இசைக்குதிரையின் அங்கத்திலிருந்து
சிதறிய கீதச்செதில்கள்.
அவகாசம் கடந்த மெட்டின் படம்
சமையலறைச் சுவரில் தொங்குகிறது.

அடுப்புச்செயலெரித்த மெளனஎந்திரம்
பழைய இசைத்தொட்டியில்
விரல் அலைக்கிறது.

வரிகள் மழுங்கிய பாடல்களோடு
அவனும் அவளும் காற்றாகி
மலை முகடுகளில், கரட்டுப்புழுதியில்
தேனுண்ணும்
வண்ணத்துப்பூச்சிகளின் பூவில்
நாக்கு நீட்டி தேனும் உண்கிறார்கள்.

பயனீட்டாளனின் கதவழைப்புக்கு
திறந்து சிந்த
சேமிப்பில் இன்னொரு செயற்கைப்பூ!

Saturday, March 26, 2005

நடுநிசிக்கு முன்


இருப்பிலிருந்து தீர்ந்தது ஒன்று.

நிறைய செலவுகள், வெற்றிடங்கள்...
கணக்குப் புத்தகத்தில்
மெலிந்து கிடக்கிறது வரவு.

டெக்ஸியில் கைபிடித்து கீழிறங்கி
புளோக் லி·ப்டிற்குக் காத்திருக்கும்
அவனுக்கும் அவளுக்கும்
செலவளிக்கக் கொஞ்சம்
மீதமிருக்கலாம்.

சன் டிவியின்
ஒலிக்காத மெட்டிக்காக
விழித்துக் கிடக்கலாம் காதுகள்!

வெயில் காய்ந்த துணிகள்
இரவு மழைக்கு மிக பயந்து
ஜன்னல் எம்பி உள்குதித்து
கொடிக்கம்பில் மூச்சுவிடும்.

அந்த இருட்டு மூலை புற்கள்
பேசிக் களைத்திருக்க....
அதிலமர்ந்த அவ்விருவர்
அவ்வப்போது பேசியும் கொண்டனர்.

ஹாகார்ட் சென்டர் மேசை
பீர்போத்தலில் நுரைத்த பீர்
டிவியில் கோல்விழும் போதெல்லாம்
குழியில் விழுந்து சாகிறது.

ஞாபகப் படுக்கையில்
புரண்டு படுத்தபடி மனசு.
விழித்தும் உறங்கியும்
நினைவுகளற்றே நீள்கிறது இரவு.

Wednesday, March 23, 2005

சிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை

இந்த நிமிடம் சிங்கப்பூரில் இருக்கும் சகோதரி துளசி கோபாலை போன ஞாயிறுக்கிழமை சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் ஒரு கேள்வி கேட்டார்..."இலக்கியம் என்றால் என்ன?"

வருடம் 2105. சிங்கப்பூரை ஒட்டிய கடற்புரம். அந்தக் கட்டிடம் கடல் நடுவே நாங்கூரமிடப்பட்டிருந்த ராட்சச பலூன் மீது கட்டப்பட்டிருந்தது.

அதன் 160வது தளத்தில் 100 பேர் கூடியிருந்ததார்கள். அது - " போன நூற்றாண்டுத் தமிழர்கள் " என்ற கருத்தரங்கு. வயிற்றைத்தொடும் தாடியோடு ஒரு கண்ணாடி போட்ட அறிஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரைச்சுற்றி மட்டும் விளக்குகள் பீய்ச்சிய ஒளி. மற்றவர்கள் இருட்டில்!

" உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் போன நூற்றாண்டு மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒரு சங்கதி அவர்கள் வாழ்க்கையில் இருந்திருக்கிறது. அது அவர்களது வாழ்க்கையில் பெரும் பகுதியை சாப்பிட்டிருக்கிறது. "

அடி தன் முன்னால் இருந்த பட்டனைத் தட்ட விளக்குகள் அவன் மீது ஒளிவீச, முன்னால் இருந்த பெரிய திரையில் அகலமாய் அவன் முகம்.

" என்ன சந்தேகம் மகனே? " என்றார் அறிஞர். எல்லோரும் திரையில் தோன்றிய அடியை ஆர்வமாய் பார்த்தார்கள்.

" இலக்கியம் என்றால் என்னவென்று சுருக்கமாக விளக்க முடியுமா ? "

" முடியும் " என்ற அறிஞர் தொடர்ந்து பேசினார். " இலக்கியம் என்பது ஒரு போதைப்பொருள் மாதிரி. எப்படி போதைப் பொருள் மனிதமனதைப் பாதித்து உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை பிம்பங்களை மனதுக்குள் விதைக்கிறதோ, அதே காரியத்தை இலக்கியமும் செய்தது. நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததுபோல் யாராவது ஒருவர் கற்பனை செய்து எழுத, பலரும் அதை படித்துவிட்டு அதில் மனம் ஒன்றிப்போய் கற்பனையான உலகில் வாழ்ந்தார்கள்."

