Tuesday, April 12, 2005

ஆதிகுமணன் என்றொரு மலேசியநண்பன்

மலேசிய மக்களின் நேசத்திற்குரிய மலேசிய நண்பன் நாளிதழின் ஆலோசனை ஆசிரியர் ஆதிகுமணன் மறைந்து விட்டார். தமிழ்உலகம் திறன்மிக்க தன் செல்லப்பிள்ளைகளில் ஒன்றை இழந்து நிற்கிறது.

இந்தியத்தமிழனான நான், 1996-97ம் வருடங்களில் மலேசியாவில் பணிபுரிந்தபோது ஆதிகுமணன் என்ற அற்புதமனிதரை அறிந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தது. உலகில் முதல் முதலாக தமிழ் எழுத்தாளர்களுக்கென்று தனியாக ஒரு கட்டிடம் வாங்கி, அந்தக்கட்டிடத்தின் திறப்பு விழாவை கோலாலம்பூர் பக்கமிருந்த பத்துகேவ்ஸில் நடத்தியபோது மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவரான ஆதிகுமணனை முதல்முதலில் பார்த்தேன்.

பளிச்சென்ற புன்னகை, சினேகம் ததும்பும் கண்கள், இளமை கொப்பளிக்கும் துள்ளல் நடையென வெள்ளை வேட்டி சட்டையில் நடந்துவந்த ஆதிகுமணன் சட்டென்று மனசுக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். அவரை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் வாய்த்திருக்கும். அந்த விழாவில் தெளிவான உறுதிமிக்க குரலில் அவர் பேசப்பேச, அந்த மனிதர் ஏன் வெற்றியாளராக, எல்லோராலும் விரும்பப்படுபவராக இருக்கிறார் என்ற உண்மை பிடிபடத் துவங்கியது.

ஆதிகுமணனின் இயற்பெயர் குமணபூபதி. அவரது தந்தை பெயர் ஆதிமூலம். அவரும் திராவிட இயக்கங்களில் பிடிப்புள்ள ஒரு தமிழ்த் தொண்டர்தான். தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு மலேசியாவின் தமிழ்மலர் நாளிதழில் துணையாசிரியராக பணியில் சேர்ந்தபோது குமணபூபதி-ஆதிகுமணன் ஆனார். கொஞ்ச காலத்திற்குப்பின் வானம்பாடி என்ற வார இதழின் ஆசிரியராக பொறுபேற்றார். அந்த வார இதழின் விற்பனை சாதனை அளவை எட்டுவதற்கு கவர்ச்சிமிக்க ஆதிகுமணனின் எழுத்தும், அவரது அயராத போராட்ட உணர்வும் காரணமானது. ஒரு தமிழ் வார இதழ் 40 ஆயிரம் பிரதிகள் விற்றது இன்றும் மலேசியாவில் சாதனையாகக் கருதப்படுகிறது.

காலம் அவரை வானம்பாடியிலிருந்து வெளியேற்றி, தமிழ் ஓசையின் பொறுப்பாளராக்கியது. அதிகார வர்க்கத்தின் நிர்பந்தங்களுக்கு, கண்முன் கட்டி தொங்க விடுப்படும் ஆசை கேரட்களுக்கு சலனப்படாமல், நேர்மையான பத்திரிக்கையாளராக ஆதிகுமணன் சந்தித்த சோதனைகள் ஏராளம்.ஒரு கட்டத்தில் தமிழ்ஓசையும் இழுத்து மூடப்பட்டது. சோர்ந்தா விடும் சிங்கம்?

சிலிர்தெழுந்து ஆதிகுமணன் எழுப்பிய கோட்டைதான் " மலேசிய நண்பன் " நாளிதழ்.
அதன் துவக்ககாலம் முதல், இன்றுவரை மலேசியநண்பன் - மலேசியத்தமிழ் சமூகத்திற்காக, அதன் உரிமைகளுக்காக, விழிப்புணர்வுக்காக, வாழ்க்கை வளமைக்காக குரல் கொடுக்கும் போர்வாளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வார ஞாயிறும், ஆதிகுமணன் " ஞானபீடம்" என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். மலேசிய மக்களிடையே சின்னப்பொறியாக விழுந்து, காட்டுத்தீயாக பிரபலமடந்த பகுதி அது.

ஒரு தனிமனிதராக, தன்மீது பாசமுள்ள தம்பிகளின் துணையோடு தமிழ் சமூகத்திற்காக ஆதிகுமணன் சாதித்த விஷயங்கள் ஏராளம்.
ஒருமுறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் சரவணன் என்ற தமிழ் இளைஞர் பெருநடை ( long distance walking ) பிரிவில் மலேசியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்தார். அவர் தமிழர் என்ற காரணத்தாலோ என்னவோ, அரசில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. பொங்கியெழுந்த ஆதகுமணன் தனது பத்திரிக்கையில் இது பற்றி எழுத, ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுத்தார்கள் நம் மக்கள். ஒரு தரமான காரை சரவணனுக்கு வாங்கித் தந்து, அதில் அவரை கோலாலம்பூர் வீதிகளில் பவனி வரச்செய்து அழகு பார்த்துதான் ஓய்ந்தார் ஆதிகுமணன்.

இன்னொரு சம்பவமும் நினைவில் இருக்கிறது.....

1997-ல் மலேசிய அரசாங்கம் சீனர், மலாய்காரர், இந்தியர் என பல இனத்தவரும் அடங்கிய குழு ஒன்றை எவரெஸ்டில் ஏற அனுப்பி வைத்தது. முதல் முறையாக நடக்கும் மலேசிய முயற்சி என்பதால், பத்திரிக்கைகள் அந்தக்குழுவின் ஒவ்வொரு அடியையும் விரிவாக எழுதி பரபரப்பூட்டின. மக்களும் ஆர்வமாக அந்தக்குழு எவரெஸ்டில் ஏறிவிடுமா என்று கவனித்து வந்தார்கள். உயரம் கூடக்கூட ஒவ்வொருவராக கழண்டு கொள்ள, குழுவின் அடர்த்தி குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் எவரெஸ்டை எட்டி மலேசியக் கொடியை நட்டது 2 பேர். மோகன் தாஸ் மற்றும் மகேந்திரன். இரண்டு பேருமே தமிழர்கள். எவரெஸ்டை எட்டி சாதனை செய்தது தமிழர்கள் என்ற விஷயம் தெரிந்ததும், மொத்த ஆர்பாட்டமும் அடங்கிப் போய்விட, அவர்களுக்கு விழா எடுத்து தங்கச்சங்கிலி போட்டு பாராட்டி அழகு பார்த்ததும் ஆதிகுமணன்தான்.

சமீபத்தில் இலங்கையின் கரையோரங்களை சுனாமி அரித்தபோது, சத்தமின்றி நீண்டது ஆதிகுமணனின் நேசக்கரம். எங்கெல்லாம், எப்போதெல்லாம் தமிழர்கள் துயர் அடைகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்காக துடித்தது ஆதிகுணனின் இதயம்.

ஒரு வருடத்திற்கு முன்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகப்பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடிவு செய்தபோது, மலேசிய நண்பன் சார்பில் சுகுமாரன் ( அக்கினி ) இலங்கை சென்றார். ( அவரை பிரபாகரன் தனித்து சந்திக்க வாய்ப்பளித்தது பற்றி சுகுமாரன் பின்னாளில் தன் கட்டுரையில் குறிப்பிட்டார் ).

மலேசியாவில் எந்த ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழாவும் பெரும்பாலும் இரண்டு பேர் தலைமையில்தான் நடக்கும். ஒருவர் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரான டத்தோஸ்ரீ சாமிவேலு, இன்னொருவர் மக்களின் நேசத்திற்குரிய ஆதிகுமணன். இவர்கள் இருவருமே தலைமையேற்பதோடு நின்று விடாமல், கணிசமான தொகை தந்து தமிழ் நூல் அச்சிடும் செலவை ஈடுகட்டி தமிழைக்காக்கும் புரவலர்களாக இருந்தது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ரகசியம்.

ஆதிகுமணனை மிக அணுகிப்பார்க்கிற வாய்ப்பு அவ்வப்போது எனக்கு வாய்த்ததுண்டு. ஒவ்வொருமுறையும் அவர் மீதான மரியாதையை அதிகரிக்க வைத்த சந்திப்புகள் அவை. எழுத்தின் மூலம் எனக்கும் அவருக்கும் பரிட்சயம் இருந்தாலும், சை.பீர்முகம்மதின் "பெண்குதிரை" மற்றும் " கைதிகள் கண்ட கண்டம்" நூல் வெளியீட்டு விழாவில்,ஆதிகுமணன் தலைமை தாங்கிய விழாவில், எனக்கும் இடம் கிடைத்தபோதுதான் - அது அணுக்கமானது. காப்பாரில் நான் முன்னின்று நடத்திய மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதந்திர சிறுகதைத் திறனாய்வில் அவரை மறுமுறை சந்தித்தேன். அதன்பின் எந்த நிகழ்வில் சந்தித்தாலும் என்னை பெயர் சொல்லி அழைத்து அன்பு பாராட்டினார் ஆதிகுமணன்.