" ஆக இலக்கியம் என்ற விஷயத்தால் எந்த பலனும் இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" பலனா? இலக்கியம் என்பது போன நூற்றாண்டு மனிதர்களை பிடித்திருந்த நோய் என்றுதான் சொல்ல வேண்டும்."

" அவ்வளவு ஆபத்தான ஒன்றை நம் முன்னோர்கள் ஏன் நேசித்திருக்க வேண்டும் ? " இந்தக் கேள்வியை மகி கேட்டான்.இப்போது வெளிச்சம் அவனிடம், திரையில் அவன் முகம்!

" அவர்கள் நம்மைப்போல் இல்லை. சரியான சோம்பேரிகள். நாம் தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குகிறோம். அவர்களோ நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் தூங்கினார்கள். இலக்கியம் அந்த சோம்பேரித்தனத்தை அங்கீகரித்ததால் அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. "

" சோம்பேறிகள் சிலர் இலக்கியம் என்று ஒன்றைப் படைத்து இன்னும் பலரை சோம்பேறியாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தானே ? "

" புத்திசாலி. சீக்கிரம் புரிந்து கொண்டாய். " என்று பாராட்டினார் அறிஞர். எல்லோரும் மெலிதாக கைதட்டினார்கள்.

" இப்படிப்பட்ட ஆபத்தான விஷயத்தை அரசாங்கங்கள் எப்படி விட்டு வைத்தன? "

" எது அதிக ஆபத்தானது என்ற கேள்வி எழும்போது அதிக ஆபத்தான விஷயத்தின்மீது தாக்குதல் தொடுப்பதையே அரசாங்கங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. போன நூற்றாண்டில் இதைவிட ஆபத்தான பல விஷயங்கள் இருந்ததால் இதை அதிகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். "

" இதைவிட ஆபத்தான விஷயங்களா? ஏதாவது சிலவற்றை சொல்ல முடியுமா? " என்று கேட்டாள் சகி.

" பலவற்றைச் சொல்லலாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி, சினிமா இப்படிப் பல அதி ஆபத்தான விஷயங்கள். அதிலும் சினிமா மிக ஆபத்தான, அபத்தமான விஷயமாக கருதப்பட்டது. சரி, நானே பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவைப் பற்றி உங்களில் யாராவது விளக்க முடியுமா? "

" முடியும்! " என்ற கவி மீது விளக்குகள் விழுந்தன.

" சொல் பெண்ணே... சினிமா என்பது என்ன? "

" அது இலக்கியத்தை விட அதிகமாக மக்களை ஆக்கிரமித்திருந்த போதைப் பொருள். சினிமா என்ற சமாச்சாரம் பல வடிவங்களில் மக்களுக்குத் தரப்பட்டது. அதிலும் தமிழ்ச் சினிமா இருக்கிறதே அது இன்னும் அதிக அபத்தம். தலை மயிர் கலையாமல் 50 பேரை அடிக்கும் கதாநாயகன், அவன் பம்பரம் என்ற பொருளை தொப்புளில் விட மல்லாந்து படுத்திருக்கும் கதாநாயகி...

சினிமாவில் வரும் பாடல்களை வானொலி நிலையங்கள் 24 மணிநேரமும் ஒலிபரப்பி வந்தார்கள். அந்த பாடல்களில் இலக்கிய நயம் இருக்கிறதா இல்லையா என்று வேறு விவாதித்து நேரத்தை வீணாக்கினார்கள். இதுதான் சினிமா மற்றும் அதன் சார்ந்த சுருக்கமான விவரம் "

" நல்லது பெண்ணே... உனது விளக்கம் ஏறக்குறைய சரியாகவே இருக்கிறது " என்று ஒப்புதல் தந்த அறிஞர் தொடர்ந்து பேசினார்.