1997ன் இறுதியில் கோலாலம்பூர் செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் "எங்கே நீ வெண்ணிலவே" என்ற எனது சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஆதிதான் தலைமை தங்கினார். அன்று அவர் ஆற்றிய உரை இன்னும் என் ஞாபகத்தளங்களில் ஊடாடிக்கொண்டே இருக்கிறது.

பின்பு 1998ல் நான் பணி நிமித்தம் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்து இங்கு நிரந்தரவாசியாகி விட்டாலும், மலேசிய இலக்கிய உலகினுடனான உறவு நீடித்தே வந்தது. ஒருமுறை, ஒரு மலேசிய மாதஇதழுக்காக அவரை பேட்டி கண்டேன். பலருக்கும் கிடத்திராத வாய்ப்பு அது. அரசியல், இலக்கியம், தனி வாழ்க்கை என பரந்து விரிந்த அப்பேட்டியில் எதையும் ஒழித்துப் பேசவில்லை அவர். அந்தப்பேட்டி நெஞ்சுரமிக்க, நேர்மைத்திறன் மிக்க ஒரு பத்திரிக்கையாளரை எனக்கு அறிமுகப்படுத்தியது. ஆதிகுமணன் என்ற மனிதர்மீது எனக்கிருந்த மரியாதை இன்னும் அதிகமானது.

சிங்கப்பூரில் தங்கிவிட்டதால் சமீபகாலங்களில், ஆதிகுமணனனோடான தொடர்புகள் குறைந்து விட்டாலும், பத்திரிக்கைகள் வாயிலாக அவரைப்பற்றி தொடர்ந்து வாசித்தே வந்தேன்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது, ஆதிகுமணன் சீரியஸாக நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீண்டு விட்டதாகக் கூறினார். அப்பாடா என்ற உணர்வு ஏற்பட்டது. ஆதிகுமணன் இல்லாத மலேசியாவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். ஆனால், விதியின் கரவலிமையை வென்றது யார்?

இன்று ஆதிகுமணன் என்ற சாதனை சரித்திரம் தன் பக்கங்களை நிறைவு செய்து கொண்டது. " விழுந்தாலும் விதையாக விழ வேண்டுமென்று " ஆதிகுமணன் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த அற்புத மனிதர் தான் விழுவதற்கு முன்பே ஏராளமாக விதைத்துவிட்டார் என்பதே உண்மை. அந்த விதைகள் தமிழ் இலக்கிய மலராக, செடியாக, கனி கொடுக்கும் மரங்களாக மலேசியாவெங்கும் பரவிக் கிடப்பதை வரலாறு பதிவு செய்து கொண்டிருகிறது....இனியும் பதிவு செய்யும். அந்தப்பதிவின் பக்கமெல்லாம் ஆதிகுமணன் பெயர் இருக்கும்!

Saturday, April 09, 2005

நம்பிக்கைதாங்க வாழ்க்கை!!!

இணைய தளத்தின் பக்கங்களில்
பார்வை ஊர்வலம்...

மதிய உணவுக்குப்பின்
எம் எம் எஸ் அனுப்பி அவளோடு
பகிர்ந்து கொண்டேன் காதல்.

தரைவழி ஜோகூர் வான்வழி கூச்சிங்
பயண சீட்டுக்காய் சிங்போஸ்ட்* வாசலில்
செலவு சிலநிமிடம்.

மார்ச் மாதம் முதல் படுக்கையில் படுத்தபடி
டெலிவிஷன் திரைவழி
பங்கு பரிவர்த்தனைஉத்தேசம்.

ஒருநாள் கடந்து அலுவலகம் முடிந்து
வீதி நடக்கையில் மனசு கேட்டது....
இன்றாவது -
டோடோவில்**
முதல்பரிசு எனக்கென நல்ல சீட்டெடுக்குமா
சிராங்கூன் கூண்டுகிளி ?


*சிங் போஸ்ட் - சிங்கப்பூர் தபால் நிலையம்
** டோ டோ - சிங்கப்பூர் லாட்டரி

Thursday, April 07, 2005

இந்திய ஆண்களுக்கு மீசை அவசியமா?

நேற்று சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரலில் "அக்னி" என்றொரு தொடர் ஒளிபரப்பானது. மீசையில்லாத ஜெய்கணேஷ் என்ற இளைஞர் ஆண், பெண் என்று எல்லோரிடமும் மைக்கை நீட்டி " ஆண்களுக்கு மீசை அவசியமா? " என்று கேட்டுக் கொண்டிருந்தார். பதில்களை சுவாரஸ்யமாக கவனித்தேன் - முக்கியமாக பெண்களின்!