" தமிழ்ச் சினிமா மட்டுமல்ல. தமிழ் இலக்கியம்கூட அபத்தம் நிறைந்ததாகவே இருந்தது. படைப்பாளிகளைவிட வெட்டி விமர்சகர்கள் அதிகம் இருந்தார்கள். தாங்களும் ஒன்றும் செய்யாமல், மற்றவர்களையும் ஒன்றும் செய்யவிடாமல் தடுத்து வந்த இவர்கள் மிக மிகச் சோம்பேறிகள் "

" இலக்கியத்தில் என்னவெல்லாம் இருந்தது ஐயா? "

" கதை, கவிதை, கட்டுரை என பல வடிவங்கள் இருந்தது. கதையை பலரும் விரும்பிப் படித்தாலும், கவிதையே மனிதர்களது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்திய வடிவம். "

" உதாரணமாக ஒன்றைச் சொல்லுங்கள் "

" சொல்கிறேன். அதற்குமுன் சிறுவிளக்கம். இன்று ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அரசாங்கத்திடம் தகவல் சொல்லிவிட்டு இணைந்து வாழலாம். ஆனால் 2005ல் காதல், கல்யாணம் போன்ற சம்பிரதாயங்கள் அதிகம். அதிலும் காதல்... ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சம்பிராதாயத்தில் இணைவதற்கு முன் நிகழ்கிற விஷயங்களை காதல் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படி காதலிக்கும் காலங்களில் ஆண் பெண்ணுக்காக ஏங்குவதும், பெண் ஆணுக்காக ஏங்குவதுமான பெருமூச்சுகள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் யாராவது ஒருவர் காதலுக்கு மறுப்புச் சொல்லி விட்டால், அது தோல்வியடைவதும் உண்டு.

அப்படி காதல் தோல்வி அடைந்த ஒருவன் தன் காதல் தோல்வி பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட ஒரு கவிதையைச் சொல்கிறேன் கேளுங்கள்....

காற்று வராத என்று
ஜன்னலைத் திறந்து வைத்தேன்.
காற்று வந்தது....
ஜன்னலைச் சாத்திச் சென்றது! "

அறிஞர் இந்தக் கவிதையைச் சொல்லி நிறுத்தியதும் அங்கு சட்டென்று ஒரு மொளனம் சூழ்ந்தது. அந்தக் கவிதை எல்லோருக்கும் புரிந்தது. அவர்கள் மனதில் புகுந்தது. பிசைந்தது. ' ஓ...இலக்கியம் இவ்வளவு சுவையானதா' என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது.

அதற்கப்புறம் அறிஞர் பல விஷயங்களைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்தவர்களின் மனமோ அந்தக் கவிதையிலேயே லயித்துக் கிடந்தது. " உலக சரித்திரத்தையே மாற்றும் சக்தி இலக்கியத்திற்கு இருந்ததால்தான், ஆபத்து மிகுந்த இந்த போதைப்பொருளை உலக அரசாங்கங்கள் தடை செய்தன. " என்று சொன்னார் அறிஞர்.

அடி அன்றைய தின இரவு சகியை நினைத்து ரகசியமாய் ஒரு கவிதை எழுதினான். அது இப்படித் துவங்கியது....

" அன்பு சகி. என் உயிர் கலந்த ஆக்ஸிஜனே... "

Tuesday, March 22, 2005

சிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டத்தில் நான் கொறித்தவை


துளசிகோபால் 'இலக்கியம் என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி கேட்டு கூட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அதற்கு ரமேஷ் நீண்ட விளக்கமளித்தார். அந்த விளக்கத்தின் இறுதியில் நான் புரிந்து கொண்டது இதுதான். ' நீங்கள் எழுதுவதெல்லாம் இலக்கியமென்று நினைத்துக்கொண்டு இருந்து விடாதீர்கள். அதே சமயம், உங்கள் எழுத்தை யாராவது இலக்கியமில்லை என்று சொன்னால் துவண்டு விடாதீர்கள்."

யோசித்துப்பார்த்தால், வாசித்த எழுத்தை ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்தால், வாசித்தபோது நிகழ்ந்த சிலிர்ப்பை, பரவசத்தை, சோகத்தை, கோபத்தை, தவிப்பை, இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நினைவூட்ட முடிந்தால் - அது நல்ல எழுத்து, நல்ல இலக்கியம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையை வெகு எளிமையாகச் சொன்ன இரு வரிகள் ஞாபகத்தில் வருகிறது..." பொழுது மலச்சிக்கல் இல்லாமல் விடிகிறதா? பொழுது மனச்சிக்கல் இல்லாமல் முடிகிறதா?" - சொன்னது ' வடுகபட்டி பாட்டி'

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு நண்பர் ட்டய்லெட்டைத் தேட, இன்னொருவர் இருளில் இருந்த ஒரு குட்டி கட்டிடத்தைச் சுட்ட, கடைசியாக ஒருவர் சொன்னார், " வாழ்க்கைன்னா அதில் ஒரு தேடல் இருக்கனுங்க" அதானே...!

இந்த சந்திப்பில் ரமேஷின் ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. " ராக்கம்மா கையைத் தட்டு பாட்டின் துவக்கத்தில் ஒரு வயலின் பிட் வரும். அதை எடுத்துவிட்டாலும் பாட்டு பாட்டுதான். ஆனால், அதில் ஒரு முழுமை உணர்வு இருக்காது. அப்படி விடுபடாத முழுமை உணர்வைத் தருவதுதான் ஓவியம்" என்றார் ரமேஷ். கூடவே - ஒரு அழகான, (ஜெயந்தி சங்கருக்கு மிகவும் பிடித்திருந்த) 'மீரா' ஓவியத்தை துளசி கோபாலுக்கு பரிசுமளித்தார்.

உங்கள் எழுத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒருநாள் அது அம்பலமேறும் என்ற ரம்யா நாகேஸ்வரனின் கருத்து யோசிக்க வைத்தது.

துளசிதளத்தின் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி, தொடர்ந்து சாப்பிட்டு ஆதரவு தந்தது நான்தான்.நாலு ரவுண்ட் கேசரி, மூணு ரவுண்ட் கேக், தலா ரெண்டு பெக் ஆரஞ்சு + 7up , கடைசியா ஒரு பெக் டீ....கிறுகிறுத்துப் போச்சு...

அன்பு, இந்தியாவிலிருந்து புதிதாக சில புத்தகங்கள் வந்திருப்பதாகவும், ஆனால் தன் துணைவியார் ' பழைய புத்தகங்கள் வெளியே போனால்தான், புது புத்தகங்களுக்கு வீட்டுக்குள் இடம் என்று சொல்லி விட்டதால், வந்த புத்தகங்களை மற்றவர்களுக்கு வாசிக்கத் தருவதாகச் சொன்னார். சிலர் ' அதனாலென்ன... நாங்கள் permanentஆ எங்கள் வீட்டில் வைத்து ஆதரிக்கிறோம்' என்று பெரிய மனதோடு சொல்ல, அன்பு அன்பாக ( ? ) சிரித்தார்.

ரமேஷின் அனுபவம் வேறு மாதிரியாம். அவர் சமீபத்தில் ஒரு புத்தகம் வாங்கினாராம்.அவர் வீட்டுக்குப் போன எம்.கே.குமார், அதை புரட்ட்ப் பார்த்து விட்டு, ' அட.. இந்தப் புத்தகத்துக்கு போயா இந்த விலை' என்று போட்டுத்தாக்க, இதுபோன்ற money mattersஐ sharpaaக கவனித்துவிடும் தனது மனைவி தன்னை தாளித்து விட்டதாக சொல்லி சிரித்தார். ' ஏதோ என்னாலான உதவி ' என்று சொல்லி வீரப்பா சாயலில் சிரித்தார் குமார்.

தமிழில் மொழி பெயர்ப்புகளைப் பற்றி நீண்ட நேரம் பேசிய ஈழநாதனும், ரமேஷிம் கடைசியில், என்னிடம் மொழிபெயர்ப்புகளைப் பற்றி கேட்டு வைக்க, ' சா.கந்தசாமி...சாகித்திய அகாதமி...நவீனத்தமிழ் சிறுகதைகள்...அது இது'வென்று தத்து பித்தினேன். ஆனாலும் திரு.சா.கந்தசாமி அவர்கள் இதுவரை ஏதும் மொழிபெயர்க்காமல் இருந்தால் immediateடாக ஏதேனும் மொழி பெயர்த்து என்னை காப்பாற்றுமாறு இந்தப் பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

ரமேஷின் பேச்சு, காலச்சுவட்டில் விமர்சனக் கட்டுரை படிக்கிற உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இனிமேல் அவர் நிறைய எழுதக்கூடும்.

'இலக்கியம் என்றால் என்ன' என்று கேட்ட துளசியக்கா, அருள்குமரன் கைதொலைபேசியில் புகைப்படம் எடுத்தபோது அடக்கமாக போஸ் கொடுத்த துளசியக்கா...ம்ம்ம்...அவருக்கும் அவரது எழுத்துக்கும் அதிக வித்யாசமில்லை. இரண்டுமே இயல்பானவை, வெள்ளேந்தியானவை...

Monday, March 21, 2005

வீட்டுக்கு அனுப்பீடாதீங்க சாமிகளா!

போன பதிவான 'ஜெயிக்குமா இந்தியா, தோற்குமா பாகிஸ்தான்" பற்றி - 'ரெண்டுமே ஒன்றுதானே, குழப்பம் ஏன்? ' என்று கேட்டார் வசந்தன். விளக்கினேன். அந்த விளக்கத்தின்படி பார்த்தால், கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வென்றிருக்கிறது.