அவர்களின் பதில்கள் வெவ்வேறாக இருந்தது.

ஒருவர் பெண் சொன்னார் - ' மீசை என்பது ஆண்களுக்கு அவசியம். மீசை வைத்த ஆண்கள்தான் பார்க்க manly-யாக இருப்பாங்க. அவங்களைப் பார்க்கும்போதுதான் ஓ.கே. இந்த ஆள் நமக்கு பாதுகாப்பாக இருப்பார்னு ஒரு secured feeling வரும்" என்று. மீசை வைத்தவர்கள்தான் man மீசையில்லாதவர்கள் boys என்று கொசுறாக இன்னொரு விளக்கமும் சொன்னார். ஏனோ எனக்கு புஷ்ஷ¤ம், சதாமும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

மீசை இல்லாமல் இருப்பதுதான் இன்றைய fashion. ஆண்கள் மீசை இல்லாமல் இருப்பதே better. என்பது ஒரு பதின்ம வயது அம்மணியின் கருத்து.

ஆண்களின் கருத்தும் வெவ்வேறாகத்தன் இருந்தது.

பெரும்பாலான இளையர்கள் " அப்பா, மீசை வச்சாதான் இந்திய ஆணுக்கு அழகுன்னு சொல்றார். அது அந்தக்காலம் ... எங்களுக்கு மீசை இல்லாமல் இருக்கத்தான் பிடிக்குது " என்று மீசையில்லாமல் சொன்னார்கள்.

ஒருவர் மட்டும் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் பரம்பரையின் மிச்சம் மீதி மாதிரி, கடைசிவரை எக்காரணம் கொண்டும் மீசையை விட்டுதரவே மாட்டேன் என்று சொல்ல, பேட்டியெடுத்த ஜெய்கணேஷ் " மீசையை எடுக்கா விட்டால் வேலையே காலிங்கிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீங்க " என்று கேட்க, " வேலையை விட்டுடுவேன். இன்னொரு வேலை கிடைக்காதா என்ன ? என்று திருப்பிக் கேட்டார் கூலாக. அதைக்கேட்டதும் எனக்கு மெய்யும் சிலிர்த்தது, கூடவே மீசையும் சிலிர்த்தது.

மீசை பற்றிய எனது அனுபவங்கள் பலவிதம். பதின்ம வயதில் ஒருமுறை மொட்டையடித்து, மீசையெடுத்துவிட்டு வீட்டுக்குப் போக, என் தங்கைகள் பயமின்றி என்னுடன் பேச 2 வாரம் ஆச்சு. சிங்கப்பூருக்கு வந்த பிறகு மீசையோடு சிலவருடங்கள், மீசையின்றி சில வருடங்கள் என்று இருந்து பழகியதில் ஒரு விஷயம் தெரிந்தது - சீனர்கள், ஜப்பானியர்கள் போன்ற மாற்று இனத்தவர்கள் மீசையில்லாத இந்தியர்களையே அதிகம் விரும்புகிறார்கள். முத்து படத்தில் நடித்த மீனாவை ஜப்பானியர்களுக்கு பிடித்ததற்கு அதுதான் காரணம்.:))

சிங்கப்பூர், மலேசியாவில் இருக்கிற மலாய், சீன இனப் பெண்களுக்கு ஷாருக்கான், அமீர்கான் போன்ற ஆசாமிகள் மீது இருக்கும் லயிப்புக்கு மீசையற்ற அவர்களது மொழுக் முகமும் ஒரு காரணம் என்று உணர முடிகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் அரசியலில் இருக்கிற நம்ம ஆட்கள் மீசை என்ற விஷயத்தை வெகு ஜாக்கிரதையாக தவிர்க்கிறார்கள். மீசை நம்மை மற்ற இனத்தவரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற அதே வேளை, அந்நியப்படுத்தியும் விடுகிறது என்ற யதார்த்தமே அதற்குக் காரணம்.

அதே சமயம் மலேசியாவில் இருக்கிற நமது தமிழ் இளைஞர்கள் மீசையை இழந்துவிடாமல் ஆசையாய் அதை வளர்ப்பதை அதிசயித்து பார்த்திருக்கிறேன். " அது எப்பிடிலா மைக் மீசையை எடுக்கிறது...அதானே நம்ம அடையாளம் " என்பது அவர்களில் பலரது எண்ணம். மீசை இங்கு ஒரு இனத்தின் முகவரியாக இருக்கிறது.

வெளிநாட்டுச்சூழலை விடுங்க... இந்தியாவில்?