கொல்கத்தா டெஸ்டின் நிஜ ஹீரோ யாரென்றால் - ஒரு விநாடிகூட யோசிக்காமல், தினேஷ் கார்த்திக்கை நோக்கி விரல் நீட்டுவேன். இந்த டெஸ்டின் துவக்க தினத்தன்று, இந்திய அணியில் கார்த்திக்கின் நிலை என்பது 'திக்,திக்' சங்கதிதான். ஒருவேளை கார்த்திக் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன் அடித்து இந்திய அணி தோற்றுமிருந்தால், இந்த நிமிடம் அவரை தயவு தாட்சண்யமின்றி தூக்கியிருப்பார்கள். பாவம், பார்திவ் படேலும் எவ்வளவு நாள்தான் மூட்டை முடிச்சுகளோடு வீட்டில் காத்திருப்பார். தன் மீது திணிக்கப்பட்ட pressure-ஐ கார்த்திக் என்ற பதின்ம வயது இளைஞன் சமாளித்த விதம்தான் அவரை ஹீரோ என்று விரல் சுட்ட வைக்கிறது.

கொல்கத்தா டெஸ்டில் எடுத்த 93 ரன்கள் மூலம், தோல்வி பயமில்லாத, ஹர்பஜன் சிங், கயி·ப், யுவராஜ்சிங், சேவாக் போன்ற இளைய தலைமுறை இந்திய கிரிக்கெட்டர்கள் வரிசைசயில் கார்த்திக்கும் சேர்ந்திருக்கிறார். You can't keep a goodman down என்று சொல்லுவார்கள். கார்த்திக் அந்த ஜாதி. எல்லா கிரிக்கெட் ஷாட்ஸீம் அவருக்கு எளிதாக கை வருகிறது. பார்க்க சலிப்பில்லாத அழகும் நளினமும் நிறைந்த பேட்டிங். இன்றையதினம் கார்த்திக்கின் confidence உச்சத்திலிருப்பதற்கு, யூனுஸ்கானை அவர் ஸ்டெம்பிங் செய்த விதமே சாட்சி. Welldone Kaarthick!

லக்ஷ்னண் ஏமாற்றமளித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், விழியை ஒட்டி அடிபட்டு வீங்கிய முகத்துடன், இந்திய அணியின் வெற்றிக்காக அடித்தாடி ரன் எடுத்த சுயநலமற்ற லக்ஷ்மணை இந்திய அணியை விட்டு drop செய்யக்கூடாது என்று தேர்வுக்குழுவை சலாம் வைத்து கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. ஆண்மையோ, பெண்மையோ அற்ற ரெண்டும் கெட்டான் மைதானங்களில் சதமடித்து என்ன பயன்? நீங்கள் எடுக்கும் ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். திராவிட் எடுத்த 2 சதங்களைப்போல, லக்ஷ்மண் எடுக்கும் ரன்கள் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கவோ அல்லது வெற்றி பெற வைக்கவோ எப்போதும் உதவியிருக்கின்றன.

உலகக் கிரிக்கெட்டில் இரண்டு Robotsகள் தற்போது உபயோகத்தில் இருக்கின்றன. ஒன்றின் பெயர் - கிளன் மெக்ரத். இன்னொன்று ... நம்ம அனில் கும்ளே. ராத்திரி 12 மணிக்கு தூக்கத்தில் எழுப்பி, ' அழகா ஒரு flipper போடுங்க சார் ' என்று கேட்டால், போட்டே விடுவார் ஆசாமி. முடிந்தால் விக்கட்டும் எடுத்து விடுவார். இந்த 34 வயது இளைஞரின் பந்து வீசும் திறன் ஆண்டுகளின் ஓட்டத்தில் கூராகி, உச்சம் தொட்டிருக்கிறது. இன்னும் 3 வருடமாவது அவர் இந்திய அணிக்காக உருப்படியாக விளையாட முடியும். ' யோவ்... உனக்கு வயசாயிருச்சு...இளைஞர்களுக்கு வழிவிடு...போய் வேற வேலையப் பாரு ' என்று ஏதாவது ஒரு தேர்வுக்குழு வீட்டுக்கு அனுப்பாமல் இருக்க, ஆண்டவன் அருள் புரியட்டும்.

கொல்கத்தா டெஸ்டின் கடைசி மதியம்தான் ஹர்பஜனின் பந்துவீச்சில் பழைய சூட்டைப் பார்க்க முடிந்தது.பெங்களூர் கிரிக்கெட் டெஸ்டில் இவர் முழுமையாக ஜொலிக்கக் கூடும். ஆனால் எனக்கென்னவோ, சமீபகாலமாக கட்டை மன்னராகி இருக்கும் டெண்டுல்கர் அதிரடிக்கப் போவதும், பாலாஜி மறுபடியும் பாகிஸ்தானை முடக்கப் போவதும் நடக்கப் போவதாகத் தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க ?