முன்னாடியெல்லாம், குமுதம், ஆனந்த விகடனில் கல்லூரி மாணவர்கள் குரூப் ·போட்டோ வரும் போது அதில் மீசையில்லாத தமிழ்க்குடி மகனை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேட வேண்டும். இப்போ? நீங்களே சமீபகால குமுதம், ஆனந்த விகடனை எடுத்துப் பாருங்களேன்....

சரி... " இன்றைய இந்திய ஆண்களுக்கு மீசை தேவையா, இல்லையா ?" உங்களை சாலமன் பாப்பையாவாக நினைத்துக் கொண்டு, சொல்லுங்கள் பார்ப்போம் தீர்ப்பை !

Wednesday, April 06, 2005

கதவின் சில ஜன்னல்கள்

சில நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துபோகும்
எம்.ஆர்.டி ரெயிலென வந்துபோகும் உன் நினைவுகள்....
ஒவ்வொரு முறையும் நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.

உட்கார்ந்தோ, நின்றோ
கர்ப்பிணிப் பெண் அல்லது முதியோருக்கு இடம் தந்தோ
சமமாக சாலைகளில் ஓடி, ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் எஸ்.பி.எஸ் பஸ்ஸை
பார்வையால் பிசைந்தபடியோ...
அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.

இன்னும் சிறிது நேரத்தில்
எவள் ஆங்கிலக் குரலிலாவது வந்துவிடலாம்
நானிறங்கும் ' நெக்ஸ்ட் ஸ்டாப் '.

இம்முறைவழக்கம் போல் நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி நானும் இறங்கிக் கொள்வேன்...
எம்.ஆர்.டியின் மூடிய கதவுகளுக்குப்பின்
அந்த மலாய்ப் பெண்ணின் படுதாமறைவில்
போகும்நம்மை பார்த்தபடி
நடந்து போவோம் நாம்!

Friday, April 01, 2005

சில நகர்வுகள்

முதல் நகர்வு
ஒரு முள் தைக்கும் மறுபடி மறுபடி ...
ஒரு தற்செயல் நிகழும் அடிக்கடி..
நிழல் தரும் சொற்பந்தல்.

அடுத்த நகர்வு
பதின்ம வயதுகளின் கூட்டில் நுரையும்
மலட்டு வார்த்தைகள்.
நுனிவிரல் ஓடும் இடைச்சாலை.
தொலைநோக்கும் விழி
விரல் நோக்கும் மனம்.

இன்னொரு நகர்வு
அழுத்தக்காற்றில் அலையும் குளிர்.
தூரச்சதுரம் துப்பிய இருள் வெளிச்சம்
படரும் வெகுவெளி.
சொல்லாத சொல்லில்
தீயாகும் காது மடல்.

இறுதி நகர்வு
அறைக்குள் தனித்திருந்தது இருள்.
குளிரில் குளிக்கும் வெப்பம்.
விடுதலை, தேடல், வினாக்கள், விடைகள்
ஓசை, அதிர்வு, உறங்கும் மதி.
அழுகையா அது?

போவதற்கு முன்..
நீண்டநாள் துக்கமாய்
நானிருந்து என்ன பயன்?
பிறக்கின்ற எல்லாம் ஓர்நாள் இறக்குமெனில்
பிறக்காமல் இறப்பதில் பிழையில்லை.
கோபமில்லை உன்னிடம்: கவலையுண்டு.
பொல்லாதது அம்மா உலகம்
பார்த்துக்கொள் உன்னை பத்திரமாய்.



Thursday, March 31, 2005

இக்கவிதையைப் படிக்கலாம்: கண்ணீர் வேண்டாம்!

துளிர்த்துக் கொண்டே இருக்க
நீ விடிந்து கொண்டே இரு.

வளர்ந்து கொண்டே இருக்க
என்னைப் பிடுங்கி நடு.

வாழ்ந்து கொண்டே இருக்க
உன் கைக்குட்டையை பரிசளி.

தேய்ந்து கொண்டே இருக்க
என்னை நிலவாக்கி
நிமிர்ந்து பார்.

நெகிழ்ந்து கொண்டே இருக்க
விழிக்குளத்தில் தேக்கு
ஒரு துளி நீர்.

நடந்து கொண்டே இருக்க
உன் வாயால் ஒரு
கவிதை சொல்.

கிழிந்து கொண்டே இருக்க
என்னை குப்பையாக்கு.

வடிந்து கொண்டே இருக்க
உன்னை தாளாக்கி
என்னை எழுது.

தெரிந்து கொண்டே இருக்க
வினாவாக என்னை
மாற்றிக் கொள்.

மறந்து கொண்டே இருக்க
நீ நானாகி விடு.