Wednesday, March 16, 2005

ஜெயிக்குமா இந்தியா ? தோற்குமா பாகிஸ்தான்?

ஈடன் கார்டன் மைதானத்தில் கொஞ்சம் போல் இருக்கிற புல்லும் மாட்ச் துவங்கும் முன் மொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். கங்குலி கொல்கத்தா 'மண்ணின்ம மைந்தர்'. அவர் சொல் கட்டாயம் அம்பலம் ஏறும். கங்குலிக்கு எப்படிப்பட்ட ஆடுகளம் பிடிக்கும் என்பதை எங்கள் கூளையனூர் பாட்டிகூட சொல்லி விடுவார்.ஈடன் கார்டன் மைதானம் முதல் நாளிலிருந்தே ஸ்பினாகத் துவங்கலாம் என்பதே உண்மை.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தப் போவதாகச் சொல்கிறார் கங்குலி. அது கப்ஸா. ரெண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ( பாலாஜி, பதான் ) ரெண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் ( கும்ளே, ஹர்பஜன் ) என்பதுதான் இந்திய அணி வியூகமாக இருக்கும்.

பேட்டிங்கில் அதிக மாற்றமிருக்க வாய்ப்பில்லை. கார்த்திக்கின் இடம் மட்டுமே கொஞ்சம் " திக், திக் ".ஒருவேளை அவர் இந்த டெஸ்டில் சதமடித்து பர்திவ் படேல் போன்றவர்களின் வயிற்றில் தீயை வார்க்கலாம். அவரது பேட்டிங்கில் " கிளாஸ்" தெரிகிறது. ஆனால் அதை மட்டும் வைத்து போட்டிமிக்க இந்திய அணியில் குப்பை கொட்டுவது கஷ்டம்.

பாகிஸ்தான் பந்துவீச்சு டேனிஷ் கனிரியாவையே நம்பியிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் அவரை நொறுக்க முற்படுவார்கள். அவுட்டும் ஆவார்கள். கடைசியில் கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு இந்திய அணிக்கே சாதகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அவர்களது பேட்டிங் தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருகிறது.அப்துல் ரசாக் மொகாலி டெஸ்டில் போதுமான அளவு கட்டை வைத்து விட்டதால், இந்த முறை விளாசித்தள்ளக் கூடும். இந்தியாவைப் பொறுத்தவரை அவரே ஆபத்தான பேட்ஸ்மேன். பாகிஸ்தானோ சேவக்கைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால், எனக்கும் ஓரளவு ஜோசியம் சொல்ல முடியுமானால், இந்த டெஸ்டில் லக்ஷ்மண்தான் கதாநாயகனாவார் என்று சொல்வேன். போன டெஸ்டில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஹர்பஜன்சிங்கும் உயிர்ப்புடன் பந்து வீசுவார்.

கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும், இறுதியில் இந்தியாவே வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. பெறும் என்றே நீங்களும் நினைப்பீர்கள். பாழாப்போன பாகிஸ்தான் அணி என்ன நினைக்கிறதோ? :)))))

Tuesday, March 15, 2005

சொட்டு சொட்டாய் காதல்!

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

உலக ஜனத்தொகையில் பாதிப் பேர் அது பதின்ம வயதில்தான் முளைக்கிறது என்று சொல்லக்கூடும். உண்மையும் அதுதானா?

செவ்வக சட்டத்தின் உள்விளிம்புகளைத் தொடமுயலும் சுவர்கடிகார முள்ளாய், சில நாட்களாக இந்தக் கேள்வி மனசில் ஊசலாடுகிறது....

காதல் என்றால் - கனிய வேண்டும்: கசிய வேண்டும்: இறக்க வேண்டும்: பிறக்க வேண்டும்: பசியும், பசியின்மையும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும்: இதயத்தில் வடியும் வேதனை ரத்ததிலும் சுகம் உணர வேண்டும்: இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாலையின் ஓரத்திலும் தினம் தினம் சந்தித்தே வருகிறோம்.

காதலைப் பொறுத்தவரை உலகில் ரெண்டே ரெண்டு ஜாதிதான் இருப்பதாகப்படுகிறது. வாழ்க்கையைத் தேடித்தேடி காதலைத் தொலைத்தவர்கள் ஒரு ஜாதி: காதலைத் தேடித்தேடி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இன்னொரு ஜாதி.

சரி... காதலையும் வாழ்க்கையையும் சேர்த்தே ஜெயித்தவர்கள்? அப்படிப்பட்டவர்கள் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தானே இருக்க முடியும்? :)))

பொள்ளாச்சியில் படித்த காலத்தில், வாடகைக்கு அறையெடுத்து தங்கியிருந்தேன். வீட்டு உரிமையாளரான அந்தச் சகோதரி, பல வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு சந்திப்பில் கேட்டார்...

" ஏன் தம்பி... நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலிக்கவில்லையா "

" இல்லை அக்கா "

" ஏன் தம்பி "

" கல்லூரிக்காதல் மேல் எனக்கு நம்பிக்கையில்லை அக்கா "

" ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்...உங்கள் நண்பர்கள் யாரும் காதலிக்கவில்லையா? "

" ஆமாம். காதலித்தார்கள்... "

" கல்யாணம் செய்து கொண்டார்களா? "

" செய்து கொண்டார்கள்... "

" அப்புறம் ஏன் கல்லூரிக்காதல் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" காதலித்தார்கள் : கல்யாணம் செய்து கொண்டார்கள் : ஆனால் அவன் கல்யாணம் செய்து கொண்டது வேறொருத்தியை ... அவள் கல்யாணம் செய்து கொண்டது வேறொருவனை ! எப்படி கல்லூரிக் காதல் மேல் நம்பிக்கைவரும் சொல்லுங்கள் ? "

அந்தச் சகோதரி ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டது மாதிரி வெகுநேரம் சிரித்தார். அப்புறம் கேள்வியின்றி மொளமாகிப் போனார்.

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

மலை விழுந்த ஒரு மாலையில், காப்பிக்கடையில், சூடான தேனீரைப் பருகியபடி என் நண்பரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

சிரித்தார்.

" ·பிராய்டு படித்திருக்கிறீர்களா? "

" இல்லை..."

" ம்.... என் முதல் காதல் பத்து வயதில் முளைத்தது என்று நினைக்கிறேன்..."

" அடப்பாவி! "

" பதறாதீர்கள் நண்பரே... அது - அதற்கு முன்னாலும் முளைத்திருக்கலாம்! "

" பத்து வயதில் காதல் என்பதெல்லம் சாத்தியமா? "

" இன்னும் அவள் பெயர்கூட ஞாபகம் இருக்கிறது...'பக்கத்து வீட்டு சாந்தி. உன் அப்பன் பேரு காந்தி' என்று அவளது பாடப்புத்தகத்தில் எழுதியதும் கூட. ஒரு கோயில் திருவிழாவில் விளக்கோடு நடந்த அவள் பின்னால் நான்குமணி நேரம் தொடர்ந்து நடந்தபோது, என் மனதில் சிலிர்த்து, சிலிர்த்து விழுந்த உணர்வுக்குப் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்."

" அது வெறும் கவர்ச்சியாகத்தான் இருக்க முடியும்... "

" இந்த வயதுவரை என் வாழ்க்கைக்குள் சில பெண்கள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களால் இப்படி நீங்காமல் நிறைந்திருக்கும் சிலிர்ப்புகளை நிரந்தரமாக விட்டுச்செல்ல முடிந்ததே இல்லை "

அந்த விளக்கத்திற்குப் பிறகு நான் மொளனமானேன்.

அது அவரது வாழ்க்கை. அவரது காதல் !

ஒரு நீள இரவில் ஆழ யோசித்துப் பாருங்கள்.... காதல் உங்களுக்குள் முளைத்தது எப்போது என்ற உண்மை உங்களுக்குள் புரியலாம்....

எப்போது வருகிறதென்பது முக்கியமில்லை. ஆனால், எப்படியாவது, எங்காவது அது வர வேண்டும்.

இதுவரை உங்களுக்குள் அது முளைத்திருந்தால்... யாராவது ஒருவர் உங்களை காதலித்திருந்தால்... நீங்கள் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்!

" அட போங்க சார்... காதலைப்பற்றி தெரியும் முன்பே எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது " என்று அலுத்துக் கொள்ளும் கணவர்களே... மனைவிகளே....
நோயின் தாக்கத்தில் எழ முடியாதபடி படுத்தபடுக்கையாக கட்டிலில் கிடந்த ஒருநாளில், நமது வாழ்க்கைத்துணை சுடிநீர் ஒற்றிய துணியில் முகம் துடைத்து மார்துடைத்து கண்ணோடு கண்பார்த்து, கடைசியில் நெற்றியில் கனிவோடு முத்தமிடும்போது... நம் விழியோரம் கசிந்து காதோரம் வழியுமே கண்ணீர்....
அது கண்ணீரா? இல்லை. சொட்டு சொட்டாய் காதல்!


Monday, March 14, 2005

பாலாஜி என்ற கறுப்புப்புயல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்த்த கள்வனாகியிருக்கிறார் லக்ஷ்மிபதி பாலாஜி.