இறந்து கொண்டே இருக்க
இன்னொரு முறை சிரி.

இதில் எதையும் செய்ய இயலாதா?
அப்ப சரி....
மரியாதையாய் என்னை
காதலித்து விடு !

Wednesday, March 30, 2005

நாய்களும் நடை பழகும் காலை

கொடிநீள் கழிவுநீர் ஆடியில்
நொடிக்காற்றில் நீட்சியாகும்
வேர்ஹவுஸ் விளக்குச்சித்திரம்.....

பதிவற்ற சுற்றுச்சுவர் முத்த நினைவில்
எட்டிக்கிடக்கும் ஒளிப்படுகையை
இருள் அணைத்துப் பார்த்தபடி
மரமுதிர்ந்து கிடக்கும் ஒரு மயிர்ச்சிறகு.

வியர்வை நடும் நகர்வில்
எட்டி எட்டி நடந்தபடி
நீண்ட உயிர் நோக்கும்
சீனக்கிழவியின் தளர்கால்கள்.

இரவு அடங்க
இருக்கிறது இன்னும் நேரம்!
ஜன்னல் திரைச்சீலைகளின்
பின்அதிர இயங்கும் அது.

கசியும் வெளிச்சத்தை இழுத்துமூடும்
காண்டோ வீட்டு சீன முதலாளி
பிலிப்பினோ பணிப்பெண்ணிடம் சொல்கிறான்...

'மறந்து விடாதே...
காலை ஐந்திற்கு அலாரம் வை.
நாயும், நீயும் நடை பழக வேண்டும்'

Monday, March 28, 2005

ஒரு பணிப்பெண்ணின் சமையலறை மெட்டுகள்


Image hosted by Photobucket.com



ஒரு சல்லடை பிரயோகத்தின் பின்னும்
விரல் தாண்டி உதிரியாக
இசைக்குதிரையின் அங்கத்திலிருந்து
சிதறிய கீதச்செதில்கள்.
அவகாசம் கடந்த மெட்டின் படம்
சமையலறைச் சுவரில் தொங்குகிறது.

அடுப்புச்செயலெரித்த மெளனஎந்திரம்
பழைய இசைத்தொட்டியில்
விரல் அலைக்கிறது.

வரிகள் மழுங்கிய பாடல்களோடு
அவனும் அவளும் காற்றாகி
மலை முகடுகளில், கரட்டுப்புழுதியில்
தேனுண்ணும்
வண்ணத்துப்பூச்சிகளின் பூவில்
நாக்கு நீட்டி தேனும் உண்கிறார்கள்.

பயனீட்டாளனின் கதவழைப்புக்கு
திறந்து சிந்த
சேமிப்பில் இன்னொரு செயற்கைப்பூ!

Saturday, March 26, 2005

நடுநிசிக்கு முன்


இருப்பிலிருந்து தீர்ந்தது ஒன்று.

நிறைய செலவுகள், வெற்றிடங்கள்...
கணக்குப் புத்தகத்தில்
மெலிந்து கிடக்கிறது வரவு.

டெக்ஸியில் கைபிடித்து கீழிறங்கி
புளோக் லி·ப்டிற்குக் காத்திருக்கும்
அவனுக்கும் அவளுக்கும்
செலவளிக்கக் கொஞ்சம்
மீதமிருக்கலாம்.

சன் டிவியின்
ஒலிக்காத மெட்டிக்காக
விழித்துக் கிடக்கலாம் காதுகள்!

வெயில் காய்ந்த துணிகள்
இரவு மழைக்கு மிக பயந்து
ஜன்னல் எம்பி உள்குதித்து
கொடிக்கம்பில் மூச்சுவிடும்.

அந்த இருட்டு மூலை புற்கள்
பேசிக் களைத்திருக்க....
அதிலமர்ந்த அவ்விருவர்
அவ்வப்போது பேசியும் கொண்டனர்.

ஹாகார்ட் சென்டர் மேசை
பீர்போத்தலில் நுரைத்த பீர்
டிவியில் கோல்விழும் போதெல்லாம்
குழியில் விழுந்து சாகிறது.

ஞாபகப் படுக்கையில்
புரண்டு படுத்தபடி மனசு.
விழித்தும் உறங்கியும்
நினைவுகளற்றே நீள்கிறது இரவு.

Wednesday, March 23, 2005

சிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை

இந்த நிமிடம் சிங்கப்பூரில் இருக்கும் சகோதரி துளசி கோபாலை போன ஞாயிறுக்கிழமை சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் ஒரு கேள்வி கேட்டார்..."இலக்கியம் என்றால் என்ன?"