கறுத்த நிறம், ஒல்லியான தேகம், அழகென்று சொல்லிவிட முடியாத ஓட்டம், கையை விசுக்கென்று சுற்றி பந்து வீசும் திறம் - இப்படி பாலாஜி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கியபோது, 'இன்னும் எத்தனை நாளைக்கோ..' என்ற சந்தேகக்கண்ணோடு பார்த்தவர்கள்தான் நிறையப்பேர். அதற்கேற்ற மாதிரி, மேற்கிந்தியத்தீவு அணி வீரர்கள் அவரது பந்து வீச்சை விளாசித் தள்ளிவிட, ' ரஞ்சி டிராபிப் போட்டியில் புலி மாதிரி பந்து வீசுபவர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எலி மாதிரி பந்து வீசுகிறார்கள்' என்று கிண்டலடித்தார் அமித் மதூர் என்ற விமர்சகர்.

பலரும் இனி பாலாஜி அவ்வளவுதான் என்று முடிவு செய்திருக்க, ' குறித்துக் கொள்ளுங்கள்...இவர் இன்னும் பல வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடுவார்' என்று ஆருடம் கூறினார் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத். இன்று - பாலாஜி அவரது நினைப்பை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாலாஜி,4 ஓவர்களில் 44 ரன்களைத் தந்ததும் ஏறக்குறைய ஒருவருடம் இந்திய அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இந்த ஒரு வருடத்தில் இர்பான் பதானின் இடதுகை பந்துவீச்சும், அவரது இளமையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ள, சென்னையின் ஒரு மூலையில், ஆரவாரமின்றி தனது திறனை கூராக்கிக் கொண்டிருந்தார் பாலாஜி.

ஸ்ரீநாதின் பந்துவீச்சை மாதிரியே, ஆடுகளத்தில் பட்டு உள்திரும்பி, விக்கெட்டைநோக்கி சீறிப்பாயும் பந்துகளே பாலாஜியின் பலம். ஆனால் 2004ல் பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் உலகம் ஒரு புதிய பாலாஜியைப் பார்த்தது. விக்கெட்டைவிட்டு விலகிச்செல்லும் பந்துகளை அநாயசமாக வீசப் பழகியிருந்தார். அவரது ஓட்டத்தில் ஒழுங்கும், நளினமும் கூடியிருந்தது. பாலாஜியின் மணிக்கட்டை விட்டுவரும் பந்துகள் எப்படித் திரும்பும் - உள்ளேயா அல்லது வெளியேயா என்று பந்தடிப்பவர்கள் திகைத்தார்கள்.

நெஹ்ரா, அகர்கர் போன்ற அனுபவசாலிகள் ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, 3 டெஸ்ட் போட்டிகளில் 12 பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்லோரும் பயந்து கொண்டிருந்த சோயப் அக்தரை ஆறுக்கு தூக்கியடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது இன்னொரு உபரிச்சம்பவம். இருட்டரையில் விளக்கேற்றியது மாதிரியான பளிச்சென்ற பாலாஜியின் புன்னகைக்கோ பாகிஸ்தான் முழுக்க ஏராளமான ரசிகர்கள்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை...பாகிஸ்தானிலிருந்து திரும்பிய கொஞ்சநாளில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த நாட்களில் இந்தியாவிற்கு விளையாடிய ஜாகிர்கான், பதான், நெஹ்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே இடது கைக்காரர்களாக இருக்க, பாலாஜியின் வலதுகைப் பந்துவீச்சின் இழப்பை உணர்ந்தது இந்திய அணி, - குறிப்பாக கேப்டன் கங்குலி.

கங்குலிக்கு பாலாஜி மேல் ஏராளமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலாஜிக்கு இடம் வாங்கித் தந்தது. அதில் அவர் எடுத்த 9 விக்கெட்டுகளும், 34 ஓட்டங்களும் அந்த நம்பிக்கை சரிதான் என்று நிருபித்திருந்தாலும், 'அந்த' ஐந்தாம் நாள் காலையில் மட்டும் பாலாஜி இன்னும் "ஒரே ஒரு " விக்கெட்டை எடுத்திருந்தால், இந்த நிமிடம் - அவர்தான் ஹீரோ! மேடும் பள்ளமும் நிறைந்ததுதானே வாழ்க்கை?

எது எப்படியோ, மொகாலி கிரிக்கெட் டெஸ்டில் பக்க வாத்தியமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாஜி, முழுக்கச்சேரியும் நடத்தியிருப்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, குறிப்பாகத் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களை "ஓ" போட வைத்திருக்கிறது. மொத்தத்தில் பாலாஜியின் பந்து வீச்சைப் பற்றி இப்படித்தான் சொல்ல வேண்டும்... இது முடிவல்ல, ஆரம்பம் !