வருடம் 2105. சிங்கப்பூரை ஒட்டிய கடற்புரம். அந்தக் கட்டிடம் கடல் நடுவே நாங்கூரமிடப்பட்டிருந்த ராட்சச பலூன் மீது கட்டப்பட்டிருந்தது.

அதன் 160வது தளத்தில் 100 பேர் கூடியிருந்ததார்கள். அது - " போன நூற்றாண்டுத் தமிழர்கள் " என்ற கருத்தரங்கு. வயிற்றைத்தொடும் தாடியோடு ஒரு கண்ணாடி போட்ட அறிஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரைச்சுற்றி மட்டும் விளக்குகள் பீய்ச்சிய ஒளி. மற்றவர்கள் இருட்டில்!

" உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் போன நூற்றாண்டு மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒரு சங்கதி அவர்கள் வாழ்க்கையில் இருந்திருக்கிறது. அது அவர்களது வாழ்க்கையில் பெரும் பகுதியை சாப்பிட்டிருக்கிறது. "

அடி தன் முன்னால் இருந்த பட்டனைத் தட்ட விளக்குகள் அவன் மீது ஒளிவீச, முன்னால் இருந்த பெரிய திரையில் அகலமாய் அவன் முகம்.

" என்ன சந்தேகம் மகனே? " என்றார் அறிஞர். எல்லோரும் திரையில் தோன்றிய அடியை ஆர்வமாய் பார்த்தார்கள்.

" இலக்கியம் என்றால் என்னவென்று சுருக்கமாக விளக்க முடியுமா ? "

" முடியும் " என்ற அறிஞர் தொடர்ந்து பேசினார். " இலக்கியம் என்பது ஒரு போதைப்பொருள் மாதிரி. எப்படி போதைப் பொருள் மனிதமனதைப் பாதித்து உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை பிம்பங்களை மனதுக்குள் விதைக்கிறதோ, அதே காரியத்தை இலக்கியமும் செய்தது. நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததுபோல் யாராவது ஒருவர் கற்பனை செய்து எழுத, பலரும் அதை படித்துவிட்டு அதில் மனம் ஒன்றிப்போய் கற்பனையான உலகில் வாழ்ந்தார்கள்."

" ஆக இலக்கியம் என்ற விஷயத்தால் எந்த பலனும் இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" பலனா? இலக்கியம் என்பது போன நூற்றாண்டு மனிதர்களை பிடித்திருந்த நோய் என்றுதான் சொல்ல வேண்டும்."

" அவ்வளவு ஆபத்தான ஒன்றை நம் முன்னோர்கள் ஏன் நேசித்திருக்க வேண்டும் ? " இந்தக் கேள்வியை மகி கேட்டான்.இப்போது வெளிச்சம் அவனிடம், திரையில் அவன் முகம்!

" அவர்கள் நம்மைப்போல் இல்லை. சரியான சோம்பேரிகள். நாம் தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குகிறோம். அவர்களோ நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் தூங்கினார்கள். இலக்கியம் அந்த சோம்பேரித்தனத்தை அங்கீகரித்ததால் அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. "

" சோம்பேறிகள் சிலர் இலக்கியம் என்று ஒன்றைப் படைத்து இன்னும் பலரை சோம்பேறியாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தானே ? "

" புத்திசாலி. சீக்கிரம் புரிந்து கொண்டாய். " என்று பாராட்டினார் அறிஞர். எல்லோரும் மெலிதாக கைதட்டினார்கள்.

" இப்படிப்பட்ட ஆபத்தான விஷயத்தை அரசாங்கங்கள் எப்படி விட்டு வைத்தன? "

" எது அதிக ஆபத்தானது என்ற கேள்வி எழும்போது அதிக ஆபத்தான விஷயத்தின்மீது தாக்குதல் தொடுப்பதையே அரசாங்கங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. போன நூற்றாண்டில் இதைவிட ஆபத்தான பல விஷயங்கள் இருந்ததால் இதை அதிகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். "

" இதைவிட ஆபத்தான விஷயங்களா? ஏதாவது சிலவற்றை சொல்ல முடியுமா? " என்று கேட்டாள் சகி.

" பலவற்றைச் சொல்லலாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி, சினிமா இப்படிப் பல அதி ஆபத்தான விஷயங்கள். அதிலும் சினிமா மிக ஆபத்தான, அபத்தமான விஷயமாக கருதப்பட்டது. சரி, நானே பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவைப் பற்றி உங்களில் யாராவது விளக்க முடியுமா? "

" முடியும்! " என்ற கவி மீது விளக்குகள் விழுந்தன.

" சொல் பெண்ணே... சினிமா என்பது என்ன? "

" அது இலக்கியத்தை விட அதிகமாக மக்களை ஆக்கிரமித்திருந்த போதைப் பொருள். சினிமா என்ற சமாச்சாரம் பல வடிவங்களில் மக்களுக்குத் தரப்பட்டது. அதிலும் தமிழ்ச் சினிமா இருக்கிறதே அது இன்னும் அதிக அபத்தம். தலை மயிர் கலையாமல் 50 பேரை அடிக்கும் கதாநாயகன், அவன் பம்பரம் என்ற பொருளை தொப்புளில் விட மல்லாந்து படுத்திருக்கும் கதாநாயகி...

சினிமாவில் வரும் பாடல்களை வானொலி நிலையங்கள் 24 மணிநேரமும் ஒலிபரப்பி வந்தார்கள். அந்த பாடல்களில் இலக்கிய நயம் இருக்கிறதா இல்லையா என்று வேறு விவாதித்து நேரத்தை வீணாக்கினார்கள். இதுதான் சினிமா மற்றும் அதன் சார்ந்த சுருக்கமான விவரம் "

" நல்லது பெண்ணே... உனது விளக்கம் ஏறக்குறைய சரியாகவே இருக்கிறது " என்று ஒப்புதல் தந்த அறிஞர் தொடர்ந்து பேசினார்.

" தமிழ்ச் சினிமா மட்டுமல்ல. தமிழ் இலக்கியம்கூட அபத்தம் நிறைந்ததாகவே இருந்தது. படைப்பாளிகளைவிட வெட்டி விமர்சகர்கள் அதிகம் இருந்தார்கள். தாங்களும் ஒன்றும் செய்யாமல், மற்றவர்களையும் ஒன்றும் செய்யவிடாமல் தடுத்து வந்த இவர்கள் மிக மிகச் சோம்பேறிகள் "

" இலக்கியத்தில் என்னவெல்லாம் இருந்தது ஐயா? "

" கதை, கவிதை, கட்டுரை என பல வடிவங்கள் இருந்தது. கதையை பலரும் விரும்பிப் படித்தாலும், கவிதையே மனிதர்களது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்திய வடிவம். "

" உதாரணமாக ஒன்றைச் சொல்லுங்கள் "

" சொல்கிறேன். அதற்குமுன் சிறுவிளக்கம். இன்று ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அரசாங்கத்திடம் தகவல் சொல்லிவிட்டு இணைந்து வாழலாம். ஆனால் 2005ல் காதல், கல்யாணம் போன்ற சம்பிரதாயங்கள் அதிகம். அதிலும் காதல்... ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சம்பிராதாயத்தில் இணைவதற்கு முன் நிகழ்கிற விஷயங்களை காதல் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படி காதலிக்கும் காலங்களில் ஆண் பெண்ணுக்காக ஏங்குவதும், பெண் ஆணுக்காக ஏங்குவதுமான பெருமூச்சுகள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் யாராவது ஒருவர் காதலுக்கு மறுப்புச் சொல்லி விட்டால், அது தோல்வியடைவதும் உண்டு.

அப்படி காதல் தோல்வி அடைந்த ஒருவன் தன் காதல் தோல்வி பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட ஒரு கவிதையைச் சொல்கிறேன் கேளுங்கள்....

காற்று வராத என்று
ஜன்னலைத் திறந்து வைத்தேன்.
காற்று வந்தது....
ஜன்னலைச் சாத்திச் சென்றது! "

அறிஞர் இந்தக் கவிதையைச் சொல்லி நிறுத்தியதும் அங்கு சட்டென்று ஒரு மொளனம் சூழ்ந்தது. அந்தக் கவிதை எல்லோருக்கும் புரிந்தது. அவர்கள் மனதில் புகுந்தது. பிசைந்தது. ' ஓ...இலக்கியம் இவ்வளவு சுவையானதா' என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது.

அதற்கப்புறம் அறிஞர் பல விஷயங்களைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்தவர்களின் மனமோ அந்தக் கவிதையிலேயே லயித்துக் கிடந்தது. " உலக சரித்திரத்தையே மாற்றும் சக்தி இலக்கியத்திற்கு இருந்ததால்தான், ஆபத்து மிகுந்த இந்த போதைப்பொருளை உலக அரசாங்கங்கள் தடை செய்தன. " என்று சொன்னார் அறிஞர்.

அடி அன்றைய தின இரவு சகியை நினைத்து ரகசியமாய் ஒரு கவிதை எழுதினான். அது இப்படித் துவங்கியது....

" அன்பு சகி. என் உயிர் கலந்த ஆக்ஸிஜனே... "